52 - மறுமை, சொர்க்கம், நரகம் புத்தகம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கையளவு எடைகூட அவன் (மதிப்புப்) பெறமாட்டான். "மறுமை நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் நாம் ஏற்படுத்த மாட்டோம்" (18:105) எனும் இறை வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "யூதர்களில் ஓர் அறிஞர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. அவற்றில் "பிறகு அவற்றை அவன் அசைப்பான்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மேலும், "அந்த அறிஞர் கூறியதைக் கேட்டு வியப்படைந்து, அவரது கருத்தை உண்மையென ஆமோதிக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்" என்றும், பிறகு "அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிக்கவில்லை" (39:67) என்று தொடங்கும் வசனத்தை ஓதினார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: வேதக்காரர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அபுல் காசிமே! அல்லாஹ் (மறுமை நாளில்) வானங்களை ஒரு விரல்மீதும் பூமிகளை ஒரு விரல் மீதும் மரங்கள் மற்றும் ஈர மண்ணை ஒரு விரல்மீதும் (இதர) படைப்புகளை ஒரு விரல் மீதும் வைத்துக்கொண்டு, பிறகு "நானே அரசன்; நானே அரசன்" என்று சொல்வான்" என்றார். (இதைக் கேட்டு) நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன். பிறகு "அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ அவ்வாறு மதிக்கவில்லை" (39:67) என்று தொடங்கும் வசனத்தை ஓதினார்கள். இதை அல்கமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தன் வானங்களையும் பூமிகளையும் தன்னுடைய இரு கரங்களிலும் எடுத்துக்கொண்டு, "நானே அல்லாஹ். நானே அரசன்" என்று கூறுவான் என்றார்கள். இதைக் கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் விரல்களை மடக்கிவிட்டு, பிறகு அவற்றை விரித்தார்கள். இதைக் கூறுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருந்த சொற்பொழிவு மேடை (மிம்பர்) கீழே அசைந்துகொண்டிருந்ததை நான் கண்டேன். எங்கே அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோடு கீழேவிழுந்துவிடுமோ! என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். (அந்த அளவுக்கு அது அசைந்துகொண்டிருந்தது.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவ்வாறு கூறினார்கள் என்பதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் விவரிப்பதை உற்றுக் கவனித்த உபைதுல்லாஹ் பின் மிக்சம் (ரஹ்) அவர்களே இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கி றார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக்கொண்டு, "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை)ப் படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை செவ்வாய் கிழமையன்றும் ஒளியை புதன்கிழமையன்றும் படைத்தான். வியாழக்கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக்குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்" என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று, தூய வெண்மையான (சம)தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் அனைவரும் ஒன்றுதிரட்டப் படுவார்கள். அந்தப் பூமியில் (மலை, மடு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது. இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அந்நாளில் பூமி, வேறு பூமியாகவும் வானங்களும் (வேறு வானங்களாகவும்) மாற்றப்படும்" (14:48) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டி, "அல்லாஹ்வின் தூதரே! அன்றைய நாளில் மக்கள் அனைவரும் எங்கே இருப்பார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அஸ்ஸிராத் (எனும் நரகப் பாலத்தின்) மீது" என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமை நாளில் இந்தப் பூமி, (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தமது ரொட்டியை (ஒரு கையிலிருந்து மறு கைக்கு மாற்றி) தட்டிப்போடுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தனது கரத்தால் புரட்டிப்போடுவான். அதையே சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்" என்று சொன்னார்கள். அப்போது யூதர்களில் ஒருவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) வந்து, "அபுல்காசிமே! அளவற்ற அருளாளன் தங்களுக்கு வளம் வழங்கட்டும்! மறுமைநாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சரி" என்றார்கள். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே, "மறுமை நாளில் இந்தப் பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) இருக்கும்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு "(அபுல்காசிமே!) உங்களுக்குச் சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?" என்று அந்த யூதர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சரி" என்றார்கள். அவர், "அவர்களின் குழம்பு "பாலாம் மற்றும் நூன்" என்றார். மக்கள் "இது என்ன?" என்று கேட்டார்கள். அந்த யூதர், ("அவை) காளை மாடும் மீனும் ஆகும். அவ்விரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்" என்று கூறினார். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்களில் (முக்கியப் பிரமுகர்கள்) பத்துப் பேர் என்னைப் பின்பற்றியிருப்பார்களாயின், பூமியின் மீதுள்ள அனைத்து யூதர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண் பூமியில் (பேரீச்சந்தோப்பில்) சென்று கொண்டிருந்தேன். அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியிருந்தார்கள். அப்போது யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம் (நபியவர்களைச் சுட்டிக்காட்டி), "இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்" என்றார். மற்றவர்கள், "உங்களுக்கு அதற்கான தேவை என்ன ஏற்பட்டது? நீங்கள் விரும்பாத ஒன்றை அவர் உங்களிடம் சொல்லிவிடக் கூடாது (எனவே, அவரிடம் நீங்கள் கேட்க வேண்டாம்)" என்றார்கள். பின்னர் அவர்கள், "(சரி) அவரிடம் கேளுங்கள்" என்றனர். உடனே அவர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் எழுந்துவந்து, அவர்களிடம் உயிரைப் பற்றிக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அவர்களுக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகின்றது என நான் அறிந்து கொண்டேன். ஆகவே, நான் அதே இடத்தில் நின்றுகொண்டேன். வேத அறிவிப்பு (வஹீ) இறங்கியபோது, அவர்கள் "(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். "உயிர் என்பது என் இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்" என்று கூறுவீராக" (17:85) எனும் இறை வசனத்தைக் கூறினார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "நான் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவில் ஒரு வேளாண் பூமியில் சென்று கொண்டிருந்தேன்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அவற்றில் அலீ பின் கஷ்ரம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("நீங்கள் கொடுக்கப் பட்டுள்ளீர்கள்" என்பதற்குப் பதிலாக) "அவர்கள் கொடுக்கப்பட்டுள்ளார்கள்" என்று இடம் பெற்றுள்ளதாக ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நீங்கள் கொடுக்கப்பட்டுள்ளீர்கள்" என்றே இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சந்தோட்டத்தில் பேரீச்ச மட்டை ஒன்றை (கையில்) ஊன்றியபடி இருந்தார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பிலும் "நீங்கள் கொடுக்கப்பட்டுள்ளீர்கள்" என்றே காணப்படுகிறது. அத்தியாயம் :
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இணைவைப்பாளர்) ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. அதைத் தரும்படி கேட்டு அவரிடம் நான் சென்றேன். அவர், "நீ முஹம்மதை நிராகரிக்காத வரை நான் (உனது கடனை) உனக்குத் தரமாட்டேன்" என்று சொன்னார். நான், "அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு நீ (மறுமையில் உயிருடன்) எழுப்பப்படும்வரை நான் முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரிக்கமாட்டேன்" என்று கூறினேன். அவர், "நான் இறந்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா? அவ்வாறாயின், நான் (மறுமையில்) பொருட் செல்வத்தையும் மக்கட் செல்வத்தையும் திரும்பப் பெறும்போது நான் உனது கடனைச் செலுத்துவேன்" என்று (கிண்டலாகச்) சொன்னார். அப்போதுதான், "நம் வசனங்களை மறுத்தவனைக் கண்டீரா? எனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று கூறுகிறான். மறைவானவற்றை இவன் கண்டுபிடித்து விட்டானா? அல்லது அளவற்ற அருளாளனிடம் ஏதேனும் உறுதிமொழியைப் பெற்றானா? அவ்வாறு ஏதுமில்லை. அவன் சொல்வதை நாம் பதிவு செய்வோம். அவனுக்கு வேதனையை ஒரேடியாக நீட்டுவோம். அவன் எதைப் பற்றிப் பேசினானோ அதற்கு (அவனுடைய செல்வங்களுக்கும் சந்ததிகளுக்கும்) நாமே வாரிசாகிவிடுவோம். தன்னந்தனியாகவே நம்மிடம் அவன் வருவான்" (19:77-80) எனும் இந்த வசனங்கள் அருளப்பெற்றன. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் அறியாமைக் காலத்தில் கொல்லனாக வேலை பார்த்துவந்தேன். ஆஸ் பின் வாயில் என்பாருக்கு ஒரு வேலையைச் செய்து கொடுத்துவிட்டு அதற்குரிய கூலியைக் கேட்பதற்காக அவரிடம் சென்றேன்" என்று கப்பாப் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்காவில் ஒரு முறை) அபூஜஹ்ல், "உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?" என்று கேட்டான். அப்போது "ஆம்" என்று சொல்லப்பட்டது. அவன், "லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்துகொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடரியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்" என்று சொன்னான். அவ்வாறே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, அவர்களது பிடரியின் மீது மிதிப்பதற்காக அவர்களை நோக்கி வந்தான். அப்போது அவன் தன் கைகளால் எதிலிருந்தோ தப்பிவருவதைப் போன்று சைகை செய்தவாறு வந்தவழியே பின்வாங்கி ஓடினான். இதைக் கண்ட மக்கள் திடுக்குற்றனர். அவனிடம், "உனக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவன், "எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழ் ஒன்றையும் பீதியையும் இறக்கைக(ள் கொண்ட வானவர்)களையும் கண்டேன்" என்று சொன்னான். (இதைப் பற்றிக் கூறுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவன் மட்டும் என்னை நெருங்கியிருந்தால் அவனுடைய உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்கள்" என்று சொன்னார்கள். ஆகவே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "அவ்வாறில்லை! தன்னைத் தன்னிறைவு பெற்றவன் எனக் கருதியதால் மனிதன் எல்லை மீறுகிறான். உம்முடைய இறைவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. தொழும் அடியாரைத் தடுப்பவனை நீர் பார்க்க வில்லையா? அவர் நல்வழியில் இருப்பதையோ, அல்லது இறையச்சத்தை ஏவுவதையோ அவன் (அபூஜஹ்ல்) பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கின்றான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை. அவன் விலகிக்கொள்ளவில்லையானால் முன்நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்துப் பொய் கூறிய (மனிதனின்) முன்நெற்றி. அவன் தன் சபையோரை அழைத்துப் பார்க்கட்டும்! நாம் நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்" (96:6-19) எனும் வசனங்களை அருளினான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவனுக்கு அவர் எதைக் கட்டளையிட்டாரோ அதை அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. முஹம்மத் பின் அப்தில் அஃலா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவன் தன் சபையோரை அழைக்கட்டும்" என்பதற்கு, "அவன் தன் சமுதாயத்தாரை அழைக்கட்டும்" என்று பொருள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு முறை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடையே சாய்ந்து படுத்திருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அபூஅப்திர் ரஹ்மானே! (கூஃபாவின்) "கிந்தா" தலைவாயிலருகே பேச்சாளர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் "புகை" எனும் அடையாளம் (இனிமேல்தான்) நிகழும். அது (மறுமை நெருங்கும்போது வந்து) இறை மறுப்பாளர்களின் நாசியைப் பற்றிக்கொள்ளும். ஆனால், அது இறைநம்பிக்கையாளர்களுக்கு ஜலதோஷம் போன்றதையே ஏற்படுத்தும் என்று கூறுகிறார்" என்றார். உடனே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கடும் கோபத்தோடு எழுந்து அமர்ந்து, பின்வருமாறு கூறினார்கள்: மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். உங்களில் ஒன்றைப் பற்றி அறிந்தவர் அதைப் பற்றிப் பேசட்டும். அறியாதவர், "அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று கூறட்டும். ஏனெனில், தாம் அறியாததைப் பற்றி "அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று கூறுபவரே உங்களில் அறிஞர் ஆவார். அல்லாஹ் தன் தூதரிடம், "இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. நான் சுயமாக உருவாக்கிக் கூறுபவன் அல்லன் என்று (நபியே!) நீர் கூறுவீராக" (38:86) எனக் கூறியுள்ளான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இணைவைக்கும்) மக்கள் புறக்கணிப்பதைக் கண்டபோது, "இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது காலத்து ஏழு பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளைக் கொடுப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். உடனே அவர்களைப் பஞ்சம் வாட்டியது. அனைத்தையும் அது அழித்துவிட்டது. எந்த அளவுக்கென்றால், (பசியால்) அவர்கள் தோல்களையும் செத்தவற்றையும் உண்டனர். அவர்களில் ஒருவர் (பசி மயக்கத்தால் கண் பஞ்சடைந்து) வானத்தைப் பார்க்கும்போது, (தமக்கும் வானத்துக்கும் இடையே) புகை போன்ற ஒன்றையே கண்டார். இந்நிலையில் (இணைவைப்பாளர்களின் தலைவராயிருந்த) அபூசுஃப்யான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "முஹம்மதே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறும் உறவுகளைப் பேணி வாழுமாறும் கட்டளையிடுவதற்காகவே நீர் வந்துள்ளீர். ஆனால், உம்முடைய சமூகத்தாரோ (பஞ்சத்தால்) அழிந்துவிட்டனர். ஆகவே, அவர்களுக்காக நீர் பிரார்த்திப்பீராக!" என்று கூறினார். (அப்போதுதான்) வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "வானம் தெளிவான புகையைக் கொண்டுவரும் நாளை எதிர்பார்ப்பீராக! அது மக்களைச் சூழ்ந்துகொள்ளும். இதுவே வதைக்கும் வேதனையாகும்" என்று தொடங்கி, "வேதனையைச் சிறிது நீக்குவோம். நீங்கள் (பழைய நிலைக்குத்) திரும்புவீர்கள்" என்பதுவரையுள்ள (44:10-15)வசனங்களை அருளினான். (இது இவ்வுலகில் பஞ்சத்தால் கண்ணை மறைத்த புகை மூட்டத்தையே குறிக்கிறது.) மறுமை நாளின் வேதனை(யாக இருந்தால், அது) சிறிதேனும் அகற்றப்படுமா? அடுத்து "மிகப் பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் (அவர்களைத்) தண்டிப்போம்" (44:16) என்றும் அல்லாஹ் கூறுகின்றான். இந்தப் பிடி பத்ருப்போர் நாளில் நடந்தது. புகை, கடுமையான பிடி, வேதனை, ரோம (பைஸாந்திய)ர்கள் (தோற்கடிக்கப்பட்டுப் பிறகு வென்றது) ஆகிய அடையாளங்கள் நடந்துமுடிந்து விட்டன. அத்தியாயம் :
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, "(கூஃபாவின் இந்தப்) பள்ளிவாசலில் ஒரு மனிதர் குர்ஆனுக்குச் சுயவிளக்கம் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில் அவரிடமிருந்து நான் வந்துள்ளேன். அவர், "வானம் தெளிவான புகையைக் கொண்டுவரும் நாளை எதிர்பார்ப்பீராக" (44:10) எனும் இந்த வசனத்துக்கு, "மறுமை நாள் நெருங்கும்போது மக்களிடம் ஒரு புகை வந்து அவர்களது நாசிகளைப் பற்றிக்கொள்ளும். அதனால் அவர்களுக்கு ஜலதோஷம் போன்று ஏற்படும்" என விளக்கமளிக்கிறார்" என்று சொன்னார். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: ஒன்றைப் பற்றி அறிந்தவர் அது குறித்துப் பேசட்டும். அறியாதவர், "அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று சொல்லட்டும். ஏனெனில், தாம் அறியாத ஒன்றைப் பற்றி (தம்மிடம் கேட்கப்படும்போது) ஒருவர் "அல்லாஹ்வே நன்கறிந்தவன்" என்று கூறுவது அந்த மனிதரின் அறிவின்பாற்பட்டதாகும். இது (புகைச் சம்பவம்), எப்போது நடந்ததெனில், குறைஷியர் நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்தபோது, நபி (ஸல்) அவர்கள் "யூசுஃப் (அலை) அவர்களது காலத்தில் ஏற்பட்ட ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்குப் பஞ்சத்தைக் கொடுப்பாயாக!" என்று அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அதையடுத்து அவர்களுக்குப் பஞ்சமும் துன்பமும் ஏற்பட்டது. எந்த அளவுக்கென்றால், அவர்களில் ஒருவர் (பசி மயக்கத்தில்) வானத்தைப் பார்க்கும்போது தமக்கும் வானத்திற்கும் இடையே புகை போன்ற ஒன்றையே துன்பத்தால் காணலானார். அவர்கள் எலும்புகளைச் சாப்பிடும் நிலைக்கு ஆளாயினர். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே!"முளர்" குலத்தாருக்காகப் பாவமன்னிப்பு வேண்டிப் பிரார்த்தியுங்கள். அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "(இறை மறுப்பாளர்களான) முளர் குலத்தாருக்கா? நீர் துணிவுமிக்கவர்தான்" என்று கூறிவிட்டு, அவர்களுக்காக அல்லாஹ்விடம் (மழை வேண்டிப்) பிரார்த்தித்தார்கள். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "வேதனையைச் (சற்று) நாம் நீக்குவோம். நீங்கள் (பழைய நிலைக்குத்) திரும்புவீர்கள்" (44:15) எனும் வசனத்தை அருளினான். பிறகு மழை பொழிந்து (பஞ்சம் விலகி) செழிப்பு ஏற்பட்டபோது, முந்தைய (இணை வைக்கும்) நிலைக்கே அவர்கள் திரும்பிச்சென்றனர். அப்போதுதான் அல்லாஹ், "வானம் தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை எதிர்பார்ப்பீராக! அது மக்களைச் சூழ்ந்துகொள்ளும். இதுவே வதைக்கும் வேதனையாகும்" (44:10-12) எனும் வசனங்களை அருளினான். "மிகப் பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் அவர்களைத் தண்டிப்போம்" (44:16) எனும் வசனம், பத்ருப்போர் நாளைக் குறிக்கும். இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: "(மறுமையின் பெரிய வேதனை அல்லாமல் (இம்மையிலும்) சிறிய வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச் செய்கிறோம்" (32:21) எனும் இறைவசனத்திலுள்ள சிறிய வேதனை என்பது, இவ்வுலகில் நிகழ்ந்த சோதனைகள்,ரோமர்கள் (தோற்கடிக்கப்பட்டு மீண்டும் அவர்கள் வெற்றி பெற்றது), இறைவனின் கடுமையான பிடி, அல்லது புகை ஆகியவையாகும். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இறைவனின் கடுமையான பிடி, அல்லது புகை என அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நாங்கள் (மக்காவிலுள்ள) "மினா" எனுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு (ஹிரா) மலைக்கு அப்பா(ல் மேற்பகுதியி)லும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "(நான் இறைவனின் தூதர் என்பதற்கு) நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. அந்த (ஹிரா) மலை,சந்திரனின் ஒரு துண்டை மறைத்தது. மற்றொரு துண்டு, மலைக்கு மேலே இருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! நீயே சாட்சியாக இரு" என்று சொன்னார்கள். - இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாகவும் மேற்கண்ட ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர் களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும் இப்னு அதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நீங்கள் சாட்சிகளாக இருங்கள்; நீங்கள் சாட்சிகளாக இருங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரண்டு முறை) கூறியதாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் சந்திரன் பிளந்தது. அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனவேதனைக்குள்ளாக்கும் செய்தியைக் கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை. (மனிதர்களால்) அவனுக்கு இணை கற்பிக்கப்படுகிறது; அவனுக்குக் குழந்தை இருப்பதாகப் பேசப்படுகிறது. அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக்கொண்டிருக்கின்றான். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அவனுக்குக் குழந்தை இருப்பதாகப் பேசப்படுகிறது" எனும் குறிப்பு இடம்பெற வில்லை. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனவேதனைக்குள்ளாக்கும் செய்தியைக் கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமைகாப்பவர் உயர்ந்தோன் அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்கு இணையை ஏற்படுத்துகின்றனர்;அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றனர். அவ்வாறிருந்தும், அவர்களுக்கு உணவு வளத்தையும் உடல்நலத்தையும் (வேறு பல கொடைகளையும்) அவன் வழங்கிக் கொண்டிருக்கின்றான். இதை அபூமூசா அப்துல்லாஹ் பின் கைஸ் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) நரகவாசிகளிலேயே மிகக் குறைவான வேதனை அளிக்கப்படுபவரிடம், "பூமியும் அதிலிருப்பவையும் உனக்கே சொந்தம் என்றிருந்தால், நீ அவற்றை ஈடாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) முன்வருவாய் அல்லவா?" என்று வளமும் உயர்வும் உள்ள அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர், "ஆம்" என்று பதிலளிப்பார். அப்போது அல்லாஹ், "நீ (ஆதி மனிதர்) ஆதமின் முதுகுத்தண்டில் (அணுவாக) இருந்த போது, இதைவிட எளிதான ஒன்றையே (அதாவது) எனக்கு எதையும் இணை கற்பிக்காதே! உன்னை நான் நரகத்தில் புகுத்தமாட்டேன் என்பதையே) உன்னிடமிருந்து நான் எதிர்பார்த்தேன். ஆனால், (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக்கொள்ளவில்லையே!" என்று கூறுவான். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "உன்னை நான் நரகத்தில் புகுத்த மாட்டேன்" எனும் குறிப்பு இல்லை. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த இறைநம்பிக்கையாளருக்கும் (அவர் செய்த நற்செயலுக்கான) நன்மையில் அநீதி இழைப்பதில்லை. அதற்குரிய நன்மை இம்மையிலும் அவருக்கு வழங்கப்படும். அதற்குரிய நன்மை மறுமையிலும் அவருக்கு வழங்கப்படும். (ஏக) இறைமறுப்பாளர் இறைவனுக்காகச் செய்த நற்செயல்களின் பலனால் இம்மையில் (மட்டும்) அவருக்கு உணவளிக்கப்படும். அவர் மறுமையை அடையும்போது, அவருக்கு வழங்கப்படுவதற்கு நன்மையேதும் இராது.- இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் இறைமறுப்பாளர் நற்செயல் ஒன்றைச் செய்தால், அதற்குரிய பலன் இவ்வுலகிலேயே அவருக்கு வழங்கப்பட்டுவிடும். இறைநம்பிக்கையாளரின் நிலை என்னவெனில், அவர் செய்த நற்செயல்களுக்குரிய நன்மைகளை இறைவன் மறுமை நாளில் வழங்குவதற்காகப் பத்திரப் படுத்துகிறான். மேலும், அவர் கீழ்ப்படிந்து நடப்பதற்கேற்ப இவ்வுலகிலும் அவருக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறான். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலை, காற்றில் அசையும் இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானதாகும். அது முற்றிய பயிராகும்வரை அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். இறைமறுப்பாளனின் நிலை, தனது அடித்தண்டின் மீது விறைப்பாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேடியாக வேரோடு சாய்ந்து விழும்வரை அதை எதுவும் சாய்ப்பதில்லை. இதை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பிஷ்ர் பின் அஸ்ஸரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இறைமறுப்பாளனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும்" என்று இடம்பெற்றுள்ளது. முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நயவஞ்சகனின் நிலை..." என்று காணப்படுகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் யஹ்யா அல்கத்தான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இறைமறுப்பாளனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும்" என்று இடம்பெற்றுள்ளது. மற்றவர்களின் அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே ("நயவஞ்சகனின் நிலை" என்று) காணப்படுகிறது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மரங்களில் ஒன்று உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு ஒப்பானதாகும். அது என்ன மரம் என்று எனக்குச் சொல்லுங்கள்?" என்று கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்களில் அது காட்டு மரம் என்றே தோன்றியது. என் மனதில் அது பேரீச்ச மரமாகத்தானிருக்கும் என்று தோன்றினாலும் வெட்கப்பட்டு(க் கொண்டு சொல்லாமல் இருந்து)விட்டேன். பின்னர், "அல்லாஹ்வின் தூதரே! அது என்ன மரம் என்று நீங்களே எங்களுக்கு அறிவியுங்கள்?" என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள் "அது பேரீச்ச மரம்" என்றார்கள். பிறகு என் தந்தை உமர் (ரலி) அவர்களிடம் அதைப் பற்றி நான் சொன்னபோது, "நீ (வெட்கப் படாமல்) "அது பேரீச்ச மரம்தான்" என்று கூறியிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதைவிட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்" என்று சொன்னார்கள். - இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், "ஒரு மரத்தைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள். அதன் நிலை இறைநம்பிக்கையாளருக்கு ஒப்பானதாகும்" என்று சொன்னார்கள். மக்கள், காட்டு மரங்களில் ஒன்றை நினைத்தனர். என் மனத்தில் அது பேரீச்ச மரம்தான் என்று தோன்றியது. அது பேரீச்ச மரம்தான் என்று சொல்ல நான் விரும்பினேன். ஆயினும், அங்கு வயதில் மூத்தவர்கள் இருந்ததால் நான் சொல்வதற்கு அஞ்சினேன். மக்கள் (பேசாமல்) வாய் மூடி இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அது பேரீச்ச மரம்" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் முஜாஹித் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாகக் காணப்படுகிறது: நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் மதீனாவரை சென்றேன். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எந்த ஹதீஸையும் கூறியதை நான் கேட்கவில்லை. ஒரேயொரு ஹதீஸை மட்டும் அவர்கள் கூறினார்கள்: "நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது பேரீச்ச மரத்தின் குருத்து ஒன்று கொண்டுவரப்பட்டது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன. - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேரீச்ச மரத்தின் குருத்து ஒன்று கொண்டு வரப்பட்டது..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன. - அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், "ஒரு முஸ்லிமான மனிதரை ஒத்திருக்கும்" அல்லது "(அவரைப்) போன்றிருக்கும்" ஒரு மரத்தை எனக்கு அறிவியுங்கள். அதன் இலை உதிராது. அது தன் கனிகளை எல்லாப் பருவங்களிலும் கொடுத்துக்கொண்டிருக்கும் என்று சொன்னார்கள். அப்போது என் மனத்தில், "அது பேரீச்ச மரம்தான்" என்று தோன்றியது. அபூபக்ர், உமர் (போன்றவர்களே பதில்) பேசாமல் இருப்பதை நான் கண்டேன். ஆகவே, நான் எதையும் பேசவோ, சொல்லவோ விரும்பவில்லை. பின்னர் (என் மனத்தில் தோன்றியதை நான் சொல்லாமலிருந்துவிட்டது குறித்து என் தந்தை உமர் (ரலி) அவர்களிடம் சொன்ன போது), "நீ அதைச் சொல்லியிருந்தால் இன்ன இன்ன (செல்வம் கிடைப்ப)தைவிட எனக்கு மிகவும் பிரியமானதாய் இருந்திருக்கும்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான். எனினும், அவர்களிடையே பிளவை உருவாக்குவ(தில் வெற்றி கண்டு விட்டா)ன். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்லீஸின் சிம்மாசனம் கடலின் மீது அமைந்துள்ளது. அவன் (அங்கிருந்தே) தன் படைகளை அனுப்பி, மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துகிறான். மக்களிடையே பெருங்குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் மரியாதைக்குரியவன் ஆவான். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்லீஸ், தனது சிம்மாசனத்தை (கடல்)நீரின் மீது அமைக்கிறான். பிறகு தன் பட்டாளங்களை (மக்களிடையே) அனுப்புகிறான். அவர்களில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற (ஷைத்தான் எவனோ அ)வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான். அவனிடம் ஷைத்தான்களில் ஒருவன் (திரும்பி)வந்து "நான் இன்னின்னவாறு செய்தேன்" என்று கூறுவான். அப்போது இப்லீஸ், "(சொல்லிக்கொள்ளும் அளவுக்கு) நீ எதையும் செய்யவில்லை" என்று கூறுவான். பிறகு அவர்களில் மற்றொருவன் வந்து, "நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை" என்று கூறுவான். அப்போது இப்லீஸ், அவனை அருகில் வரச்செய்து, "நீதான் சரி(யான ஆள்)" என்று (பாராட்டிக்) கூறுவான். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) அபூசுஃப்யான் தல்ஹா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், "அப்போது அந்த ஷைத்தானை இப்லீஸ் கட்டியணைத்துக்கொள்கிறான் (பிறகு அவ்வாறு பாராட்டுகிறான்)" என்று கூறியதாகவே நான் கருதுகிறேன். அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் (மனக் குழப்பத்திலிருக்கும்) ஒருவர் ("என் மனம் அசுத்தமாகிவிட்டது" எனும் பொருள் பொதிந்த) "கபுஸத் நஃப்சீ" எனும் சொல்லைக் கூற வேண்டாம். ("என் மனம் கனத்துவிட்டது" எனும் பொருள் கொண்ட) "லகிசத் நஃப்சீ"எனும் சொல்லையே கூறட்டும். இதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :