அனைத்து இஸ்லாம் நூலகம்

51 - முனாஃபிக்களின் பண்புகள் புத்தகம்

1

ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம். அப்பயணத்தில் (உணவுப் பற்றாக்குறையால்) மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் தம் நண்பர்களிடம், "அல்லாஹ்வின் தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்யாதீர்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்" என்றும், "நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால், (எம்முடைய இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்" என்றும் சொன்னான். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அ(வர் சொன்ன)தை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் உபையிடம் ஆளனுப்பினார்கள். (அவர் வந்தவுடன்) அவரிடம் (அது குறித்துக்) கேட்டார்கள். தாம் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம் செய்து சாதித்தார். அவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸைத் பொய் சொல்லிவிட்டார்" என்று (என்னைப் பற்றிக்) கூறினார். (அவருடன் சேர்ந்து) மக்களில் சிலரும் அப்படிச் சொன்னதால் என் உள்ளத்தில் கடுமை(யான வேதனை) ஏற்பட்டது. அப்போது என் வாய்மையைக் குறிக்கும் வகையில் "(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்றபோது..." (63:1) என்று தொடங்கும் வசனத்தை அல்லாஹ் அருளினான். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள். (அவர்கள் அதற்கு இணங்காமல்) தமது தலையைத் திருப்பிக் கொண்டார்கள். (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) "குஷுபும் முசன்னதா" (சாய்த்துவைக்கப்பட்ட மரக்கட்டை) என்பது, அவர்கள் மிகவும் அழகானவர்களாக (வாட்ட சாட்டமானவர்களாக) இருந்ததைக் குறிக்கிறது. அத்தியாயம் :

2

3

4

5

6

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறையில்லம் கஅபா அருகே மூன்றுபேர் ஒன்றுகூடினர். அவர்களில் "குறைஷியர் இருவரும் ஸகஃபீ குலத்தார் ஒருவரும்" அல்லது "ஸகஃபீ குலத்தார் இருவரும் குறைஷி ஒருவரும்" இருந்தனர். அவர்களது உள்ளத்தில் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாகவே இருந்தது. (ஆனால்,) வயிற்றுச் சதை (தொந்தி) அதிகமாகத்தான் இருந்தது. அவர்களில் ஒருவர், "அல்லாஹ், நாம் சொல்வதைக் கேட்கின்றான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?" என்று கேட்க, மற்றொருவர், "நாம் உரக்கப் பேசினால் அவன் கேட்பான்; மெதுவாகப் பேசினால் கேட்கமாட்டான்" என்று சொன்னார். இன்னொருவர், "நாம் உரக்கப் பேசும்போது அவன் கேட்கிறான் என்றால், நாம் மெதுவாகப் பேசும் போதும் அவன் நிச்சயம் கேட்கவே செய்வான்" என்று சொன்னார். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "(உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்தபோது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்துகொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை" (41:22) எனும் வசனத்தை அருளினான். - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

7

8

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உஹுது(ப் போரு)க்காகப் புறப்பட்டுச் சென்றபோது, அவர்களுடனிருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) திரும்பி வந்துவிட்டனர். (இவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக) நபித்தோழர்கள் இரு பிரிவினராகப் பிரிந்துவிட்டார்கள். அவர்களில் சிலர், "அ(வ்வாறு திரும்பிச் சென்ற)வர்களைக் கொன்றுவிடுவோம்" என்று கூறினர். வேறுசிலர், "இல்லை (அவர்களைக் கொல்லவேண்டாம்)" என்று கூறினர். அப்போதுதான் "உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் நீங்கள் இரு பிரிவினர்களாக உள்ளீர்கள்" (4:88) எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான். - மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :

9

10

11

12

கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அலீ (ரலி) அவர்கள் விஷயத்தில் செய்துவிட்ட இந்தச் செயலை நீங்களாக உங்கள் யோசனைப்படி செய்தீர்களா? அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் கூறிய ஏதேனும் அறிவுரைப்படி செய்தீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அம்மார் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கள் அனைவரிடமும் கூறாத ஓர் அறிவுரையை எங்களிடம் மட்டும் கூறவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள் "என் தோழர்களிடையே பன்னிரண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எட்டுப்பேர், ஊசித் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழையாத வரை சொர்க்கத்திற்குள் நுழையமாட்டார்கள். நரக நெருப்பின் ஒரு தீப்பந்தமே அவர்கள் எட்டுப் பேருக்கும் போதுமானதாகும்" என்று கூறினார்கள் என ஹுதைஃபா (ரலி) அவர்கள் சொன்னார்கள்" என்றார்கள். மற்ற நால்வர் குறித்து அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியது என் நினைவில் இல்லை என அறிவிப்பாளர் அஸ்வத் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :

13

கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் (அலீ (ரலி) அவர்களுடன் சேர்ந்து) போரிட்டுவருவதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அதை நீங்கள் சுயமான முடிவுப்படி மேற்கொள்கிறீர்களா? ஏனெனில், உங்களின் சுயமுடிவு தவறானதாகவும் இருக்கலாம்; சரியானதாகவும் இருக்கலாம்.அல்லது உங்களிடம் (அவ்வாறு போரிடுமாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்களா?" என்று கேட்டோம். அதற்கு அம்மார் (ரலி) அவர்கள், "மக்கள் அனைவரிடமும் கூறாத அறிவுரை எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறவில்லை. (ஆனால்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரிடையே பன்னிரண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள்..." என்று மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று கூறினார்கள்" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அம்மார் (ரலி) அவர்கள் இதை ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள் என்றே நான் கருதுகிறேன்" என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது. ஃகுன்தர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "என் சமுதாயத்தாரிடையே பன்னிரெண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். ஊசித் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழையாத வரை அவர்கள் சொர்க்கத்திற்குள் நுழையவுமாட்டார்கள்; அதன் வாடையைக்கூட நுகரவுமாட்டார்கள். நரக நெருப்பின் விளக்கே ("துபைலா") அந்த எட்டுப் பேருக்கும் போதுமானதாகும். அது அவர்களது தோள்களிடையே வெளிப்பட்டு அவர்களது நெஞ்சுகளுக்கு மேலே வந்துவிடும்" என்று கூறியதாக நான் கருதுகிறேன் என்று காணப்படுகிறது. அத்தியாயம் :

14

அபுத்துஃபைல் (ஆமிர் பின் வாஸிலா-ரலி) அவர்கள் கூறியதாவது: கணவாய்வாசிகளில் ஒருவருக்கும் ஹுதைஃபா (ரலி) அவர்களுக்கும் இடையே மக்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சினை ஒன்று ஏற்பட்டது. அப்போது, (அந்த மனிதரிடம்) ஹுதைஃபா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வை முன்வைத்து உம்மிடம் கேட்கிறேன். அந்தக் கணவாய்வாசிகள் எத்தனை பேர் இருந்தனர்?" என்று கேட்டார்கள். (அந்த மனிதர் மௌனமாக இருக்கவே,) அவரிடம் அங்கிருந்த மக்கள், "அவர் கேட்டதற்குப் பதில் சொல்" என்று கூறினர். அந்த மனிதர், "அவர்கள் பதினான்கு பேர் இருந்தார்கள் என எங்களிடம் தெரிவிக்கப்பட்டது" என்றார். (ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்:) அவர்களில் நீரும் ஒருவராக இருந்தால், (கணவாயிலிருந்த) மக்களின் எண்ணிக்கை பதினைந்தாக உயரும். நான் அல்லாஹ்வை சாட்சியாக்கிக் கூறுகிறேன்: அவர்களில் பன்னிரெண்டு பேர் இவ்வுலகிலும் சாட்சிகள் நிற்கும் (மறுமை) நாளிலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிரிகளாவர். மற்ற மூன்று பேரை நபியவர்கள் மன்னித்துவிட்டார்கள். (காரணம்) அவர்கள் மூவரும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொது அறிவிப்பாளரின் அறிவிப்பை நாங்கள் செவியுறவுமில்லை; அந்த மக்கள் தீட்டியிருந்த திட்டத்தை நாங்கள் அறிந்திருக்கவுமில்லை" என்று கூறி (மன்னிப்புக் கோரி)னர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருங்கற்கள் நிறைந்த ("ஹர்ரா"ப்) பகுதியில் இருந்தார்கள். பிறகு (தபூக் நோக்கி) நடந்தார்கள். அப்போது "(நீங்கள் தங்கப்போகுமிடத்திலுள்ள) நீர்நிலையில் தண்ணீர் மிகக் குறைவாகவே இருக்கும். என்னை முந்திக்கொண்டு யாரும் அங்கு செல்ல வேண்டாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், அவர்களை முந்திக்கொண்டு சிலர் அங்கு சென்றுவிட்டிருப்பதைக் கண்டார்கள். அன்றைய தினத்தில் அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அத்தியாயம் :

15

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் (குறைஷியரின் குதிரைப்படையை நோட்டமிடுவதற்காக ஹுதைபிய்யா அருகிலுள்ள) "ஸனிய்யத்துல் முரார்" கணவாயில் (முதலில்) ஏறுகிறாரோ அவருக்கு பனூ இஸ்ராயீல் சமுதாயத்துக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதைப் போன்று மன்னிப்பு வழங்கப்படும்" என்று கூறினார்கள். "கஸ்ரஜ்" குலத்தைச் சேர்ந்த எங்களது குதிரைப் படையினரே அதன் மீது முதலில் ஏறினர். பிறகு மற்றவர்கள் ஏறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சிவப்பு ஒட்டகத்தில் வரும் மனிதரைத் தவிர மற்ற அனைவரும் பாவமன்னிப்பு அளிக்கப் பட்டுவிட்டனர்" என்று கூறினார்கள். உடனே நாங்கள் அந்த மனிதரிடம் சென்று, "நீ வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமக்காகப் பாவமன்னிப்புக் கோரச் சொல்" என்று கூறினோம். அதற்கு அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் எனக்குப் பாவமன்னிப்புக் கோருவதைவிட காணாமற்போன எனது ஒட்டகம் எனக்கு (திரும்பக்) கிடைப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" என்று சொன்னார். அப்போது அந்த மனிதர் காணாமற்போன தனது ஒட்டகத்தைத் தேடிக்கொண்டிருந்தார். அத்தியாயம் :

16

மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "யார் "ஸனிய்யத்துல் முரார்" அல்லது "ஸனிய்யத்துல் மரார்" கணவாயில் முதலில் ஏறுகிறாரோ..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில், "அப்போது கிராமவாசியொருவர் தமது காணாமற்போன ஒட்டகத்தைத் தேடிக்கொண்டு வந்தார்"என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

17

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் பனுந் நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் (இஸ்லாத்தைத் தழுவி) "அல்பகரா", "ஆலு இம்ரான்" ஆகிய (குர்ஆன்) அத்தியாயங்களை ஓதி முடித்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக (வேதஅறிவிப்பை) எழுதுபவராக இருந்தார். பிறகு அவர் (தமது பழைய கிறித்தவ மதத்துக்கே) ஓடிப்போய்,வேதக்காரர்களுடன் சேர்ந்துகொண்டார். வேதக்காரர்கள் அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடினர். "இவர் முஹம்மதுக்காக (வேத அறிவிப்பை) எழுதிவந்தார்" என்று கூறி, அவரால் பெருமைப்பட்டுக் கொண்டனர். இதே நிலையில், (ஒரு நாள்) அவர்களுக்கு மத்தியில் வைத்து அவரது கழுத்தை அல்லாஹ் முறித்துவிட்டான். (அவர் இறந்து விட்டார்.) ஆகவே, அவருக்காகச் சவக்குழி தோண்டி அவரைப் புதைத்துவிட்டனர். காலை நேரமானபோது அவரைப் பூமி (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்துவிட்டிருந்தது. பிறகு மீண்டும் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர். மறுநாள் காலையிலும் பூமி (குழிக்கு வெளியில்) அவரைத் தூக்கியெறிந்துவிட்டிருந்தது. பிறகு மறுபடியும் அவர்கள் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர். மறுநாள் காலையிலும் பூமி அவரை (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்துவிட்டிருந்தது. ஆகவே, அவர்கள் அவரை (புதைக்காமல்) அப்படியே போட்டுவிட்டார்கள். அத்தியாயம் :

18

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். மதீனாவுக்கு அருகில் அவர்கள் வந்தபோது, கடுமையான (சூறாவளிக்) காற்று வீசியது.அது பயணிகளை மண்ணுக்குள் புதைத்துவிடப் பார்த்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தக் காற்று ஒரு நயவஞ்சகனைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். மதீனாவுக்குள் வந்தபோது, நயவஞ்சகர்களின் பெருந்தலைவன் ஒருவன் இறந்துவிட்டிருந்தான். அத்தியாயம் :

19

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் காய்ச்சல் கண்டிருந்த ஒரு மனிதரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றோம். அப்போது நான் எனது கையை அவர் மீது வைத்தேன். (அவரது உடல் அனலாகத் தகித்தது.) அப்போது நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று போல் கடுமையான வெப்பமுள்ள ஒரு மனிதரை நான் கண்டதேயில்லை" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமைநாளில் இவரைவிடக் கடுமையான வெப்பத்திற்கு ஆளாகுவோரை நான் அறிவிக்கட்டுமா? இதோ வாகனத்தில் திரும்பிக்கொண்டிருக்கும் இவ்விரு மனிதர்கள்தான்" என்று தம் தோழர்களிடையேயிருந்த இரு மனிதர்களைப் பற்றிச் சொன்னார்கள். அத்தியாயம் :

20

21