34 - வேட்டை மற்றும் அறுத்தல் புத்தகம்
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இறகு இல்லாத அம்பின் மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்துக் கேட்டேன். அவர்கள், "பிராணி அம்பின் கூர்முனையால் தாக்கப்பட்டிருந்தால் அதை உண்ணுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்குண்டு செத்திருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதை உண்ணாதீர்கள்)" என்று பதிலளித்தார்கள். (பயிற்சியளிக்கப்பட்ட) நாய்கள் மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்தும் அவர்களிடம் நான் கேட்டேன். அவர்கள், "உங்களுக்காக அவை கவ்விப் பிடித்துவைத்து, அதிலிருந்து எதையும் தின்னாமல் இருந்தால் நீங்கள் உண்ணுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் கவ்விப் பிடிப்பதே, (முறைப்படி) அறுப்பதாகிவிடும். உங்களது நாயுடன் வேறொரு நாயை நீங்கள் கண்டு, அந்த வேறொரு நாய் உங்கள் நாயுடன் அந்தப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால், அதை உண்ணாதீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் நாயை மட்டுமே அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பினீர்கள். வேறொரு நாயை அவ்வாறு கூறி நீங்கள் அனுப்பவில்லை" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேட்டைப் பிராணிகள் குறித்து வினவினேன். அவர்கள், "நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி, உங்கள் அம்பை எய்ய, அது சென்று பிராணியைத் தாக்கிக் கொன்றுவிட்டால், அதை நீங்கள் உண்ணலாம்; அந்தப் பிராணி தண்ணீரில் விழுந்து கிடக்கும் நிலையில் அதை நீங்கள் கண்டால் தவிர! (அப்போது அதை உண்ணாதீர்கள்.) ஏனெனில், தண்ணீரில் விழுந்ததால் அது செத்ததா, அல்லது உங்கள் அம்பு தாக்கி அது செத்ததா என்பது உங்களுக்குத் தெரியாது" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் வசிக்கிறோம். அவர்களுடைய பாத்திரத்தில் சாப்பிடுகிறோம். மேலும், வேட்டைப் பிராணிகள் நிறைந்த ஒரு பகுதியில் வசிக்கிறோம். நான் எனது வில்லாலும் வேட்டையாடுகிறேன். பயிற்சியளிக்கப்பட்ட எனது நாயாலும் வேட்டையாடுகிறேன். பயிற்சியளிக்கப்படாத நாயாலும் வேட்டையாடுகிறேன். இவற்றில் எது எங்களுக்கு அனுமதிக்கப்பட்டது என்பதை எனக்குத் தெரிவியுங்கள்?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: வேதம் வழங்கப்பெற்றவர்களின் நாட்டில் நீங்கள் வசிப்பதாகவும் அவர்களுடைய பாத்திரங்களில் உண்பதாகவும் நீங்கள் சொன்னதைப் பொறுத்தமட்டில், அவர்களுடைய பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால்,அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் உண்ணாதீர்கள். (வேறு பாத்திரம்) உங்களுக்குக் கிடைக்காவிட்டால், அதைக் கழுவிவிட்டு, பின்னர் அதில் உண்ணுங்கள். வேட்டைப் பிராணிகள் நிறைந்த பகுதியில் நீங்கள் வசிப்பதாகச் சொன்னதைப் பொறுத்தவரை, உங்கள் வில்லால் வேட்டையாடியதை நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி (அறுத்து) உண்ணலாம். (அவ்வாறே) பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயின் மூலம் வேட்டையாடியதையும் அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் உண்ணலாம். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயின் மூலம் நீங்கள் வேட்டையாடியது அறுப்பதற்கு ஏதுவாக (உயிர் பிரியாத நிலையில்) உங்களுக்குக் கிடைத்தால், அதை (முறைப்படி அறுத்து) நீங்கள் உண்ணலாம். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் இப்னு வஹ்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், வில்லால் வேட்டையாடப்பட்ட பிராணியைப் பற்றிய குறிப்பு இல்லை. அத்தியாயம் :
அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள எதையும் உண்ணக்கூடாதெனத் தடை விதித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இந்த ஹதீஸை ஹிஜாஸில் உள்ள நம் அறிஞர்களிடமிருந்து செவியுறவில்லை. பின்னர் ஷாம் (சிரியா)வாசிகளின் மார்க்கச்சட்ட அறிஞர்களில் ஒருவரான அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களே எனக்கு இதை அறிவித்தார்கள். அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரின் வணிகக் குழுவொன்றை எதிர்கொள்ள படைப் பிரிவு ஒன்றில் எங்களை அனுப்பினார்கள். எங்களுக்கு அபூஉபைதா பின் அல்ஜர் ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள். ஒரு பை பேரீச்சம் பழத்தை எங்களுக்குப் பயண உணவாகக் கொடுத்தார்கள். எங்களுக்குக் கொடுக்க வேறெதையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. அபூஉபைதா (ரலி) அவர்கள் அதிலிருந்து ஒவ்வொரு பேரீச்சம் பழமாக எங்களுக்குக் கொடுத்துவந்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்) "அதை வைத்துக்கொண்டு என்ன செய்தீர்கள்? (அது உங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்காதே?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: குழந்தை வாயிலிட்டுச் சுவைப்பதைப் போன்று நாங்களும் அந்தப் பேரீச்சம் பழத்தைச் சுவைப்போம். அதற்கு மேல் தண்ணீரும் அருந்திக்கொள்வோம். அன்றைய பகலிலிருந்து இரவு வரை அதுவே எங்களுக்குப் போதுமானதாயிருக்கும். நாங்கள் எங்களிடமிருந்த தடிகளால் கருவேல மரத்தில் அடி(த்து இலை பறி)ப்போம். பிறகு அதைத் தண்ணீரில் நனைத்து அதையும் உண்டோம். பிறகு நாங்கள் கடற்கரையோரமாக நடந்தோம். அப்போது கடலோரத்தில் பெரிய மணல் திட்டைப் போன்று ஏதோ ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. அங்கு நாங்கள் சென்றோம். அங்கே "கொழுப்புத் தலை திமிங்கலம்" (அம்பர்) எனப்படும் ஒரு பிராணி கிடந்தது. (தளபதி) அபூஉபைதா (ரலி) அவர்கள் "செத்ததாயிற்றே?" என்று கூறினார்கள். பிறகு "இல்லை, நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தூதர்கள் ஆவோம். அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உள்ளோம். நீங்கள் நிர்ப்பந்தத்திற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறீர்கள். எனவே, (இதை) உண்ணுங்கள்" என்று கூறினார்கள். அந்தத் திமிங்கலத்தை வைத்துக்கொண்டு நாங்கள் ஒரு மாதம் கழித்தோம். எங்கள் முந்நூறு பேரின் உடலும் வலிமையாகிவிட்டது. நாங்கள் அந்தத் திமிங்கலத்தின் விழிப் பள்ளத்திலிருந்து பெரிய பாத்திரங்கள் மூலம் எண்ணெய் எடுத்தோம். அதன் உடலைக் காளை மாட்டின் அளவுக்குத் துண்டு போட்டோம். அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களில் பதிமூன்று பேரைத் தேர்ந்தெடுத்து, அதன் விழிப் பள்ளத்தில் உட்காரவைத்தார்கள். மேலும், அதன் விலாஎலும்புகளில் ஒன்றை எடுத்து, அதை (பூமியில்) நட்டுவைத்தார்கள். பிறகு எங்களிடமிருந்த ஒரு பெரிய ஒட்டகத்தில் சிவிகை பூட்டி அதில் ஏறி அந்த எலும்பிற்குக் கீழே கடந்துபோனார்கள். (அந்த எலும்பு தலையைத் தொடவில்லை. அந்த அளவுக்குப் பெரியதாக இருந்து.) பிறகு அந்த மீனை (அரை வேக்காட்டில்) வேகவைத்து, பயண உணவாக எடுத்துக்கொண்டோம். நாங்கள் மதீனா வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களிடம் தெரிவித்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது அல்லாஹ் உங்களுக்கு வெளிப்படுத்திய உணவாகும். அதில் ஏதேனும் உங்களிடம் மீதியிருந்தால் நமக்கும் உண்ணக் கொடுங்களேன்!" என்று கேட்டார்கள். உடனே நாங்கள் அதிலிருந்து சிறிதளவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினோம். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் முந்நூறு பேரை ஒரு படைப்பிரிவில் வாகனங்களில் அனுப்பினார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள் எங்கள் (படைக்குத்) தளபதியாக இருந்தார்கள். நாங்கள் குறைஷியரின் வணிகக் குழுவொன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆகவே, நாங்கள் கடற்கரையில் அரை மாதம் தங்கினோம். (இந்நாட்களில் உணவுப் பற்றாக் குறையால்) எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. எனவே,நாங்கள் கருவேல மரத்தின் இலைகளைப் புசித்தோம். ஆகவேதான், அந்தப் படைப்பிரிவு "கருவேலஇலை படைப்பிரிவு" எனப் பெயர் பெற்றது. இந்த (இக்கட்டான சூழ்)நிலையில் கடல் எங்களுக்கு "அல்அம்பர்" (கொழுப்புத் தலைத் திமிங்கலம்) எனப்படும் (ஒரு வகைக் கடல்வாழ்) உயிரினத்தை ஒதுக்கியது. நாங்கள் அதன் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்துக்கொண்டோம். அ(ந்த மீனைப் புசித்த)தனால் (வலிமையான) உடல்கள் எங்களுக்குத் திரும்பக் கிடைத்தன. அபூஉபைதா (ரலி) அவர்கள் அந்த மீனின் விலாஎலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டுவிட்டுப் பிறகு,படையிலிருந்த உயரமான மனிதரையும், உயரமான ஒட்டகம் ஒன்றையும் கண்டு(பிடித்து), அவரை அந்த ஒட்டகத்தில் ஏற்றி அனுப்ப, அவர் அந்த எலும்பிற்குக் கீழே (தலை முட்டாமல்) கடந்து சென்றார். அந்த மீனுடைய கண்ணின் எலும்புக்குள் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அதன் விழிப் பள்ளத்திலிருந்து நாங்கள் இப்படி இப்படி பெரிய பாத்திரத்தில் கொழுப்பை எடுத்தோம். (அந்தப் பயணத்தின் துவக்கத்தில்) எங்களுடன் ஒரு பை நிறைய பேரீச்சம் பழங்கள் இருந்தன. அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு கைப் பிடி பேரீச்சம் பழம் கொடுத்துவந்தார்கள். பிறகு (நாட்கள் செல்லச் செல்ல) ஒவ்வொரு பேரீச்சம் பழம் தந்தார்கள். அதுவும் தீர்ந்து விட்டபோதுதான் அதன் அருமையை நாங்கள் உணர்ந்தோம். அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "கருவேல இலை"ப் படைப்பிரிவின் போது, ஒரு மனிதர் (கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள்) மூன்று ஒட்டகங்கள் அறு(த்து உணவளி)த்தார். பிறகு மூன்று ஒட்டகங்கள் அறுத்தார். பிறகு மூன்று ஒட்டகங்கள் அறுத்தார். பிறகு (அவர் அறுக்க முற்பட்டபோது) அவரை அபூஉபைதா (ரலி) அவர்கள் தடுத்துவிட்டார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களில் முந்நூறு பேரை ஒரு படைப்பிரிவில் அனுப்பினார்கள். நாங்கள் எங்கள் பயண உணவை எங்கள் தோள்களில் சுமந்து எடுத்துச் சென்றோம். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் (முற்றுகை) நாட்களில் எங்களுக்கு(க் கடுமையான) பசி ஏற்பட்டிருந்தது. கைபர் போர் (தொடங்கிய) நாளன்று நாங்கள் நாட்டுக் கழுதைகளை (போர்ச் செல்வமாக)க் கைப்பற்றி அவற்றை அறுத்(துச் சமைத்)தோம். பாத்திரங்கள் கொதிக்கத் தொடங்கிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், "பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள். கழுதைகளின் இறைச்சியில் சிறிதும் உண்ணாதீர்கள்" என்று (உரக்கக் கூவி) அறிவித்தார். அப்போது மக்களில் சிலர், "(போர்ச்செல்வமாகப் பிடிக்கப்பட்ட) அக்கழுதைகளிலிருந்து ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) செலுத்தப்படாததால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்" என்று கூறினர். வேறுசிலர், "(அப்படியல்ல;) முற்றாக அதற்குத் தடை விதித்து விட்டார்கள்" என்று கூறினர். அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (கைபர் போரின்போது) நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை, அது பச்சையாயிருந்தாலும் சமைக்கப்பட்டிருந்தாலும் எறிந்துவிடுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அதற்குப் பின்பு அதை உண்ணும்படி (அனுமதியளித்து) எங்களுக்கு அவர்கள் உத்தரவிடவே யில்லை. - மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி (போருக்காக)ப் புறப்பட்டோம். பிறகு கைபர்வாசிகளுக்கு எதிராக எங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான். வெற்றி பெற்ற அன்றைய மாலை வேளையில் மக்கள் அதிகமான நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது என்ன நெருப்பு? எதற்காக மூட்டியிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். "இறைச்சி சமைப்பதற்காக" என்று மக்கள் கூறினர். "எந்த இறைச்சி?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, "நாட்டுக் கழுதைகளின் இறைச்சி" என்று மக்கள் கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவற்றைக் கொட்டிவிட்டு, அந்தப் பாத்திரங்களை உடைத்துவிடுங்கள்"என்று கூறினார்கள். அப்போது ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே, இறைச்சிகளைக் கொட்டிவிட்டு, பாத்திரங்களைக் கழுவிக்கொள்ளலாமா?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அப்படியே ஆகட்டும்!" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதென எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்ததற்குக் காரணம், நாட்டுக் கழுதை மக்களின் பொதிகளைச் சுமந்து செல்லும் வாகனமாக இருப்பதால், (உண்ணப்படும் பட்சத்தில்) அவர்களுக்கு வாகனம் இல்லாமல் போய்விடும் என நபியவர்கள் அஞ்சியதா? அல்லது கைபர் நாளன்று நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கு (நிரந்தரமாக)த் தடை விதித்தார்களா என்பது எனக்குத் தெரியாது. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றிகொண்டபோது, அந்த ஊரிலிருந்து வெளியே வந்த நாட்டுக் கழுதைகளை நாங்கள் கைப்பற்றி, அவற்றை அறுத்துச் சமைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர்களில் ஒருவர், "அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீங்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதெனத் தடைசெய்கிறார்கள். அவை அசுத்தமானவையும் ஷைத்தானின் நடவடிக்கையும் ஆகும்" என்று அறிவிப்புச் செய்தார். உடனே பாத்திரங்கள் அவற்றில் உள்ளவற்றோடு கவிழ்க்கப்பட்டன. அப்போது அப்பாத்திரங்களில் இறைச்சி வெந்து கொதித்துக்கொண்டிருந்தது. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போர் நாளன்று ஒருவர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! கழுதைகள் (அறுத்து) உண்ணப்படுகின்றன" என்று கூறினார். பிறகு மற்றொருவர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! கழுதைகள் (உண்டு) தீர்க்கப்பட்டுவிட்டன" என்று சொன்னார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களுக்கு அறிவிப்புச் செய்யும்படி) அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர் மக்களிடையே, "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீங்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதெனத் தடைசெய்கிறார்கள். ஏனெனில், அவை அசுத்தமானவையாகும்"என்று அறிவிப்புச் செய்தார். உடனே பாத்திரங்கள் அவற்றிலிருந்தவற்றோடு கவிழ்க்கப்பட்டன. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளன்று நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள்; குதிரையின் இறைச்சியை உண்ண அனுமதியளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போர் நடந்த கால கட்டத்தில் நாங்கள் குதிரைகளையும்,காட்டுக் கழுதைகளையும் உண்டோம். நபி (ஸல்) அவர்கள் (கைபர் போர் நாளில்) நாட்டுக் கழுதையின் இறைச்சியை உண்ண வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில் லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் உடும்பு (இறைச்சி உண்பது) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அதை நான் உண்ணக்கூடியவனாகவும் இல்லை; அதை (உண்ண வேண்டாமெனத்) தடை செய்பவனாகவும் இல்லை" என விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உடும்பை உண்பதைப் பற்றிக் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உடும்பை நான் உண்ணவுமாட்டேன்; அதை (உண்ண வேண்டாமெனத்) தடை செய்யவுமாட்டேன்" என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபோது ஒரு மனிதர் உடும்பை உண்பதைப் பற்றிக் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அதை நான் உண்ணவுமாட்டேன்; அதை (உண்ண வேண்டாமெனத்) தடை செய்யவுமாட்டேன்" என விடையளித்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அய்யூப் பின் அபீதமீமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உடும்புக் கறி கொண்டுவரப்பட்டது. அதை அவர்கள் உண்ணவுமில்லை; அதை உண்ண வேண்டாமெனத் தடை செய்யவுமில்லை" என்று இடம்பெற்றுள்ளது. உசாமா பின் ஸைத் அல்லைஸீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபோது, பள்ளிவாசலில் இருந்த ஒரு மனிதர் எழுந்தார்..." என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் இருந்தனர். அப்போது அவர்களிடம் உடும்புக் கறி கொண்டு வரப்பட்(டு பரிமாறப்பட்)டது. உடனே நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் அழைத்து "அது உடும்பு இறைச்சி" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) "நீங்கள் உண்ணுங்கள். ஏனெனில், அது அனுமதிக்கப்பட்டது (ஹலால்)தான். ஆயினும், அது என் (பரிச்சியமான) உணவு இல்லை" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், பின்வருமாறு இடம்பெற்றுள்ளது. தவ்பா பின் அபில்அசத் கைசான் அல்அம்பரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் தொடர்பாக (நிறைய) ஹதீஸ்களை அறிவிப்பதைப் பார்த்தீர்களா? நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் ஏறத்தாழ இரண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகள் அமர்ந்து (ஹதீஸ்களைக் கற்று)ள்ளேன். ஆனால், அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைத் தவிர வேறெதையும் அறிவித்து நான் கேட்டதில்லை. அதாவது சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களிடம்) இருந்தனர்... என்று (மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று) அறிவித்தார்கள். அத்தியாயம் :
காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் என் தாயின் சகோதரி மைமூனா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் உடும்புக் கறி வைக்கப்பட்டது. அதை (மைமூனா (ரலி) அவர்களின் சகோதரி) உம்மு ஹுஃபைத் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் நஜ்துப் பகுதியிலிருந்து கொண்டு வந்திருந்தார். உம்மு ஹுஃபைத் (ரலி) அவர்கள் பனூ ஜஅஃபர் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரின் துணைவியராய் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதையும் அது என்னவென்று அறியாமல் உண்ணமாட்டார்கள். பிறகு மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. ஹதீஸின் இறுதியில் "இதை யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள். அவர் மைமூனா (ரலி) அவர்களது மடியில் வளர்ந்தவர் ஆவார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நாங்கள் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தபோது, நபி (ஸல்) அவர்களிடம் பொரிக்கப்பட்ட இரு உடும்புகள் கொண்டுவரப்பட்டன" என்று இடம் பெற்றுள்ளது. அதில் "யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்" எனும் குறிப்பு இல்லை. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தபோது அவர்களிடம் உடும்புக் கறி கொண்டுவரப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களும் இருந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயாரின் சகோதரி உம்மு ஹுஃபைத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நெய்யும் பாலாடைக் கட்டியும் உடும்புகளும் அன்பளிப்பாக வழங்கினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நெய்யையும் பாலாடைக் கட்டியையும் உட்கொண்டார்கள். உடும்பை அவர்களின் மனம் விரும்பாததால் அதை உண்ணாமல் விட்டுவிட்டார்கள். ஆனால், உடும்புகள் (சமைக்கப்பட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உணவு விரிப்பின் மீது உண்ணப்பட்டன. உடும்புகள் தடை செய்யப்பட்டவையாக இருந்திருந்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உணவு விரிப்பில் அவை உண்ணப்பட்டிருக்க மாட்டா. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மதீனாவில் புதிதாக மணமுடித்த (மணமகன்) ஒருவர் எங்களை விருந்துக்காக அழைத்தார். அவர் எங்களிடம் (சமைக்கப்பட்ட) பதிமூன்று உடும்புகளைக் கொண்டுவந்து வைத்தார். மக்களில் சிலர் உண்டனர். வேறுசிலர் உண்ணவில்லை. மறுநாள் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து, அதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்களைச் சுற்றி இருந்தவர்கள் அதிகமாகப் பேசினர். எந்த அளவுக்கென்றால், அவர்களில் சிலர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடும்பை உண்ணவுமாட்டேன்; உண்பதைத் தடுக்கவுமாட்டேன்; அதை உண்ண வேண்டாமெனத் தடை செய்யவுமாட்டேன்" எனக் கூறியுள்ளார்கள் என்று (நபியவர்கள் எந்த விளக்கமும் சொல்லாமலேயே சென்று விட்டார்கள் என்பதைப் போன்று) பேசினார்கள். இதைக் கேட்ட இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "நீங்கள் சொல்வது தவறு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதிக்கப்பட்டவற்றையும் தடை செய்யப்பட்டவற்றையும் அறிவிப்பதற்காகவே அனுப்பப்பட்டார்கள். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களும் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களும் மற்றொரு பெண்ணும் இருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஓர் உணவுவிரிப்பில் இறைச்சி வைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்ணமுற்பட்டபோது அவர்களிடம் மைமூனா (ரலி) அவர்கள், "இது உடும்புக் கறி" என்று சொன்னார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தை எடுத்துக்கொண்டார்கள். மேலும் "இந்த இறைச்சியை நான் ஒருபோதும் உண்டதில்லை" என்று கூறிவிட்டு, அங்கிருந்தவர்களிடம், "நீங்கள் உண்ணுங்கள்" என்றார்கள். எனவே, அதை ஃபள்ல் (ரலி) அவர்களும் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களும் அந்தப் பெண்ணும் உண்டனர். மைமூனா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதை உண்பார்களோ அதைத் தவிர வேறெதையும் நான் உண்ணமாட்டேன்" என்று கூறிவிட்டார்கள். அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உடும்புகள் நிறைந்த ஒரு பகுதியில் வசிக்கிறோம். எனவே, அதைப் பற்றி எங்களுக்கு என்ன "கட்டளையிடுகிறீர்கள்?" அல்லது "தீர்ப்பளிக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரில் சிலர் (உயிர்ப் பிராணிகளாக) உருமாற்றப்பெற்றனர் என என்னிடம் கூறப்பட்டது" என்று கூறினார்கள். அதை உண்ணும்படி கட்டளையிடவுமில்லை;உண்ண வேண்டாமெனத் தடை செய்யவுமில்லை. அதன் பின்னர் உமர் (ரலி) அவர்கள், "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அதன் மூலம் பலருக்குப் பயனளிக்கிறான். இது இந்த இடையர்களில் பெரும்பாலோரின் உணவாகும். அது என்னிடம் இருந்திருந்தால் அதை நான் உண்டிருப்பேன். (தனிப்பட்ட முறையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனம் அதை விரும்பவில்லை" என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இரண்டு விஷயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே,கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும். - மேற்கண்ட ஹதீஸ் ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள், கோழி ஒன்றைக் கட்டிவைத்து அதன்மீது அம்பெய்து கொண்டிருந்த சிலரைக் கடந்து சென்றார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களைக் கண்டவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் சிதறியோடிவிட்டனர். இப்னு உமர் (ரலி) அவர்கள், "இதைச் செய்தவர் யார்? இவ்வாறு செய்பவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) இப்னு உமர் (ரலி) அவர்கள், பறவையொன்றைக் கட்டிவைத்து அதன்மீது அம்பெய்துகொண்டிருந்த குறைஷி இளைஞர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் (குறி) தவறவிடும் அம்புகள் ஒவ்வொன்றும் பறவையின் உரிமையாளருக்கு உரியவை என முடிவு செய்திருந்தனர். இப்னு உமர் (ரலி) அவர்களைக் கண்டவுடன் அவர்கள் சிதறியோடிவிட்டனர். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், "இதைச் செய்தவர் யார்? இவ்வாறு செய்பவர்களை அல்லாஹ் சபித்துள்ளான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அம்பெய்து பயிற்சி பெறுவதற்காக) எந்த உயிரினத்தையும் இலக்காக ஆக்கியவனைச் சபித்தார்கள்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :