அனைத்து இஸ்லாம் நூலகம்

75 - நோயாளிகள்

1

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

2

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

3

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலை, புற்களில் நாணலுக்கு ஒப்பானதாகும். அதைக் காற்று ஒருமுறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும்வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்.3 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

4

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளரின் நிலையானது, புற்களில் நாணல் போன்றதாகும். காற்றடிக்கும்போது அதைக் காற்று (தன் திசையில்) சாய்த்துவிடும். காற்று நின்று விட்டால், அது நேராக நிற்கும். சோதனை யின்போது (இறைநம்பிக்கையாளரின் நிலையும் அவ்வாறுதான்). தீயவன், உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றவன். அல்லாஹ், தான் நாடும்போது அதை (ஒரேயடியாக) உடைத்து (சாய்த்து)விடுகிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

5

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.4 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

6

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களைவிடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

7

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப் பட்டுக் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். ‘‘தாங்கள் கடும் நோயால் சிரமப்படுகிறீர்களே (அல்லாஹ்வின் தூதரே!), தங்களுக்கு இதனால் இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதாலா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; எந்தவொரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதற்குப் பதிலாக, மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள். அத்தியாயம் :

8

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக்கொண்டிருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக்கொண்டி ருக்கிறீர்களே!” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்; உங்களில் இரு மனிதர்கள் காய்ச்சலால் அடைகின்ற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகின்றேன்” என்று சொன்னார்கள். நான், ‘‘(இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரு (மடங்கு) நற்பலன்கள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்; அது அப்படித்தான். ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்குப் பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவரு டைய பாவங்களை அல்லாஹ் உதிர்த்து மன்னிக்காமல் விடுவதில்லை” என்று கூறினார்கள். அத்தியாயம் :

9

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7 அத்தியாயம் :

10

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஏழு விஷயங்களைக் (கடைப்பிடிக்கும்படி) கட்டளையிட்டு ஏழு விஷயங்களைத் தடை செய்தார்கள்: (ஆண்கள்) தங்க மோதிரம், சாதாரணப் பட்டு, அலங்காரப் பட்டு, தடித்த பட்டு ஆகியவற்றை அணிய வேண்டாமென்றும், பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, மென்பட்டுத் திண்டு (மீஸரா) ஆகிய வற்றைப் பயன்படுத்த வேண்டாமென்றும் எங்களுக்குத் தடை விதித்தார்கள். ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்லல், நோயாளியை நலம் விசாரித் தல், சலாமைப் பரப்புதல் ஆகியவற்றை எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.8 அத்தியாயம் :

11

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந் தேன். என்னை உடல் நலம் விசாரிக்க நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நடந்தே என்னிடம் வந்தார்கள். அப்போது நான் மயக்கம் அடைந்திருக்கக் கண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு அங்கத் தூய்மை செய்த தண்ணீரை என்மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து கண்விழித்)தேன். அங்கே (என் முன்னே) நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் செல்வத்தை நான் என்ன செய்ய வேண்டும்? என் செல்வத்தின் விஷயத்தில் என்ன முடிவு செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பதிலேதும் கூறவில்லை. இறுதியில் வாரிசுரிமைச் சட்டம் தொடர்பான இறை வசனம் அருளப்பெற்றது.10 அத்தியாயம் :

12

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட் டுமா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்; (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கிறது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்” என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, ‘‘நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்துகொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உம்மு ஸுஃபரைப் பார்த்தேன். அவர்தான் கஅபாவின் திரைமீது (சாய்ந்தபடி அமர்ந்து) உள்ள கறுப்பான உயரமான இப்பெண் ஆவார்.11 அத்தியாயம் :

13

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகின்றான்: நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை(ப் பறித்து)க்கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானே யானால், அவற்றுக்குப் பதிலாகச் சொர்க் கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (‘அவனுடைய பிரியத்திற்குரிய இரு பொருட்கள்’ என்பது) அவருடைய இரு கண்களைக் குறிக்கும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

14

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் பிலால் (ரலி) அவர்களுக்கும் காய்ச்சல் கண்டிருந்தது. அவ்விருவரிடமும் நான் சென்று, ‘‘என் தந்தையே! எப்படியிருக் கிறீர்கள்? பிலால் அவர்களே எப்படியிருக் கிறீர்கள்?” என்று (நலம்) விசாரித்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குக் காய்ச்சல் காணும்போது (பின்வரும் கவிதையைக்) கூறுவார்கள்: காலைவாழ்த்துக் கூறப்பெற்றநிலையில்ஒவ்வொரு மனிதனும்தம் குடும்பத்தாரோடுகாலைப் பொழுதை அடைகிறான்(ஆனால்,)அவன் செருப்பு வாரைவிட மிக அருகில்மரணம் இருக்கிறது (என்பதை அவன் அறிவதில்லை). பிலால் (ரலி) அவர்கள் காய்ச்சல் விட்டதும், ‘இத்கிர்’ (நறுமணப்) புல்லும்’ஜலீல்’ கூரைப் புல்லும்என்னைச் சூழ்ந்திருக்க,ஒரு இராப் பொழுதையேனும்(மக்காவின்) பள்ளத்தாக்கில்நான் கழிப்பேனா...?(மக்காவின்) ‘மிஜன்னா’ (சுனை) நீரைஒருநாள் ஒருபொழுதுநான் சுவைப்பேனா....?அந்தஷாமா, தஃபீல் மலைகள்(இனி எப்போதேனும்)எனக்குத் தென்படுமா...? என்று (கவிதை) கூறுவார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, (அவர்கள் இருவருடைய நிலையைத்) தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! நாங்கள் மக்காவை நேசித்ததுபோல், அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! இறைவா! மேலும், இவ்வூரை ஆரோக்கிய மானதாகவும் ஆக்குவாயாக! அதன் (அளவைகளான) ‘ஸாஉ’, ‘முத்(து)’ ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ வளத்தை வழங்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை இடம்பெயரச் செய்து அதை ‘ஜுஹ்ஃபா’ எனுமிடத்தில் (குடி) அமர்த்திவிடுவாயாக” என்று பிரார்த்தனை செய்தார்கள்.12 அத்தியாயம் :

15

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் புதல்வியார் (ஸைனப்-ரலி) அவர்கள் தம்முடைய மகள் (அல்லது மகன்) இறக்கும் தறுவாயில் இருப்பதாகவும், எனவே, அங்கு வந்து சேரவேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் நானும் சஅத் பின் உபாதா (ரலி) அவர்களும் இருந்தோம். -உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இருந்ததாகவே நாங்கள் கருதுகிறோம்.- உடனே நபி (ஸல்) அவர்கள் தம் புதல்விக்கு சலாம் (முகமன்) சொல்லி அனுப்பியதோடு, ‘‘அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியது. ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, நன்மையை எதிர்பார்ப்பாயாக; பொறுமை யைக் கைக்கொள்வாயாக” எனக் கூறி யனுப்பினார்கள். அப்போது அவர்களின் புதல்வியார் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (கண்டிப்பாக வரவேண்டு மென மீண்டும்) கூறியனுப்பினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார் கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம். (தம் புதல்வியின் வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களின் மடியில், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த குழந்தை கிடத்தப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களின் இரு கண்களும் நீர் சொரிந்தன. உடனே அவர்களிடம் சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் ‘‘அல்லாஹ் வின் தூதரே! என்ன இது? (அழுகிறீர் களே!)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இது அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களின் உள்ளங்களில் அமைத் துள்ள இரக்க உணர்வாகும். அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்” என்று சொன்னார் கள்.13 அத்தியாயம் :

16

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். -நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் உடல் நலம் விசாரிக்கச் சென்றால் அந்த நோயாளியிடம், ‘‘கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால், (இது உங்கள் பாவத்தை நீக்கி உங்களைத்) தூய்மைப் படுத்திவிடும்” என்று கூறுவார்கள்- (தமது அந்த வழக்கப்படி நபி (ஸல்) அவர்கள் கிராமவாசியிடம் கூறியபோது) அந்தக் கிராமவாசி, ‘‘நான் தூய்மை பெற்றுவிடுவேன் என்றா சொன்னீர்கள்! (சாத்தியம்) கிடையாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாகித் தகிக்கின்ற காய்ச்சலாகும். இது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்” என்று சொன்னார். அப்போது நபி ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் ஆம் (அவ்வாறே நடக்கும்)” என்று கூறினார்கள்.14 அத்தியாயம் :

17

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்களின் அடிமையொருவர் நபி (ஸல்) அவர்களுக்கு ஊழியம் செய்து வந்தார். அவர் நோயுற்றுவிட்டார். அவரை உடல்நலம் விசாரிக்கச் சென்ற நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்லாத்தை ஏற்றுக்கொள்” என்று சொன்னார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.15 முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தம் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேதனை வந்தபோது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள்.16 அத்தியாயம் :

18

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த போது அவர்களை உடல்நலம் விசாரிப்ப தற்காகச் சிலர் வந்தனர். (அப்போது தொழுகை நேரம் வந்துவிடவே) நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்தபடியே அவர்களுக்குத் தொழுவித்தார்கள். மக்களோ நின்றபடி தொழலாயினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘உட்காருங்கள்’ என்று மக்களுக்கு சைகை செய்தார்கள். தொழுகை முடிந்தபோது, ‘‘(தொழுகையை முன்நின்று நடத்தும்) இமாம் பின்பற்றப்பட வேண்டியவராவார். ஆகவே, அவர் (தொழுகையில்) குனிந்தால் நீங்களும் குனி(ந்து ‘ருகூஉ’ செய்)யுங்கள். அவர் (தமது தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள்” என்று சொன்னார்கள். ஹுமைதீ (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் இறுதியாகத் தொழுதபோது, மக்கள் நபியவர்கள் பின்னால் நின்றுகொண்டு தொழ, நபியவர்கள் மட்டும் உட்கார்ந்து தொழு(வித்)தார்கள்.17 அத்தியாயம் :

19

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மக்காவில் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் என்னை உடல்நலம் விசாரிப்பதற்காக என்னிடம் வந்தார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் நபியே! நான் செல்வத்தை விட்டுச்செல்கிறேன். (ஆனால்,) ஒரேயொரு மகளைத்தான் நான் (என் வாரிசாக) விட்டுச்செல்கிறேன். ஆகவே, என் செல்வத்தில் இரண்டிலொரு பங்கை (தானம் செய்யும்படி) இறுதி விருப்பம் தெரிவித்துவிட்டு (வாரிசான என் மகளுக்கு) மூன்றில் ஒரு பங்கை மட்டும் விட்டுச்செல்லட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘வேண்டாம்” என்று சொன்னார்கள். நான், ‘‘பாதிப் பங்கில் இறுதி விருப்பம் தெரிவித்துவிட்டுப் பாதியை (என் மகளுக்கு) விட்டுச்செல்லட் டுமா?” என்று கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘‘வேண்டாம்” என்று சொன்னார்கள். நான், ‘‘அப்படியென்றால் மூன்றில் ஒரு பங்கில் (தானம் செய்யும்படி) இறுதி விருப்பம் தெரிவித்துவிட்டு இரண்டில் ஒரு பங்கை அவளுக்காக விட்டுச்செல்லட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘மூன்றில் ஒரு பங்கா? மூன்றில் ஒரு பங்கே அதிகம்தான்” என்று சொன்னார்கள்.18 பிறகு தமது கையை என் நெற்றியின் மீது வைத்துப் பிறகு அதை என் வயிற்றின் மீதும் என் முகத்தின் மீதும் தடவினார்கள். பின்னர், ‘‘இறைவா! சஅதுக்குக் குணமளிப்பாயாக. அவருடைய ஹிஜ்ரத்தை முழுமைப்படுத்துவாயாக” என்று பிரார்த்தித்தார்கள். அவர்களது (கரத்தின்) குளிர்ச்சியை என் ஈரலில் இப்போதும்கூட நான் உணர்வதைப் போன்று இருக்கிறது. அத்தியாயம் :

20

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்” என்று சொன்னார்கள். நான், ‘‘(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்று கூறிவிட்டுப் பிறகு, ‘‘ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை” என்று சொன்னார்கள்.19 அத்தியாயம் :

21

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்று அவர்களை(ப் பரிவோடு) தொட்டேன். அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நான், ‘‘தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறீர்களே! (இந்தத் துன்பத்தின் காரணமாக) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் உண்டுதானே!” எனக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம். ஒரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் (அதற்கு ஈடாக), மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவருடைய தவறுகள் அவரைவிட்டு உதிராமல் இருப்பதில்லை” என்று சொன்னார்கள்.20 அத்தியாயம் :

22

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த கிராமவாசி) ஒருவரை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தைக் கழுவி உங்களைத்) தூய்மைப்படுத்திவிடும்” என்று சொன்னார்கள். அதற்கு அந்த மனிதர், ‘‘(நான் தூய்மை பெற்றுவிடுவேனா? இது நடக்கப்போவது) இல்லை. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாகித் தகிக்கின்ற காய்ச்சல் ஆகும். இது, அ(ம்முதிய)வரை மண்ணறைகளைச் சந்திக்கவைக்கும்வரை (ஓயாது)” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், ஆம் (நீர் நினைத்ததைப் போன்றே நடக்கும்)” என்று கூறினார்கள்.21 அத்தியாயம் :

23

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்து, அதன்மீது ‘ஃபதக்’ நகர் முரட்டுத் துணி விரித்து, அதன்மீது அமர்ந்து தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக்கொண்டு (நோய்வாய்ப்பட்டி ருந்த) சஅத் பின் உபாதா (ரலி) அவர் களை உடல்நலம் விசாரிக்கச் சென்றார் கள். -இது பத்ர் போருக்கு முன்னால் நடந்தது.- அப்போது ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அதில் (நயவஞ்சகர் களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இருந்தார்.-அவர் தம்மை முஸ்லிம் என்று காட்டிக்கொள்ளும் முன் இது நடந்தது.-அந்த அவையில் முஸ்லிம்கள், சிலை வழிபாட்டாளர்களான இணைவைப்பாளர்கள், யூதர்கள் ஆகிய பல்வேறு வகுப்பாரும் இருந்தனர். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந் தார்கள். (எங்கள்) ஊர்திப் பிராணியி(ன் காலடியி)லிருந்து கிளம்பிய புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது (நயவஞ்சகர்) அப்துல்லாஹ் பின் உபை தமது மேல் துண்டால் தமது மூக்கைப் பொத்திக் கொண்டார். பிறகு, ‘‘எங்கள்மீது புழுதி கிளப்பாதீர்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் சலாம் (முகமன்) கூறினார்கள். (தமது வாகனத்தை) நிறுத்தி இறங்கி, அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அவர்களை அழைத்தார்கள். மேலும், அவர்களுக்கு குர்ஆனை ஓதிக்காட்டினார்கள். இதைக் கேட்ட அப்துல்லாஹ் பின் உபை (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ‘‘மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனால்,) அதை எங்களுடைய (இது போன்ற) அவையில் (வந்து) சொல்லி எங்களுக்குத் தொல்லை தராதீர். உங்கள் இருப்பிடத்திற்குச் செல்லுங்கள். உம்மிடம் வருபவர்களிடம் (அதை) எடுத்துச்சொல்லுங்கள்” என்றார். (அங்கிருந்த) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், ‘‘இல்லை; அல்லாஹ்வின் தூதரே! எங்களது (இந்த) அவையிலேயே இதை எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகிறோம்” என்று சொன்னார் கள். இதைக் கேட்ட முஸ்லிம்களும் இணை வைப்பாளர்களும் யூதர்களும் (ஒருவரை யொருவர்) ஏசத்தொடங்கி பரஸ்பரம் தாக்கிக்கொள்ளும் அளவுக்குச் சென்று விட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், மௌனமாகும்வரை மக்களை அமைதிப் படுத்திக்கொண்டேயிருந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்திலேறி (உடல் நலமில்லாமல் இருந்த) சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, ‘‘சஅதே! அபூஹுபாப் -அப்துல்லாஹ் பின் உபை- சொன்னதை நீங்கள் செவியுற வில்லையா? (அவர் இன்னின்னவாறு சொன்னார்)” என்றார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவரை மன்னித்து விட்டுவிடுங்கள். தங்களுக்கு அல்லாஹ் வழங்கிய (மார்க்கத்)தை வழங்கி விட்டான். (தாங்கள் மதீனா வருவதற்கு முன்பு) இந்நகரவாசிகள் அப்துல்லாஹ்வுக் குக் கிரீடம் அணிவித்து அவரைத் தலைவராக்க முடிவு செய்திருந்தார்கள். (இந்நிலையில்) அல்லாஹ் தங்களுக்கு அளித்த சத்திய (மார்க்க)த்தின் மூலம் அ(ப்பதவியான)து மறுக்கப்பட்டபோது அதைக் கண்டு அவர் ஆத்திரமடைந் துள்ளார். இதுவே தாங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்” என்று சொன்னார்கள்.22 அத்தியாயம் :

24

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (நான் நோயுற் றிருந்தபோது) என்னை உடல்நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது அவர்கள் கோவேறு கழுதையின் மீது பயணம் செய்தும் வரவில்லை; குதிரையின் மீது பயணம் செய்தும் வரவில்லை. (மாறாக, நடந்தே வந்தார்கள்.) அத்தியாயம் :

25

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருந்த சமயம் ஹுதைபியாவில்) நான் (சமையல்) பாத்திரத்தின் கீழிருந்து தீ மூட்டிக்கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்துசென்றார்கள். அப்போது, ‘‘(கஅபே!) உங்கள் தலையிலுள்ள பேன்கள் உங்களுக்குத் தொந்தரவு தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் நாவிதரை அழைத்தார்கள். நாவிதர் எனது தலைமுடியை மழித்தார். பிறகு என்னை (இஹ்ராமுடைய நிலையில் தலை மழித்துக்கொண்டதற் காக)ப் பரிகாரம் செய்யும்படி நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.23 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

26

காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை கடுமையான தலைவலியால் சிரமப்பட்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘என் தலை(வலி)யே!” என்று சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நான் உயிரோடிருக்கும்போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக்கோரி உனக்காக (மறுமை நலன் கோரி) பிரார்த்திப்பேன்” என்று சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்துபோய்விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று நான் எண்ணுகிறேன். நான் இறந்துவிட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (எனது இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்துவிடுவீர்கள்)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (புன்னகைத்துவிட்டு) ‘‘இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) ‘என் தலை(வலி)யே!’ என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன்மீதும் உன் குடும்பத்தார்மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனால்தான் உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப்பின் என் பிரதிநிதியாகச் செயல்படும்படி) அறிவித்துவிட விரும்பினேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆகவேண்டும் என) எவரும் ஆசைப்பட்டுவிடவோ கூடாது என்பதற் காகவே (இவ்வாறு விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூபக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்கமாட்டான்; இறை நம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட் டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். (ஆகவேதான் அறிவிக்க வில்லை)” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

27

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் கண்டு சிரமப்பட்டுக்கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்று அவர்களை(ப் பரிவோடு) தொட்டேன். அப்போது நான், ‘‘தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படு கிறீர்களே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்; உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத் தைப் போன்று (நான் ஒருவனே அடைகி றேன்)” என்றார்கள். நான் ‘‘(இத்துன்பத்தின் காரணமாக) உங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்குமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் , ‘‘ஆம். ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை” என்றார்கள்.24 அத்தியாயம் :

28

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது மிகக் கடுமையாக நோயுற்றிருந்த என்னை உடல் நலம் விசாரிப்பதற்காக அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நான், ‘‘(இதோ) தாங்கள் காண்கிறீர்களே இந்த நோய் என்னைப் பீடித்துவிட்டது. நான் ஒரு செல்வந்தன். (நான் இறந்துவிட்டால்) என் ஒரே மகள் தவிர வேறெவரும் என(து சொத்து)க்கு வாரிசாகமாட்டார்கள். எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானம் செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘வேண்டாம்” என்று கூறினார்கள். நான், ‘‘(எனது செல்வத்தில்) பாதி யை(யாவது தானம் செய்யட்டுமா)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் (அப்போதும்) வேண்டாம் என்று சொன்னார்கள். நான் மூன்றில் ஒரு பங்கை(யாவது தானம் செய்துவிடட்டுமா)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘(மூன்றில் ஒரு பங்கா?) மூன்றில் ஒரு பங்கே அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வது, மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக அவர்களை விட்டுச்செல்வதைவிடச் சிறந்ததாகும். நீங்கள் இறைவனின் அன்பை நாடிச் செய்யும் (தானதர்மம், குடும்பச்) செலவு எதுவாயினும் அதற்காக உங்களுக்கு நற்பலன் அளிக்கப்படாமல் இருப்பதில்லை. அது நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே (அதற்கும் நற்பலன் உண்டு)” என்று சொன்னார்கள்.25 அத்தியாயம் :

29

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது வீட்டில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் உட்பட மக்கள் பலரும் இருக்க, நபியவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் (ஒருபோதும்) வழி தவறமாட்டீர்கள்” என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது (அவர்களை எழுதித் தருமாறு தொந்தரவு செய்யாதீர்கள்). உங்களிடம்தான் குர்ஆன் இருக்கிறதே. (நபியவர்களுக்கு அருளப்பெற்ற அந்த) இறைவேதமே நமக்குப் போதும்” என்று சொன்னார்கள். உடனே அங்கு வீட்டிருந்தோர் கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர், (நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொண்டுவந்து கொடுங்கள். உங்களுக்கு ஒரு மடலை அவர்கள் எழுதுவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறி(ச் சென்றி)டமாட்டீர்கள்” என்று சொன்னார்கள். வேறுசிலர் உமர் (ரலி) அவர்கள் கூறியதையே சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அருகில் மக்களின் கூச்சலும் சச்சரவும் மிகுந்தபோது, ‘‘(என்னிடமிருந்து) எழுந்து (சென்று)விடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் .ஒருவரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘மக்கள் கருத்து வேறுபாடு கொண்டு கூச்சலிட்டுக் கொண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் (எழுதித் தர நினைத்த) மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்” என்று கூறிவந் தார்கள்.26 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

30

சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் குழந்தையாயிருந்தபோது) என்னை என் தாயாரின் சகோதரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் சகோதரி மகன் (பாதங்களில்) நோய் கண்டுள்ளான்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் என் தலையை வருடிக்கொடுத்து என் வளத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு, அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கத் தூய்மை செய்து மிச்சம் வைத்த தண்ணீருந்து நான் சிறிது பருகினேன். அவர்களின் முதுகுக்குப் பின்னால் நான் நின்றுகொண்டு அவர்களின் இரு தோள்களுக்கிடையில் இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படுகின்ற பித்தானைப் போன்றிருந்தது.27 அத்தியாயம் :

31

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாக வேண்டும் என்றிருந்தால், ‘‘இறைவா! (நான்) உயிர்வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர்வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக!” என்று கேட்கட்டும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

32

கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் கப்பாப் பின் அரத் (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றோம். (கடும் வயிற்றுவலிக்குச் சிகிச்சை பெறுவதற்காகத் தமது வயிற்றில்) அவர்கள் ஏழுமுறை சூடுபோட்டிருந் தார்கள். அப்போது அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்: முன்சென்றுவிட்ட எம் தோழர்கள் தம(து நன்மைகளு)க்கு இவ்வுலகம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திவிடாத நிலையில் (சிரமத்துடன் வாழ்ந்து) மறைந்துவிட்டார்கள். (ஆனால், அவர்களுக்குப்பின்) நாங்கள் (வீடு கட்ட) மண்ணுக்குச் செலவழிப்பதைப் தவிர வேறு தேவையே இல்லாத அளவுக்கு(ச் செல்வத்தை)ப் பெற்றுள்ளோம். நபி (ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் அதை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். (அந்த அளவுக்கு இப்போது நான் நோயால் சிரமப்படுகிறேன்.) மற்றொரு முறை நாங்கள் கப்பாப் (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது தமது (வீட்டுச்) சுவரைக் கட்டிக் கொண்டிருந்த அவர்கள் ‘‘ஒரு முஸ்லிம், தாம் செய்கின்ற எல்லாச் செலவினங் களுக்காகவும் பிரதிபலன் அளிக்கப்படுவார்; (தேவைக்கு அதிகமாக வீடுகட்ட) இந்த மண்ணில் அவர் செய்கின்ற செலவைத் தவிர” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

33

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘எவரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும்)” என்று கூறினார்கள்.28 மக்கள், ‘‘தங்களையுமா (தங்களின் நற்செயல் சொர்க்கத்தில் நுழைவிப்ப தில்லை), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆம்) என்னையும்தான்; அல்லாஹ் (தனது) கருணையாலும் அருளாலும் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர” என்று கூறிவிட்டு, ‘‘எனவே, நீங்கள் நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் எவரும் மரணத்தை விரும்ப வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக்கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர்வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :

34

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன்பு) என்மீது சாய்ந்தபடி, ‘‘இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக. எனக்குக் கருணை புரிவாயாக. மிக்க மேலான தோழர்களுடன் (சொர்க்கத்தில்) என்னைச் சேர்த்தருள்வாயாக” என்று பிரார்த்திப்பதை நான் செவியுற்றேன்.29 அத்தியாயம் :

35

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஒரு நோயாளியிடம் (உடல்நலம் விசாரிக்கச்) சென்றால்’ அல்லது ‘நோயாளி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டால்’ அவர்கள், ‘‘அத்ஹிபில் பாஸ் ரப்பந் நாஸ் இஷ்ஃபி, வ அன்த்தஷ் ஷாஃபி, லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக்க, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்” என்று பிரார்த்திப் பார்கள். (பொருள்: மனிதர்களைப் படைத்துப் பராமரிப்பவனே! நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப் பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தை தவிர வேறு நிவாரணம் இல்லை.) இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘நோயாளி நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டால்’ என்றும், இன்னோர் அறிவிப்பில், ‘நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் சென்றால்’ என்றும் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

36

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது என்னிடம் வந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பின்னர் ‘(அங்கத் தூய்மை செய்த நீரை) என் மீது ஊற்றினார்கள்’ அல்லது ‘இவர் மேல் (இந்த நீரை) ஊற்றுங்கள் என்று சொன்னார்கள்’. (அவ்வாறு ஊற்றிய) உடன் நான் மயக்கத்திலிருந்து தெளிந்தேன். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நேரடி ஆண் வாரிசுகள் அல்லாதவர்கள்தான் எனக்கு வாரிசாகிறார்கள். (இந்நிலையில்) சொத்துப் பங்கீடு எவ்வாறு அமையும்?” என்று கேட்டேன். அப்போதுதான் பாகப் பிரிவினைச் சட்டம் குறித்த வசனம் அருளப் பெற்றது.31 அத்தியாயம் :

37

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து மதீனா வுக்கு) வந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் பிலால் (ரலி) அவர்களுக்கும் காய்ச்சல் கண்டிருந்தது. அவ்விருவரிடமும் நான் சென்று, ‘‘என் தந்தையே! எப்படியிருக்கிறீர்கள்? பிலால் அவர்களே! எப்படியிருக்கிறீர்கள்?” என்று (நலம்) விசாரித்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குக் காய்ச்சல் காணும்போது (பின்வரும் கவிதையைக்) கூறுவார்கள்: காலைவாழ்த்துக் கூறப்பெற்றநிலையில்ஒவ்வொரு மனிதனும்தம் குடும்பத்தாரோடுகாலைப்பொழுதை அடைகிறான்...(ஆனால்,)அவன் செருப்பு வாரைவிடமிக அருகில்மரணம் இருக்கிறது(என்பதை அவன் அறிவதில்லை) பிலால் (ரலி) அவர்கள் காய்ச்சல் விட்டதும் வேதனைக் குரல் எழுப்பி, ‘இத்கிர்’ (நறுமணப்) புல்லும்’ஜலீல்’ கூரைப் புல்லும்என்னைச்சூழ்ந்திருக்கஒரு இராப் பொழுதையேனும்(மக்காவின்) பள்ளத்தாக்கில்நான் கழிப்பேனா.......... ?(மக்காவின்) மிஜன்னா (சுனை) நீரைஒருநாள் ஒரு பொழுதாவதுநான் சுவைப்பேனா........... ?அந்தஷாமா, தஃபீல் மலைகள்(இனி எப்போதேனும்)எனக்குத் தென்படுமா........... ? என்று (கவிதை) கூறுவார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அவர்கள் இருவருடைய நிலையைத்) தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல், அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! மேலும், இவ்வூரை ஆரோக்கியமானதாகவும் ஆக்குவாயாக! இதன் (அளவைகளான) ‘ஸாஉ’, ‘முத்(து) ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ வளத்தை வழங்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை இடம்பெயரச் செய்து அதை ‘ஜுஹ்ஃபா’ எனுமிடத்தில் (குடி) அமர்த்திவிடுவாயாக” என்று பிரார்த்தனை செய்தார்கள்.32 அத்தியாயம் :