அனைத்து இஸ்லாம் நூலகம்

68 - தலாக்

1

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தாள். ஆகவே, (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம், ‘‘உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்: அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும்வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும். பிறகு அவர் நாடினால், (இரண்டாம் மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் (தொடர்ந்து அவளை) தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் நாடினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட்டும். (மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலகட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (2:228ஆவது வசனத்தில்) அனுமதித்துள்ள (‘இத்தா’ காலத்தைக் கணக்கிட்டுக்கொள்வ தற்கு ஏற்ற) காலகட்டமாகும்” என்று சொன்னார்கள்.3 அத்தியாயம் :

2

அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மாதவிடாயிலிருந்த என் மனைவியை நான் மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, இது குறித்து (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘(உங்கள் புதல்வர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்!” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார் கள்: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘‘(மாதவிடாயின்போது சொல்லப்பட்ட இந்த தலாக்) ஒரு தலாக்காகக் கருதப்படுமா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘‘(தலாக்காகக் கருதப்படாமல்) வேறென்ன?” என்று கேட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள தகவலில் (பின்வருமாறு) காணப்படுகிறது: நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘(உங்கள் புதல்வர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு அவருக்கு நீங்கள் கட்டளையிடுங்கள்” என்று கூறினார்கள். நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ‘‘(மாதவிடாய்ப் பருவத்தில்) செய்யப்பட்ட இந்த மணவிலக்கு) மணவிலக்காகக் கருதப்படுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்துகொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?” என்று கேட்டார்கள். அத்தியாயம் :

3

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் மனைவி மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தபோது நான் அளித்த) அந்த மணவிலக்கை, நான் சொன்ன ‘ஒரு தலாக்’ என்றே கணிக்கப்பட்டது. அத்தியாயம் :

4

அப்துர் ரஹ்மான் பின் அல்அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், ‘‘(நபி (ஸல்) அவர்களிடம்) ‘நான் தங்களிடமிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புக் கோருகி றேன்’ என்று அவர்களுடைய துணைவியரில் யார் கூறியது?” எனக் கேட்டேன். அதற்கு ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துரைத்தபடி உர்வா (ரஹ்) அவர்கள் அறிவித்த (பின்வரும்) ஹதீஸைக் கூறினார்கள்: ‘அல்ஜவ்ன்’ குலத்துப் பெண் ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (திருமணத்திற்குப்பின் தாம்பத்திய உறவிற்காக) உள்ளே அனுப்பியபோது அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நெருங்கினார்கள். அப்போது அவர், ‘‘உங்களிடத்திலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு கிறேன்” என்று கூறினார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘மகத்துவ மிக்க (இறை)வனிடம் நீ பாதுகாப்புக் கோரிவிட்டாய்! உன் குடும்பத் தாரிடம் நீ சென்றுவிடு!” என்று கூறி விட்டார்கள்.5 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

5

அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) ‘அஷ்ஷவ்த்’ (அல்லது ‘அஷ்ஷவ்ழ்’) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதன் அருகில் இருந்த வேறு) இரு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இங்கேயே அமர்ந்திருங்கள்” என்று சொல்லிவிட்டுத் தோட்டத்திற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்துவரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத் திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப் பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் பின் ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிóத்தாயும் இருந்தார். (அப்பெண்ணுக் கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி (ஸல்) அவர்கள் நுழைந்து ‘‘உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!” என்று கூறினார்கள். அந்தப் பெண் ‘‘ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?” என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தை அவர்மீது வைக்கப்போனார்கள். உடனே அவர் ‘‘உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி ‘‘கண்ணியமான (இறை)வனிடம்தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், ‘‘அபூஉசைதே! இரு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய் விட்டுவிடு” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

6

சஹ்ல் பின் சஅத் (ரலி), அபூஉசைத் (ரலி) ஆகியோர் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உமைமா பின்த் ஷராஹீல் என்ற பெண்மணியை மணமுடித்தார்கள். (தாம்பத்திய உறவைத் தொடங்குவதற்காக) அப்பெண் நபியவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டபோது, அவரை நோக்கித் தமது கரத்தை நபி (ஸல்) அவர்கள் நீட்டினார்கள். அதை அப்பெண் விரும்பவில்லைபோலும். ஆகவே, அப்பெண்ணை (அவளுடைய குடும்பத்தாரிடம்) அனுப்பி வைத்திடுமாறும், அவளுக்கு இரு வெண்ணிறச் சணல் ஆடைகளை அளித்திடுமாறும் அபூஉசைத் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

7

8

யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ‘‘ஒருவர் மாதவிடாயிலிருக்கும் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார். (அது குறித்து மார்க்கம் என்ன தீர்ப்புச் செய்கிறது?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இப்னு உமர் (அதாவது நான்) யார் என்று உங்களுக்குத் தெரியும். நான் மாதவிடாய்ப் பருவத்திலிருந்த என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்துத் தெரிவித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘உங்கள் புதல்வர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்; அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையான பிறகு அவளை மணவிலக்குச் செய்ய விரும்பினால் அவளை அவர் மணவிலக்குச் செய்துகொள்ளட்டும்’ என உத்தரவிடுங்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் கூறுகிறார்: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘‘(மனைவி மாதவிடாயிலிருந்தபோது தாங்கள் அளித்த மணவிலக்கை) நபி (ஸல்) அவர்கள் ‘தலாக்’ என்றே கருதினார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘‘அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்துகொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?” என்று கேட்டார்கள்.6 அத்தியாயம் :

9

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அஜ்லான் குலத்தைச் சேர்ந்த உவைமிர் (ரலி) அவர்கள் (தமது குலத்தின் தலைவரான) ஆஸிம் பின் அதீ அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘ஆஸிம் அவர்களே! தம் மனைவியுடன் மற்றோர் அந்நிய ஆடவன் (தகாத உறவு கொண்டபடி) இருக்கக் கண்ட ஒரு மனிதனின் விஷயத்தில் என்ன கூறுகின்றீர்கள்? அவன் அந்த (அந்நிய) ஆடவனைக் கொன்றுவிடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால் (பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? எனக்காக இந்த விவகாரம் குறித்து ஆஸிமே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்று கூறினார். ஆகவே, (ஆஸிம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று கேட்கத் தொடங்க) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை. அவற்றை அநாகரிகமாகக் கருதலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட (கண்டன) வார்த்தைகள் ஆஸிம் (ரலி) அவர்களுக்குக் கடினமாயிற்று. ஆஸிம் (ரலி) அவர்கள் தம் வீட்டாரிடம் திரும்பி வந்தபோது உவைமிர் வந்து, ‘‘ஆஸிம் அவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு ஆஸிம் (ரலி) அவர்கள், ‘‘நீ எனக்கு நன்மை செய்யவில்லை. (சிக்கலில் என்னைச் சிக்கவைத்துவிட்டாய்;) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நான் கேட்ட இந்தக் கேள்வி பிடிக்கவில்லை” என்று பதிலளித்தார்கள். அதற்கு உவைமிர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நானே (நேரடியாக) இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்காமல் ஓயமாட்டேன்” என்று கூறியபடி மக்களிடையேயிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார். பிறகு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால் அவன் அந்த ஆடவனைக் கொல்லலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால் பழிக்குப்பழியாக) நீங்கள் அம்மனிதனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் (குர்ஆன் வசனத்தை) அருளிவிட்டான். ஆகவே, நீர் சென்று, உம்முடைய மனைவியை அழைத்து வாரும்!” என்று சொன்னார்கள். பிறகு அவர்கள் இருவரும் (‘லிஆன்’ எனும்)சாப அழைப்புப் பிரமாணம் செய்தனர். அப்போது மக்களுடன் நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தேன். (தம்பதியர்) இருவரும் (லிஆன் செய்து) முடித்தபோது (கணவரான) உவைமிர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் இவளை (மணவிலக்குச் செய்யாமல் மனைவியாகவே இனியும்) வைத்திருந்தால் இவள்மீது நான் பொய்(யான குற்றச்சாட்டு) சொன்னவனாக ஆகிவிடுவேன்” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு ஆணையிடுவதற்கு முன்பே அவளை முத்தலாக் சொல்லிவிட்டார். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு இந்த வழிமுறையே (அவர்களுக்குப்பின்) ‘லிஆன்’ செய்யும் தம்பதியருக்கு முன்மாதிரி ஆகிவிட்டது.11 அத்தியாயம் :

10

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்களின் துணைவியார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ரிஃபாஆ என்னை நோக்கி ஒட்டுமொத்தத் தலாக்கையும் கூறிவிட்டார். நான் அவருக்குப் பிறகு அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் அல்குறழீ அவர்களை மணமுடித்துக் கொண்டேன். ஆனால், அவருக்கு (இனஉறுப்பு என்று) இருப்பதெல்லாம் இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றதுதான்” என்று கூறினார். (ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அப்துர் ரஹ்மான் மறுத்தார். முதல் மனைவி மூலம் தமக்குப் பிறந்த குழந்தைகளையும் காட்டினார்.) அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீ (உன் பழைய கணவர்) ‘ரிஃபாஆ’விடமே திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? இல்லை! (அவ்வாறு பழைய கணவரை மீண்டும் மணந்து கொள்ள முடியாது; உன்னுடைய இரண்டாம் கணவரான) இவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும், நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும்வரையிலும் (முன்னாள் கணவரான ரிஃபாஆவை மணக்க முடியாது)” என்று கூறினார்கள்.12 அத்தியாயம் :

11

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் தம் மனைவியை மூன்று தலாக் சொல்லிவிட்டார். ஆகவே, அவள் இன்னொருவரை மணந்துகொண்டாள். அவரும் தலாக் சொல்லிவிட்டார். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்து) ‘‘முந்திய கணவருக்கு அவள் (மணமுடிக்க) அனுமதிக்கப்பட்டவளா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘இல்லை; முந்தைய கணவர் (தாம்பத்திய) இன்பம் அனுபவித்ததைப் போன்றே (அவளுடைய இரண்டாம் கணவரான) இவரும் அவளிடம் இன்பம் அனுபவிக்கும்வரையில் முடியாது” என்று கூறி விட்டார்கள்.13 அத்தியாயம் :

12

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியரான) எங்களுக்கு (விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்தார்கள். அப்போது நாங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் தேர்ந்தெடுத்தோம். இ(வ்வாறு உரிமை அளித்த)தை அவர்கள் தலாக் எனக் கருதவில்லை.14 அத்தியாயம் :

13

மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், (ஒருவர் தமது மணபந்தத்திலிருந்து விலகிக்கொள்ள தம் மனைவிக்கு) உரிமை அளிப்பது (‘கியார்’) குறித்துக் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘(தம் துணைவியரான) எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் (தமது மணபந்தத்திலிருந்து விலகிக்கொள்ள) உரிமை அளித்தார்கள்; அது என்ன தலாக்காகவா ஆகிவிட்டது?” என்று கேட்டார்கள். (தொடர்ந்து அறிவிப்பாளர்) மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இவ்வாறு நான் என் மனைவிக்கு உரிமையளித்து) அவள் என்னையே தேர்ந்தெடுத்துக்கொண்டுவிட்டால், நான் அவளுக்கு (ஆரம்பத்தில்) ஒன்றென்ன! நூறு (தலாக்கு)க்கு உரிமை அளித்திருந் தாலும் அதை நான் பொருட்படுத்த மாட்டேன்.15 அத்தியாயம் :

14

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மூன்று தலாக் சொல்லிவிட்டவர் குறித்து இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டால், ‘‘ஒரு தலாக், அல்லது இரண்டு தலாக் சொல்லியிருந்தால் (திரும்ப அழைத்துக்கொள்ளலாமே!) ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் எனக்குக் கட்டளையிட்டார்கள்.19 ஆனால், அவளை நீ மூன்று தலாக் சொல்லிவிட்டால் வேறொரு கணவரை அவள் மணக்கும்வரை உனக்கு அவள் விலக்கப் பட்டவளாக ஆகிவிடுவாள்” என்று பதிலளிப்பார்கள். அத்தியாயம் :

15

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார். ஆகவே அவள் வேறொருவரை மணந்து கொண்டாள். பிறகு அவரும் மணவிலக்குச் செய்துவிட்டார். (இரண்டாவதாக மணந்த) கணவருக்கு இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றுதான் (இனஉறுப்பு) இருந்தது. அந்தக் கணவரிடமிருந்து தான் விரும்பிய எ(ந்தச் சுகத்)தையும் அவள் அனுபவிக்கவில்லை. வெகு விரைவில் அவளை அவர் மணவிலக்குச் செய்தும் விட்டார். ஆகவே, அவள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் என்னை மணவிலக்குச் செய்துவிட்டார். பிறகு நான் இன்னொருவரை மணந்துகொண்டேன். அவர் என்னருகில் வந்தார். ஆனால், அவருக்கு இந்த (முகத்திரையின்) குஞ்சத்தைப் போன்றுதான் (இன உறுப்பு) இருந்தது. அவர் என்னை ஒரு முறைதான் நெருங்கினார். என்னிடமிருந்து அவர் எ(ந்தச் சுகத்)தையும் அனுபவிக்கவில்லை. ஆகவே, நான் என் முதல் கணவருக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆவேனா?” என்று கேட்டாள். (ஆனால், இந்தக் குற்றச்சாட்டை கணவர் மறுத்தார்.) எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உன் இரண்டாவது கணவர் உன்னிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும்வரையிலும் நீ அவரிடம் (தாம்பத்திய) இன்பத்தை அனுபவிக்கும் வரையிலும் நீ உன் முதல் கணவருக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆகமாட்டாய்” என்று கூறினார்கள்.20 அத்தியாயம் :

16

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘ஒருவர் (தம் மனைவியை நோக்கி) ‘அவள் எனக்கு ஹராம் (விலக்கப்பட்டவள்)’ என்று கூறினால் அது (மணவிலக்காகக் கருதப்படும்) ஒரு விஷயமே அல்ல” என்று கூறிவிட்டு, ‘‘உறுதியாக அல்லாஹ்வின் தூதரில் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” (33:21) என்றும் கூறினார்கள்.21 அத்தியாயம் :

17

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (அவர்களது அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். ஆகவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள், ‘‘நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்” எனக் கூடிப்பேசி முடிவு செய்துகொண் டோம். எங்களில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசி வைத்திருந்தபடி கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான். சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்” என்று கூறினார்கள். ஆகவே, ‘‘நபியே! உம்முடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உமக்கு அனுமதித்த ஒன்றை நீர் ஏன் விலக்கிக்கொள்கிறீர்?” என்று தொடங்கி ‘‘நீங்கள் இருவரும், இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)” என முடியும் (66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.22 (இந்த 66:4ஆவது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) ‘நீங்கள் இருவரும்’ என்பது ஆயிஷா (ரலி) அவர்களையும், ஹஃப்ஸா (ரலி) அவர்களையுமே குறிக்கிறது. (66:3ஆவது வசனத்தில்) ‘‘நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்” என்பது ‘‘இல்லை. நான் தேன்தான் அருந்தினேன். (சத்தியமாக இனி நான் அதை அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதே)” என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதையே குறிக்கின்றது. அத்தியாயம் :

18

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தேனும் இனிப்பும் மிக விருப்பமானவையாக இருந்தன. அஸ்ர் தொழுகையை முடித்ததும் நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் செல்வார்கள்; அவர்களில் சிலருடன் நெருக்கமாகவும் இருப்பார்கள். இவ்வாறு (ஒருமுறை) தம் துணைவியரில் ஒருவரான ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் சென்று வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். ஆகவே, நான் ரோஷப்பட்டேன். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத் தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த்தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும், அதிலிருந்து தயாரித்த பானத்தை நபி (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. உடனே நான், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதை நிறுத்துவதற்காக இதோ ஒரு உபாயம் செய்வோம்” என்று கூறிக்கொண்டு (நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா பின்த் ஸம்ஆவிடம், (ஹஃப்ஸா வீட்டில் தேன் அருந்திவிட்டு) நபி (ஸல்) அவர்கள் உங்கள் அருகில் வருவார்கள். அப்போது கருவேல பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள்! ‘இல்லை’ என்று நபியவர்கள் கூறுவார்கள். உடனே தங்களிடமிருந்து ஏதோ துர்வாடை வருகிறதே அது என்ன? என்று கேளுங்கள்! அதற்கு நபி அவர்கள் ‘எனக்கு ஹஃப்ஸா தேன் பானம் புகட்டினார்’ என்று கூறுவார்கள். உடனே நீங்கள் ‘இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்துவிட்டு (தேனை உறிஞ்சிக்கொண்டு) வந்திருக்கலாம். (ஆகவேதான் வாடை வருகிறது)’ என்று சொல்லுங்கள்! நானும் இவ்வாறே சொல்கிறேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) கூறினேன். (நான் சொன்ன பிரகாரம் செய்துவிட்டு) சவ்தா அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் என் வீட்டு வாசலில் வந்து நின்றவுடன் உங்களுக்குப் பயந்து நீங்கள் என்னிடம் சொன்னபடி நபியவர்களிடம் சொல்ல விரைந்தேன். என்னை நபி (ஸல்) அவர்கள் நெருங்கியதும், ‘அல்லாஹ்வின் தூதரே! கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர் களா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை’ என்றார்கள். ‘தங்களிட மிருந்து ஏதோ துர்வாடை வருகிறதே அது என்ன?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ‘ஹஃப்ஸா எனக்குத் தேன் பானம் புகட்டினார்’ என்றார்கள். உடனே நான் ‘இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேன் உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம். (ஆகவேதான், தேனில் வாடை ஏற்பட்டது போலும்)’ என்று சொன்னேன். (தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது நானும் அவ்வாறே கூறினேன். ஸஃபிய்யாவிடம் நபியவர்கள் சென்றபோதும் அவரும் அவ்வாறே சொன்னார். பிறகு (மறுநாள்) ஹஃப்ஸாவிடம் சென்றபோது ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் அருந்துவதற்குச் சிறிது தேன் தரட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘அது எனக்குத் தேவையில்லை” என்று சொன்னார்கள். (இது குறித்து) சவ்தா (ரலி) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களை அதைப் பருகவிடாமல் தடுத்துவிட்டோமே’ என்று சொன்னார்கள். உடனே அவரிடம் நான், ‘‘சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப்போகிறது!)” என்று சொன்னேன்.23 அத்தியாயம் :

19

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாத வரை, அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.30 இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒருவர் மனத்துக்குள்ளேயே தலாக் சொல்லிக்கொண்டால் அதனால் (தலாக்) எதுவும் நிகழப்போவதில்லை. அத்தியாயம் :

20

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்துகொண்டிருந்தபோது ‘அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவர்களி டம் வந்து, ‘‘நான் விபசாரம் செய்து விட்டேன்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) நான்கு தடவை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து, ‘‘உனக்கு என்ன பைத்தியமா?” என்று கேட்டுவிட்டு, ‘உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?’ என்று கேட்டார்கள். அவர் ‘‘ஆம்” என்றார். எனவே, அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டுசென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்.) அவர்மீது கற்கள் விழுந்தபோது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். இறுதியில் (மதீனாவின் புறநகர்ப் பகுதியில்) பாறைகள் நிறைந்த (‘அல்ஹர்ரா’ எனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டார். அத்தியாயம் :

21

22

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறைமறுப்புக்குரிய செயலைச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று கூறினார்.32 அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘ஆம் (தந்துவிடுகிறேன்)” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), ‘‘தோட்டத்தை ஏற்றுக்கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லிவிடுங்கள்!” என்று கூறினார்கள்.33 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிட மிருந்து அறிவிக்கப்படும் இந்த ஹதீஸில் ‘முதாபஆ’ (அறிவிப்பாளர்தொடரில் ஒற்றுமை) இல்லை.34 அத்தியாயம் :

23

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உபை என்பவரின் சகோதரி (ஜமீலா) இடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘உன் கணவரின் தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அவர் ‘ஆம்’ என்றார். ஆகவே, அதை அவர் திருப்பித் தந்துவிட்டார். பின்னர், தலாக் சொல்லிவிடும்படி நபி (ஸல்) அவர்கள் அவரு டைய கணவருக்கு உத்தரவிட்டார்கள். மற்றோர் அறிவிப்பில், ‘‘அவரை தலாக் சொல்லிவிடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று காணப் படுகிறது. அத்தியாயம் :

24

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களின் துணைவியார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ அவருடைய குணத்தையோ குறை சொல்லவில்லை. ஆனால், அவருடன் வாழ என்னால் முடியவில்லை” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘அவருடைய தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அவரும் ‘ஆம்’ (திருப்பித் தந்துவிடுகிறேன்) என்று கூறினார். அத்தியாயம் :

25

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ, அவருடைய குணத்தையோ பழி சொல்லவில்லை. ஆயினும், நான் இறைமறுப்புக்குரிய செயலைச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சரி! அவருடைய தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவரும் ‘ஆம்’ என்று கூறினார். பின்னர் (அந்தத் தோட்டத்தை) ஸாபித் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள் ஸாபித் அவர்களுக்கு உத்தரவிட, அவரும் தம் மனைவியிட மிருந்து பிரிந்துவிட்டார். அத்தியாயம் :

26

இக்ரிமா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (அந்தப் பெண்ணின் பெயர்) ஜமீலா என்று மேற்கண்ட ஹதீஸ் தொடங்குகிறது. அத்தியாயம் :

27

மிஸ்வர் பின் மக்ரமா அஸ்ஸுஹ்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘பனூ முஃகீரா குலத்தார், தங்கள் புதல்வியை அலீ (ரலி) அவர்கள் மணமு டித்துக்கொள்ள அனுமதி கோரினர். (ஆனால், அதை) நான் அனுமதிக்கமாட்டேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்.36 அத்தியாயம் :

28

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமைப் பெண்ணாயிருந்து விடுதலை அடைந்த) பரீராவின் விஷயத் தில் மூன்று வழிமுறைகள் கிடைக்கப் பெற்றன: 1. அவர் தம் (அடிமைக்) கணவர் விஷயத்தில் (அவருடன் தொடர்ந்து வாழவும், அல்லது பிரிந்துவிடவும்) உரிமை அளிக்கப்பட்டார். 2. ‘‘அடிமையின் வாரிசுரிமை (‘வலா’), விடுதலை செய்தவருக்கே உண்டு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 3. பாத்திரம் ஒன்றில் இறைச்சி கொதித்துக்கொண்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்குமுன் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் ‘‘பாத்திரத்தில் இறைச்சி இருக்கக் கண்டேனே! (அது என்னவாயிற்று?)” என்று கேட்டார்கள். அதற்குக் குடும்பத்தார் ‘‘ஆம்! (இருக்கிறது.) ஆனால், அது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாகும். தாங்கள்தான் தர்மப் பொருட்களைச் சாப்பிடமாட்டீர்களே?” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘அது பரீராவுக்குத்தான் தர்மம்; நமக்கு அது (பரீராவிடமிருந்து) அன்பளிப்பு” என்றார் கள்.38 அத்தியாயம் :

29

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீராவின் கணவர் ஓர் அடிமையாக இருந்ததை நான் பார்த்தேன். அத்தியாயம் :

30

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பரீராவின் கணவர் முஃகீஸ் இன்ன குலத்தாரின் அடிமையாவார். அவர் (தம் மனைவி விடுதலையாகி விருப்ப உரிமை அளிக்கப்பட்டபின், தம்மிடமிருந்து பிரிந்துவிடுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டபோது) மதீனாவின் தெருக்களில் பரீராவுக்குப் பின்னால் அவருக்காக அழுதவண்ணம் பின்தொடர்ந்து சென்றதை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள் ளது. அத்தியாயம் :

31

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கறுப்பு அடிமையான பரீராவின் கணவர் முஃகீஸ் இன்ன குலத்தாரின் அடிமையாயிருந்தார். அவர் (தம் மனைவி விடுதலையாகி விருப்ப உரிமை அளிக்கப்பட்டபின், தம்மிடமிருந்து பிரிந்து விடுவதைத் தேர்ந்தெடுத்தபோது) மதீனா வின் தெருக்களில் பரீராவுக்குப் பின்னால் சுற்றிச்சுற்றி வந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அத்தியாயம் :

32

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்தபோது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுதவண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ‘‘அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?” என்று கேட்டார்கள். (முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி (ஸல்) அவர்கள் ‘‘முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா?” என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘(இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன்” என்றார்கள். அப்போது பரீரா, ‘‘(அப்படி யானால்,) அவர் எனக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டார். அத்தியாயம் :

33

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (அடிமைப் பெண்ணான) பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். பரீராவின் எசமான்கள் (‘வலா’ எனும்) வாரிசுரிமை தங்களுக்கே இருக்க வேண்டும் என நிபந்தனையிட்டு, (இல்லையேல் விற்க முடியாது என) மறுத்தனர். ஆகவே, இதைப் பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (உன் விருப்பப்படியே) பரீராவை நீ வாங்கி விடுதலை செய்துவிடு! ஏனெனில், வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியதாகும் என்று சொன்னார்கள். (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது ‘‘இ(ந்த இறைச்சியான)து, பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாகும்” என்று சொல்லப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இது பரீராவுக்குத்தான் தர்மம்: நமக்கு (இது) அன்பளிப்பாகும்” என்று சொன்னார்கள்.40 மற்றோர் அறிவிப்பில், ‘‘பரீரா தம் கணவர் விஷயத்தில் விருப்ப உரிமை அளிக்கப்பட்டார்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

34

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முஸ்லிம்) கிறித்தவப் பெண்ணையோ அல்லது யூதப் பெண்ணையோ மணமுடித்துக்கொள்வது தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வினவப் பட்டால், அவர்கள் ‘‘இறைநம்பிக்கையாளர்கள் இணைகற்பிக்கும் பெண்களை மணமுடித்துக்கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவரான ஈசா (அலை) அவர்களைத் தன்னுடைய இறைவன் என்று ஒரு பெண் கூறுவதைவிட மிகப் பெரிய இணைவைப்பாக வேறொன்றையும் நான் அறியவில்லை” என்பார்கள்.41 அத்தியாயம் :

35

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம் களையும் பொறுத்தவரையில் இணை வைப்பாளர்கள் இரு வகையினராக இருந்தனர். ஒரு வகை இணைவைப்பாளர் கள் பகைவர்களாக இருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் போர் புரிவார்கள்; நபியவர்களும் அவர்களுடன் போர் புரிவார்கள். மற்றொரு வகை இணைவைப்பாளர்கள் (சமாதான) ஒப்பந்தம் செய்துகொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் போர் புரியமாட்டார்கள்; நபியவர்களும் அவர்களுடன் போர் புரியமாட்டார்கள். பகைவர்களின் கூட்டத்திலிருந்து ஒரு பெண் (முஸ்லிமாகி) புலம்பெயர்ந்து (மதீனாவுக்கு) வந்தால் அவளுக்கு மாதவிடாய் ஏறபட்டு தூய்மையடையும்வரை அவளை யாரும் பெண் பேச அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு அவள் (மாதவிடாய்க்குப்பின்) தூய்மையடைந்தால் மணமுடித்துக்கொள்ள அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அத்தகைய பெண் (முஸ்லிம் ஒருவரை) மணந்துகொள்வதற்குமுன் அவளுடைய (முன்னாள்) கணவன் (முஸ்லிமாகி) புலம்பெயர்ந்து வந்தால் அவள் அவரிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டாள். பகைவர்களிலுள்ள அடிமையான ஆணோ, பெண்ணோ (முஸ்லிமாகி) புலம்பெயர்ந்து வந்தால் அவர் சுதந்திரமானவராகவே கருதப்பட்டார். அவருக்கு மற்ற முஹாஜிர்களுக்குள்ள (புலம்பெயர்ந்தோருக்குள்ள) அனைத்து மரியாதைகளும் அளிக்கப்பட்டன. பின்னர் (இதன் அறிவிப்பாளரான) அதாஉ (ரஹ்) அவர்கள், (சமாதான) ஒப்பந்தம் செய்துகொண்ட இணைவைப் பாளர்(களின் பெண்)கள் குறித்து முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவித்திருப்பதைப் போன்று (பின்வருமாறு) அறிவிக் கிறார்கள்: (சமாதான) ஒப்பந்தம் செய்துகொண்ட இணைவைப்பாளர்களின் ஆண் அடிமையோ, பெண் அடிமையோ (முஸ்லிமாகி) புலம்பெயர்ந்து வந்தால் அவர்கள் (தம் நாட்டிற்குத்) திருப்பி அனுப்பி வைக்கப்படவில்லை; அவர்களுக்குரிய விலை மட்டுமே திருப்பித் தரப்பட்டது. அத்தியாயம் :

36

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஉமய்யாவின் மகள் ‘குறைபா’ என்பவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார். அவரை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மணவிலக்குச் செய்துவிட்டார்கள். பின்னர் அவரை முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் மணந்துகொண்டார்கள். அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் புதல்வியார் உம்முல் ஹகம் அவர்கள், இயாள் பின் ஃகன்ம் அல்ஃபிஹ்ரீ (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார். அவரை இயாள் மணவிலக்குச் செய்துவிட்டார்கள். பிறகு அவரை அப்துல்லாஹ் பின் உஸ்மான் அஸ்ஸகஃபீ என்பவர் மணமுடித்துக்கொண்டார்.43 அத்தியாயம் :

37

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘இறைநம்பிக்கையாளர்களே! (இறைமறுப்பாளர்களிலுள்ள) பெண்கள் இறைநம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து (புலம்பெயர்ந்து) உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப்பாருங்கள்...” எனும் (60:10ஆவது) வசனம் முழுமையாக அருளப்பெற்ற காரணத்தால் தம்மிடம் ஹிஜ்ரத் செய்துவரும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நபி (ஸல்) அவர்கள் சோதித்துவந்தார்கள். இறைநம்பிக்கை கொண்ட அப்பெண்களில் (‘இணை வைக்கமாட்டோம்; திருடமாட்டோம்; விபசாரம் புரியமாட்டோம்’ என்று) இந்த நிபந்தனைகளுக்கு யார் ஒப்புதல் அளிக் கிறாரோ அவர் சோதனை செய்யப்பட்டுவிட்டார் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த உறுதிமொழியை அப்பெண்கள் வாய்மொழியாக ஒப்புக்கொண்டபோது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களிடம் உறுதிப் பிரமாணம் வாங்கிவிட்டேன். நீங்கள் செல்லலாம்” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (உறுதிப் பிரமாணம் வாங்கியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய் மொழியாகவே அப்பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அல்லாஹ் ஆணையிட்ட நிபந்தனை (வாசகங்களைத்) தவிர வேறெதையும் அப்பெண்களிட மிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உறுதிமொழியாகப்) பெற வில்லை. அவர்களிடம் உறுதிமொழி வாங்கியதும் ‘உங்களிடம் உறுதிப் பிரமாணம் பெற்றுக்கொண்டேன்’ என்று வார்த்தையால் மட்டுமே கூறினார்கள். (பொதுவாக ஆண்களிடம் உறுதிமொழி வாங்கியபோது கரம் பற்றியதைப் போன்று பெண்களிடம் செய்யவில்லை.)45 அத்தியாயம் :

38

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை (ஒரு மாத காலம்) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்தார்கள். (இந்தக் காலகட்டத்தில்) அவர்களின் காலில் சுளுக்கு ஏற்பட்டிருந் தது. ஆகவே, அவர்கள் தமது மாடியறை யில் இருபத்தொன்பது நாட்கள் தங்கி யிருந்துவிட்டு பிறகு இறங்கி வந்தார்கள். அப்போது மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு மாத காலம் (தங்கள் துணைவியரை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மாதத்திற்கு இருபத்தொன்பது நாட்கள்தான்” என்று பதிலளித்தார்கள்.47 அத்தியாயம் :

39

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ் குறிப்பிட்டுள்ள ‘ஈலா’ (எனும் சத்திய) விஷயத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அந்த (நான்கு மாத கால) தவணை முடிந்துவிட்ட பின்னால் அல்லாஹ் உத்தரவிட்டிருப்பதைப் போன்று ஒருவர் நல்ல முறையில் (தம் மனைவியைத்) தம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும்; அல்லது அவளை மணவிலக்குச் செய்ய உறுதியான முடிவு செய்திட வேண்டும். இதைத் தவிர வேறெதற்கும் அனுமதியில்லை” என்று கூறுவார்கள். அத்தியாயம் :

40

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான்கு மாதம் முடிந்துவிட்டால், கணவன் மணவிலக்குச் செய்யும்வரை (முடிவு) நிறுத்திவைக்கப்படும். கணவனாக மணவிலக்குச் செய்யும்வரை (ஈலாவில்) மணவிலக்கு நிகழாது. இதே கருத்து நபித்தோழர்களில் உஸ்மான், அலீ, அபுத்தர்தா, ஆயிஷா (ரலி) மேலும் பன்னிரண்டு பேரிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.48 அத்தியாயம் :

41

அல்முன்பஇஸ் (ரஹ்) அவர்களின் (முன்னாள்) அடிமையான யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம், வழிதவறி வந்துவிட்ட ஆட்டைப் பற்றி வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (வினவியவரிடம்), ‘‘அதை நீ பிடித்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது; அல்லது உன் சகோதரனுக்குரியது; அல்லது ஓநாய்க்குரியது” என்று பதிலளித்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்களிடம் வழிதவறி வந்துவிட்ட ஒட்டகத்தைப் பற்றி வினவப்பட்டது. (இதைச் செவியுற்ற) உடன் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந் தார்கள். (எந்த அளவுக்கென்றால்) அவர்களின் கன்னங்கள் இரண்டும் சிவந்துவிட்டன. பிறகு, ‘‘உனக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதனுடன்தான் (நடப்பதற்கு) குளம்பும், (நீரைச் சேமிக்கத்) தண்ணீர் பையும் (வயிறும்) உள்ளதே! அதை அதன் உரிமையாளன் சந்திக்கும் வரை தண்ணீர் அருந்தி (தாகம்தணித்து)க்கொள்கிறது. மரத்திலிருந்து அது (இலை தழைகளைத்) தின்கிறது” என்று சொன்னார்கள். மேலும், நபி (ஸல்) அவர்களிடம், கண்டெடுக்கப்பட்ட பொருள் குறித்தும் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அதன் பை(உறை)யையும் அதன் முடிச்சையும் அடையாளம் தெரிந்து வைத்துக்கொண்டு ஓராண்டுக் காலத்திற்கு அதை அறிவிப்புச் செய்!” ‘‘அதன் (உரிமையாளரான) அடையாளம் அறிந்தவர் வந்தால் சரி! (அதை அவரிடம் கொடுத்துவிடு;) இல்லாவிட்டால் அதை உனது செல்வத்துடன் சேர்த்துக்கொள்!” என்றார்கள்.50 இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, இந்த அறிவிப்பைத் தவிர வேறெதையும் நான் அவரிடமிருந்து (கேட்டு) மனனமிடவில்லை. ‘‘வழிதவறி வந்துவிட்டவை தொடர்பாக யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள (மேற்கண்ட) ஹதீஸ், (நபித்தோழர்) ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப் பட்டதுதானே! எனக்குத் தெரிவியுங்கள்” எனக் கேட்டேன். அதற்கு ரபீஆ (ரஹ்) அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மேற்கண்ட ஹதீஸை) ஸைத் பின் காலித் (ரலி) அவர்களிடமிருந்து யஸீத் (ரஹ்) அவர்களும், அவர்களிடமிருந்து ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ரபீஆ பின் அபீஅப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களைச் சந்தித்து இது குறித்துக் கேட்டார்கள். அத்தியாயம் :

42

(இப்னு அப்பாஸ் ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தின் மீதிருந்தபடி (புனித கஅபாவைச்) சுற்றிவந்தார்கள். அந்த (‘ஹஜருல் அஸ்வத்’ கல் இருக்கும்) மூலைக்கு வரும்போதெல்லாம் அதனை நோக்கி (தமது கையிலுள்ள ஒரு பொருளால் முத்தமிடுவதுபோல்) சைகை செய்தபடி ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்வார்கள்.60 ஸைனப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ‘‘யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இதைப் போன்று (சிறிது) திறக்கப்பட்டது” என்று கூறி தமது கையால் 90 என்று (அரபி எண் வடிவில்) மடித்துக் காட்டி னார்கள்.61 அத்தியாயம் :

43

அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் இருக்கிறது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எந்த நன்மையைக் கோரினாலும், அவருக்கு அதை அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை. இதைக் கூறும்போது நபி (ஸல்) அவர்கள் தம் விரல்நுனிகளை நடுவிரல் மற்றும் மோதிர விரலின் அடிப் பாகத்தின் மீது வைத்துத் தமது கையால் சைகை செய்தார்கள். ‘‘(இதன் மூலம்) அது குறைந்த நேரம் என்பதை நபியவர்கள் உணர்த்துகிறார்கள்” என நாங்கள் பேசிக் கொண்டோம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.62 அத்தியாயம் :

44

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் யூதர்களில் ஒருவன் ஒரு சிறுமியின் (கழுத்தில் கிடந்த) வெள்ளிக் காசு மாலையைப் பறித்துக்கொண்டு அவளது மண்டையை உடைத்துவிட்டான். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த அவளை உடனே அவளுடைய குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார்கள். அவளால் பேச முடியவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘உன்னைத் தாக்கியவன் யார்? இவனா?” என்று அவளைத் தாக்காத வேறொருவரின் பெயரைக் குறிப்பிட்டுக் கேட்டார்கள். அதற்கு அச்சிறுமி, ‘‘இல்லை” என்று தனது தலையால் சைகை செய்தாள். பிறகு அவளைத் தாக்காத இன்னொரு வரின் பெயரைக் குறிப்பிட்டு (இவரா உன்னைத் தாக்கியவர்? என்று) கேட்டார் கள். அதற்கும் அவள், ‘‘இல்லை” என்று சைகை செய்தாள். இறுதியில் ‘‘இன்னாரா?” என்று அவளைத் தாக்கியவனின் பெயரைச் சொல்லிக் கேட்டதும் அவள், ‘‘ஆம்” என்று சைகை செய்தாள். உடனே அந்த நபருக்குத் தண்டனை வழங்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அவனுடைய தலை இரு கற்களுக்கிடையில் வைத்து நசுக்கப் பட்டது.63 அத்தியாயம் :

45

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை நோக்கி சைகை செய்து, ‘‘இங்கிருந்துதான் குழப்பம் தோன்றும்” என்று சொல்லக் கேட்டேன்.64 அத்தியாயம் :

46

அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (மக்கா வெற்றியின்) பயணத்தில் இருந்துகொண்டிருந்தோம். (அப்போது அவர்கள் ரமளான் நோன்பு நோற்றி ருந்தார்கள்.) சூரியன் மறைந்ததும் ஒரு மனிதரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கிச் சென்று எனக்காக மாவு கரைப்பீராக!” என்று சொன்னார்கள். அந்த மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கிச் சென்று மாவு கரைப்பீராக!” என்று (மீண்டும்) சொன்னார்கள். அதற்கு அவர், ‘‘பகல் (வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக் கிறதே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘‘இறங்கிச் சென்று மாவு கரைப்பீராக!” என்று சொன்னார்கள். மூன்றாம் தடவையில் அவர் இறங்கிவந்து நபி (ஸல்) அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்தி (நோன்பு துறந்து)விட்டுத் தமது கையால் கிழக்கு நோக்கி சைகை செய்தவாறு, ‘‘நீங்கள் (கிழக்குத் திசையான) இங்கிருந்து இரவு முன்னோக்கி வந்து விடக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்திட வேண்டும்” என்று சொன்னார்கள்.65 அத்தியாயம் :

47

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சஹர் உணவு உண்பதிலிருந்து ‘பிலாலின் அழைப்பு’ அல்லது ‘பிலாலின் (தொழுகை) அறிவிப்பு’ உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் ‘அவர் அழைப்பது’ அல்லது ‘அவர் (தொழுகை) அறிவிப்புச் செய்வது’, உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருப்போர் திரும்பி வருவதற்காகத்தான்; ‘சுப்ஹ்’ அல்லது ‘ஃபஜ்ர்’ நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக அல்ல. இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஸீத் பின் ஸுரைஉ (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது தம் கைகளை வெளிப்படுத்தினார்கள். பிறகு ஒரு கையைவிட இன்னொரு கையை (நீளவாட்டில்) நீட்டிக்காட்டி (‘நீளவாட்டில் தோன்றும் அதிகாலை வெளிச்சமே உண்மையான ஃபஜ்ர் நேரம் ஆகும்; அகலவாட்டில் தோன்றுவதன்று’ என்பதுபோல்) சைகை செய்தார்கள்.66 அத்தியாயம் :

48

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (செலவே செய்யாத) கஞ்சன், செலவு செய்கின்ற (தாராள மனம் படைத்த)வன் ஆகிய இருவரின் நிலையானது, இரு மனிதர்களின் நிலை போன்றதாகும். அவ்விருவரும் தமது மார்பிலிருந்து கழுத்தெலும்புவரை இரும்பாலான நீளங்கி அணிந்துள்ளனர். செலவு செய்கின்றவர் எதைச் செலவு செய்தாலும் அவரது அங்கி உடல்மீது நீண்டுகொண்டே சென்று விரல்நுனிகளையும் மறைத்து, (அதற்கப்பால்) அவரது பாதச்சுவடுகளைக்கூட(த்தொட்டு) அழித்துவிடுகிறது. கஞ்சன் (எதையாவது) செலவு செய்ய விரும்பினால் (அவனது இரும்பு அங்கியின்) ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை இறுக்கிப் பிடித்துக்கொள்கிறது. அவன் அதை(த் தளர்த்தி) விரிவாக்க முயல்கிறான். ஆனால், அது விரிவடைவதில்லை. (இதைக் கூறியபோது) நபி (ஸல்) அவர்கள் (குரல்வளையைக் கழுத்துச் சட்டை இறுக்கிப் பிடிப்பதை உணர்த்தும் முகமாக) தமது விரலால் தமது குரல்வளையைக் காட்டி சைகை செய்தார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.67 அத்தியாயம் :

49

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்ததை உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், ‘‘ஆம்! (தெரிவியுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். ‘‘(அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது,) பனூ நஜ்ஜார் குடும்ப மாகும். பிறகு அவர்களைத் தொடர்ந்து பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பின்னர் அவர்களைத் தொடர்ந்து பனூ ஹாரிஸ் பின் கஸ்ரஜ் குடும்பமாகும். பின்னர் அவர்களைத் தொடர்ந்து பனூ சாஇதா குடும்பமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபின் தமது விரல்களை மடக்கிப் பின்பு அவற்றை விரித்துவிட்டுத் தமது கையால் (எதையோ) எறிபவர்போல் (சைகை) செய்தார்கள். பிறகு ‘‘அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு” என்று சொன்னார்கள்.69 அத்தியாயம் :

50

சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நானும் மறுமையும் ‘இதிலிருந்து இதைப் போல்’ அல்லது ‘இந்த இரண்டையும்போல்’ (நெருக்கமாக) அனுப்பட்டுள்ளோம்” என்று கூறியவாறு தமது சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்துக் காட்டி னார்கள்.70 அத்தியாயம் :

51

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும்” என்று (இரு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி) -முப்பது நாள் எனச்- சொல்லிவிட்டு, பிறகு ‘‘மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம்” (என்று இரு கைகளையும் மும்முறை விரித்துக்காட்டி மூன்றாம் முறை பெரு விரலை மடக்கியபடி) -இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கலாம்- என்று சொன்னார்கள். அதாவது (மாதம் என்பது,) சில வேளை முப்பது நாட்களாக இருக்கும்; மற்றச் சில வேளை இருபத்தொன்பது நாட்களாக இருக்கும் என்று சொன் னார்கள்.71 அத்தியாயம் :

52

அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையைக் காட்டி சைகை செய்து ‘‘இறைநம்பிக்கை அங்குள்ள (யமனைச் சார்ந்த)தாகும்” என்று இரு முறை கூறிவிட்டு, ‘‘அறிந்துகொள்ளுங்கள்! கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்துதான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதயமாகும். (குழப்பங்கள் தலைதூக்கும். அதாவது,) ரபீஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும்” என்று சொன்னார்கள்.72 அத்தியாயம் :

53

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்” என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள். அத்தியாயம் :

54

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (கிராமவாசியான) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (வெள்ளை நிறமுடைய) எனக்குக் கறுப்பு நிறத்தில் ஒரு மகன் பிறந்துள்ளான்! (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?)” என்று (சாடையாகக்) கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘ஆம்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதன் நிறம் என்ன?” என்று கேட்டார்கள். அவர், ‘சிவப்பு’ என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல் நிற ஒட்டகம் உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘‘(தனது தாயிடம் இல்லாத) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது?” என்று கேட்டார்கள். அவர், ‘‘அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக்கூடும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

55

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒருவர் தம் மனைவி மீது விபசாரக் குற்றம் சாட்டினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம்பதி யராகிய) அவ்விருவரையும் சத்தியம் செய்ய வைத்தார்கள். பிறகு, அவர்கள் இருவரையும் பிரித்துவைத்தார்கள்.74 அத்தியாயம் :

56

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் தம் மனைவிமீது (விபசாரக்) குற்றம் சாட்டினார்கள். எனவே, ஹிலால் அவர்கள் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியமளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்கள் இருவரில் பாவமன்னிப்புக்கோரி (தவறு தம்முடையதுதான் என்று ஒப்புக்கொண்டு, இறைவன் பக்கம்) திரும்புகின்றவர் யார்?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். பிறகு, ஹிலால் (ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார்.76 அத்தியாயம் :

57

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: உவைமிர் அல்அஜ்லானீ (ரலி) அவர்கள் ஆஸிம் பின் அதீ அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘ஆஸிமே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆணொருவன் (தகாத உறவு கொண்டபடி) இருப்பதைக் கண்டால், அவனை இந்த மனிதன் கொன்றுவிடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால், (பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள். ஆஸிமே! எனக்காக இது குறித்து (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டுச் சொல்லுங்கள்” என்றார்கள். ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை. அவற்றை அநாகரிகமாகக் கருதினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட (கண்டன) வார்த்தைகள் ஆஸிம் (ரலி) அவர்களுக்குக் கடினமாயிற்று. ஆஸிம் (ரலி) அவர்கள் தம் வீட்டாரிடம் திரும்பி வந்தபோது அவர்களிடம் உவைமிர் (ரலி) அவர்கள் வந்து, ‘‘ஆஸிமே! உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு ஆஸிம் (ரலி) அவர்கள் உவைமிர் (ரலி) அவர்களிடம், ‘‘நீ எனக்கு நன்மை செய்யவில்லை. (சிக்கலில் என்னைச் சிக்கவைத்துவிட்டாய்;) நான் கேட்ட கேள்வி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்கவில்லை” என்று சொன்னார்கள். அதற்கு உவைமிர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது குறித்து நானே (நேரடியாக) அவர்களிடம் கேட்காமல் ஓயமாட்டேன்” என்று கூறிவிட்டு, மக்களுக்கு மத்தியில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார். பிறகு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவன் அந்த ஆடவனைக் கொன்று விடலாமா? (அவ்வாறு கொன்றுவிட்டால் பழிக்குப்பழியாக) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்!” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உமது விஷயத்திலும், உம்முடைய மனைவி விஷயத்திலும் அல்லாஹ் (வசனத்தை) அருளிவிட்டான். ஆகவே, நீர் சென்று உம்முடைய மனைவியை அழைத்து வாரும்!” என்றார்கள். (பிறகு அவர்கள் இருவரும் வந்தனர்.) நான் மக்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருக்கும்போது அவர்கள் இருவரும் பரஸ்பரம் சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தனர். அவர்கள் லிஆன் செய்து முடித்தபோது உவைமிர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் இவளை (மணவிலக்குச் செய்யாமல் மனைவியாகவே இனியும்) வைத்திருந்தால் இவள்மீது நான் பொய்(யான குற்றச்சாட்டு) சொன்னவனாக ஆகிவிடுவேன்” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு ஆணையிடுவதற்கு முன்பே அவளை மூன்று தலாக் சொல்லிவிட்டார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு இதுவே சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யும் தம்பதியருக்கு முன்மாதிரி ஆகிவிட்டது.77 அத்தியாயம் :

58

பனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் (உவைமிர் என்றழைக் கப்பட்ட) ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! சொல்லுங்கள்: ஒரு மனிதன் தன் மனைவியுடன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவனை இவன் கொன்றுவிடலாமா? (அவ்வாறு கொன்று விட்டால், பழிவாங்கும் சட்டப்படி அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா?) அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்?” என்றார். அப்போது அல்லாஹ், சாபஅழைப்புப் பிரமாணம் செய்துகொள்ளும் தம்பதியர் தொடர்பாக குர்ஆனில் குறிப்பிட்டுள்ள விதியை அருளினான். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் அல்லாஹ் தீர்ப்பளித்துவிட்டான்” என்று சொன்னார்கள். எனவே, அவர்கள் இருவரும் பள்ளிவாசலில் வைத்து சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்டார்கள். அப்போது அங்கு நானும் இருந்தேன். இருவரும் சாபஅழைப்புப் பிரமாணம் செய்து முடித்தபோது உவைமிர் (ரலி) அவர்கள், ‘‘அவளை நான் (மணவிலக்குச் செய்யாமல் மனைவியாகவே) வைத்திருந்தால், அவள்மீது நான் பொய்(க் குற்றச்சாட்டு) சொன்னவனாகிவிடுவேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொல்லிவிட்டு, ‘லிஆன்’ பிரமாணம் முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிடுவதற்கு முன்பாகவே அவளை அவர் மூன்று தலாக் சொல்லிவிட்டார். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையிலேயே அவளைவிட்டுப் பிரிந்துகொண்டார். இதுவே ‘லிஆன்’ பிரமாணம் செய்யும் இருவரைப் பிரித்துவைக்கும் வழியாயிற்று. -தம்பதியர் பரஸ்பரம் செய்துகொள்ளும் சாபஅழைப்புப் பிரமாணம் குறித்தும் அதன் வழிமுறைகள் குறித்தும் சஹ்ல் (ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவித் துள்ள இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த இருவருக்கும் பின்னால் சாபஅழைப்புப் பிரமாணம் செய்யும் இருவரைப் பிரித்துவைக்க இதுவே முன்மாதிரி ஆனது. அந்த லிஆன் நடந்தபோது அப்பெண் கர்ப்பமுற்றிருந்தார். அவருக்குப் பிறந்த குழந்தை அதன் தாயோடு இணைத்துத்தான் (இன்னவளின் மகன் என்று) அழைக்கப்பட லானது. பின்னர் மகனிடமிருந்து அந்தப் பெண்ணும், அப்பெண்ணிடமிருந்து மகனும் அவர்களுக்கு அல்லாஹ் நிர்ணயித்த முறையில் வாரிசாவார்கள் என்ற நடைமுறையும் வந்தது. தொடர்ந்து சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (லிஆன் நடந்து முடிந்ததும்) நபி (ஸல்) அவர்கள், ‘‘இவள் அரணையைப் போன்ற குட்டையான சிவப்பு நிறக் குழந்தையைப் பெற்றெடுத்தால் இவள் உண்மை சொல்லிவிட்டாள். கணவர் இவள்மீது பொய் சொல்லிவிட்டார் (என்று பொருள்); கறுப்பு நிறத்தில் விசாலமான கண்கள் கொண்ட பெரிய புட்டங்களை உடைய குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள்மீது அவளுடைய கணவர் சொன்ன குற்றச்சாட்டு உண்மைதான் என்று கருதுகிறேன்” என்றார்கள். பிறகு விரும்பத் தகாத அந்தத் தோற்றத்திலேயே அப்பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். (கணவரின் குற்றச்சாட்டு நியாயமானதாகப்பட்டது.)78 அத்தியாயம் :

59

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: சாபஅழைப்புப் பிரமாணம் (நடை முறையில் வருவதற்குமுன் ஒருமுறை மனைவிமீது கணவன் விபசாரக் குற்றம் சாட்டுவது) தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்கள் அது தொடர்பாக ஏதோ (ஆக்ரோஷமாகப்) பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (சிறிது நேரத்தில்) ஆஸிம் (ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் சென்று தம் மனைவி யுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகச் சொன்னார். அதற்கு ஆஸிம் (ரலி) அவர்கள், ‘‘நான் (ஆக்ரோஷமாகப்) பேசியதாலேயே இப்படி (என் குலத்தாரிடையே நடந்து) நானே சோதிக்கப்பட்டுள்ளேன்” என்று சொன்னார்கள். ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் அவரை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவருடைய மனைவியின் நடத்தை குறித்துத் தெரிவித்தார்கள். -(உவைமிர் என்ற) அந்த மனிதர் நல்ல மஞ்சள் நிறம் உடையவராகவும், சதைப் பிடிப்புக் குறைவானவராகவும், நீண்ட முடிகளைக் கொண்டவராகவும் இருந்தார். தம் மனைவியுடன் இருக்கக் கண்டதாக அவர் வாதிட்ட அந்த அந்நிய மனிதரோ, மாநிறம் உடையவராகவும் கணைக்கால் புடைத்தவராகவும் அதிக சதைப் பிடிப்பு உள்ளவராகவும் இருந்தார்.- (இந்த குற்றச்சாட்டைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! (இந்தப் பிரச்சினையில் ஒரு) தெளிவைத் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் மனைவியுடன் கண்டதாக அவர் குறிப்பிட்ட அந்த (அந்நிய) ஆடவரின் சாயலில் அவள் குழந்தை பெற்றெடுத்தாள். (அதற்கு முன்பே) இந்தத் தம்பதியரை நபி (ஸல்) அவர்கள் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்ய வைத்தார்கள். (இந்த ஹதீஸ் கூறப்பட்ட) அவையில் இருந்த ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘சாட்சி இல்லாமலேயே ஒருவருக்கு நான் கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந்தால் இவளுக்கு அளித்திருப்பேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது (உவைமிருடைய மனைவியான) இந்தப் பெண் குறித்தா? என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இல்லை; (அவள் வேறொரு பெண்ணாவாள்.) அந்தப் பெண் இஸ்லாத்தில் இருந்துகொண்டே தகாத உறவுகொண்டு வந்தாள் எனப் பரவலாகப் பேசப்பட்டவள். (ஆனால், அவள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவுமில்லை; தகுந்த சாட்சியும் இல்லை. அவள் குறித்தே நபியவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்)” என்று பதிலளித்தார்கள். (இந்த ஹதீஸில் ‘கணைக்கால் புடைத்தவர்’ என்பதைக் குறிக்க ‘கத்ல்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதை) ‘கதில்’ என அபூஸாலிஹ் மற்றும் அப்துல்லாஹ் பின் யூசுஃப் (ரஹ்) ஆகியோர் குறிப்பிட்டனர். அத்தியாயம் :

60

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ‘‘ஒருவர் தம் மனைவிமீது விபசாரக் குற்றம்சாட்டினால் (சட்டம் என்ன)?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதியரான) இருவரை (இதைப் போன்ற நிலையில்) நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள். பிறகு ‘‘உங்களிருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா?” என்றார்கள். உடனே அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகு (மீண்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா?” என்று கேட்டார்கள். அப்போதும் அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகு (மூன்றாம் முறையாக அதைப் போன்றே), ‘‘உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரித் திரும்புகிறவர் உண்டா?” என்று கேட்டார்கள். அப்போதும் அவர்கள் இருவரும் மறுத்தார்கள். ஆகவே, அவர்கள் இருவரையும் நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸில் (சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்ட) ஒரு விஷயத்தைத் தாங்கள் கூறவில்லை என்றே கருதுகிறேன் என்று என்னிடம் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். பிறகு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: (சாபஅழைப்புப் பிரமாணம் செய்த) அந்த மனிதர், ‘(மஹ்ராக நான் அளித்த) எனது பொருள் (என்ன ஆவது)?’ என்று கேட்டார். அதற்கு அவரிடம், ‘(உம்முடைய மனைவிமீது நீர் சுமத்திய குற்றச்சாட்டில்) நீர் உண்மையாளராய் இருந்தால், அவளுடன் நீர் ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டுள்ளீர்! (அதற்கு இந்த மஹ்ர் நிகராகிவிடும்.) நீர் பொய் சொல்ó யிருந்தால் (மனைவியை அனுபவித்துக் கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அந்தச் செல்வம் உம்மைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது’ என்று கூறப் பட்டது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

61

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொள்ளும் தம்பதியரைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்ட தம்பதியரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர். (இனி) அவள்மீது (கணவராகிய) உமக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று சொன்னார்கள். உடனே அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (நான் இவளுக்கு மஹ்ராக அளித்த) எனது பொருள் (என்ன ஆவது? அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாமா?)” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உமக்கு (அந்தப்) பொருள் கிடைக்காது. நீர் அவள் விஷயத்தில் (சொன்ன குற்றச்சாட்டில்) உண்மையாளராய் இருந்தால், அவளது கற்பை நீர் பயன்படுத்திக்கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். அவள்மீது நீர் பொய் சொல்லியிருந்தால், (அவளை அனுபவித் துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகு தூரத்தில் உள்ளது” என்று சொன் னார்கள். தொடர்ந்து சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், தம் மனைவி யுடன் சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த மனிதர் தொடர்பாகக் கேட்டேன். அப்போது அவர்கள், (தம்பதியர் இருவரையும் பிரித்துவைக்க வேண்டும் என்பதைக் காட்ட) தம் இரு விரல்களால் சைகை செய்தார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் அப்போது தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் பிரித்துக் காட்டினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த தம்பதியரை (லிஆனுக்குப்பின்) பிரித்துவைத்தார்கள். பிறகு, ‘‘உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோருபவர் உண்டா?” என மூன்று முறை கேட்டார்கள் என்று பதிலளித்தார்கள். சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இப்போது) உங்களுக்கு நான் தெரிவித்ததைப் போன்றே அம்ர் பின் தீனார், அய்யூப் (ரஹ்) ஆகியோரிடமிருந்து இந்த ஹதீஸை நான் மனனமிட்டுள்ளேன். அத்தியாயம் :

62

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணையும் அவள்மீது விபசாரக் குற்றம்சாட்டிய கணவரையும் சத்தியப் பிரமாணம் (லிஆன்) செய்யவைத்து அவர்கள் இருவரையும் பிரித்து வைத்தார்கள். அத்தியாயம் :

63

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் உள்ள ஒரு தம்பதியரை சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யவைத்து அவர்கள் இருவரையும் பிரித்து வைத்தார்கள். அத்தியாயம் :

64

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரையும் அவருடைய மனைவியையும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்ய வைத்தார்கள். அப்போது அந்த மனிதர் அவளுடைய குழந்தையைத் தம்முடைய தல்ல என்று சொன்னார். ஆகவே, அவ்விருவரையும் நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள்; மேலும், குழந்தையை மனைவியிடம் சேர்த்தார்கள். அத்தியாயம் :

65

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொள்வது (நடைமுறையில் வருவதற்குமுன், மனைவிமீது கணவன் விபசாரக் குற்றம்சாட்டுவது) தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்கள் அது தொடர்பாக ஏதோ (ஆக்ரோஷமாகச்) சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (சிறிது நேரத்தில்) ஆஸிம் (ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களிடம் சென்று, தம் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தவறான உறவு கொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகச் சொன்னார். அப்போது ‘‘நான் (ஆக்ரோஷமாகப்) பேசியதாலேயே (என் குலத்தாரில் நடந்த) இந்த நிகழ்ச்சியால் நானே சோதிக்கப்பட் டுள்ளேன்” என்று ஆஸிம் (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் அவரை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவரு டைய மனைவியின் நடத்தை குறித்துத் தெரிவித்தார்கள். -(உவைமிர் என்ற) அந்த மனிதர் நல்ல மஞ்சள் நிறம் உடையவராகவும், சதைப் பிடிப்புக் குறைந்தவராகவும், நீண்ட முடிகளைக் கொண்டவராகவும் இருந்தார். தம் மனைவியுடன் இருக்கக் கண்டதாக அவர் வாதிட்ட அந்த அந்நிய மனிதரோ மாநிறம் உடையவராகவும் கணைக்கால் புடைத்தவராகவும் அதிக சதைப்பிடிப்பு உள்ளவராகவும், சுருட்டை முடி உள்ளவராகவும் இருந்தார்.- இந்தக் குற்றச்சாட்டைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! (இந்தப் பிரச்சினையில் ஒரு) தெளிவைத் தருவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் மனைவியுடன் தாம் கண்டதாகக் கணவர் குறிப்பிட்ட அந்த (அந்நிய) ஆடவரின் சாயலில் அவள் குழந்தையைப் பெற்றெடுத்தாள். (அதற்கு முன்பே) இந்தத் தம்பதியரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யவைத்தார்கள். (இந்த ஹதீஸ் கூறப்பட்ட) அவையில் இருந்த ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘சாட்சி இல்லாமலேயே ஒருவருக்கு நான் கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந்தால், இவளுக்கு அளித்திருப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது, (உவைமிருடைய மனைவியான) இந்தப் பெண் தொடர்பாகவா? என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘இல்லை. (அவள் வேறொரு பெண்ணாவாள்.) அந்தப் பெண் இஸ்லாத்தில் இருந்துகொண்டே தகாத உறவு கொண்டாள் எனப் பரவலாகப் பேசப்பட்டவள் ஆவாள். (ஆனால், அவள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவுமில்லை; தகுந்த சாட்சியும் இல்லை. அவள் குறித்தே நபியவர்கள் இவ்வாறு குறிப்பிட் டார்கள்)” என்று பதிலளித்தார்கள்.80 அத்தியாயம் :

66

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மணமுடித்தார்கள். பிறகு அப்பெண்ணை அவர்கள் மணவிலக்குச் செய்துவிட்டார்கள். ஆகவே, அந்தப் பெண் வேறொருவரை மணந்துகொண்டார். பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தம் கணவர் தம்மிடம் (உறவு கொள்ள) வருவதில்லை என்றும், அவருக்கு (இனஉறுப்பு என்று) இருப்பதெல்லாம் இந்த (முகத் திரையின்) குஞ்சம் போன்றதுதான் என்றும் கூறினார். (பிறகு தாம் தம் முதல் கணவருடன் வாழ விரும்புவதாகவும் சொன்னார். அப்போது அங்கிருந்த அவருடைய இரண்டாவது கணவர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார். தமக்கு முதல் மனைவி மூலம் பிறந்த குழந்தைகளையும் அவர் காட்டினார்.) உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை; நீ (உன்னுடைய இரண்டாம் கணவரான) இவரிடம் (தாம்பத்திய) சுகத்தை அனுபவிக் கும்வரையிலும், அவர் உன்னிடம் (தாம்பத்திய) சுகத்தை அனுபவிக்கும்வரையிலும் (முதல் கணவரை நீ மணந்து கொள்ள முடியாது)” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.81 அத்தியாயம் :

67

நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ‘சுபைஆ’ என்றழைக்கப்பட்ட ஒரு பெண் கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவருடைய கணவர் (சஅத் பின் கவ்லா) இறந்துவிட்டார். (நாற்பது நாட்களுக்குப் பிறகு அவருக்குக் குழந்தை பிறந்தது.) இந்நிலையில் அவரை ‘அபுஸ் ஸனாபில் பின் பஅக்கக் (ரலி)’ என்பார் பெண் கேட்டார். அவரை மணக்க அப்பெண் மறுத்துவிட்டார். பிறகு (வேறொருவரை மணக்கவிருக்கும் செய்தி கேட்டு) அவரைப் பார்த்து அபுஸ் ஸனாபில் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இரண்டு தவணைகளில் பிந்தியது எதுவோ அதுவரையில் நீ ‘இத்தா’ இருக்காமல் அவரை நீ மணந்துகொள்ள முடியாது” என்று சொன்னார்கள். (பிரசவத்திற்குப்பின்) சுமார் பத்து நாட்கள் அப்பெண் இருந்துவிட்டு பிறகு நபி ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘(பிரசவத் துடன் உன் ‘இத்தா’ முடிந்துவிட்டது.) நீ மணமுடித்துக்கொள்” என்று சொன்னார்கள்.83 அத்தியாயம் :

68

அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உமர் பின் அப்தில்லாஹ் பின் அல்அர்கம் (ரஹ்) அவர்களை, அஸ்லம் குலத்தைச் சேர்ந்த சுபைஆ (ரலி) அவர்களிடம் சென்று, அவருக்கு நபி (ஸல்) அவர்கள் (‘இத்தா’ தொடர்பாக) என்ன தீர்ப்பளித்தார்கள் என்று கேட்கும்படி கடிதம் எழுதினேன். (அவ்வாறே அவரும் கேட்டார்.) அப்போது சுபைஆ (ரலி) அவர்கள், ‘‘நீ பிரசவித்தவுடன் மணமுடித்துக்கொள்” என நபி (ஸல்) அவர்கள் எனக்குத் தீர்ப்பு வழங்கினார்கள் என்று பதிலளித்தார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஸீத் பின் அபீஹபீப் (ரஹ்) அவர்களுக்கு இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் தமது கடிதத்தில் இந்த ஹதீஸைக் குறிப்பிட்டிருந்தார்கள். அத்தியாயம் :

69

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: தம் கணவர் இறந்த சில நாட்களுக்குப்பின் சுபைஆ அல்அஸ்லமிய்யா (ரலி) அவர்கள் பிரசவித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று (மறு)மணம் புரிந்துகொள்ள அனுமதி கோரினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி அளித்ததையடுத்து அவர் (ஒருவரை) மணந்துகொண்டார். அத்தியாயம் :

70

காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களும் சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்களும் கூறியதாவது: யஹ்யா பின் சயீத் பின் அல்ஆஸ் (ரஹ்) அவர்கள் (தம் துணைவியாரான) அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகம் அவர்களின் புதல்வியை (ஒட்டுமொத்த) தலாக் சொல்லிவிட்டார். ஆகவே, அவரை (அவருடைய தந்தை) அப்துர் ரஹ்மான் (தலாக் சொல்லப்பட்ட இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக்) குடிமாற்றினார். (இச்செய்தி அறிந்த) ஆயிஷா (ரலி) அவர்கள் மதீனாவின் (அப்போதைய) ஆட்சித் தலைவராக இருந்த (அப்துர் ரஹ்மானின் சகோதரர்) மர்வான் பின் அல்ஹகம் அவர்களிடம் ஆளனுப்பி, ‘‘மர்வானே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். (உங்கள் சகோதரர் புதல்வியான) அவளை (மணவிலக்கு அளிக்கப்பட்ட) அவளுடைய வீட்டிற்கே திருப்பி அனுப்புங்கள்!” என்று சொன்னார்கள். மர்வான், ‘‘(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் என்னை மிகைத்துவிட்டார். (என்னால் அவரைத் தடுக்க முடியவில்லை)” என்று பதிலளித்தார். -இவ்வாறு சுலைமான் பின் யசார் அவர்களின் அறிவிப்பில் காணப்படுகிறது.- காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: மேலும், மர்வான் ‘‘ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தொடர்பான தகவல் தங்களை வந்தடையவில்லையா? (அவர் இடம் மாறித்தானே ‘இத்தா’ இருந்தார்!)” என்று (ஆயிஷா (ரலி) அவர்களிடம்) கேட்டார். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘ஃபாத்திமா பின்த் கைஸின் செய்தியை நீங்கள் (ஆதாரமாகக்) குறிப்பிடாமல் இருப்பதால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் நேர்ந்துவிடாது. (அவர் இடம் மாறியதற்குத் தக்க காரணம் இருந்தது)” என்று கூறினார்கள். அதற்கு மர்வான் பின் அல்ஹகம் அவர்கள், ‘‘(ஃபாத்திமா இடம் மாறியதற்குக் காரணமாக அமைந்த) இடர்ப்பாடு ஏதேனும் தங்களுக்கு (ஏற்புடையதாக) இருக்குமென்றால், இந்தத் தம்பதியரிடையே உள்ள (அதே விதமான) இடர்ப்பாடு (என் சகோதரர் மகள் இடம் மாறுவதில்) தங்களுக்குப் போதும்தானே!” என்று கூறினார். அத்தியாயம் :

71

(ஆயிஷா ரலி) அவர்கள் கூறியதாவது: ஃபாத்திமா பின்த் கைஸிற்கு என்ன நேர்ந்தது? ‘‘(மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ‘இத்தா’வின்போது) உறைவிடமோ ஜீவனாம்சமோ (கணவன் அளிக்கவேண்டியது) இல்லை” என்று கூறுகிறாரே! அவர் அல்லாஹ்வை அஞ்சக்கூடாதா? அத்தியாயம் :

72

உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகமுடைய புதல்வியான இன்னவளைப் பார்த்தீர்களா? அவரை அவருடைய கணவர் ஒட்டுமொத்த தலாக் சொல்லிவிட்டார். (தம் கணவர் வீட்டில் ‘இத்தா’ இருக்காமல்) அவர் வெளியேறி (மற்றோர் இடத்திற்குச் சென்று) விட்டாரே!” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ‘‘அவர் செய்தது தவறு” என்றார்கள். நான் ‘‘ஃபாத்திமா பின்த் கைஸ், (தான் மற்றோர் இடத்தில் ‘இத்தா’ இருந்தது பற்றிக்) கூறிவருவதை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா ரலி) அவர்கள், ‘‘இந்தச் செய்தியைக் கூறிவருவதில் ஃபாத்திமாவுக்கு எந்த நன்மையுமில்லை என்பதைப் புரிந்துகொள்!” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துர் ரஹ்மான் பின் அபிஸ் ஸினாத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் கூடுதலாகக் காணப்படுவதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் (ஃபாத்திமா பின்த் கைஸைக்) கடுமையாகச் சாடினார்கள். மேலும், ‘‘(இந்த) ஃபாத்திமா தன்னந்தனியானதோர் இடத்தில் இருந்தார். இதனால் அவர் (பாதுகாப்பு) குறித்து அஞ்சப்பட்டது. இதையடுத்தே அவருக்கு (மற்றோர் இடத்தில் ‘இத்தா’ இருக்க) நபி (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள்” என்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

73

உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், ஃபாத்திமா பின்த் கைஸ் அவ்வாறு (மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண் கணவனின் இல்லத்திலிருந்து வெளியேறி மற்றோர் இடத்தில் ‘இத்தா’ மேற்கொள்ளலாம் என்று) கூறிவந்ததை நிராகரித்தார்கள்.86 அத்தியாயம் :

74

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜை முடித்துக்கொண்டு மக்காவிலிருந்து) புறப்பட விரும்பியபோது ஸஃபிய்யா (ரலி) அவர்கள் (மாதவிடாய் ஏற்பட்டதால்) தமது கூடாரத்தின் வாசலில் கவலை அடைந்தவராய் நின்றுகொண்டிருந் தார்கள். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் (செல்லமாக) ‘‘அல்லாஹ் உன்னை அறுக்கட்டும்! உனக்குத் தொண்டை வலி வரட்டும்! எம்மை (புறப் படவிடாமல்) தடுத்துவிட்டாயே! நஹ்ருடைய (துல்ஹிஜ்ஜா பத்தாவது) நாளில் நீ (கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வந்தாயா?” என்று கேட்டார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள் ‘ஆம்’ என்று கூற, நபி (ஸல்) அவர்கள் ‘‘அப்படியானால், நீ புறப்படு” என்று கூறினார்கள்.87 அத்தியாயம் :

75

ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் தம் சகோதரியை (ஒருவருக்கு) மணமுடித் துக் கொடுத்தார்கள். பிறகு அவரை அவருடைய கணவர் ஒரு தலாக் சொல்லிவிட்டார்.88 அத்தியாயம் :

76

ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மஅகில் பின் யசார் (ரலி) அவர்களின் சகோதரி, ஒருவரின் துணைவியாராக இருந்தார். அவருக்கு அவருடைய கணவர் மணவிலக்கு அளித்துவிட்டார். பின்னர் அவரது ‘இத்தா’ காலம் முடியும்வரை (திருப்பி அழைக்காமல்) அப்படியே விட்டுவிட்டார். பிறகு (பழைய கணவரே மீண்டும்) அவரைப் பெண்கேட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மஅகில் (ரலி) அவர்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். மேலும், ‘‘(என் சகோதரி ‘இத்தா’வில் இருந்தபோது) அவளைத் திருப்பி அழைத்துக்கொள்ள அவருக்குச் சக்தியிருந்தும் அப்படியே விட்டுவிட்டு, (‘இத்தா’ முடிந்த)பிறகு (இப்போது வந்து) பெண் கேட்கிறாரே!” என்று கூறி, இருவருக்கும் இடையே மஅகில் தடையாக இருந்தார். அப்போதுதான் அல்லாஹ், ‘‘நீங்கள் (உங்கள்) மனைவியரை மணவிலக்குச் செய்து, அவர்கள் தங்களின் (‘இத்தா’) தவணையின் இறுதியை அடைந்துவிட்டால், தங்களின் (பழைய) கணவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் அவர்கள் மணந்துகொள்வதை நீங்கள் தடுக்க வேண்டாம்” எனும் (2:232 ஆவது) வசனத்தை முழுமையாக அருளினான். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஅகில் (ரலி) அவர்களை அழைத்து (அந்த வசனத்தை) அவருக்கு ஓதிக் காட்டினார்கள். ஆகவே, அவர் தமது பிடிவாதத்தைக் கைவிட்டு அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்.89 அத்தியாயம் :

77

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் தம் மனைவியை, அவர் மாதவிடாயிலிருந்த சமயத்தில் ஒரு தலாக் சொல்லிவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு(ப் பின்வருமாறு) கட்டளை யிட்டார்கள்: அவர் தம் மனைவியைத் திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையாகும்வரை தம்மிடமே வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு தம்மிடம் இருக்கும் அவளுக்கு இரண்டாம் முறை மாதவிடாய் ஏற்பட்டு, அதன் பிறகு அந்த மாதவிடாயிலிருந்து அவள் தூய்மையடையும்வரை காத்திருந்துவிட்டு, அவர் அவளை தலாக் சொல்ல விரும்பினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்னால் அவள் (மாதவிடாய் காலத்தில் இல்லாமல்) தூய்மையானவளாய் இருக்கும்போது தலாக் சொல்லிக் கொள்ளட்டும்! இதுவே, பெண்களை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் உத்தரவிட்டுள்ள காலமாகும். இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இது குறித்து வினவப்பட்டால், ‘‘உன் மனைவியை நீ மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால் வேறொரு கணவரை அவள் மணந்து (உடலுறவு) கொள்ளும்வரை அவள் உனக்கு விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள்” என்று பதிலளிப்பார்கள். மற்றோர் அறிவிப்பில் கூடுதலாகக் காணப்படுவதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘‘நீ ஒரு முறை, அல்லது இரு முறை தலாக் சொல்லியிருந்தால் (அவளைத் திருப்பி அழைத்துக்கொள்ளலாம்). இவ்வாறு (திருப்பி அழைத்துக்கொள்ளுமாறு)தான் நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளை யிட்டார்கள்” என்று கூறுவார்கள்.90 அத்தியாயம் :

78

யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் (மாதவிடாயிலிருக்கும் மனைவியை மணவிலக்குச் செய்வது குறித்துக்) கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நான் மாதவிடாயிலிருந்த என் மனைவிக்கு மணவிலக்கு அளித்தேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்து) வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அவள் ‘இத்தா’வை எதிர்கொள்வதற்கேற்ற (வகையில் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்த) நேரத்தில் (விரும்பினால்) அவர் தலாக் சொல்லட்டும் என அவருக்கு உத்தரவிடுங்கள்” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், ‘‘அது ஒரு தலாக்காகக் கருதப்படுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘‘அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்துகொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?” என்று கேட்டார்கள்.91 அத்தியாயம் :

79

ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான (அன்னை) உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம், அவருடைய தந்தை அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் (ஷாம் நாட்டில்) இறந்துவிட்ட சமயம் சென்றேன். அப்போது (மூன்றாவது நாள்) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் மஞ்சள் நிறமுடைய ஒருவகை நறுமணப் பொருளைக் கொண்டுவருமாறு கூறி, அதை (அங்கிருந்த) ஒரு சிறுமியின் மீது தடவினார்கள். பிறகு தம் இரு கன்னங்களிலும் தடவிக்கொண்டார்கள். பின்னர், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் எந்தப் பெண்ணும், இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்குமேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை; ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர!’ என்று கூறக் கேட்டுள்ளேன். (ஆதலால்தான் இப்போது நறுமணம் பூசினேன்.)” என்றார்கள்.93 அத்தியாயம் :

80

ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் சகோதரர் இறந்த சமயம் அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி பூசிக்கொண் டார்கள். பிறகு, ‘‘இதோ! (பாருங்கள்.) அல்லாஹ் வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு) மேடையில் இருந்தபடி ‘அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்குமேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தன் கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர!’ என்று கூறக் கேட்டுள் ளேன்” என்றார்கள்.94 அத்தியாயம் :

81

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் ஒரு பெண்மணி வந்து, ‘‘அல்லாஹ் வின் தூதரே! என் மகளுடைய கணவர் இறந்துவிட்டார். (‘இத்தா’விலிருக்கும்) என் மகளின் கண்ணில் வலி ஏற்பட்டுவிட்டது. அவள் தன் கண்ணில் அஞ்சனம் (சுர்மா) இட்டுக்கொள்ளலாமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘வேண்டாம்’ என இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள். ஒவ்வொரு முறையும் ‘வேண்டாம்’ என்றே கூறினார்கள். பிறகு, ‘‘(கணவனை இழந்த ஒரு பெண்ணின்) ‘இத்தா’ காலம் நான்கு மாதங்களும் பத்து நாட்களும்தான். (ஆனால்,) அறியாமைக் காலத்தில் (கணவன் இறந்தபின்) மனைவி (ஒரு வருடம் ‘இத்தா’ இருப்பாள்.) ஆண்டின் முடிவில் (‘இத்தா’ முடிந்ததன் அடையாளமாக) ஒட்டகச் சாணத்தை எறிவாள். (அந்த நிலை இப்போது இல்லை)” என்றார்கள். அத்தியாயம் :

82

ஹுமைத் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்களிடம், ‘‘ஆண்டின் முடிவில் ஒட்டகச் சாணத்தை எறிவாள்” என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (அறியாமைக் காலத்தில்) ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அவள் ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்துகொண்டு தன் ஆடைகளிலேயே மிகவும் மோசமானதை அணிந்துகொள்வாள். ஒரு வருடம் கழியும்வரை எந்த நறுமணத் தையும் தொடமாட்டாள். (ஓராண்டு கழிந்த) பிறகு கழுதை, ஆடு போன்ற கால்நடை ஒன்று, அல்லது பறவை ஒன்று அவளிடம் கொண்டுவரப்படும். அதன் மீது (அழுக்கடைந்த தன் உடலைக்) கடுமையாகத் தேய்த்துக்கொள்வாள். அவ்வாறு அவள் தேய்க்கும் எந்த உயிரினமும் (அவளது உடல் அசுத்தத்தால்) சாகாமல் இருப்பது அரிதேயாகும். பிறகு அவள் (அந்தக் குடிசையிலிருந்து) வெளியே வருவாள். அப்போது அவளிடம் ஒட்டகச் சாணம் கொடுக்கப்படும். உடனே அவள் அதை (தனக்கு முன்பக்கத்தில்) தூக்கி எறிந்துவிடுவாள். (இதுவே ‘இத்தா’ முடிந்ததற்கு அடையாளமாகும்.) பிறகு அவள் தான் விரும்பிய நறுமணத்தையோ மற்றவற்றையோ பழையபடி உபயோகித்துக்கொள்வாள். (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘தஃப்தள்ளு பிஹி’ (அதன் மீது தேய்த்துக் கொள்வாள்) எனும் சொற்றொடரின் கருத்தென்ன?’ என்று மாலிக் (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்டபோது, அவர்கள், ‘அந்தப் பெண் அந்த உயிரினத்தின் மீது தன் உடலைத் தேய்த்துக்கொள்வாள்’ என்று (பொருள்) சொன்னார்கள். அத்தியாயம் :

83

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டார். (‘இத்தா’வில் இருந்த அவளது கண்ணில் வலி ஏற்பட்டதால்) அவளின் கண்கள் குறித்து அவ(ளுடைய உறவின)ர்கள் அஞ்சினர். ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அப்பெண் அஞ்சனம் (சுர்மா) இட்டுக்கொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவள் அஞ்சனம் இடவேண்டாம். (அறியாமைக் காலத்தில் கணவன் இறந்தபின்) மனைவி அவளுடைய ‘ஆடைகளிலேயே மோசமானதில்’ அல்லது ‘மோசமான வீட்டில்’ தங்கியிருப்பாள். (கணவர் இறந்து) ஒரு வருடம் கழிந்துவிட்டால் (அவ்வழியாகக்) கடந்துசெல்லும் ஏதேனும் ஒரு நாய் மீது ஒட்டகச் சாணத்தை அவள் வீசியெறிவாள். (அந்த அவலம் இப்போது இல்லை.) ஆகவே, அவள் நான்கு மாதம் பத்து நாட்கள் கழியும்வரை அஞ்சனம் இடவேண்டாம்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

84

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும், இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்குமேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை; ஆனால், தன் கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர! இதை (அன்னை) உம்மு ஹபீபா பின்த் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

85

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: கணவருக்காகத் தவிர (வேறு யாருடைய இறப்புக்காகவும்) மூன்று நாட்களுக்கு அதிகமாகத் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

86

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: இறந்துபோன எவருக்காகவும் மூன்று நாட்களுக்குமேல் நாங்கள் துக்கம் கடைப் பிடிக்கலாகாது எனத் தடை விதிக்கப் பட்டிருந்தோம்; ஆனால், கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர! (அதாவது ‘இத்தா’வில் இருக்கும்போது) நாங்கள் அஞ்சனம் தீட்டிக்கொள்ளக் கூடாது; நறுமணம் பூசிக்கொள்ளக் கூடாது; சாயமிடப்பட்ட ஆடையை அணியக் கூடாது (என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது); ஆனால், நெய்வதற்குமுன் நூலில் சாயமிடப்பட்டுத் தயாரிக்கப்பட்ட (‘அஸ்ப்’ எனும்) ஆடை தவிர! எங்களில் ஒருவர் மாதவிடாயிலிருந்து குளித்துத் தூய்மையடையும்போது ‘ழஃபார்’ எனும் இடத்தில் கிடைக்கும் கோஷ்டக் கட்டைத் துண்டால் நறுமணப் புகையிட்டுக்கொள்ள எங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. மேலும், நாங்கள் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லக் கூடாதென்றும் தடை விதிக்கப்பட்டி ருந்தோம்.96 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகி றேன்: (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘குஸ்த்’ (கோஷ்டம்) எனும் சொல் (ஃகுஸ்த், குஸ்த்) என இரு முறைகளிலும் ஆளப்படுகிறது. ‘காஃபூர்’ (கற்பூரம்) எனும் சொல் (ஃகாஃபூர், காஃபூர்) என இரு முறைகளிலும் ஆளப்படுவதைப் போன்று. மேலும், (இதிலுள்ள) ‘நுப்தத்’ எனும் சொல்லுக்கு ‘துண்டு’ என்பது பொருள். அத்தியாயம் :

87

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் மூன்று நாட்களுக்குமேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை; கணவனுக்காகத் தவிர! ஏனெனில், (கணவன் இறந்துபோன) அவள் (நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் கடைப்பிடிப்பாள். அப்போது) அஞ்சனம் தீட்டிக்கொள்ள மாட்டாள்; சாயமிடப்பட்ட ஆடையை அணியமாட்டாள்; நெய்வதற்குமுன் நூலில் சாயமிட்டுத் தயாரிக்கப்பட்ட (‘அஸ்ப்’ எனும்) ஆடையைத் தவிர! இதை உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

88

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: (கணவன் இறந்து இத்தாவிலிருக்கும் பெண்) நறுமணம் பூசிக்கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். ஆனால், (மாதவிடாயிலிருந்து) அவள் தூய்மையடையும் சமயத்தில் தவிர! அப்போது ‘குஸ்த்’ மற்றும் ‘ழஃபார்’ ஆகிய கோஷ்டக் கட்டைத் துண்டால் நறுமணப் புகையிட்டுக்கொள்ளலாம். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘குஸ்த்’ (கோஷ்டம்) எனும் சொல் (ஃகுஸ்த், குஸ்த்) என இரு முறைகளிலும் ஆளப்படுகிறது. ‘காஃபூர்’ (கற்பூரம்) எனும் சொல் (ஃகாஃபூர், காஃபூர்) என இரு முறைகளிலும் ஆளப்படுவதைப்போல.98 அத்தியாயம் :

89

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறந்துவிட்டால், அந்த மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள்” எனும் (2:234 ஆவது) வசனத்தின் கருத்தாவது: (கணவன் இறந்துபோன) அந்தப் பெண் (நான்கு மாதம் பத்து நாட்கள் காத்திருத்தல் எனும்) இந்த ‘இத்தா’வைத் தன் கணவனுடைய குடும்பத்தாரிடம் மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது. இந்நிலையில் ‘‘உங்களில் மனைவியரை விட்டு இற(க்கும் தறுவாயில் இரு)ப்பவர் கள் தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பாரமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்வார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் கிடையாது” எனும் (2:240ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதன் மூலம்) ஒரு முழு ஆண்டில் (நான்கு மாதம் பத்து நாட்கள் போக மீதியுள்ள) ஏழு மாதம் இருபது நாட்களை(க் கணவனின்) மரணசாசன(த்தை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்ப)மாக அல்லாஹ் ஆக்கினான். அவள் விரும்பினால் (அந்த ஏழு மாதம் இருபது நாட்களில்) தம் கணவனின் இறுதி விருப்பப்படி (கணவன் வீட்டிலேயே) தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் (நான்கு மாதம் பத்து நாட்களுக்குப்பின்) வெளியேறிக்கொள்ளலாம். இதைத்தான் ‘‘வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம்வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதி விருப்பம் தெரிவிப்பார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றை செய்துகொண்டார்களாயின் (உறவினர் களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் கிடையாது” எனும் இந்த (2:240 ஆவது) வசனம் குறிக்கிறது. ஆக, (நான்கு மாதம் பத்து நாட்கள் எனும்) ‘இத்தா’ கால வரம்பு, கணவனை இழந்த கைம்பெண்ணின் மீது கட்டாயமானதே ஆகும். (ஆகவே, 2:234ஆவது வசனம், 2:240ஆவது வசனத்தை மாற்றிடவில்லை என்ற) இந்தக் கருத்தையே முஜாஹித் (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு அபீ நஜாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘இந்த வசனம் (2:240), அவள் தன்னுடைய கணவன் வீட்டில்தான் இருக்க வேண்டும் என்பதை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் ‘இத்தா’ இருப்பாள். இதையே இந்த (2:240ஆவது) வசனத்தொடர் குறிக்கிறது” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (இதைத் தெளிவுபடுத்தும் விதத்தில்) அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அவள் விரும்பினால் தன் கணவனின் வீட்டில் ‘இத்தா’ இருப்பாள். தனக்கு வழங்கப்பட்ட இறுதிவிருப்பப்படி தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் வெளியேறி (வேறு எங்கேனும் தங்கி)க்கொள்வாள். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்றவற்றைச் செய்துகொண்டால் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. தொடர்ந்து அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு சொத்துரிமைச் சட்டம் (குறித்த 4:12ஆவது வசனம்) வந்து, தங்கும் வசதி (செய்துதர கணவன் இறுதி விருப்பம் தெரிவிக்க வேண்டுமென்ற முறை)யை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் ‘இத்தா’ இருக்கலாம். அவளுக்குத் தங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டியது (கணவனின் உறவினர்களுக்குக் கடமையாக) இல்லை.99 அத்தியாயம் :

90

ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: தம் தந்தை (அபூசுஃப்யான்-ரலி) அவர்களின் இறப்புச் செய்தி வந்தபோது (அன்னை) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் நறுமணத்தைக் கொண்டுவரச் சொல்லி அதை தம் இரு கைகளிலும் தடவிக் கொண்டார்கள். மேலும், (பின்வருமாறு) கூறினார்கள்: எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், நபி (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்குமேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர” என்று சொல்லக் கேட்டுள்ளேன்.100 அத்தியாயம் :

91

அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாய் விற்ற காசு, சோதிடனின் தட்சணை, விபசாரியின் வருமானம் ஆகியவற்றுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.102 அத்தியாயம் :

92

அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.103 அத்தியாயம் :

93

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அடிமைப் பெண்கள் (விபசாரம் போன்ற தகாத வழிகளில்) பொருளீட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அத்தியாயம் :

94

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், ‘‘ஒரு மனிதர் தம் மனைவியின் மீது விபசாரக் குற்றம் சாட்டினால் (சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதியரான) இருவரை நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்துவிட்டு, ‘‘உங்கள் இருவரில் ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா?” என்று கேட்க, (தம்பதியர்களான) அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகும் நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் இருவரில் ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா?” என்று கேட்க, அப்போதும் அவர்கள் இருவரும் மறுத்தனர். ஆகவே, (தம்பதியரான) அவர்கள் இருவரையும் நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என்னிடம் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், ‘‘இந்த ஹதீஸில் ஒரு விஷயத்தைத் தாங்கள் சொல்லவில்லை என்றே நான் கருதுகிறேன்” என்று கூறிவிட்டு, பிறகு அவர்களே (பின்வருமாறு) கூறினார்கள்: (தம் மனைவிமீது விபசாரக் குற்றம் சாட்டிய) அந்த மனிதர், ‘‘(மஹ்ராக நான் அளித்த) என் பொருள் (என்ன ஆவது?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘(உமது குற்றச்சாட்டில்) நீர் உண்மையாளராய் இருந்தால், அவளுடன் நீர் ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டுள்ளீர். (அதற்கு இந்த மஹ்ர் நிகராகிவிடும்.) நீர் பொய் சொல்லியிருந்தால் (மனைவியை அனுபவித்துக் கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அந்தச் செல்வம் (மஹ்ர்) உம்மைவிட்டு வெகுதொலைவில் இருக்கிறது” என்று கூறினார்கள்.105 அத்தியாயம் :

95

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: சாபஅழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த அந்தத் தம்பதியரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர்” என்று கூறிவிட்டு, (கணவரான உவைமிரைப் பார்த்து), ‘‘இனி அவள்மீது உமக்கு எந்த அதிகாரமும் கிடையாது” என்று சொன்னார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! (அவளுக்கு நான் மணக்கொடையாக அளித்திருந்த) எனது பொருள் (என்னாவது)?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘உமக்கு (அந்த)ப் பொருள் கிடைக்காது. நீர் அவள்மீது உண்மை(யான குற்றச் சாட்டைச்) சொல்லியிருந்தால், அவளது கற்பை நீர் பயன்படுத்திக்கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். நீர் அவள்மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், (அவளை அனுபவித்துக் கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அப்பொருள் அவளிடமிருந்து உனக்கு வெகுதொலைவில் உள்ளது” என்று சொன்னார்கள்.107 அத்தியாயம் :