5 - பள்ளிவாசல்கள் மற்றும் தொழுகை இடங்கள் புத்தகம்
அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பெற்ற பள்ளிவாசல் எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல் மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா நகரிலுள்ள புனித கஅபா அமைந்திருக்கும்) பள்ளிவாசல்" என்று பதிலளித்தார்கள். நான் "பிறகு எது?" என்று கேட்டேன். அவர்கள் "(ஜெரூஸலத்திலுள்ள) அல்மஸ்ஜிதுல் அக்ஸா" என்று பதிலளித்தார்கள். நான், "அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)?" என்று கேட்டேன். அவர்கள் "நாற்பதாண்டுகள்" (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பெற்று நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பெற்றது). (பின்னர்) உங்களைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைகிறதோ அங்கு நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்! ஏனெனில், அதுதான் இறைவனை வழிபடும் தலம் (மஸ்ஜித்) ஆகும்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூகாமில் அல்ஜஹ்தரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பிறகு உங்களைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் (அங்கு) நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். ஏனெனில், அதுதான் இறைவனை வழிபடும் தலம் (மஸ்ஜித்) ஆகும்" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
இப்ராஹீம் பின் யஸீத் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் பள்ளிவாசலை ஒட்டியுள்ள இடத்தில் என் தந்தை (யஸீத் அத்தைமீ) அவர்களிடம் குர்ஆனை ஓதிக் காட்டிக்கொண்டிருந்தேன். அப்போது நான் "சஜ்தா" வசனத்தை ஓதியவுடன் என் தந்தை (அங்கேயே) சஜ்தாச் செய்தார்கள். நான், "தந்தையே! (நடை)பாதையில் சஜ்தா (சிரவணக்கம்) செய்கிறீர்களே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், பூமியில் முதன் முதலில் அமைக்கப்பெற்ற பள்ளிவாசல் குறித்துக் கேட்டேன். அவர்கள், "அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா நகரிலுள்ள புனித கஅபா அமைந்திருக்கும்) பள்ளிவாசல்" என்று பதிலளித்தார்கள். "பின்னர் எது?" என்று கேட்டேன். (ஜெரூஸலத்திலுள்ள) "அல்மஸ்ஜிதுல் அக்ஸா”” எனறார்கள். நான், "அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)?" என்று கேட்டேன். அவர்கள், "நாற்பதாண்டுகள்” என்று கூறினார்கள். "பிறகு பூமி முழுவதுமே உங்களுக்குத் தொழுமிடம்தான். ஆகவே, உங்களைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் அங்கே நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்!" என்றும் சொன்னார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னர் வாழ்ந்த (இறைத்தூதர்கள்) எவருக்கும் வழங்கப்பெறாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பெற்றுள்ளன: 1.ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமுதாயத்தாருக்கு மட்டுமே (தூதராக நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். நான் சிவப்பர் கறுப்பர் (என்ற பாகுபாடின்றி) அனைவருக்கும் தூதராக அனுப்பப்பெற்றுள்ளேன். 2.போரில் கிடைக்கப்பெறும் செல்வங்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னிருந்த (இறைத்தூதர்) எவருக்கும் அவை அனுமதிக்கப்படவில்லை. 3.எனக்கு பூமி முழுவதும் சுத்தம்(தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தூய்மையானதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. (என் சமுதாயத்தாரில்) யாரேனும் ஒருவருக்குத் தொழுகை(யின் நேரம்) வந்துவிட்டால் அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தொழுதுகொள்வார். 4.எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாதகாலப் பயணத் தொலைவிருந்தாலும் (அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய மதிப்புக் கலந்த) அச்சம் ஏற்படுத்தப் படுவதன் மூலம் நான் வெற்றியளிக்கப்பெற்றுள்ளேன். 5.மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை செய்யும் வாய்ப்பு அளிக்கப் பெற்றுள்ளேன். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: )இறுதி சமுதாயத்தாராகிய) நாம் மூன்று விஷயங்களில் (மற்ற) மக்கள் அனைவரை விடவும் சிறப்பிக்கப்பட்டுள்ளோம்: 1.நம் (தொழுகை) வரிசைகள் வானவர்களின் (தொழுகை) வரிசைகளைப் போன்று (சீராக) ஆக்கப்பட்டுள்ளன. 2. நமக்கு பூமி முழுவதும் தொழுமிடமாக ஆக்கப்பட்டுள்ளது. (தொழுகைக்காக "அங்கத் தூய்மை" செய்ய) நமக்குத் தண்ணீர் கிடைக்காதபோது தரை முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாக ஆக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிறப்பையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். இதை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்: 1.நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன். 2.எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது. .3போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன. .4எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. .5நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன். .6என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்களுடன் அனுப்பப்பெற்றுள்ளேன். (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது. (ஒரு முறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் கொண்டுவரப்பட்டு என் முன்னால் வைக்கப்பட்டன. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றுவிட்டார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை (தேடி) வெளியே எடுத்து (அனுபவித்து)க் கொண்டிருக்கிறீர்கள்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே வேறு நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எதிரிகளுக்கு (என்னைப் பற்றிய மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு நான் வெற்றியளிக்கப் பட்டுள்ளேன். நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப் பெற்றுள்ளேன். (ஒருமுறை) நான் உறங்கிக்கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் கொண்டுவரப்பட்டு என் கைகளில் வைக்கப்பட்டன. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும் இவை. அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எதிரிகளுக்கு (என்னைப் பற்றிய மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு நான் வெற்றியளிக்கப்பட்டுள்ளேன். நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிறந்தகத்தைத் துறந்து) மதீனாவுக்கு வந்தபோது மதீனாவின் மேட்டுப்பாங்கான பகுதியில் இறங்கி, "பனூ அம்ர் பின் அவ்ஃப்" என்றழைக்கப்பட்டுவந்த ஒரு குடும்பத்தாரிடையே பதிநான்கு நாட்கள் தங்கினார்கள். பிறகு பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்கும் முகமாகத்) தம் வாட்களை (கழுத்தில்) தொங்கவிட்டபடி வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகன(ஒட்டக)த்தில் அமர்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் அபூபக்ர் (ரலி) அவர்கள் அமர்ந்திருக்க, பனூநஜ்ஜார் கூட்டத்தார் புடைசூழ அவர்களைக் குழுமியிருந்த காட்சியை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாகனம் அபூஅய்யூப் (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அவர்களை இறக்கிவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை நேரம் வந்தடையும் இடத்திலேயே தொழுகையை நிறைவேற்றுவார்கள்; ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள். (இது அவர்களது வழக்கமாக இருந்தது.) இந்நிலையில்தான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டும்படி உத்தரவிட்டார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்துவரச் சொல்லி) ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்தபோது, "பனூநஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்தை எனக்கு விலைபேசி (விற்று)விடுங்கள்" என்று கேட்டார்கள். அதற்கு அக்கூட்டத்தார், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்" என்று கூறி (அத்தோட்டத்தை அளித்த)னர். நான் (உங்களிடம்) கூறவிருப்பவைதாம் அத்தோட்டத்தில் இருந்தன: அதில் சில பேரீச்ச மரங்கள்,இணைவைப்பாளர்களின் சமாதிகள், இடிபாடுகள் ஆகியவைதாம் இருந்தன. எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசல் கட்டும்போது அங்கிருந்த) பேரீச்ச மரங்களை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. இணை வைப்பாளர்களின் சமாதிகளைத் தோண்டி (அப்புறப் படுத்தி)டுமாறு உத்தரவிட அவ்வாறே அவை தோண்டப்பட்டன. இடிபாடுகளை (அகற்றி)ச் சமப்படுத்தும்படி உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர். பள்ளிவாசலின் (நுழைவாயிலின்) இரு நிலைக்கால்களாகக் கல்லை (நட்டு) வைத்தனர். அப்போது "ரஜ்ஸ்” எனும் ஒருவித யாப்பு வகைப் பாடலை பாடிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (பாடியபடி பணியில் ஈடுபட்டு) இருந்தார்கள். "இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; ஆகவே, (மறுமையின் நன்மைகளுக்காகப் பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ உதவி செய்வாயாக!” என்று அவர்கள் பாடினர். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் பைத்துல் மக்திஸை நோக்கிப் பதினாறு மாதங்கள் தொழுதேன். "அல்பகரா"அத்தியாயத்திலுள்ள "நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின்போது) அதன் (-கஅபாவின்) பக்கமே திருப்புங்கள்" எனும் (2:144ஆவது) வசனம் அருளப்பெறும்வரை (இவ்வாறே நாங்கள் செய்தோம்). நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்த பின்னர்தான் இவ்வசனம் அருளப்பெற்றது. (நபி (ஸல்) அவர்களுடன் தொழுது முடித்த) மக்களில் ஒருவர் அன்சாரிகளில் சிலரைக் கடந்துசென்றார். அவர்கள் (பைத்துல் மக்திஸை நோக்கித்) தொழுதுகொண்டிருந்தனர். அந்த மனிதர் (தொழும் திசை மாற்றப்பட்டுவிட்ட செய்தியை) அவர்களிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் (தொழுகையிலிருந்தவாறே) தம் முகங்களை இறையில்லம் (கஅபாவை) நோக்கித் திருப்பிக்கொண்டனர். அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பைத்துல் மக்திஸை நோக்கிப் "பதினாறு” அல்லது "பதினேழு” மாதங்கள் தொழுதோம். பிறகு நாங்கள் கஅபா (எனும் தற்போதைய கிப்லா) நோக்கித் திருப்பப்பட்டோம். இதை அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் குபாவில் சுப்ஹு தொழுதுகொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "சென்ற இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பெற்றுள்ளது. (தொழுகையில், இதுவரை முன்னோக்கிவந்த பைத்துல் மக்திஸை விட்டு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்கள் கஅபாவை முன்னோக்கித் தொழுங்கள்" என்று அறிவித்தார். அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக்கொண்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவர்கள் எத்தகையோர் எனில்,) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்துவிடுவார்கள். அவர்கள்தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
யிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடல் நலிவுற்று (தம் இறுதிநாட்களில்) இருந்த போது அவர்களிடம் மக்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது உம்முசலமா (ரலி) அவர்களும் உம்முஹபீபா (ரலி) அவர்களும் (தாங்கள் கண்ட) கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினர். தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியர் (சிலர்) தாங்கள் கண்ட "மாரியா” எனப்படும் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினர். மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி) அவர்களும் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோய் அதிகமாகி) இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் தமது கறுப்புக் கம்பளி ஆடையைத் தமது முகத்தின் மீது போட்டுக் கொள்ளலானார்கள். அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போது தமது முகத்திலிருந்து அதை அகற்றிவிடுவார்கள். அவர்கள் அதே நிலையில் இருந்துகொண்டே, "யூதர்கள்மீதும் கிறிஸ்தவர்கள்மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்" என்று அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்துவிடக் கூடாது என அதை)க் குறித்து எச்சரித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் "உங்களில் ஒருவர் என் (தேவைகளுக்காக நான் அணுகும்) உற்ற தோழராக இருப்பதிலிருந்து (விலகி) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன். ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை (தன்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டதைப் போன்று என்னையும் (தன்) உற்ற தோழனாக ஆக்கிக்கொண்டான். நான் என் சமுதாயத்தாரில் ஒருவரை என் உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால் அபூபக்ர் அவர்களையே நான் என் உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன். அறிந்துகொள்ளுங்கள்: உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத்தலங்களாக ஆக்கிவிடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்" என்று கூறுவதை நான் கேட்டேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மேலும் பல அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், இப்னு முஸ்ஹிர் (ரஹ்) மற்றும் ஜரீர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்துகொண்டிருந்தபோது அவர்களுடைய விரல்கள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது" என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அல்கமா (ரஹ்) மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: நாங்கள் இருவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் (எங்களிடம்), "உங்களுக்குப் பின்னால் உள்ள மக்கள் தொழுதுவிட்டனரா?" என்று கேட்டார்கள். நாங்கள் இருவரும், "ஆம்” என்றோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்கள் இருவருக்குமிடையே (தொழுவதற்காக) நின்றார்கள். எங்களில் ஒருவரைத் தமது வலப் பக்கத்திலும் மற்றொருவரை இடப் பக்கதிலும் நிறுத்தலானார்கள். பிறகு நாங்கள் ருகூஉச் செய்தபோது எங்கள் (உள்ளங்)கைகளை எங்களுடைய முழங்கால்கள் மீது நாங்கள் வைத்தோம். உடனே அவர்கள் எங்கள் கைகளில் அடித்தார்கள். பிறகு தம்மிரு கைகளைக் கோத்துக்கொண்டு அவ்விரண்டையும் தம் தொடைகளுக்கிடையே இடுக்கிக்கொண்டார்கள். தொழுது முடித்ததும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படித்தான் செய்தார்கள்" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் என் தங்தை (சஅத் பின் அபீவக்காஸ் -ரலி) அவர்களின் விலாப் புறத்தில் (நின்று) தொழுதேன். அப்போது நான் (ருகூஉவில்) என்னிரு கைகளையும் (கோத்து) என் இரு முழங்கால்களுக்கு நடுவே இடுக்கிக்கொள்ளலானேன். உடனே என் தந்தை, "உன் உள்ளங் கைகளை முழங்கால்கள்மீது வை!" என்று சொன்னார்கள். நான் (அவ்வாறு செய்யாமல்) மீண்டும் அவ்வாறே (முன்பு போன்றே) செய்தேன். உடனே அவர்கள் என் கைகள்மீது அடித்துவிட்டு, "இவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது. உள்ளங்கைகளை முழங்கால்கள் மீது வைக்கும்படி எங்களுக்கு உத்தரவிடப்பட்டது" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "இவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது" என்பதுவரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பிறகுள்ள குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (இரு சஜ்தாக்களுக்கு நடுவே) பாதங்கள்மீது (அவற்றை நட்டுவைத்து) அமர்வது பற்றிக் கேட்டோம். அவர்கள், "அது நபிவழிதான்" என்று சொன்னார்கள். நாங்கள், "இவ்வாறு அமர்வது அந்த மனிதரின் அசட்டையான (பொடுபோக்கான) செயல் என்றே நாங்கள் கருதுகிறோம்" என்றோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இல்லை; அது உங்கள் நபியின் வழிமுறைதான்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது (தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் "யர்ஹமுக் கல்லாஹ்” (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் "என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?" என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. (மாறாக,) அவர்கள், "இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்" என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே?" என்றேன். அதற்கு அவர்கள் "சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்" என்றார்கள். நான் "எங்களில் இன்னும் சிலர் பறவையை வைத்துக் குறி பார்க்கிறார்களே?" என்றேன். அதற்கு நபியவர்கள் "இது, மக்கள் தம் உள்ளங்களில் காணும் (ஐதீகம் சார்ந்த) விஷயமாகும். ஆனால், இது "அவர்களை" அல்லது "உங்களை" (செயலாற்றுவதிலிருந்து) தடுத்திட வேண்டாம்" என்று கூறினார்கள். நான், "எங்களில் இன்னும் சிலர் (நற்குறி அறிய மணலில்) கோடு வரை(யும் பழங்கால கணிப்பு முறையை மேற்கொள்)கின்றனர்" என்றேன். அதற்கு அவர்கள், "நபிமார்களில் ஒருவர் இவ்வாறு கோடு வரைந்துவந்தார். யார் அவரைப் போன்று கோடு வரைகிறாரோ அது (சாத்தியம்)தான்" என்றார்கள். அடுத்து என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள) உஹுத் மலை மற்றும் (அதையொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்துவந்தாள். ஒரு நாள் நான் சென்று பார்த்தபோது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்றுவிட்டது. (சராசரி) மனிதன் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்பட்டேன். ஆயினும், அவளை நான் அறைந்துவிட்டேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்துவிடட்டுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்துவாருங்கள்!" என்று சொன்னார்கள். நான் அவளை அழைத்துச் சென்றபோது அவளிடம், "அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?" என்று நபியவர்கள் கேட்டார்கள். அவள், "வானத்தில்” என்று பதிலளித்தாள். அவர்கள், "நான் யார்?" என்று கேட்டார்கள். அவள், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர்" என்றாள். அவர்கள் (என்னிடம்), "அவளை விடுதலை செய்துவிடுங்கள்! ஏனெனில், அவள் இறைநம்பிக்கையுடைய (முஃமினான) பெண் ஆவாள்" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அ(வ்வாறு உமிழ்ந்த)தை மண்ணுக்குள் புதைப்பதே அதற்குரிய பரிகாரமாகும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் கத்தாதா (ரஹ்) அவர்களிடம் பள்ளிவாசலுக்குள் உமிழ்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அ(வ்வாறு உமிழ்ந்த)தை மண்ணுக்குள் புதைப்பதே அதற்குரிய பரிகாரமாகும். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு நின்று தொழுதார்கள். அதன் வேலைப்பாட்டை உற்று நோக்கினார்கள். தொழுது முடித்ததும், "இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூ ஜஹ்ம் பின் ஹுதைஃபாவிடம் (இதைக்) கொண்டுசெல்லுங்கள். (அவரிடமிருந்து மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டுவாருங்கள். ஏனெனில், சற்று முன்பு இது தொழுகையிலிருந்து எனது கவனத்தைத் திருப்பிவிட்டது" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழும்போது அவர்கள் சளியை உமிழ்ந்ததை நான் பார்த்தேன். பின்னர் அதைத் தமது காலணியால் (தரையில்) தேய்த்தார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது நான் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது அவர்கள் சளியை உமிழ்ந்துவிட்டு அதைத் தமது இடது கால் காலணியால் தேய்த்து விட்டார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். (தொழுது முடித்ததும்,) இதன் வேலைப்பாடுகள் எனது கவனத்தை ஈர்த்துவிட்டன. எனவே, இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூ ஜஹ்மிடம் சேர்த்துவிட்டு (அவரிடமிருந்து மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் முன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்று இருந்தது. அது தொழுகையில் அவர்களது கவனத்தை ஈர்த்துவந்தது. எனவே, அதை (தமக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து மற்றொரு சாதாரண ஆடையை வாங்கிக்கொண்டார்கள். அத்தியாயம் :
இப்னு அபீஅத்தீக் (அப்துல்லாஹ் பின் முஹம்மத் அபீஅத்தீக் பின் அப்திர் ரஹ்மான் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவரான காசிம் பின் முஹம்மத் பின் அப்திர் ரஹ்மானும் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒரு விஷயம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். காசிம் (எதையும்) பிழையாகப் பேசுபவராக இருந்தார். அவரிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், "உனக்கு என்ன நேர்ந்தது? நீ ஏன் இந்த என் சகோதரர் புதல்வரைப் போன்று (பிழையின்றி) பேசுவதில்லை? இந்தப் பழக்கம் உனக்கு எங்கிருந்து வந்தது என்று நான் அறிந்துகொண்டேன். இவரை இவருடைய தாய் வளர்த்தார். உன்னை உன்னுடைய தாய் வளர்த்தார்" என்று கூறினார்கள். இதைக் கேட்ட காசிம் கோபம் கொண்டு, ஆயிஷா (ரலி) அவர்கள்மீது எரிச்சலடைந்தார். ஆயிஷா (ரலி) அவர்களுக்கு முன் உணவுத் தட்டு கொண்டுவரப்பட்டபோது காசிம் எழுந்துவிட்டார். ஆயிஷா (ரலி) அவர்கள், "எங்கே (போகிறாய்)?" என்று கேட்க, காசிம் "நான் தொழப்போகிறேன்" என்றார். ஆயிஷா (ரலி) அவர்கள், "உட்கார்!" என்றார்கள். காசிம் "நான் தொழப்போகிறேன்" என்று (மீண்டும்) கூறினார். ஆயிஷா (ரலி) அவர்கள் "அவசரக்காரனே! உட்கார்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. ஆனால், அவற்றில் காசிம் பின் முஹம்மதைப் பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு முன்னால் இரவு நேர உணவு வைக்கப்பட்டுவிட, தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் முதலில் உணவை உண்ணுங்கள். அதை உண்டு முடிக்கும்வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இந்தச் செடியிலிருந்து விளைவதை (அதாவது வெள்ளைப் பூண்டை) சாப்பிட்டவர் அதன் வாடை விலகாதவரை நம்முடைய பள்ளிவாசல்களை நெருங்க வேண்டாம். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட வேண்டாம் என்று தடைசெய்தார்கள். எங்களுக்குத் தேவை மிகைத்துவிடவே அவற்றிலிருந்து நாங்கள் சாப்பிட்டுவிட்டோம். அப்போது அவர்கள், "துர்வாடையுள்ள இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்களுக்குத் தொல்லை தருகின்றவை வானவர்களுக்கும் தொல்லை தருகின்றன" என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் "நம்மிடமிருந்து" அல்லது "நமது பள்ளிவாசலிலிருந்து" விலகியிருக்கட்டும்; அவர் (கூட்டுத் தொழுகைக்கு வராமல்) தம் இல்லத்திலேயே அமர்ந்துகொள்ளட்டும்" என்று கூறினார்கள். )ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதில் காய்கறிகளும் கீரைகளும் இருந்தன. அவற்றில் (துர்)வாடை வீசுவதை நபியவர்கள் உணர்ந்தார்கள். (அவற்றைப் பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதிலுள்ள கீரைகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தம் தோழர்களில் ஒருவருக்குக் கொடுத்துவிடுமாறு கூறினார்கள். அத்தோழரும் அதை உண்ண விரும்பாமலிருந்ததைக் கண்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், நீங்கள் உரையாடாத (வான)வர்களுடன் நான் உரையாட வேண்டியதுள்ளது"என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், "இந்தச் செடியிலிருந்து விளைகின்ற வெள்ளைப் பூண்டைச் சாப்பிட்டவர் -மற்றோர் தடவை "வெங்காயம், வெள்ளைப் பூண்டு, சீமைப் பூண்டு ஆகியவற்றைச் சாப்பிட்டவர்"- நமது பள்ளிவாசலை நெருங்க வேண்டாம். ஏனெனில், மனிதர்கள் எதனால் தொல்லை அடைகிறார்களோ அதனால் வானவர்களும் தொல்லை அடைகின்றனர்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "இந்தச் செடியிலிருந்து விளைகின்றதைச் சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலில் நம்மைச் சூழ்ந்திருக்க வேண்டாம்" என நபி (ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டைக் கருத்தில் கொண்டு கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது. ஆனால், வெங்காயம், சீமைப் பூண்டு ஆகியவற்றைப் பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: )ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் வெங்காயம் பயிரிடப்பட்டிருந்த ஒரு வயலைக் கடந்துசென்றார்கள். அப்போது மக்களில் சிலர் அதில் இறங்கி வெங்காயங்களை (பறித்து)ச் சாப்பிட்டனர். வேறு சிலர் சாப்பிட வில்லை. பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது வெங்காயம் சாப்பிடாதவர்களை (தம்மருகே) அழைத்தார்கள். மற்றவர்களை, அதன் வாடை விலகும்வரை (நெருங்கவிடாமல்) தள்ளி இருக்கச்செய்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மஅதான் பின் அபீதல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: )கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஒரு வெள்ளிக் கிழமை (ஜுமுஆ) தினத்தன்று உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (தமது உரையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் நினைவுகூர்ந்தார்கள். மேலும், அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நான் (இன்று) ஒரு கோழி என்னை மூன்று முறை கொத்துவதைப் போன்று (கனவு) கண்டேன். இதற்கு என் ஆயுட்காலம் முடிந்துவிட்டது என்றே நான் (விளக்கம்) கண்டேன். மக்களில் சிலர் நான் (எனக்குப் பின்னால்) என் (ஆட்சிக்குப்) பிரதிநிதி (கலீஃபா) ஒருவரை அறிவிக்குமாறு கூறுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் தனது மார்க்கத்தையோ, தன் (அடியார்களின்) ஆட்சித் தலைமையையோ, நபி (ஸல்) அவர்களை எதனுடன் அனுப்பிவைத்தானோ அதையோ பாழாக்கிவிடமாட்டான். எனக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவரைக் குறித்து திருப்தியடைந்த நிலையில் இறந்தார்களோ அத்தகைய இந்த ஆறுபேர் ஆட்சித் தலைமை குறித்துத் தம்மிடையே கலந்தாலோசித்து முடிவு செய்வார்கள். சிலர் இந்த விஷயத்தில் என்னைக் குறை கூறிவருவது எனக்குத் தெரியும். நான் (சில நேரங்களில்) அவர்களை இஸ்லாத்திற்காக எனது இந்தக் கையால் அடித்திருக்கிறேன். அவர்கள் இவ்வாறு செய்(வதை மார்க்க அங்கீகாரமுடைய ஒரு செயலாக நினைத்)தால் அத்தகையோர்தாம் இறைவனின் விரோதிகளும் வழிகெட்ட இறைமறுப்பாளர்களும் ஆவர். நான் எனக்குப் பின்னால் "கலாலா"வைவிட ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுச் செல்லவில்லை. நான், இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவாதித்ததைப் போன்று வேறு எதற்காகவும் விவாதித்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இது தொடர்பாக என்னிடம் கடிந்துகொண்டதைப் போன்று வேறு எதற்காகவும் என்னிடம் கடிந்துகொண்டதில்லை. எந்த அளவிற்கு (அவர்கள் என்னைக் கடிந்துகொண்டார்கள்) எனில், அவர்கள் தமது விரலால் என் நெஞ்சில் குத்தினார்கள். "உமரே! அந்நிஸா அத்தியாயத்தின் கடைசியிலுள்ள (4:176ஆவது) வசனம் உமக்குப் போதுமானதாக இல்லையா?" என்று கேட்டார்கள். நான் இன்னும் (சிறிது காலம்) வாழ்ந்தால் இந்த "கலாலா" தொடர்பாகக் குர்ஆனைக் கற்றோரும் கல்லாதோரும் தீர்ப்பளிக்கும் விதத்தில் தெளிவான ஒரு தீர்ப்பை வழங்குவேன். பின்னர் (தொடர்ந்து) கூறினார்கள்: "இறைவா! நகரங்களின் ஆளுநர்களுக்கு உன்னையே சாட்சியாக்குகிறேன். நான் அவர்களை அந்த மக்களிடையே நேர்மையாக நடந்துகொள்வதற்காகவும் அவர்களுடைய மார்க்கத்தையும் அவர்களுடைய நபி (ஸல்) அவர்களது வழிமுறையையும் கற்றுத் தருவதற்காகவுமே அனுப்பிவைத்தேன். மேலும், அவர்களுக்குப் போரிடாமல் கிடைத்த ("ஃபய்உ" எனும்) செல்வத்தை அவர்கள் தம்மிடையே (முறையோடு) பங்கிட வேண்டும்; அவர்களுடைய விவகாரங்களில் சிக்கல் எழும்போது அதை என் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் (என்றும் கூறி அனுப்பினேன்(. மக்களே! நீங்கள் இரு செடிகளிலிருந்து விளைகின்றவற்றைச் சாப்பிடுகிறீர்கள். அவ்விரண்டையும் நான் அருவருப்பானவையாகக் கருதுகிறேன். இந்த வெங்காயமும் வெள்ளைப் பூண்டுமே (அவை இரண்டுமாகும்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது ஒருவரிடமிருந்து அவற்றின் துர்வாடை வருவதைக் கண்டால், அவரை "அல்பகீஉ" பொது மையவாடிக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு வருமாறு கூறுவார்கள். எனவே, யார் அதைச் சாப்பிட விரும்புகிறாரோ அவர் அதைச் சமைத்து அதன் வாடையை நீக்கிக்கொள்ளட்டும். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காணாமற்போன ஒரு பொருளைப் பள்ளிவாசலுக்குள் தேடிக்கொண்டிருப்பவரின் குரலைச் செவியுறுபவர் "அல்லாஹ் அதை உனக்குத் திரும்பக் கிடைக்காமல் செய்வானாக!" என்று கூறட்டும். ஏனெனில், பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது: காணாமற்போன (தமது ஒட்டகத்)தைப் பற்றிப் பள்ளிவாசலுக்குள் விசாரித்த ஒரு மனிதர், "(எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?" என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "(உனது ஒட்டகம்) உனக்குக் கிடைக்காமற்போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது: )ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் ஒரு மனிதர் எழுந்து "(காணாமற் போன எனது) சிவப்பு ஒட்டகத்தி(னைக் கண்டுபிடித்து அதனி)டம் (என்னை) அழைத்துச் செல்பவர் யார்?" என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(உனது ஒட்டகம்) உனக்குக் கிடைக்காமற் போகட்டும். பள்ளிவாசல்கள் எதற்காகக் கட்டப்பட்டனவோ அதற்கு மட்டுமே உரியனவாகும்" என்று சொன்னார்கள். - புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுத பின் ஒரு கிராமவாசி வந்து பள்ளி வாசலின் கதவு வழியே தமது தலையை நீட்டினார். மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மதியத் தொழுகைகளில் ஒன்றை (லுஹர் அல்லது அஸ்ர் தொழுகையைத்) தொழுவிக்கும்போது இரண்டு ரக்அத் முடிந்த உடனே சலாம் கொடுத்துவிட்டார்கள். பிறகு பள்ளிவாசலின் கிப்லாத் திசையிலிருந்த ஒரு பேரீச்சம் கட்டைக்கு வந்து அதன்மீது சாய்ந்து கொண்டார்கள். அப்போது ஏதோ கோபத்தில் இருந்தார்கள். மக்களிடையேயிருந்த அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் நபியவர்களிடம் பேச்சுக்கொடுக்க அஞ்சினர். மக்களில் தொழுதுவிட்டு விரைந்து செல்பவர்கள் "தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது" என்று புறப்பட்டுச் சென்றும்விட்டனர். இந்நிலையில் "துல்யதைன்" (கிர்பாக் பின் அம்ர்-ரலி) என்பவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?" என்று கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் வலப் பக்கமும் இடப் பக்கமும் (திரும்பிப்) பார்த்தார்கள். பிறகு "துல்யதைன் என்ன சொல்கிறார்?"" என்று கேட்டார்கள். மக்கள் "(ஆம்) அவர் சொல்வது உண்மைதான். தாங்கள் இரு ரக்அத்கள்தாம் தொழுவித்தீர்கள்"" என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள் மேலும் இரு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு சலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் சொல்லி ஒரு சஜ்தாச் செய்துவிட்டு மற்றொரு தக்பீர் சொல்லி எழுந்(து அமர்ந்)தார்கள். பிறகு இன்னொரு தக்பீர் சொல்லி மற்றொரு சஜ்தாச் செய்தார்கள். பிறகு தக்பீர் சொல்லிவிட்டு எழுந்துவிட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களது அறிவிப்பில் "(இறுதியில்) சலாம் கொடுத்தார்கள்"" என்றும் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; சஜ்தா வசனமுள்ள அத்தியாயத்தை (எங்களுக்கு) ஓதிக்காட்டும் போது அவர்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். உடனே நாங்களும் சிரவணக்கம் செய்வோம். அப்போது (ஏற்படும் இட நெருக்கடியால்) எங்களில் சிலருக்கு நெற்றி வைக்கக்கூட இடம் கிடைக்காது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில நேரங்களில் குர்ஆன் ஓதி, சஜ்தா வசனத்தைக் கடந்து செல்கையில் எங்களுடன் சேர்ந்து சஜ்தாச் செய்வார்கள். அப்போது இட நெருக்கடி ஏற்பட்டு எங்களில் ஒருவருக்கு சஜ்தாச் செய்யக் கூட இடம் கிடைக்காது. தொழுகை அல்லாத நேரங்களில் இவ்வாறு நடைபெற்றது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "அந்நஜ்ம்" எனும் (53ஆவது) அத்தியாயத்தை ஓதிய பின் சஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த (முஸ்லிம்கள், இணைவைப்பாளர்கள் ஆகிய) அனைவரும் சஜ்தாச் செய்தனர். அங்கிருந்த ஒரு வயோதிகன் மட்டும் ஒரு கையளவு கூழாங்கற்களையோ அல்லது மண்ணையோ அள்ளித் தனது நெற்றிவரை கொண்டு சென்றுவிட்டு, "இது எனக்குப் போதும்" என்று (சஜ்தாவைக் கேலி செய்து) சொன்னான். பிறகு அ(க்கிழ)வன் இறைமறுப்பாளனாகவே (பத்ருப் போரில்) கொல்லப்பட்டதை நான் கண்டேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால், தம் கைகளை முழங்கால்கள்மீது வைப்பார்கள். பெருவிரலை ஒட்டியுள்ள வலக் கை(சுட்டு) விரலை உயர்த்திப் பிரார்த்திப்பார்கள். இடக் கையை இடது கால் மூட்டின் மீது விரித்து வைத்திருப்பார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் உட்கார்ந்தால் தமது இடக் கையை இடது கால் மூட்டின் மீதும் வலக் கையை வலது கால் மூட்டின் மீதும் வைப்பார்கள். (அரபியர் வழக்கில்) ஐம்பத்து மூன்று என எண்ணுவதைப் போன்று (சிறு விரல், மோதிர விரல், நடு விரல் ஆகிய மூன்று விரல்களையும் உள்ளங்கையுடன் சேர்த்து) சுட்டு விரலால் சைகை செய்வார்கள். அத்தியாயம் :
அலீ பின் அப்திர் ரஹ்மான் அல்முஆவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (சிறிய வயதில்) தொழுகையில் சிறு கற்களால் விளையாடிக்கொண்டிருப்பதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கண்டார்கள். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியதும் (அவ்வாறு செய்யலாகாது என) என்னைத் தடுத்தார்கள். "(தொழுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்துகொண்டிருந்ததைப் போன்று நீயும் செய்!" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன செய்வார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால், தம்முடைய வலது முன் கையை வலது தொடையின் மீது வைத்துத் தம் (வலக் கை) விரல்கள் அனைத்தையும் மடக்கிக்கொண்டு, பெருவிரலை ஒட்டியுள்ள (சுட்டு)விரலால் சைகை செய்வார்கள். இடது முன் கையை இடது தொடையில் வைப்பார்கள்" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நான் இப்னு உமர் (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் தொழுதுகொண்டிருந்தேன்" என்று (அலீ பின் அப்திர் ரஹ்மான் அல்முஆவீ (ரஹ்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை, (மக்கள் "அல்லாஹ் அக்பர்" என்று) தக்பீர் கூறுவதைவைத்து நாங்கள் அறிந்துகொள்வோம். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை எனக்கு அபூமஅபத் (ரஹ்) அவர்கள்தாம் அறிவித்தார்கள். பிறகு (இதை நான் அபூமஅபத் அவர்களிடம் எடுத்துரைத்த போது) அவர்களே அதை (அவ்வாறு தாம் அறிவிக்கவில்லை என) மறுத்துவிட்டார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை, (மக்கள் கூறும்) தக்பீரின் மூலமே நாங்கள் அறிந்துவந்தோம். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நான் அபூமஅபத் (ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தபோது "இதை நான் உமக்கு அறிவிக்கவில்லை" என்று கூறினார்கள். ஆனால், அவர்கள்தாம் முன்னர் எனக்கு இந்த ஹதீஸை அறிவித்தார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் கடமையான (ஃபர்ள்) தொழுகையை முடிக்கும்போது சப்தமாக திக்ருச் செய்யும் நடைமுறை நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்தது. அவ்வாறு (மக்கள் உரத்த குரலில் திக்ருச்) செய்வதைக் கேட்டால் மக்கள் தொழுகையை முடித்துவிட்டார்கள் என்பதை நான் அறிந்துகொள்வேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் யூதப்பெண் ஒருவர் "உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்கள் சவக்குழிகளில் (கப்றுகளில்) வேதனை செய்யப்படுவீர்கள்" என்று கூறிக்கொண்டிருந்தார். அப்போது என்னிடம் வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்கள். மேலும் "யூதர்கள்தாம் (சவக்குழிகளில்) வேதனை செய்யப்படுவார்கள்" என்றார்கள். சில நாட்கள் கழிந்த பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நீ அறிவாயா: சவக்குழிகளில் நீங்கள் வேதனை செய்யப்படுவீர்கள் என இறைவனால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். அதற்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சவக்குழியின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனா யூத மூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக்கொண்டிருந்தபோது) "சவக் குழிகளில் புதைக்கப்பட்டிருப்போர் வேதனை செய்யப்படுகின்றனர்" என்று கூறினர். அவர்கள் இருவரும் கூறியதை நான் நம்ப மறுத்தேன். அவர்கள் கூறியதை நம்புவதற்கு என் மனம் இடம் தரவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! மதீனா யூத மூதாட்டியரில் இருவர் என்னிடம் வந்து "சவக்குழிகளில் புதைக்கப்பட்டிருப்போர் வேதனை செய்யப்படுகின்றனர்" என்று கூறினர்" என அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் சொன்னது உண்மையே. (சவக் குழிகளிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகின்றனர். அந்த வேதனை(யால் அவர்களிடும் ஓலம்)தனை மிருகங்கள் செவியேற்கின்றன" என்று கூறினார்கள். அதற்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தத் தொழுகையிலும் சவக்குழியின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்றி, வ அதாபிந் நாரி, வ ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, வ ஷர்ரில் மஸீஹித் தஜ்ஜால்" (இறைவா! உன்னிடம் நான் சவக்குழியின் வேதனையிலிருந்தும், (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலிருந்தும், இறப்பின் சோதனையிலிருந்தும், (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் (தமது தொழுகையில்) கடைசி அத்தஹிய்யாத் ஓதியதும் நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (அவை:) நரகத்தின் வேதனை, சவக்குழியின் வேதனை, வாழ்வு மற்றும் இறப்பின் சோதனை, (பெருங் குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் தீங்கு ஆகியனவாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "உங்களில் ஒருவர் அத்தஹிய்யாத் ஓதியதும்..." எனும் வாசகமே இடம் பெற்றுள்ளது. "கடைசி அத்தஹிய்யாத்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை. அத்தியாயம் :
அபுஸ்ஸுபைர் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சலாம் கொடுத்தவுடன் "லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ். லா இலாஹ இல்லல்லாஹு, வ லா நஅபுது இல்லா இய்யாஹு லஹுந் நிஅமத்து வ லஹுல் ஃபள்லு. வ லஹுஸ் ஸனாஉல் ஹசனு. லா இலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன்" (அல்லாஹவைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வின் உதவியின்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ (எவராலும்) இயலாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவனைத் தவிர வேறெவரையும் நாங்கள் வழிபடமாட்டோம். அருட்கொடைகள் அவனுக்கே உரியன. மாட்சிமை அவனுக்கே உரியது. அழகிய கீர்த்தியும் அவனுக்கே உரியது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. வழிபாட்டை முற்றிலும் அவனுக்கே உரித்தாக்குகிறோம் (அவனது திருப்திக்காகவே அனைத்து அறங்களையும் செய்கிறோம்); இறைமறுப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே) என்று கூறுவார்கள். மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் இந்த திக்ருகளை ஓதிவந்தார்கள்" என்றும் கூறினார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், இந்த அறிவிப்பில் அபூசாலிஹ் (ரலி) அவர்கள் கூறிய "பிறகு ஏழை முஹாஜிர்கள் திரும்பிவந்தனர்..." எனும் வாசகம் இடைச்சேர்ப்பாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும், சுஹைல் (ரஹ்) அவர்கள் "(சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர் ஆகிய ஒவ்வொன்றையும்) பதினோரு முறை பதினோரு முறை கூறுங்கள். ஆக மொத்தம் இவை யாவும் சேர்ந்து முப்பத்து மூன்று முறையாகும்" என்று அறிவித்தார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்குப் பின் ஓதப்படும் சில துதிச்சொற்கள் உள்ளன. அவற்றைக் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஓதி வருபவர் நட்டமடையமாட்டார். (அவை:) முப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ் என்றும் முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும் முப்பத்து நான்கு முறை அல்லாஹு அக்பர் என்றும் கூறுவதாகும். இதைக் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் முப்பத்து மூன்று முறை சுப்ஹானல்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்ஹம்து லில்லாஹ் என்றும், முப்பத்து மூன்று முறை அல்லாஹு அக்பர் என்றும் ஆக மொத்தம் தொன்னூற்று ஒன்பது முறை கூறி, இறுதியில் நூறாவது முறையாக "லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று நிறைவு செய்கிறாரோ அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே! - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, "அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி" (தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் "உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?" என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), "உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை" என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் "நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்" என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே "இதை எடுத்துச் செல்பவர் யார்" எனும் விஷயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருந்ததை நான் கண்டேன்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தோம். அப்போது மக்களில் ஒருவர் "அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா, வ சுப்ஹானல்லாஹி புக்ரத்தவ் வ அஸீலா" (அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப்படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்று காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்) என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இன்ன இன்ன வார்த்தைகளை மொழிந்தவர் யார்?" என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர், "நான்தான் அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் இதைக் கேட்டு வியப்புற்றேன். இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டன" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டதிலிருந்து நான் அதைக் கூறாமல் இருந்ததில்லை. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் தொழுகையை நோக்கி உங்களில் ஒருவர் ஓடிச்செல்ல வேண்டாம். மாறாக, அவர் நிதானத்தையும் கண்ணியத்தையும் மேற்கொண்டு, நடந்தே செல்லட்டும். உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தை (இமாமுடன்) தொழுது கொள்ளுங்கள்; விடுபட்டதைப் பின்னர் (எழுந்து) நிறைவேற்றிக்கொள்ளுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: )ஒரு முறை) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. உடனே நாங்கள் எழுந்து நின்றோம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வருவதற்கு முன்பே தொழுகை வரிசைகளை சீராக்கினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து தாம் தொழும் இடத்தில் போய் நின்றார்கள். முதல் தக்பீர் (தக்பீர் தஹ்ரீம்) சொல்வதற்கு முன் (தாம் பெருந்துடக்குடன் இருப்பது) அவர்களுக்கு நினைவுக்கு வரவே எங்களிடம், "உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்"என்று கூறிவிட்டுத் (தமது இல்லத்திற்குத்) திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் வரும்வரை நாங்கள் அவர்களை எதிர்பார்த்து நின்றுகொண்டிருந்தோம். பிறகு அவர்கள் குளித்துவிட்டுத் தமது தலையிலிருந்து தண்ணீர் சொட்டச் சொட்ட எங்களிடம் வந்தார்கள். தக்பீர் சொல்லி எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சூரியன் மறைவதற்கு முன் அஸ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்துகொண்டவர், (அந்தத் தொழுகையையே) அடைந்துகொண்டுவிட்டார். சூரியன் உதிப்பதற்கு முன் ஃபஜ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து கொண்டவர், (அந்தத் தொழுகையையே) அடைந்து கொண்டுவிட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு ஷிஹாப் முஹமமத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (வலீத் பின் அப்தில் மலிக் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (ஒரு நாள்) அஸ்ர் தொழுகையைச் சிறிது நேரம் தாமதப்படுத்தினார்கள். அப்போது அவர்களிடம் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள், "(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (தொழுகை கடமையான "மிஅராஜ்" இரவுக்கு மறுநாள்) இறங்கி,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இமாமாக (நின்று) தொழுவித்தார்கள். (அப்போது அஸ்ர் தொழுகையை இதற்கு முந்தியே தொழுதார்கள்)" என்று கூறினார்கள். அதற்கு உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், "நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், உர்வா!" என்று சொன்னார்கள். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள் கூறினர்கள்: பஷீர் பின் அபீமஸ்ஊத் (ரஹ்) அவர்கள் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(வானவர்) ஜிப்ரீல் (ஒரு நாள்) இறங்கிவந்து, எனக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள். அவர்களுடன் நான் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன்" என்று சொல்லி, ஐந்து (நேரத்) தொழுகைகளைத் தம் விரல்களால் எண்ணிக் காட்டினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (அஸ்ர்) தொழுகையைத் தாமதப் படுத்தினார்கள். அப்போது அவர்களிடம் வந்த உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) தெரிவித்தார்கள்: )கூஃபா நகரின் ஆளுநராயிருந்த) முஃகீரா பின் ஷுஅபா (ரஹ்) அவர்கள் ஒரு நாள் (அஸ்ர்) தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அப்போது அங்கு வந்த அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள், "ஏன் இவ்வாறு (தாமதப்படுத்தினீர்கள்), முஃகீரா? (தொழுகை கடமையாக்கப் பட்ட மிஅராஜ் இரவுக்கு மறுநாள்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கித் தொழு(வித்)தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். மீண்டும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். (ஐவேளைத் தொழுகையை முடித்த) பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் "இவ்வாறே நான் (உங்களுக்குச் செய்து காட்டுமாறு) பணிக்கப்பட்டேன்"என்று கூறியதையெல்லாம் நீங்கள் அறிந்திருக்க வில்லையா, என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு உர்வா (ரஹ்) அவர்களிடம் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், "நீங்கள் என்ன அறிவிக்கிறீர்கள் என்பதை (நன்கு) கவனியுங்கள், உர்வா! ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தொழுகை நேரத்தைக் காட்டினார்களா?" என்று கேட்டார்கள். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், "(ஆம்) இவ்வாறுதான் பஷீர் பின் அபீமஸ்ஊத் (ரஹ்) அவர்கள் தம் தந்தை அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்" என்றார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனது அறையிலிருந்து சூரிய ஒளி (முற்றாக) அகலாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: சூரிய ஒளி எனது அறைக்குள் விழுந்து கொண்டும் நிழல் இன்னும் (கிழக்குப்புறச் சுவரில்) விழாமலும் உள்ள நிலையில் நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுவார்கள். அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நிழல் இன்னும் (கிழக்குப் புறச் சுவரில்) தெரியாத நிலையில்" என்று இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: லுஹ்ர் தொழுகையின் நேரம், சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு(ச் சமமாக) ஆகி, அஸ்ர் நேரத்திற்கு முன்புவரை உள்ளது. அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாவதற்கு முன்புவரை உள்ளது. மஃக்ரிப் தொழுகையின் நேரம் செம்மேகம் மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவு வரை உள்ளது. சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் ஆரம்பமானதிலிருந்து சூரியன் உதயமாவதற்கு முன்புவரை உள்ளது. சூரியன் உதித்துவிட்டால் தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையேதான் அது உதயமாகிறது. இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெப்பம் தணியும்வரை தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சு காரணமாகவே உண்டாகிறது அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வெப்பம் ஏற்படும்போது வெப்பம் தணியும்வரை தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சு காரணமாகவே உண்டாகிறது" என்று கூறிவிட்டு, "நரகம் தனது இறைவனிடம் (மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு) முறையிட்டது. அதற்கு இறைவன் ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக்கொள்ள அனுமதித்தான்" என்றும் குறிப்பிட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கடுமையான வெப்ப நேரத்தில் தொழுவோம். அப்போது எங்களில் ஒருவர் பூமியில் தமது நெற்றியை வைக்க இயலா விட்டால் அவர் தமது ஆடையை விரித்து அதன்மீது சிரவணக்கம் (சஜ்தா) செய்வார். அத்தியாயம் :
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (வெப்பமில்லாத நாட்களில்) சூரியன் உச்சி சாயும்போதே (நண்பகல் நேரத்தில்) லுஹர் தொழுதுவிடுவார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சுடுமணல்(மீது நின்று தொழுவதிலுள்ள சிரமம்) குறித்து முறையிட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் முறையீட்டை ஏற்கவில்லை. அத்தியாயம் :
அலாஉ பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் பஸ்ரா நகரில் தமது இல்லத்திலிருந்த அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் லுஹ்ர் தொழுதுவிட்டுச் சென்றேன். (அன்னாரின் இல்லம் பள்ளிவாசலுக்குப் பக்கத்தில் இருந்தது) நாங்கள் அவர்களிடம் சென்றபோது "நீங்கள் அஸ்ர் தொழுதுவிட்டீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், "(இல்லை) நாங்கள் இப்போதுதான் லுஹர் தொழுதுவிட்டு வருகிறோம்" என்று அவர்களிடம் சொன்னோம். அனஸ் (ரலி) அவர்கள், "அவ்வாறாயின் நீங்கள் அஸ்ர் தொழுங்கள்" என்றார்கள். உடனே நாங்கள் எழுந்து (அஸ்ர்) தொழுதோம். நாங்கள் தொழுது முடித்ததும் அனஸ் (ரலி) அவர்கள், "இதுதான் நயவஞ்சகனின் தொழுகையாகும். அவன் சூரியனை எதிர்பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பான். சூரியன் (சரியாக) ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே (உதயமாகி அல்லது மறைந்து) வரும்போது அவன் (அவசர அவசரமாகக் கோழி கொத்துவதைப் போன்று) நான்கு கொத்து கொத்துவான். அவன் அதில் மிகக் குறைவாகவே இறைவனை நினைவுகூருவான்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்துள்ளேன் என்றார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஉமாமா பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுடன் (அவர்கள் மதீனாவில் இடைக்கால ஆட்சியராக இருந்தபோது) லுஹ்ர் தொழுகையை (அதன் இறுதி நேரத்தில்) தொழுதோம். பிறகு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் புறப்பட்டுச் சென்றோம். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் அஸ்ர் தொழுகை தொழுதுகொண்டிருப்பதைக் கண்டோம். அப்போது நான் (மரியாதை நிமித்தம்) "என் தந்தையின் சகோதரரே!" (என்றழைத்து) நீங்கள் தொழுதீர்களே இது என்ன தொழுகை?" என்று கேட்டேன். அவர்கள், "(இது) அஸ்ர் தொழுகை. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இவ்வாறே (ஆரம்ப நேரத்தில்) தொழுபவர்களாக இருந்தோம்" என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுகை தொழுவோம். பிறகு ஒட்டகம் அறுக்கப்படும். அது பத்துக் கூறுகளாகப் பங்கிடப்படும். பிறகு அது சமைக்கப்படும். நாங்கள் சூரியன் மறைவதற்கு முன் (அதன்) சமைக்கப்பட்ட இறைச்சியை உண்போம். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும் அவற்றில் "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் அஸ்ர் தொழுகைக்குப் பிறகு ஒட்டகத்தை அறுப்போம்" என்று இடம்பெற்றுள்ளது. "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுவோம்" எனும் வாசகம் இடம் பெறவில்லை. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அஸ்ர் தொழுகை யாருக்குத் தவறிவிடுகிறதோ அவர் தம் குடும்பத்தையும் செல்வத்தையும் இழந்து தனிமைப்படுத்தப்பட்டவரைப் போன்றவர் ஆவார். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அஹ்ஸாப் (எனும் அகழ்ப்)போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(எதிரிகளான) அவர்கள் சூரியன் மறையும் நேரம்வரை நடுத் தொழுகை(யான அஸ்ர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள். அவர்களுடைய "புதை குழிகளை" அல்லது "அவர்களுடைய வீடுகளை" அல்லது "அவர்களுடைய வயிறுகளை" அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. வீடுகள் அல்லது வயிறுகள் என்பதில் (எந்த வார்த்தை இடம்பெற்றுள்ளது என்பது தொடர்பாக) அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "அவர்களுடைய வீடுகளையும் வயிறுகளையும்" என்று (ஐயப்பாடின்றி) இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஹ்ஸாப் (எனும் அகழ்ப்)போரின்போது அகழின் நுழைவாயில்களில் ஒன்றில் அமர்ந்தவாறு, "(எதிரிகளான) அவர்கள் சூரியன் மறையும் நேரம்வரை நடுத்தொழுகை(யான அஸ்ர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள். "அவர்களுடைய புதைகுழிகளையும் வீடுகளையும்" அல்லது "அவர்களுடைய புதைகுழிகளையும் வயிறுகளையும்" அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஹ்ஸாப் (எனும் அகழ்ப்) போரின்போது "(எதிரிகளான) அவர்கள் நடுத்தொழுகையான அஸ்ர் தொழுகையிலிருந்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள். அவர்களுடைய வீடுகளையும் புதைகுழிகளையும் நெருப்பால் அல்லாஹ் நிரப்புவானாக!" என்று கூறினார்கள். பிறகு அத்தொழுகையை இரு இரவுத் தொழுகைகளான மஃக்ரிபுக்கும் இஷாவுக்கும் இடையே தொழுதார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூரியன் "செந்நிறமாகும் நேரம்வரை" அல்லது "பொன்னிறமாகும் நேரம்வரை" அஸ்ர் தொழுகையைத் தொழவிடாமல் தடுத்து விட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நடுத்தொழுகையான அஸ்ர் தொழுகையிலிருந்து அவர்கள் நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள். அல்லாஹ் அவர்களுடைய வயிறுகளையும் புதைகுழிகளையும் நெருப்பால் நிரப்புவானாக!" என்று கூறினார்கள். அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமறுப்பாளர்களை ஏசிக்கொண்டே (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), "அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையத் தொடங்கும்வரை என்னால் அஸ்ர் தொழுகை தொழ முடியாமல் போய்விட்டது" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் அதை (இதுவரை) தொழவில்லை" என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிலுள்ள) புத்ஹான் எனும் பள்ளத்தாக்கில் இறங்கினோம். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். நாங்களும் அங்கத் தூய்மை செய்தோம். (அன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த பிறகு அஸ்ர் தொழுதார்கள். அதன் பிறகு மஃக்ரிப் தொழுதார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (முழு நிலவுள்ள ஓர் இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலாவைக் கூர்ந்து பார்த்தவாறு, "நீங்கள் இந்த நிலாவை நெரிசல் இல்லாமல் காண்பதைப் போன்றே உங்கள் இறைவனையும் (மறுமையில்) காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னருள்ள தொழுகையிலும் சூரியன் மறையும் முன்னருள்ள தொழுகையிலும் (அதாவது அஸ்ரிலும் ஃபஜ்ரிலும்) (உறக்கம் போன்ற) எதற்கும் ஆட்படாமல் இருக்க உங்களால் இயலுமானால் (அவ்வாறே செய்யுங்கள்; இறைவனை நீங்கள் தரிசிக்கலாம்)" என்று கூறினார்கள். இதன் அறிவிப்பாளரான கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: பிறகு ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், "சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் போற்றித் துதியுங்கள்" எனும் (20:130ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "நபி (ஸல்) அவர்கள், "நினைவில் கொள்க: நீங்கள் (மறுமையில்) உங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவீர்கள். அப்போது நீங்கள் அவனை இந்த நிலவைக் காண்பதைப் போன்று காண்பீர்கள்" என்று கூறினார்கள். பிறகு மேற்கண்ட (20:130ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. ஜரீர் (ரலி) அவர்கள் அந்த வசனத்தை ஓதிக் காட்டியதாகக் குறிப்பில்லை. அத்தியாயம் :
அபூபக்ர் பின் உமாரா பின் ருஐபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சூரியன் உதயமாவதற்கு முன்னரும் சூரியன் மறைவதற்கு முன்னரும் தொழுதவர் (அதாவது ஃபஜ்ர் மற்றும் அஸ்ர் தொழுதவர்) எவரும் ஒருபோதும் நரக நெருப்பில் நுழையமாட்டார்" என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என (என் தந்தை) உமாரா பின் ருஐபா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம் பஸ்ராவாசிகளில் ஒருவர், "இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டார். அதற்கு உமாரா (ரலி) அவர்கள் "ஆம்" என்றார்கள். அந்த மனிதர் "நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இவ்வாறு செவியுற்றேன் என உறுதி அளிக்கிறேன். அதை என்னிரு காதுகளும் செவிமடுத்தன; என் மனம் அதை மனனமிட்டுக்கொண்டது" என்று கூறினார். இந்த ஹதீஸ் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூபக்ர் பின் உமாரா பின் ருஐபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: )என் தந்தை) உமாரா பின் ருஐபா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சூரியன் உதயமாவதற்கு முன்னரும் சூரியன் மறைவதற்கு முன்னரும் (ஃபஜ்ர் மற்றும் அஸ்ர்) தொழுபவர் நரக நெருப்பில் நுழையமாட்டார்" என்று கூறினார்கள்" என்றார்கள். அப்போது உமாரா (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த பஸ்ராவாசிகளில் ஒருவர், "இதை நீங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டார். அதற்கு உமாரா (ரலி) அவர்கள் "ஆம், நபி (ஸல்) அவ்வாறு கூறினார்கள் என நான் உறுதி அளிக்கிறேன்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த பஸ்ராவாசி "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியேற்ற அதே இடத்தில் நானும் செவியேற்றேன் என நானும் உறுதி அளிக்கிறேன்" என்றார். அத்தியாயம் :
சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரியன் திரையில் (அடிவானில்) மறையும்போது மஃக்ரிப் தொழுவார்கள். அத்தியாயம் :
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மஃக்ரிப் தொழுவோம். பிறகு எங்களில் ஒருவர் திரும்பிச் செல்லும்போது (அவர் அம்பெய்தால்) அம்பு விழும் இடத்தை அவரால் பார்க்க முடியும் (அந்த அளவு வெளிச்சம் இருக்கும்போதே மஃக்ரிப் தொழுவோம்). - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதிலும் "நாங்கள் மஃக்ரிப் தொழுவோம்..." எனும் வாசகமே இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் இரவில் நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை நன்கு இருள் படரும்வரைத் தாமதப்படுத்தினார்கள். எந்த அளவிற்கென்றால் இரவின் கணிசமான பகுதி கடந்துவிட்டது; பள்ளிவாசலில் இருந்தவர்கள் உறங்கியும் விட்டனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து தொழுவித்துவிட்டு, "இதுதான் இஷாத் தொழுகைக்கான (சிறந்த) நேரமாகும். என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் எனக்கில்லையாயின்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்பதில்லையாயின்" என (சிறு மாற்றத்துடன்) இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது அலுவல் காரணமாக இஷாத் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். நாங்கள் பள்ளிவாசலிலேயே உறங்குவதும் விழிப்பதும் பின்னர் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, "இந்த இரவில் உங்களைத் தவிர பூமியிலுள்ள வேறெவரும் இத்தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை" என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்களிடம் மக்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மோதிரம் தொடர்பாக வினா எழுப்பினார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் "பாதி இரவுவரை" அல்லது "பாதி இரவு கழியும்வரை" தாமதப்படுத்தினார்கள். பிறகு அவர்கள் வந்து "மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால்,நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருக்கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும்வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள் (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)" என்று சொன்னார்கள். (அப்போது அவர்களது விரலில் மோதிரத்தைப் பார்த்தேன்.) இப்போதும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வெள்ளி மோதிரம் மின்னுவதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது. இவ்வாறு கூறிய அனஸ் (ரலி) அவர்கள் தமது இடக் கை சுண்டுவிரலை உயர்த்திக் காட்டினார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (இஷாத் தொழுகைக்காக எதிர்)பார்த்து பாதி இரவு நெருங்கும்வரைக் காத்திருந்தோம். பிறகு அவர்கள் வந்து எங்களுக்கு (இஷாத்) தொழுவித்தார்கள். பிறகு எங்களை நோக்கித் திரும்பினார்கள். இப்போதும் நான் அவர்களுடைய கரத்தில் வெள்ளி மோதிரம் மின்னுவதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை. அத்தியாயம் :
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் என்னுடன் (யமன் நாட்டிலிருந்து) கப்பலில் வந்த என் நண்பர்களும் (மதீனா அருகிலுள்ள) "புத்ஹான்" எனும் விசாலமான பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்தார்கள். எங்களில் சிலர் முறைவைத்து ஒவ்வோர் இரவும் இஷாத் தொழுகை நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்பவர்களாக இருந்தோம். (எனது முறை வந்தபோது) நானும் என் நண்பர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்ற வேளையில் அவர்கள் ஓர் அலுவலில் ஈடுபட்டிருந்ததால் பாதி இரவு வரை இஷாத் தொழுகையைத் தாமதப் படுத்தினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுவந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் அங்கிருந்த மக்களை நோக்கி, "அப்படியே இருங்கள். உங்களுக்கு ஒன்றை நான் அறிவிக்கப்போகிறேன். நற்செய்தி பெறுங்கள். "இந்த நேரத்தில் மக்களில் உங்களைத் தவிர வேறு யாரும் தொழுதுகொண்டிருக்கவில்லை" அல்லது "இந்த நேரத்தில் உங்களைத் தவிர வேறெவரும் தொழவில்லை". (இவ்விரு வாக்கியங்களில் எதை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று நாம் அறியவில்லை.) இது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடைகளில் ஒன்றாகும்" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்ற இந்தச் செய்தியைக் கேட்டுப் பெருமகிழ்ச்சியடைந்தவர்களாக நாங்கள் திரும்பினோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல் மலிக் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், "நான் மக்களுக்கு, அவர்கள் "அல்அ(த்)தமா" என்று குறிப்பிடுகின்ற இஷாத் தொழுகையை எந்த நேரத்தில் தலைமை தாங்கித் தொழுவிப்பதை, அல்லது நான் தனியாகத் தொழுவதை நீங்கள் விரும்புவீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை நன்கு இருட்டும்வரைத் தாமதப்படுத்தினார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்த) மக்கள் உறங்குவதும் விழிப்பதும் பின்னர் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எழுந்து, "தொழுகை" என்று (சப்தமிட்டுக்) கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருக்க, தலையின் ஒரு பகுதியில் தமது கையை வைத்தபடி (தலையிலிருந்த தண்ணீரைத் துடைத்தவாறு) புறப்பட்டுவந்ததை நான் இப்போதும் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது அவர்கள் "என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்றில்லாதிருப்பின் அவர்களை இந்த நேரத்திலேயே இத்தொழுகையைத் தொழுமாறு உத்தரவிட்டிருப்பேன்" என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்: நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம் "நபி (ஸல்) அவர்கள் தமது தலையில் எவ்வாறு கையை வைத்திருந்தார்கள் என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்ததைப் போன்று கூறுங்கள்" என விளக்கம் கேட்டேன். அப்போது அதாஉ (ரஹ்) அவர்கள், தம் கை விரல்களைச் சற்று இடைவெளிவிட்டு விரித்து, விரல் நுனிகளை உச்சந்தலையில் வைத்து தலையில் அதை தடவிக்கொண்டே சென்றார்கள். இறுதியில் அவர்களது பெரு விரல் முகத்தை ஒட்டியுள்ள காதோரம், நொற்றிப்பொட்டு, தாடியின் ஓரம் ஆகியவற்றில் பட்டது. இவ்வாறு அவர்கள் தாமதியாமலும் அவசரப்படாமலும் (மிதமாகச்) செய்தார்கள். நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் அன்றைய இரவில் எவ்வளவு நேரம் தொழுகையைத் தாமதப்படுத்தியதாக உங்களிடம் கூறப்பட்டது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "எனக்குத் தெரியாது" என விடையளித்தார்கள். மேலும் அவர்கள், "நான் தலைமை தாங்கித் தொழுவித்தாலும் தனியாகத் தொழுதாலும் நபி (ஸல்) அவர்கள் அன்றிரவு இஷாத் தொழுகையைத் தொழுததைப் போன்று தாமதித்துத் தொழவே விரும்புகிறேன். நீங்கள் தனியாகத் தொழும்போதோ அல்லது மக்களுக்குத் தலைமைத் தாங்கிக் கூட்டுத் தொழுகை நடத்தும்போதோ இவ்வாறு செய்வது உங்களுக்குச் சிரமமாகத் தோன்றினால் இதற்கு இடைப்பட்ட மத்திய நேரத்தில் அதைத் தொழுது கொள்ளுங்கள். அவசரப்படவும் வேண்டாம்; தாமதிக்கவும் வேண்டாம்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையைத் தாமதப்படுத்துபவராக இருந்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் தொழுவதைப் போன்றே அனைத்துத் தொழுகைகளையும் தொழுவார்கள். ஆனால், இஷாத் தொழுகையை நீங்கள் தொழுவதை விடச் சற்று தாமதப்படுத்தியும் சுருக்கமாகவும் தொழுவார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுடைய தொழுகையின் பெயர் விஷயத்தில் உங்களைக் கிராமப்புற அரபுகள் மிகைத்துவிட வேண்டாம். நிச்சயமாக அதற்கு "இஷா" என்றே பெயர். ஆனால், கிராமவாசிகள் நன்கு இருட்டிய பிறகே ஒட்டகங்களிலிருந்து பால் கறப்பதால் (இஷா எனும் பெயரை மாற்றி) "அ(த்)தமா" (இருட்டுத் தொழுகை) என்று அழைக்கின்றனர். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கிராமப்புற அரபுகள் உங்கள் இஷாத் தொழுகையின் பெயர் விஷயத்தில் உங்களை மிகைத்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் வேதத்தில் அதற்கு இஷா என்ற பெயரே இடம் பெற்றுள்ளது. கிராமப்புற அரபியர் நன்கு இருட்டிய பிறகு ஒட்டகங்களிலிருந்து பால் கறப்பதால் அதனை "அ(த்)தமா" (இருட்டுத் தொழுகை) என்று அழைக்கின்றனர். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைநம்பிக்கையுள்ள பெண்கள் நபி (ஸல்) அவர்களுடன் சுப்ஹுத் தொழுதுவிட்டு தம் ஆடைகளால் உடல் முழுவதையும் போர்த்திக்கொண்டு திரும்பிச்செல்வார்கள். (அப்போதிருந்த இருட்டினால்) அவர்களை யாரும் அறிந்து கொள்ளமாட்டார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தம் ஆடைகளால் உடல் முழுவதையும் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் கலந்து கொள்வார்கள். பிறகு தம் இல்லங்களுக்குத் திரும்பிச்செல்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருட்டிலேயே ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவி(த்து முடி)ப்பதால் அப்பெண்கள் (யார் யாரென) அறிந்துகொள்ளப்படமாட்டார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையைத் தொழுவிப்பார்கள். அப்போது பெண்கள் தங்கள் ஆடைகளால் உடல் முழுவதையும் போர்த்திக்கொண்டு (தொழுது விட்டு) திரும்பிச்செல்வார்கள் (அப்போதிருந்த) இருட்டின் காரணத்தால் அவர்கள் (யார் யாரென) அறியப்படமாட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
முஹம்மத் பின் அம்ர் பின் அல்ஹசன் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் மதீனாவி(ன் ஆட்சிப் பொறுப்பி)ற்கு வந்தபோது, (தொழுகைகளைத் தாமதப்படுத்தலானார். அப்போது,) நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் (தொழுகை நேரம் குறித்துக்) கேட்டோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் லுஹ்ர் தொழுவார்கள். சூரியன் தெளிவாக இருக்கும்போதே அஸ்ர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மஃக்ரிப் தொழுவார்கள். இஷாவைச் சில நேரங்களில் முந்தியும் வேறு சில நேரங்களில் பிந்தியும் (சூழ்நிலைக்குத் தக்கவாறு) தொழுவார்கள். மக்கள் (முன்னேரத்திலேயே) கூடியிருப்பதைக் கண்டால் ஆரம்ப நேரத்திலேயே தொழுதுவிடுவார்கள்: மக்கள் தாமதமாக வருவதைக் கண்டால் தாமதப்படுத்துவார்கள். "மக்கள்" அல்லது "நபி (ஸல்) அவர்கள்" இருட்டிலேயே (அதிகாலை முன்னேரத்திலேயே) சுப்ஹுத் தொழுவார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "ஹஜ்ஜாஜ் தொழுகைகளைத் தாமதப்படுத்திவந்தார். ஆகவே, நாங்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம் (தொழுகை நேரம் குறித்துக்) கேட்டோம்" என ஹதீஸ் தொடங்குகிறது. அத்தியாயம் :
ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் "என் தந்தை சலாமா (ரஹ்) அவர்கள் அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை பற்றி வினவியதை நான் செவியுற்றேன்" என்று கூறினார்கள். நான் சய்யார் (ரஹ்) அவர்களிடம், "நீங்கள் அதை (நேரடியாக)ச் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நீங்கள் கூறுவதைத் தற்போது நான் செவியேற்பதைப் போன்றே செவியேற்றேன். என் தந்தை சலாமா (ரஹ்) அவர்கள் அபூபர்ஸா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை குறித்து வினவினார்கள். அதற்கு அபூபர்ஸா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை (அதாவது இஷாவை)ச் சிறிது நேரம் (அதாவது பாதி இரவுவரை) தாமதப்படுத்துவதைப் பொருட்படுத்தியதில்லை. இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப் பின் (உறங்காமல்) பேசிக் கொண்டிருப்பதையும் விரும்பியதில்லை" என்று கூறினார்கள். பிறகு (மற்றொரு முறை) நான் சய்யார் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது அவர்களிடம் வினவினேன். அப்போது அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் (நடு வானிலிருந்து மேற்கு நோக்கிச்) சாயும்போது லுஹர் தொழுவார்கள். பிறகு அஸ்ர் தொழுவார்கள். ஒருவர் (அஸ்ர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடியிலுள்ள தமது இல்லத்திற்குச் சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெளிச்சம் குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும். மஃக்ரிப் (தொழுகையின் நேரம்) குறித்து அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள்: ஆனால், அவர்கள்) கூறியதை நான் அறியவில்லை (மறந்துவிட்டேன்)" என்று கூறினார்கள். பிறகு (இன்னொரு முறை) அவர்களைச் சந்தித்து வினவியபோது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையைத் தொழுவி(த்து முடி)ப்பார்கள். அப்போது (எங்களில்) ஒருவர் (தொழுதுவிட்டுத்) திரும்புவார். அவர் தமக்கு அறிமுகமான பக்கத்திலிருப்பவரைப் பார்த்து (இன்னார் என) அறிந்துகொள்வார் (அந்த அளவிற்கு வெளிச்சம் வந்திருக்கும்). சுப்ஹுத் தொழுகையில் அறுபது முதல் நூறு வசனங்கள்வரை ஓதுவார்கள்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூபர்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையைப் பாதி இரவுவரைச் சற்றே தாமதப்படுத்துவதைப் பொருட்படுத்தியதில்லை. இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் அதற்குப் பின் பேசிக்கொண்டிருப்பதையும் விரும்பமாட்டார்கள். இதை சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் மற்றொரு முறை சய்யார் பின் சலாமா (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது "("பாதி இரவுவரை") அல்லது "இரவில் மூன்றில் ஒரு பகுதிவரை" (தாமதப்படுத்துவதைப் பொருட்படுத்தியதில்லை)" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை இரவின் மூன்றிலொரு பகுதிவரைத் தாமதப்படுத்துவார்கள். இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசிக்கொண்டிருப்பதையும் வெறுப்பார்கள். ஃபஜ்ர் தொழுகையில் அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதுவார்கள். தொழுது முடித்துத் திரும்பிச்செல்லும்போது எங்களில் ஒருவர் மற்றவரின் முகத்தை அறிந்து கொள்வார். அத்தியாயம் :
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது : என் உற்ற தோழர் (நபி-ஸல்) அவர்கள் என்னிடம் "(உங்கள் தலைவருடைய சொல்லை) செவியேற்று அதற்குக் கட்டுப்பட வேண்டும்; அவர் (கை, கால்) உறுப்புகள் துண்டிக்கப்பட்ட அடிமையாக இருந்தாலும் சரியே" என்றும்,தொழுகையை உரிய நேரத்தில் தொழ வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். "பின்னர் மக்கள் தொழுது முடித்துவிட்ட நிலையில் அவர்களை நீங்கள் அடைந்தால், (முன்பே) உங்களது தொழுகையை நீங்கள் காப்பாற்றிக் கொண்டவராவீர்கள்;அவ்வாறின்றி (அவர்களுடன் சேர்ந்து நீங்கள் மறுபடியும் தொழுதால்) அது உங்களுக்குக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக அமையும்" என்றும் கூறினார்கள். அத்தியாயம் :
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தொடையில் அடித்து, "தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்தும் மக்களிடையே நீங்கள் தங்க நேரிட்டால் உங்களது நிலை எப்படி இருக்கும்?" என்று கேட்டார்கள். "(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் எனத் தாங்கள் உத்தரவிடுகின்றீர்கள்?" என்று நான் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். பிறகு உங்களது தேவைக்காகச் செல்லுங்கள்! நீங்கள் பள்ளிவாசலில் இருக்கும்போதே தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் அப்போதும் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்!" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தையின் சகோதரர்) அபூதர் (ரலி) அவர்கள் (என்னிடம்), "தொழுகையை உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்தும் மக்களிடையே நீங்கள் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டால் "உமது நிலை எப்படி இருக்கும்?" அல்லது (பன்மையில்) "உங்களுடைய நிலை எப்படி இருக்கும்?" "என்று கேட்டுவிட்டுப் பிறகு, "அப்போது தொழுகையை உரிய நேரத்தில் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். பிறகு (கூட்டுத்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் அப்போதும் நீங்கள் மக்களுடன் (சேர்ந்து) தொழுது கொள்ளுங்கள். அது கூடுதல் நன்மையாகும்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தனியாகத் தொழும் தொழுகையைவிடக் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழும் தொழுகை, இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். அதிகாலை (ஃபஜ்ர்) தொழுகையில் இரவு நேரத்து வானவர்களும், பகல் நேரத்து வானவர்களும் ஒன்று சேர்கிறார்கள். இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், "நீங்கள் விரும்பினால், "(நபியே!) அதிகாலையில் ஓதுவதை (தொழுவதை)க் கடைப்பிடிப்பீராக! (ஏனெனில்,) அதிகாலையில் ஓதுவது (வானவர்களால்) சாட்சியம் சொல்லப்படக்கூடியதாகும்" எனும் (17:78ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. ஆனால், அவற்றில் "இருபத்தைந்து பங்கு" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூட்டுத் தொழுகையானது, தனியாகத் தொழும் இருபத்தைந்து தொழுகைகளுக்கு நிகரானதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, தனியாகத் தொழுவதைவிட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, தனியாகத் தொழுவதைவிட இருபத்தேழு மடங்கு கூடுதல் நன்மையுடையதாகும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், இப்னு நுமைர் (ரஹ்) அவர்கள் தம் தந்தை நுமைர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில் "இருபதுக்கும் மேற்பட்ட (மடங்கு நன்மையுடையதாகும்)" என்றும், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இருபத்தேழு மடங்கு (அதிக நன்மையுடையதாகும்)" என்றும் இடம்பெற்றுள்ளது. - நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: )ஜமாஅத்துடன் தொழுவது தனியாகத் தொழுவதைவிட) இருபதுக்கும் மேற்பட்ட மடங்கு கூடுதல் சிறப்புடையதாகும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களில் சிலரைச் சில தொழுகைகளில் காணாமல் தேடினார்கள். அப்போது அவர்கள் "நான் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்துவிட்டு, விறகுக் கட்டைகளைக் கொண்டுவரச் சொல்லி, (கூட்டுத்) தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று அவர்களை வீட்டோடு தீயிட்டுக் கொளுத்திவிட வேண்டும் என்று எண்ணியதுண்டு. அவர்களில் ஒருவர் சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்பு கிடைக்கும் எனத் தெரிந்தால்கூட அவர் அதில் (அதாவது இஷாத் தொழுகையில்) கட்டாயம் கலந்துகொள்வார்" என்று (இடித்துக்) கூறினார்கள். அத்தியாயம் :
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உதவியாளர்களிடம் விறகுக்கட்டைகளைச் சேகரித்து வருமாறு உத்தரவிட்டுப் பின்னர் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு கூறிவிட்டுப் பிறகு (கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத) வீட்டாரை அவர்களுடைய வீடுகளுடன் சேர்த்து எரித்துவிட வேண்டும் என நான் எண்ணியதுண்டு. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை" என்று கூறி, வீட்டிலேயே தொழுதுகொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, "தொழுகை அறிவிப்பு சப்தம் உமக்குக் கேட்கிறதா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" (கேட்கிறது) என்றார். நபி (ஸல்) அவர்கள் "அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!" (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பார்த்தவரை எங்களிடையே நயவஞ்சகர் என (வெளிப்படையாக) அறியப்பட்டவரையும் நோயாளியையும் தவிர வேறெவரும் (கூட்டுத்) தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருந்த தில்லை. நோயாளிகூட இரு மனிதர்களுக்கிடையே (தொங்கியவாறு) நடந்துவந்து தொழுகையில் சேர்ந்துவிடுவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு நேரிய வழிகளைக் கற்பித்தார்கள். தொழுகை அறிவிப்புச் செய்யப்படும் பள்ளிவாசலில் தொழுவது அத்தகைய நேர்வழிகளில் ஒன்றாகும். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: யார் நாளை (மறுமை நாளில்) முஸ்லிமாக அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் தொழுகை அறிவிப்புச் செய்யப்படும் இடங்களில் (பள்ளிவாசல்களில்) இந்தத் தொழுகைகளைப் பேணி(த் தொழுது)வரட்டும். ஏனெனில்,அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நேரிய வழிகளைக் காட்டியுள்ளான். (கூட்டுத்) தொழுகைகள் நேரிய வழிகளில் உள்ளவையாகும். கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் தமது வீட்டிலேயே தொழுதுகொள்ளும் இன்ன மனிதரைப் போன்று நீங்களும் உங்கள் வீடுகளிலேயே தொழுதுவருவீர்களானால் நீங்கள் உங்கள் நபியின் வழிமுறைகளைக் கைவிட்டவர் ஆவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டால் நிச்சயம் நீங்கள் வழிதவறிவிடுவீர்கள். யார் "அங்கத் தூய்மை" (உளூ) செய்து அதைச் செம்மையாகவும் செய்து பின்னர் இப்பள்ளிவாசல்களில் ஒன்றை நோக்கி வருகிறாரோ அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்;அவருக்கு ஒரு தகுதியை உயர்த்துகிறான்; அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னித்துவிடுகிறான். நான் பார்த்தவரை எங்களிடையே நயவஞ்சகம் அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர வேறெவரும் கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. (எங்களில் நோயாளியான) ஒரு மனிதர் இரு மனிதருக்கிடையே தொங்கியவாறு அழைத்துவரப்பட்டு (கூட்டுத்) தொழுகையில் நிறுத்தப்பட்டதுண்டு. அத்தியாயம் :
அப்துர் ரஹ்மான் பின் அபீஅம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலுக்கு வந்து தனியாக அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் சென்று நானும் அமர்ந்தேன். அப்போது அவர்கள், "என் சகோதரரின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், பாதி இரவுவரை நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார். சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், இரவு முழுதும் நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
பத்ருப் போரில் கலந்துகொண்ட அன்சாரி நபித்தோழர்களில் ஒருவரான இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நான் என் (பனூசாலிம்) சமூகத்தாருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கின்றேன். நான் கண் பார்வையை இழந்துவருகிறேன். மழை வந்தால் எனக்கும் (என் சமூகத்தாரான) அவர்களுக்குமிடையே உள்ள பள்ளத்தாக்கில் வெள்ளநீர் வழிந்தோடும். இந்நிலையில் அவர்களுடைய பள்ளிவாசலுக்குச் சென்று அவர்களுக்கு என்னால் தொழவைக்க இயலவில்லை. ஆகவே,அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் வந்து (எனது வீட்டில்) ஓரிடத்தில் தொழுகை நடத்த வேண்டுமென்றும், (தாங்கள் நின்று தொழும்) அந்த இடத்தை நான் (என்) தொழுமிடமாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றும் விரும்புகிறேன்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நான் (அவ்வாறே) செய்வேன்" என்று சொன்னார்கள். தொடர்ந்து இத்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மறுநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களும் நண்பகல் நேரத்தில் என்னிடம் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் இல்லத்தினுள் நுழைய) அனுமதி கேட்டார்கள். நான் அனுமதியளித்தேன். உள்ளே வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடனே உட்காரவில்லை. பிறகு என்னிடம் "(இத்பான்!) உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழவேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நான் வீட்டின் ஒரு மூலையைக் காட்டினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த இடத்தில்) நின்று "தக்பீர் (தஹ்ரீம்)" சொன்னார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னே (அணிவகுத்து) நின்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுது, சலாம் கொடுத்தார்கள். நாங்கள் அவர்களுக்காகச் சமைத்திருந்த "கஸீர்" எனும் (கஞ்சி) உணவி(னை விருந்தளிப்பத)ற்காக அவர்களை நாங்கள் இருக்கவைத்தோம். )அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்ட) அந்தப் பகுதி மக்கள் எங்களைச் சுற்றிக் குழுமிவிட்டனர். கணிசமான பேர் (சிறுகச் சிறுக) வந்து (என்) வீட்டில் திரண்டுவிட்டனர். அவர்களில் ஒருவர், "மாலிக் பின் துக்ஷுன் எங்கே?" என்று கேட்டார். அதற்கு அவர்களில் மற்றொருவர், "அவர் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் நேசிக்காத ஒரு நயவஞ்சகர் (அதனால்தான் அல்லாஹ்வின் தூதரைச் சந்திக்க அவர் வரவில்லை)" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரைப் பற்றி அவ்வாறு சொல்லாதீர்கள். அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக அவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நன்கு அறிந்தவர்கள்" என்று கூறினார்கள். அ(வ்வாறு நயவஞ்சகர் என விமரிசித்த)வர், "(அல்லாஹ்வின் தூதரே!) அவர் (மாலிக் பின் துக்ஷுன்) நயவஞ்சகர்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும் அவர்கள்மீது அபிமானம் கொண்டிருப்பதையுமே நாங்கள் காண்கிறோம்" என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் திருப்தியை நாடி "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று சொன்னவரை நரகத்திலிருந்து அல்லாஹ் தடுத்து (ஹராமாக்கி)விட்டான்" என்று கூறினார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: பனூசாலிம் குலத்தைச் சேர்ந்தவரும் அவர்களில் முக்கியப் பிரமுகருமான ஹுஸைன் பின் முஹம்மத் அல்அன்சாரி (ரஹ்) அவர்களிடம் மஹ்மூத் பின் அர்ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அவர்கள் அதை "உண்மைதான்" என உறுதிப்படுத்தினார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "(அம்மக்களில்) ஒருவர் "மாலிக் பின் "துக்ஷுன்" அல்லது "துகைஷின்" எங்கே?" என்று கேட்டார்" என்று இடம்பெற்றுள்ளது. மேலும், அறிவிப்பாளர் மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாகவும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது: நான் இந்த ஹதீஸைச் சிலரிடம் அறிவித்த போது அவர்களிடையே அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்கள், "நீங்கள் சொன்னதைப் போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்று நான் எண்ணுகிறேன்" என்றார்கள். உடனே நான் "இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் திரும்பச் சென்றால் அவர்களிடம் இது குறித்து (மீண்டும்) கேட்பேன்" என்று சத்தியம் செய்தேன். அவ்வாறே நான் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றேன். இத்பான் (ரலி) அவர்கள் பார்வையை இழந்த முதியவராக இருந்தார்கள்; தம் சமூகத்தாருக்கு இமாமாக (தொழுகை நடத்துபவராக) இருந்தார்கள். அவர்களுக்கு அருகில் நான் அமர்ந்து இந்த ஹதீஸ் தொடர்பாகக் கேட்டேன். அப்போது அவர்கள் முன்பு அறிவித்ததைப் போன்றே எனக்கு அறிவித்தார்கள். இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே கடமைகளும் இன்ன பிற விதிகளும் அருளப்பெற்றன. இவை அருளப்பெற்றதோடு இந்த விஷயம் முற்றுப்பெற்றுவிட்டது. எனவே, ஏமாந்துவிடாமலிருக்க முடிந்தவர் ஏமாந்துவிடாதிருக்கட்டும். அத்தியாயம் :
மஹ்மூத் பின் அர்ரபீஉ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: )நான் சிறுவனாக இருந்தபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருந்த (கிணறு ஒன்றிலிருந்து) வாளியில் (தண்ணீர் எடுத்துத் தமது வாயில் ஊற்றி என் முகத்தில்) ஒரு முறை (செல்லமாக) உமிழ்ந்ததை நான் (இப்போதும்) நினைவில் வைத்திருக்கிறேன். என்னிடம் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நான் "அல்லாஹ்வின் தூதரே! என் பார்வை கெட்டுவிட்டது..." என்று தொடங்கி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தயாரித்திருந்த கோதுமை மாவுக் கஞ்சி(யை அவர்கள் பருக வேண்டும் என்ற ஆசை)க்காக அவர்களை இருக்கவைத்தோம்" என்று ஹதீஸ் முடிகிறது. அதற்குப் பின்புள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் (தாய் வழிப்)பாட்டி முலைக்கா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உணவு தயாரித்து (விருந்துண்ண) அவர்களை அழைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வந்து) அதில் சிறிதளவைச் சாப்பிட்டுவிட்டுப் பிறகு, "எழுங்கள், உங்களுக்காக நான் (நஃபில் தொழுகை) தொழுவிக்கிறேன்" என்று கூறினார்கள். நான் எங்கள் பாயொன்றை (எடுப்பதற்காக அதை) நோக்கி எழுந்தேன்; அதுவோ நீண்ட நாட்கள் விரிக்கப்பட்டிருந்ததால் கறுப்பாகிவிட்டிருந்தது. ஆகவே, அதில் நான் தண்ணீர் தெளித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகைக்காக) அதில் நின்றார்கள். உடனே நானும் ஓர் அநாதைச் சிறுவரும் (ளுமைர் பின் சஅத்) அவர்களுக்குப் பின்னால் அணியில் நின்றோம். அந்த மூதாட்டி (உம்மு சுலைம்) எங்களுக்குப் பின்னால் நின்றுகொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்து விட்டுத் திரும்பிச்சென்றார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும்போது சில வேளைகளில் தொழுகை(யின் நேரம்) வந்துவிடும். உடனே, தாம் அமரும் விரிப்பைச் சுத்தம் செய்திடுமாறு பணிப்பார்கள். அவ்வாறே அது பெருக்கி(த் துடைத்து)ச் சுத்தம் செய்யப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முன்னே நிற்க, நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவிப்பார்கள். (அன்று) மக்களுடைய விரிப்பு பேரீச்ச மட்டையால் செய்யப்பட்டதாகவே இருந்தது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: )ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். அப்போது (வீட்டில்) நான், என் தாயார் மற்றும் என் சிறிய தாயார் உம்முஹராம் (ரலி) ஆகியோர் மட்டுமே இருந்தோம். நபி (ஸல்) அவர்கள், "எழுங்கள்! உங்களுக்காக நான் (நஃபில்) தொழுவிக்கப் போகிறேன்" என்று கூறிவிட்டு எங்களுக்கு (தலைமை தாங்கித்) தொழுவித்தார்கள். (அது கடமையான தொழுகையின் நேரமல்ல.( -இதன் அறிவிப்பாளரான ஸாபித் (ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர், "நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களைத் தமக்கு (அருகில்) எந்தப் பக்கத்தில் நிறுத்தினார்கள்?" என்று கேட்டார். அதற்கு ஸாபித் (ரஹ்) அவர்கள் "நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களைத் தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள்" என்று பதிலளித்தார்கள்.- பின்னர், நபி (ஸல்) அவர்கள் எங்கள் குடும்பத்தாருக்காக எல்லா விதமான இம்மை மறுமை நன்மை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அப்போது என் தாயார், "அல்லாஹ்வின் தூதரே! (அனஸ்,) உங்களுடைய சிறு சேவகர். அவருக்காக நீங்கள் பிரார்த்தியுங்கள்!" என்றார். நபி (ஸல்) அவர்கள் "எனக்கு எல்லா விதமான நன்மையும் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். அவர்கள் எனக்காகச் செய்த பிரார்த்தனையின் இறுதியில், "இறைவா! அனஸுக்குச் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக! அதில் அவருக்கு வளம் பாலிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கும் என் தாயாருக்கும், அல்லது என் சிறிய தாயாருக்கும் (தலைமை தாங்கித்) தொழுகை நடத்தினார்கள். அப்போது என்னைத் தமக்கு வலப் பக்கத்திலும் பெண்ணை எங்களுக்குப் பின்னாலும் நிறுத்தினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத்தெருவில் தொழுவதைவிடவும் அவர் ஜமாஅத்துடன் தொழுவது இருபதுக்கும் மேற்பட்ட மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதைச் செம்மையாகவும் செய்து, தொழ வேண்டும் என்ற ஆர்வத்தில், தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்குள் நுழையும்வரை அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் ஒரு தகுதி அவருக்கு உயர்த்தப்படுகிறது; ஒரு தவறு அவருக்காக மன்னிக்கப்படுகிறது. அவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்துவிட்டால், தொழுகையை எதிர்பார்த்து அவர் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும்வரை அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். உங்களில் ஒருவர் தாம் தொழுத இடத்திலேயே வீற்றிருக்கும்வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறார்கள். "இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக! இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவரது பாவமன்னிப்பை ஏற்பாயாக!" என்று அவர்கள் கூறுகின்றனர். அவர் சிறு துடக்கின் மூலம் தொல்லை தராதவரை (இது நீடிக்கும்(. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அடியார் தொழுகையை எதிர்பார்த்துத் தொழுமிடத்தில் வீற்றிருக்கும்வரை அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுகிறார். அப்போது வானவர்கள், "இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்குக் கருணை புரிவாயாக!" என்று பிரார்த்திக்கின்றனர். அவர் திரும்பிச் செல்லும்வரை அல்லது அவருக்குச் சிறு துடக்கு ஏற்படும்வரை (இது நீடிக்கும்.( இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் "சிறு துடக்கு எது?" என்று கேட்டேன். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் "சப்தமின்றியோ அல்லது சப்தத்துடனோ காற்று பிரிவதாகும்" என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களில் தொழுகைக்காக அதிக நன்மை பெறுகின்றவர் (யாரெனில்), (தொழுகைக்காக) வெகுதொலைவிலிருந்து நடந்துவருபவர் ஆவார். அடுத்து அதற்கடுத்த தொலை தூரத்திலிருந்து வருபவர் ஆவார். யார் இமாமுடன் தொழக்காத்திருக்கிறாரோ அவர், (தனியாகத்) தொழுதுவிட்டு உறங்கிவிடுபவரைவிட அதிக நன்மை அடைபவராவார். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இமாமுடன் ஜமாஅத்தாகத் தொழக்காத்திருக்கிறாரோ" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்கள் குடியிருப்புகள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குத் தொலைவில் அமைந்திருந்தன. ஆகவே, நாங்கள் எங்கள் வீடுகளை விற்றுவிட்டுப் பள்ளிவாசலுக்கு அருகில் குடியேற விரும்பினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், "உங்களது ஒவ்வொரு காலடிக்கும் உங்களுக்கு ஒரு தகுதி உண்டு" என்று கூறினார்கள். அத்தியாயம் :
மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: )பனூலைஸ் தூதுக் குழுவில்) ஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருணை உள்ளம் கொண்டவராகவும் இளகிய மனம் படைத்தவராகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் (திரும்பிச்) செல்ல ஆசைப்படுகிறோம் என எண்ணிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஊரில்) நாங்கள் விட்டுவந்த எங்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரிவித்தோம். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச்சென்று அவர்களிடையே தங்கியிருந்து அவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுங்கள். (கடமைகளை நிறைவேற்றும்படி) அவர்களைப் பணியுங்கள். தொழுகை (நேரம்) வந்ததும் உங்களில் ஒருவர் தொழுகை அறிவிப்புச் செய்யட்டும்; பிறகு உங்களில் (வயதில்) மூத்தவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்" என்றார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மாலிக் பின் அல் ஹுவைரிஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நான் (என் குலத்தார்) சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நாங்கள் ஒத்த வயதுடைய இளைஞர்களாய் இருந்தோம்" என்று மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் (குர்ஆன்) ஓதிய பின் தக்பீர் சொல்(லி ருகூஉ செய்)வார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்போது "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) "ரப்பனா வ லக்கல் ஹம்து" (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று கூறுவார்கள். பிறகு நின்றவாறு (பின்வரும் "குனூத்"தை) ஓதுவார்கள்: இறைவா! வலீத் பின் அல்வலீத், சலமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபீஆ ஆகியோரையும் (மக்காவிலுள்ள) ஒடுக்கப்பட்ட இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக! இறைவா, (கடும் பகை கொண்ட) முளர் குலத்தார்மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏற்படுத்துவாயாக! இறைவா! லிஹ்யான், ரிஅல், தக்வான், உஸய்யா ஆகிய குலத்தாரை நீ உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக! உஸய்யா குலத்தார் (பெயருக்கேற்ப) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர். பிறகு "அவர்களை அல்லாஹ் மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை" எனும் (3:128ஆவது) இறைவசனம் அருளப்பெற்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டார்கள் என நமக்குச் செய்தி எட்டியது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "(நபி) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!" என்பதுவரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "குனூத் (எனும் சோதனைக் காலப் பிரார்த்தனை நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ருகூஉக்கு முன்பா அல்லது அதற்குப் பின்பா (எப்போது ஓதப்பட்டது)?" என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் "ருகூஉக்கு முன்புதான்" என்று பதிலளித்தர்கள். நான் "ருகூஉக்குப் பின்னர்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குனூத் ஓதினார்கள் என்று சிலர் கூறுகின்றனரே?" என்று கேட்டேன் அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம்தான் (ருகூஉவிற்குப் பிறகு) குனூத் ஓதினார்கள். அதில் குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) என்றழைக்கப்பட்ட தம் தோழர்களை (பிஃரு மஊனா எனுமிடத்தில்) கொன்ற மக்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
குஃபாஃப் பின் ஈமா அல் ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையில் "இறைவா! பனூ லிஹ்யான், ரிஅல், தக்வான் மற்றும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்ட உஸய்யா ஆகிய குலத்தாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். "ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பானாக;அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் பாதுகாப்பானாக!" என்றும் பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
குஃபாஃப் பின் ஈமா அல் ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பிறகு "ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பானாக! அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் பாதுகாப்பானாக! உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர். இறைவா! பனூ லிஹ்யான் குலத்தாரை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக! ரிஅல் மற்றும் தக்வான் குலத்தாரையும் நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். பிறகு சஜ்தாவிற்குச் சென்றார்கள். (கொடுஞ்செயல் புரியும்) இறைமறுப்பாளர்களைச் சபிக்கும் நடைமுறை இதை முன்னிட்டே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "இறைமறுப்பாளர்களைச் சபிக்கும் நடைமுறை இதை முன்னிட்டே ஏற்படுத்தப்பட்டது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பியபோது இரவு முழுவதும் பயணம் செய்தார்கள். இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்துவிடவே (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம் "இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக!" என்றார்கள். பிலால் (ரலி) அவர்கள் (கண் விழித்து) அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அளவு தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (படுத்து) உறங்கினார்கள். வைகறை நேரம் (ஃபஜ்ர்) நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) அவர்கள் வைகறை (கிழக்கு)த் திசையை முன்னோக்கியபடி தமது வாகன (ஒட்டக)த்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். அப்போது தம்மையும் அறியாமல் சாய்ந்தபடியே கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, பிலால் (ரலி) அவர்களோ, நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும்வரை விழிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் முதலில் கண் விழித்தார்கள். பதறியபடியே அவர்கள் "பிலால்!" என்றழைத்தார்கள். பிலால் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களைத் தழுவிக்கொண்ட அதே (உறக்கம்)தான் என்னையும் தழுவிக்கொண்டது" என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) "உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள்" என்று கூற, உடனே மக்கள் தம் வாகனங்களைச் செலுத்தி சிறிது தூரம் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறங்கி) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிலால் (ரலி) அவர்களிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லச் சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். தொழுது முடிந்ததும், "தொழுகையை மறந்துவிட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுதுகொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ், "என்னை நினைவுகூரும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக!" (20:14) என்று கூறுகின்றான்" என்றார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யூனுஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: )மேற்கண்ட 20:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள "லி திக்ரீ" எனும் சொற்றொடரை) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் "லித்திக்ரா" (நினைவுகூருவதற்காக) என்று ஓதுவார்கள். அத்தியாயம் :
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்தால் இரவின் இறுதிப்பகுதியில் ஓய்வெடுப்பார்கள். அப்போது தமது வலப் பக்கத்தில் சாய்ந்து படுப்பார்கள். அதிகாலைக்குச் சற்று முன்பாக ஓய்வெடுத்தால் தமது காலை நட்டு வைத்து தம் உள்ளங்கைகள் மீது தலையை வை(த்து மல்லாந்து படுத்திரு)ப்பார்கள். அத்தியாயம் :