30 - தீர்ப்பு புத்தகம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களின் வாதத்தை மட்டும் வைத்து அவர்களுக்கு (சாதகமாகத் தீர்ப்பு) அளிக்கப்பட்டால், மக்களில் சிலர் வேறுசிலருடைய உயிர்களையும் உடைமைகளையும் (பலி கொள்ள வேண்டுமென) கோருவார்கள். ஆயினும்,பிரதிவாதி (தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுத்தால்) சத்தியம் செய்வது கடமையாகும். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவி) உம்மு சலமா (ரலி) அவர்களது அறையின் வாசலில் சிலர் கூச்சலிட்டுத் தகராறு செய்து கொள்வதைச் செவியுற்றார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் துணைவியார் ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என் மகன்களுக்கும் போதுமான (பணத்)தை அவர் என்னிடம் தருவதில்லை. நான் அவருக்குத் தெரியாமல் அவரது செல்வத்திலிருந்து எடுத்துக்கொள்வதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்). அவ்வாறெனில்,அ(வருக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்வ)தனால் என்மீது குற்றமேதும் உண்டா?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருடைய செல்வத்திலிருந்து உனக்கும் உன் மகன்களுக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு எடுத்துக்கொள் (அதனால் உன்மீது குற்றமேதுமில்லை)" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹிந்த் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த பூமியின் மேலுள்ள வீட்டார்களிலிலேயே உங்களுடைய வீட்டாரை இறைவன் இழிவடையச் செய்வதே (அன்று) எனக்கு விருப்பமானதாக இருந்தது. இந்த பூமியின் மேலுள்ள வீட்டார்களில் உங்கள் வீட்டாரை இறைவன் மேன்மையடையச் செய்வதே (இன்று) எனக்கு விருப்பமானதாய் இருக்கிறது" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏக இறை)வன்மீது சத்தியமாக! உனது இந்த விருப்பம் மேன்மேலும் அதிகரிக்கும்" என்று கூறினார்கள். பிறகு ஹிந்த் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான மனிதர் ஆவார். அவருக்குரிய செல்வத்திலிருந்து அவரது அனுமதியில்லாமல் (எடுத்து) என் பிள்ளைகளுக்குச் செலவழித்தால், அது என்மீது குற்றமாகுமா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "நியாயமான அளவுக்கு எடுத்து அவர்களுக்குச் செலவழிப்பதால் உன்மீது குற்றமில்லை" என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: (ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா பின் ரபீஆ (ரலி) அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) இப்பூமியின் மேலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும்விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்துவந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்ற பிறகு) இன்று இப்பூமியின் மேலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் அடைவதையும்விட உங்கள் வீட்டார் கண்ணியம் அடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக மாறிவிட்டது" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏக இறை)வன் மீதாணையாக! உனது இந்த விருப்பம் மேன்மேலும் அதிகரிக்கும்" என்று கூறினார்கள். பிறகு ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான மனிதர். அவருக்குரிய (செல்வத்)திலிருந்து (அவருக்குத் தெரியாமல்) எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என்மீது குற்றமாகுமா?" என்று கேட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(குற்றம்) இல்லை;நியாயமான அளவுக்கு எடுத்தால்" என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை விரும்புகின்றான்; உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுக்கின்றான். 1,2. அல்லாஹ் ஒருவனையே வணங்குவதையும் அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையும் விரும்புகின்றான். 3. நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடிப்பதையும் பிரிந்துவிடாமலிருப்பதையும் விரும்புகின்றான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமில்லாததை)ப் பேசுவதையும், (தேவையின்றி) அதிகமாகக் கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் அவன் வெறுக்கின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தர் (வர்ராத் (ரஹ்) அவர்கள்) கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற (ஹதீஸ்) ஒன்றை எனக்கு எழுதி அனுப்புங்கள்" என முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதற்கு முஃகீரா (ரலி) அவர்கள், "அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை வெறுத்துள்ளான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமில்லாததை)ப் பேசுவது, செல்வங்களை வீணாக்குவது, (தேவையின்றி) அதிகமாகக் கேள்விகள் கேட்பது ஆகியவையே அவை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்று பதில் எழுதினார்கள். அத்தியாயம் :
வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "சலாமுன் அலைக்க (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்); இறைவாழ்த்துக்குப் பின்! அல்லாஹ் மூன்று விஷயங்களைத் தடை செய்துள்ளான்; மூன்றை (வெறுத்து) விலக்கியுள்ளான். பெற்றோரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது, (அடுத்தவருக்குரியதை) தருமாறு கேட்பது ஆகியவற்றைத் தடை செய்துள்ளான். (இவ்வாறு) சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஊர்ஜிதமற்றதை)ப் பேசுவதையும், (தேவையின்றி) அதிகமாகக் கேள்வி கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் (வெறுத்து) விலக்கியுள்ளான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என முஃகீரா (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களுக்கு (பதில்) எழுதினார்கள். அத்தியாயம் :
அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் (தம் புதல்வரும் என் சகோதரருமான) உபைதுல்லாஹ் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். (அதை நானே எழுதிக் கொடுத்தேன்) -அப்போது அவர் (ஈரான் -ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்த) "சிஜிஸ்தான்" பகுதியில் நீதிபதியாக இருந்தார்.- அந்தக் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்: (மகனே!) நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்காதே. ஏனெனில், "கோபமாக இருக்கும்போது, இருவரிடையே யாரும் தீர்ப்பளிக்கவேண்டாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
சஅத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களிடம் "ஒருவருக்கு மூன்று வீடுகள் இருந்தன. அவர் அவற்றில் ஒவ்வொன்றிலும் மூன்றில் ஒரு பாகத்தைத் தர்மம் செய்வதாக இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்து விட்டார்"என்று கூறி (விளக்கம் கோரி)னேன். அதற்குக் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள், "அதை அனைத்தையும் சேர்த்து ஒரே வீட்டில் கணக்கிட்டு இறுதி விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும்"என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில்) ஒரு மனிதர் மற்றொரு மனிதரிடமிருந்து அவருக்குச் சொந்தமான நிலம் ஒன்றை விலைக்கு வாங்கினார். நிலத்தை வாங்கிய அந்த மனிதர் தமது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் நிலத்தை விற்றவரிடம், "என்னிடமிருந்து உன் தங்கத்தை வாங்கிக்கொள். உன்னிடமிருந்து நான் நிலத்தைத்தான் விலைக்கு வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்க வில்லை" என்று கூறினார். நிலத்தை விற்றவரோ, "நிலத்தையும் அதில் உள்ளவற்றையும் சேர்த்துத்தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்கு உரியதே)" என்று கூறினார். (இருவருக்குமிடையே தகராறு முற்றி) மற்றொரு மனிதரிடம் வழக்கைக் கொண்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டுச் சென்ற அந்த மனிதர், "உங்கள் இருவருக்கும் பிள்ளைகள் இருக்கின்றனரா?" என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், "எனக்கு மகன் ஒருவன் இருக்கிறான்" என்று சொன்னார். மற்றொருவர், "எனக்கு மகள் ஒருத்தி இருக்கிறாள்" என்று சொன்னார். தீர்ப்புச் சொன்னவர், "அந்தப் பையனுக்கு அந்தப் பெண்ணை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள். தர்மமும் செய்யுங்கள்" என்று தீர்ப்பளித்தார். அத்தியாயம் :