அனைத்து இஸ்லாம் நூலகம்

95 - நேர்மையானவரின் செய்தி ஏற்றல்

1

மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் இருபது நாட்கள் தங்கினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மென்மையானவர்களாக இருந்தார்கள். நாங்கள் எங்கள் வீட்டாரிடம் செல்ல ஆசைப்படுவதாக அவர்கள் எண்ணியபோது, நாங்கள் எங்களுக்குப் பின்னே விட்டுவந்தவர்களை (எங்கள் மனைவி மக்களை)ப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களுக்கு விவரித்தோம். நபி (ஸல்) அவர்கள், “உங்கள் வீட்டாரிடம் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; அவர்களிடையே தங்கி அவர்களுக்கு (மார்க்கத்தை)க் கற்பியுங்கள். அவர்களுக்கு (கடமைகளை நிறைவேற்றும்படியும் விலக்கப்பட்டவற்றைத் தவிர்க்கும்படியும்) கட்டளையிடுங்கள்” என்று சொன்னார்கள். மேலும், “என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். தொழுகை நேரம் வந்துவிட்டால் உங்களில் ஒருவர் உங்களுக்குத் தொழுகை அறிவிப்பு (பாங்கு) கொடுக்கட்டும்; உங்களில் பெரியவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று சொன்னார் கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் பல விஷயங்களைக் கூறினார்கள். அவற்றில் சிலவற்றை நான் நினைவில் வைத்துள் ளேன். சிலவற்றை நினைவில் வைக்க வில்லை.4 அத்தியாயம் :

2

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (நோன்பின்போது) சஹ்ர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், இரவில் அவர் ‘தொழுகை அறிவிப்புச் செய்வது’ அல்லது ‘அவர் அழைப்பது’ உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டிருப்போர் திரும்புவதற்காகவும் உறங்குவோருக்கு விழிப்பூட்டுவதற்காகவும்தான். ஃபஜ்ர் (நேரம்) என்பது இவ்வாறு (அகலவாட்டில் அடிவானில் மட்டும்) தென்படும் வெளிச்சமன்று. (நீளவாட்டில் எல்லாத் திசைகளிலும் பரவிவரும் வெளிச்சமே ஃபஜ்ருக்கு அடையாளமாகும்.) அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்கள் தம் இரு கைகளையும் ஒன்றுசேர்த்து, இவ்வாறு வெளிப்படுத்தி, தம் இரு சுட்டுவிரல்களையும் நீட்டிக்காட்டினார்கள்.5 அத்தியாயம் :

3

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிலால் (ரமளான் மாதத்தின்) இரவில் (முன்னறிவிப்புக்காகப் பாங்கு) அழைப்புக் கொடுப்பார். ஆகவே, அப்துல்லாஹ் பின் உம்மி மக்த்தூம் (ஃபஜ்ர் தொழுகைக்கு) அழைக்கின்ற வரை உண்ணுங்கள்; பருகுங்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6 அத்தியாயம் :

4

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை எங்களுக்கு ஐந்து ரக்அத் களாகத் தொழுவித்தார்கள். அப்போது அவர்களிடம், “தொழுகையின் (ரக்அத்) அதிகரிக்கப்பட்டுவிட்டதா?” என்று கேட் கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று (வியப்புடன்) கேட்டார்கள். மக்கள், “ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டீர் களே?” என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (மறதிக்குரிய) சிரவணக்கங்கள் (சஜ்தா சஹ்வு) இருமுறை செய்தார்கள். (இது தொழுகைக்கான) ‘சலாம்’ கொடுத்தபிறகு (நடந்தது).7 அத்தியாயம் :

5

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (லுஹ்ர் அல்லது அஸ்ர் தொழுகையில்) இரண்டு ரக்அத்கள் தொழுதவுடன் (சலாம் கொடுத்துத்) திரும்பிவிட்டார்கள். உடனே துல்யதைன் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தொழுகையின் ரக்அத் குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது நீங்கள்தான் மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), ‘துல்யதைன் கூறுவது உண்மையா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்” என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தார்கள். பிறகு, “அல்லாஹு அக்பர்” என்று சொல்லி தமது (வழக்கமான) சஜ்தாவைப் போன்று அல்லது அதைவிட நீளமாக சஜ்தா செய்தார்கள். பிறகு தலையை உயர்த்திப் பின்னர் “அல்லாஹு அக்பர்” என்று சொன்னார்கள். பின்னர் தமது (வழக்கமான) சஜ்தாவைப் போன்று சஜ்தா செய்துவிட்டு பிறகு தலையை உயர்த்தினார்கள்.8 அத்தியாயம் :

6

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் ‘குபா’ எனுமிடத்தில் தொழுகையில் இருந்தபோது ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (மக்காவிலுள்ள இறையில்லம்) கஅபாவை (தொழுகையில்) முன்னோக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, (மக்களே!) கஅபாவையே நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள்” என்று சொன்னார். அப்போது மக்களின் முகம் (மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருந்த) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் அப்படியே சுற்றி கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள்.9 அத்தியாயம் :

7

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது பைத்துல் மக்திஸ் (நகரிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா இறையில்லத்தை) நோக்கி பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் தொழுதார்கள். (தொழுகையில்) கஅபாவை நோக்கி முகம் திருப்புவதையே அவர்கள் விரும்பிவந்தார்கள். ஆகவே, உயர்ந்தோன் அல்லாஹ் “(நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம்; எனவே, நீர் விரும்பும் கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் (இதோ) உம்மைத் திடமாக திருப்பிவிடுகிறோம்” எனும் (2:144 ஆவது) வசனத்தை அருளினான். இவ்விதம் (தொழுகையிலிருந்தபோதே) கஅபாவை நோக்கி முகம் திருப்பப்பட்டார்கள். அந்த அஸ்ர் தொழுகையில் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு மனிதர் தொழுதார். அவர் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறி அன்சாரிகளில் ஒரு குழுவினரைக் கடந்து சென்றபோது, “நபி (ஸல்) அவர்களுடன் தாம் தொழுததாகவும், (தொழுகையிலேயே) அவர்கள் முகம் கஅபாவை நோக்கித் திருப்பப்பட்டதாகவும் தாம் சாட்சியம் அளிப்பதாகச் சொன்னார். உடனே அம்மக்கள் அஸ்ர் தொழுகையில் ருகூஉ செய்துகொண்டிருந்த நிலையில் அப்படியே கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள்.10 அத்தியாயம் :

8

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அபூதல்ஹா அல்அன்சாரி (ரலி), அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கு பேரீச்சங்காய்களால் தயாரித்த மதுவை ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அது பேரீச்சங்கனியாலும் தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போது ஒருவர் வந்து, “மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று சொன்னார். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள், “அனஸே! எழுந்து சென்று இந்த மண் பாத்திரங்களை உடைத்தெறியும்” என்று சொன்னார்கள். நான் எழுந்து சென்று (மது ஊற்றிவைக்கும்) எங்களது சாடியொன்றை எடுத்து அதன் அடிப் பாகத்தில் அடித்தேன். அது உடைந்தது.11 அத்தியாயம் :

9

ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நஜ்ரான்வாசிகளி டம், “நம்பகத் தன்மையில் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரை நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன்” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட நபித்தோழர்கள் (ஒவ் வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூஉபைதா (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள்.12 அத்தியாயம் :

10

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் (அவர்களின்) நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ஒருவர் உண்டு. (எனது) இந்தச் சமுதாயத்தாரின் நம்பிக்கைக்குரியவர் அபூஉபைதா ஆவார். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.13 அத்தியாயம் :

11

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் (எனக்கு) ஒருவர் (நண்பராக) இருந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் இல்லாதபோது, நான் அங்கு செல்வேன்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் செய்திகளை(ச் சேகரித்து) அவரிடம் கொண்டுசெல்வேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இல்லாதபோது அவர் (அங்கு) செல்வார்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கிடைக்கும் செய்திகளை அவர் என்னிடம் கொண்டு வருவார்.14 அத்தியாயம் :

12

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப் பிரிவை அனுப்பி அவர்களுக்கு (அன்சாரிகளில்) ஒருவரைத் தளபதியாக்கினார்கள். அவர் (ஒரு கட்டத்தில் படைவீரர்கள்மீது கோபம்கொண்டு) நெருப்பை மூட்டி, “இதில் நுழையுங்கள்” என்று சொன்னார். அவர்கள் அதில் நுழைய முனைந்தார்கள். (படையிலிருந்த) மற்றவர்கள், “நாம் இந்த (நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே (இஸ்லாத்திற்கு) வந்தோம்” என்று கூறினர். ஆகவே, இதை அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நெருப்பில் புக முனைந்தோர் குறித்து, “அவர்கள் அதில் புகுந்திருந்தால் மறுமை நாள்வரை அதிலேயே இருந்திருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். மற்றவர்களிடம், “அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் கீழ்ப் படிதல் கிடையாது; கீழ்ப்படிதல் என்ப தெல்லாம் நன்மையில்தான்” என்று சொன்னார்கள்.15 அத்தியாயம் :

13

உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் இரண்டு பேர் ஒரு வழக்கைக் கொண்டுவந்ததாக அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஸைத் பின் காலித் (ரலி) அவர்களும் என்னிடம் தெரிவித்தார்கள்.16 அத்தியாயம் :

14

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தபோது கிராமவாசிகளில் ஒருவர் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் சட்டப்படி எனக்குத் தீர்ப்பளியுங்கள்” என்று சொன்னார். உடனே அவருடைய எதிரி (பிரதிவாதி) எழுந்து, “இவர் சொல்வது உண்மையே; அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் சட்டப்படியே அவருக்குத் தீர்ப்பளியுங்கள். எனக்கு (என் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்ல) அனுமதியளியுங்கள்” என்று சொன்னார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “சரி சொல்” என்றார்கள். (இதற்கிடையில் அந்தக் கிராமவாசி,) “என் மகன் இவரிடம் கூலிக்கு வேலை செய்துவந்தான். இவருடைய மனைவியுடன் அவன் விபசாரம் புரிந்துவிட்டான். அப்போது மக்கள் என் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு என என்னிடம் தெரிவித்தனர். ஆகவே, நான் அதற்குப் பதிலாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணை யும் ஈடாக வழங்கினேன். பிறகு அறிஞர் களிடம் கேட்டேன். அவர்கள், இவருடைய மனைவியைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்றும், என் மகனுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டு நாடு கடத்தலும்தான் (தண்டனை) என்றும் தெரிவித்தார்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் உங்கள் இருவரிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளிக்கி றேன்: “அடிமைப் பெண்ணையும் ஆடுகளையும் திருப்பிக் கொடுத்து விடுங்கள். உம் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு நாடுகடத்தும் தண்டனையும் வழங்கப்பட வேண்டும்” என்று கூறிவிட்டு, அஸ்லம் குலத்து மனிதர் ஒருவரை நோக்கி “உனைஸே! நீங்கள் இவருடைய மனைவியிடம் செல்லுங்கள். அவள் (விபசாரம் புரிந்தது உண்மைதான் என) ஒப்புக்கொண்டால் அவளைக் கல்லெறிந்து கொன்றுவிடுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே உனைஸ் (ரலி) அவர்கள் அவளிடம் சென்றார்கள். அவள் (குற்றத்தை) ஒப்புக்கொள்ளவே அவளைக் கல்லெறிந்து கொன்றார்கள்.17 அத்தியாயம் :

15

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அகழ்ப் போர் நாளில் (எதிரிகளை வேவு பார்க்கச் செல்வதற்காக) மக்களை அழைத்தார்கள். ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்கள் முன்வந்தார்கள். பிறகும் மக்களை அழைத்தார்கள். ஸுபைர் (ரலி) அவர்களே மீண்டும் முன்வந்தார்கள். பிறகு மீண்டும் மக்களை அழைத்தார்கள். ஸுபைர் (ரலி) அவர்களே (மறுபடியும்) முன்வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறைத்தூதர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு உதவியாளர் ஒருவர் உண்டு. என்னுடைய சிறப்பு உதவியாளர் ஸுபைர் ஆவார்” என்று சொன்னார்கள்.18 (அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இந்த ஹதீஸை இப்னுல் முன்கதிர் (ரஹ்) அவர்களிடமிருந்து மனனம் செய்தேன். அன்னாரிடம் அய்யூப் (ரஹ்) அவர்கள், “அபூபக்ரே! இவர்களுக்கு ஜாபிர் (ரலி) அவர்களின் ஹதீஸ்களை அறிவியுங்கள்; ஏனெனில் ஜாபிரிடமிருந்து நீங்கள் ஹதீஸ் அறிவிப்பது இவர்களைப் பரவசப்படுத்தும்” என்று கூறினார்கள். உடனே அதே இடத்தில், “நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் செவியுற்றேன்; ஜாபிர் (ரலி) அவர்களிடம் செவியுற்றேன்” என்று கூறி தொடர்ந்து பல ஹதீஸ்களை அன்னார் அறிவித்தார்கள். (மற்றோர் அறிவிப்பாளரான) அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் “ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் ‘குறைழா போர் நாளில்’ என்று கூறியுள்ளார்களே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “நீங்கள் அமர்ந்துள்ளபடியே இப்னுல் முன்கதிர் அமர்ந்திருந்தபோது அன்னார் ‘அகழ்ப் போர் நாளில்’ என்று கூறியதை நான் (நன்கு) நினைவில் வைத்துள்ளேன்” என்றார்கள். மேலும், சுஃப்யான் (ரஹ்) அவர்கள் “இரண்டும் ஒரே நாள்தானே!” என்று கூறிவிட்டுப் புன்னகை செய்தார்கள். அத்தியாயம் :

16

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத் தினுள் சென்றார்கள். (அதன்) வாயிற் கதவைப் பாதுகாக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் அனுமதி கேட்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி அளியுங்கள். அவருக்குச் சொர்க்கம் உண்டு என நற்செய்தி கூறுங்கள்” என்று சொன்னார்கள். அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்தான். பிறகு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதி அளியுங்கள்; அவருக்குச் சொர்க்கம் உண்டு என நற்செய்தியும் கூறுங்கள்” என்று சொன்னார்கள்.19 அத்தியாயம் :

17

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மாடியறை ஒன்றில் இருந்து கொண்டிருந்தபோது நான் (அவர்களிடம்) சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். நான், “இதோ உமர் பின் அல்கத்தாப் வந்திருக்கிறார் என்று சொல்” என்றேன். (அவ்வாறே அவர் சொல்ல) எனக்கு அனுமதியளித்தார்கள்.20 அத்தியாயம் :

18

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர் குஸ்ரூ எனும்) கிஸ்ரா வுக்குத் தாம் எழுதிய கடிதத்தை (அப்துல்லாஹ் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கொடுத்து) பஹ்ரைன் அதிபரிடம் சேர்த்திடுமாறும், பஹ்ரைன் அதிபர் அதை கிஸ்ராவிடம் ஒப்படைப்பார் என்றும் கட்டளையிட்டு அனுப்பினார்கள். கிஸ்ரா அதைப் படித்தபோது (கோபம் கொண்டு) அதைத் துண்டு துண்டாகக் கிழித்துவிட்டார். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘கிஸ்ரா’ ஆட்சியாளர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டுமென அவர்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்” என சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாக எண்ணுகிறேன்.22 அத்தியாயம் :

19

சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்லம் குலத்தாரில் ஒருவரிடம், ‘உம்முடைய குலத்தாரிடையே’ அல்லது ‘மக்களிடையே’ முஹர்ரம் பத்தாம் நாள் (ஆஷூரா) அன்று, “(காலையில்) சாப்பிட்டுவிட்டவர் தனது நாளில் எஞ்சியிருப்பதை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்; சாப்பிடாமலிருப்பவர் (அப்படியே) நோன்பு நோற்கட்டும் என்று அறிவிப்புச் செய்க” என்று சொன்னார்கள்.23 அத்தியாயம் :

20

அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னைக் கட்டிலின் மீது (தம்முடன்) அமரச்செய்து (தாம் கூறும் ஹதீஸ்களை மக்களுக்கு மொழிபெயர்த்துக் கூறுமாறு சொல்லி) வந்தார்கள். (ஒருமுறை பின்வருமாறு) கூறினார்கள்: அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக்குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, “தூதுக்குழுவினர் யார்?” என்று நபியவர்கள் கேட்க, “(நாங்கள்) ‘ரபீஆ’ குலத்தார்” என்று தூதுக்குழுவினர் பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், “இழிவுக்குள்ளாகாமலும் மனவருத்தத்திற் குள்ளாகாமலும் வருகைபுரிந்த ‘தூதுக் குழுவினரே!’ அல்லது ‘சமூகத்தாரே!’ வருக” என்று (வாழ்த்துக்) கூறினார்கள். அப்போது அக்குழுவினர் “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் உங்க ளுக்கும் இடையே ‘முளர்’ குலத்து இறைமறுப்பாளர்கள் (தடையாக) உள்ளனர். ஆகவே, எந்தக் கட்டளைகளைச் செயல்படுத்தினால் நாங்கள் சொர்க்கம் செல்லவும் எங்களுக்குப் பின்னால் உள்ள (இங்கு வர முடியாமல் போன)வர்களுக்குத் தெரிவிக்கவும் ஏதுவாக இருக்குமோ அத்தகைய கட்டளைகளில் (முக்கியமான) சிலவற்றை எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். அப்போது அவர்கள் குடிபானங்கள் பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் நான்கு விஷயங்களைத் தடை செய்தார்கள். நான்கு விஷயங்களைக் கட்டளையிட்டார்கள். 1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டு, “இறைநம்பிக்கை என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, அத்தூதுக் குழுவினர், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் உறுதி கூறுவதுதான் (இறைநம்பிக்கை என்பது)” என்று கூறினார்கள்.2. தொழுகையை நிலை நிறுத்துவது.3. ஸகாத் வழங்குவது. -ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது என்றும் அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன்-4. போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை நீங்கள் (அரசு கருவூலத்திற்குச்) செலுத்துவது. (மது ஊற்றிவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய் குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம், (பேரீச்சமரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை விதித்தார்கள். மேலும், “இவற்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்; உங்களுக்குப் பின்னால் இருப்போரிடம் இதைத் தெரிவித்துவிடுங்கள்” என்றும் கூறினார்கள்.25 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

21

தவ்பா பின் கைசான் அல்அம்பரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (பிறர் சொல்லக் கேட்டு நிறைய) ஹதீஸ்களை அறிவிப்பதைப் பார்த்தீர்களா? நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் ஏறத்தாழ இரண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகள் அமர்ந்து (ஹதீஸ்களைக் கற்று)ள்ளேன். ஆனால், அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைத் தவிர வேறெதையும் அறிவித்து நான் கேட்டதில்லை: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் ஓர் இறைச்சியை உண்ணச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரில் ஒருவர், அது உடும்பு இறைச்சி என்று அவர்களை அழைத்துச் சொன்னார்கள். உடனே அவர்கள் (அதை உண்ணுவதை) நிறுத்திவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “‘சாப்பிடுங்கள்’ அல்லது ‘உண்ணுங்கள்’. ஏனெனில், அது, ‘அனுமதிக்கப்பட்டதாகும்’ அல்லது, ‘அதனால் குற்றமில்லை’ -அறிவிப்பாளர் தவ்பா (ரஹ்) அவர்கள் இந்த இடத்தில் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்- ஆயினும், அது என் (பரிச்சயமான) உணவு அல்ல” என்று சொன்னார்கள். அத்தியாயம் :