83 - சத்தியமும் நேர்ச்சையும்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் சத்தியத்தை முறித்ததற்கான பரிகார(ம் தொடர்பான வசன)த்தை அல்லாஹ் அருளும்வரை (தாம் செய்த) எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்து வந்தார்கள். மேலும் அவர்கள், “நான் ஒரு சத்தியத்தைச் செய்து, அதன்பின் (அதைக் கைவிட்டு) மற்ற (ஒன்றைத் தேர்ந்தெடுப்ப)தே அதைவிடச் சிறந்தது என்று நான் கருதினால் நன்மை எதுவோ அதையே நான் செய்வேன். சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரத்தையும் செய்துவிடுவேன்” என்று சொன்னார்கள்.2 அத்தியாயம் :
அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அப்துர் ரஹ்மான் பின் சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீராக (ஆசைப்பட்டு)க் கேட்காதீர்! ஏனெனில், (நீர்) கேட்டதால் அது உமக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீர் (தனிமையில்) விடப்படுவீர். (இறைவனின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உமக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உமக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீர் ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீர் கருதினால் உமது சத்தியத்(தை முறித்துவிட்டு, முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடுவீராக!. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்துவீராக!” என்று சொன்னார்கள்.3 அத்தியாயம் :
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (எங்களையும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யுமாறு கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (ஊர்தி) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை” என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ் நாடிய நேரம்வரை நாங்கள் (அங்கேயே) இருந்தோம். பின்பு நபியவர்களிடம் வெள்ளைத் திமில்கள் கொண்ட மூன்று ஒட்டக மந்தைகள் கொண்டுவரப்பட்டன. ஆகவே, அவற்றின் மீது எங்களை ஏற்றி அனுப்பினார்கள். நாங்கள் (அங்கிருந்து விடைபெற்றுச்) சென்றுகொண்டிருந்தபோது ‘நாங்கள் எங்களுக்குள்’ அல்லது ‘எங்களில் சிலர்’, “அல்லாஹ்வின் மீதாணையாக! (நபி (ஸல்) அவர்கள் தரமாட்டேனென்று சத்தியம் செய்தபிறகு இவற்றை நாம் வாங்கிச் சென்றால் இவற்றில்) நமக்கு வளம் (பரக்கத்) ஏற்படாது. நபி (ஸல்) அவர்களிடம் நம்மைச் சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டோம். அவ்வாறு நம்மை ஏற்றி யனுப்பத் தம்மால் இயலாது என நபியவர்கள் சத்தியம் செய்து கூறினார்கள். பிறகு, நாம் ஏறிச்செல்ல ஒட்டகங் கள் வழங்கினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் நாம் மீண்டும் சென்று (அவர்கள் செய்த சத்தியத்தை) அவர்களுக்கு நினைவுபடுத்துவோம்” என்று சொல்லிக்கொண்டோம். அவ்வாறே நபி அவர்களிடம் சென்றோம். (அவர்கள் செய்த சத்தியத்தை நினைவுபடுத்தினோம்.) அப்போது அவர்கள், “நான் உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பவில்லை, மாறாக, அல்லாஹ்தான் உங்களை (அதில்) ஏற்றி அனுப்பினான். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், இனிமேல் நான் ஏதேனும் ஒரு சத்தியம் செய்து, பிறகு அதுவல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் ‘சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய்துவிட்டு, அந்தச் சிறந்ததையே செய்வேன்’; அல்லது ‘சிறந்ததையே செய்துவிட்டு, சத்திய முறிவுக்காகப் பரிகாரம் செய்துவிடுவேன்’ என்று சொன்னார்கள்.4 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாம்தான் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (தகுதியால்) முந்தியவர்களாகவும் இருப்போம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5 அத்தியாயம் :
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவர்மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வதைவிடப் பெரும் பாவமாகும்.6 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது, அவர் செய்யும் பெரும் பாவமாகும். (ஆகவே,) அவர் (சத்தியத்தை முறித்து) நன்மை செய்யட்டும்! -அதாவது பரிகாரம் செய்யட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். மக்களில் சிலர் உசாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, “(இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால், (இது ஒன்றும் புதிதல்ல!) இதற்கு முன்பு (மூத்தா போரின் போது) இவருடைய தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும்தான் நீங்கள் குறை கூறிக்கொண்டிருந்தீர்கள். வ அய்முல்லாஹி (அல்லாஹ்வின் மீதாணையாக!) அவர் (ஸைத்) தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடையவராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவராகவும் இருந்தார். மக்களிலேயே (அவருடைய புதல்வரான) இவர் (உசாமா) என் அன்புக்குரியவர் ஆவார்” என்று சொன்னார்கள்.8 அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “இல்லை. உள்ளங்களைப் புரட்டுபவன் மீதாணையாக” என்பது நபி (ஸல்) அவர்கள் சத்தி(யம் செய்யும்போது அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கி)ய மாக இருந்தது.13 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: (தற்போதுள்ள கிழக்கு ரோமானிய மன்னர்) சீசர் மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு சீசர் வரமாட்டார். (தற் போதுள்ள பாரசீக மன்னர்) கிஸ்ரா (குஸ்ரு) மாண்டுவிட்டால் அவருக்குப் பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (சீசர் மற்றும் கிஸ்ரா) இருவருடைய கருவூலங்களும் நிச்சயம் அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்கப்படும். இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.14 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தற்போதுள்ள கிழக்கு ரோமானிய மன்னர்) சீசர் மாண்டுவிட்டால் அவருக்குப்பின் வேறொரு சீசர் வரமாட்டார். (தற்போதுள்ள பாரசீக மன்னர்) கிஸ்ரா (குஸ்ரு) மாண்டுவிட்டால் அவருக்குப்பின் வேறொரு கிஸ்ரா வரமாட்டார். இந்த முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (சீசர் மற்றும் கிஸ்ரா) இருவருடைய கருவூலங்களும் நிச்சயமாக அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்கப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.15 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் சமுதாயமே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிவதையெல்லாம் நீங்கள் அறிவீர் களாயின் நிச்சயம் அதிகமாக அழுவீர் கள்; குறைவாகவே சிரிப்பீர்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.16 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும்விட நீங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை! என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உம்மைவிடவும் நானே உமக்கு மிகவும் பிரியமானவனாக ஆகாத வரை (நீர் உண்மையான இறைநம்பிக்கையாளர் ஆக முடியாது)” என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்களை நோக்கி உமர் (ரலி) அவர்கள், “இப்போது அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைவிடவும் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள்” என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “இப்போதுதான் உமரே! (சரியாகச் சொன்னீர்கள்)” என்று கூறினார்கள்.17 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது: இரண்டு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு வழக்கைக் கொண்டுவந்தனர். அவர்களில் ஒருவர், “எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டப்படி தீர்ப்பளியுங்கள்” என்று கூறினார். அவர்கள் இருவரில் விவரம் தெரிந்தவரான மற்றொருவர், “ஆம். அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் சட்டப்படி எங்களுக்கிடையே தீர்ப்பளியுங்கள்! என்னைப் பேச அனுமதியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “பேசுங்கள்” என்றார்கள். அந்த மனிதர், “என் மகன் இவரிடம் ‘அஸீஃப்’ ஆக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். -’அஸீஃப்’ என்பதற்கு ‘கூலியாள்’ என்பது பொருள் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்- (அப்போது) இவருடைய மனைவியுடன் விபசாரம் செய்துவிட்டான். ஆகவே, மக்கள் என்னிடம், “உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை உண்டு” என்று கூறினர். ஆனால், நான் அவனுக்காக நூறு ஒட்டகங்களையும் ஓர் அடிமைப் பெண்ணையும் பிணைத் தொகையாக வழங்கினேன். பிறகு நான் அறிஞர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அவர்கள், “(திருமணமாகாத நிலையில் விபசாரம் புரிந்துவிட்ட) என் மகனுக்கு நூறு கசையடிகள் கொடுக்க வேண்டும் என்றும், ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும், கல்லெறி தண்டனை (விபசாரம் புரிந்த) அவருடைய மனைவிக்குத்தான் என்றும் தெரிவித்தார்கள்” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டப்படியே தீர்ப்பளிக்கிறேன்: “உங்கள் ஆடுகளும் அடிமைப் பெண்ணும் உங்களிடமே திருப்பித் தரப்படும்” என்று கூறிவிட்டு, அவருடைய மகனுக்கு நூறு கசையடிகள் வழங்கச்செய்து ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தவும் செய்தார்கள். மேலும், உனைஸ் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அந்த நபரின் மனைவியிடம் சென்று, அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் அவளுக்குக் கல்லடி தண்டனை வழங்கிடுமாறு உத்தரவிடப்பட்டார்கள். அவ்வாறே, (உனைஸ் அப்பெண்ணிடம் சென்றார்.) அவள் குற்றத்தை ஒப்புக்கொண்டாள். ஆகவே, அவளுக்குக் கல்லெறி தண்டனை வழங்கினார்.18 அத்தியாயம் :
அபூபக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), “பனூ தமீம், பனூ ஆமிர் பின் ஸஅஸஆ, பனூ ஃகதஃபான், பனூ அசத் ஆகிய (பிரபல அரபுக்) குலத்தாரைவிட (முதலில் இஸ்லாத்தைத் தழுவிய) அஸ்லம், ஃகிஃபார், முஸைனா, ஜுஹைனா ஆகிய குலத்தார் சிறந்தோரென்றால், (முதலில் கூறிய பிரபலமான) அந்தக் குலத்தார் நஷ்டமும் இழப்பும் அடைந்தவர்கள்தானே!” என்று கேட்டார்கள். தோழர்கள் ‘ஆம்’ என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (அஸ்லம் முதலான) இவர்கள் (பனூ தமீம் முதலான) அவர்களைவிட(ப் பல மடங்கு) சிறந்தவர்கள்” என்று கூறினார்கள்.19 அத்தியாயம் :
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘அஸ்த்’ எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (‘ஸகாத்’ வசூóக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தமது பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பிவந்து, “அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பாரும்!” என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்தபிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: பின்னர், அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ நம்மிடம் வந்து “இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறுகிறார். அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்துகொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா, இல்லையா என்று பார்க்கட்டுமே! (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த(ப் பொதுச்) சொத்திலிருந்து முறைகேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தமது பிடரியில் சுமந்துகொண்டு நிச்சயம் வருவார். ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டுவருவார்; பசுவாக இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டுவருவார்; ஆடாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டுவருவார்” என்று கூறிவிட்டு, “(இறைவா! உனது செய்தியை மக்களிடம்) நான் சேர்த்துவிட்டேன்” என்று கூறினார்கள். அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் அக்குள்களின் வெண்மையை நாங்கள் நன்கு பார்க்கும் அளவுக்குத் தமது கையை உயர்த்தி னார்கள். இந்த ஹதீஸை என்னுடன் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றார்கள். (வேண்டுமானால்,) அவரிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள்.20 அத்தியாயம் :
அபுல்காசிம் (முஹம்மத் -ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அறிவதையெல்லாம் நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் அதிகமாக அழுவீர்கள்; குறைவாகவே சிரிப்பீர்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21 அத்தியாயம் :
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் போய்ச்சேர்ந்தேன். அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, “கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! அவர்கள் இழப்புக்குரியவர்கள், கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக அவர்கள் இழப்புக்குரியவர்கள்” என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், “என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகிறதா? (அப்படியானால்) என் நிலை என்னாவது?” என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள், “என்னால் பேசாமலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது” என்று கூறினார்கள். உடனே நான், “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செல்வத்தைச் செலவிட்ட) சிலரைத் தவிர” என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு (என்று தம் முன் பக்கம் வலப் பக்கம் இடப் பக்கம்) கைகளால் சைகை செய்தார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) சுலைமான் (அலை) அவர்கள் (ஒருமுறை), “நான் இன்றிரவு (என்னுடைய) தொண்ணூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள்” என்று கூறினார்கள். அப்போது அன்னாருடைய தோழர்களில் ஒருவர், “இன்ஷா அல்லாஹ்” (அல்லாஹ் நாடினால்) என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்” என்று கூறினார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறவில்லை. (மறந்து விட்டார்கள்.) மேலும், தம் துணைவியர் அனைவரிடமும் சென்றார்கள். அவர் களில் ஒரேயொரு மனைவியைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அந்த ஒருவரும் ஒரு புஜமுடைய அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார். (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அவர், ‘இன்ஷா அல்லாஹ்’ என்று கூறியிருந்தால், (அந்த தொண்ணூறு துணைவியரும் கர்ப்பவதியாகி பிள்ளைகள் பெற்று, அப்பிள்ளைகள்) அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிகின்ற (குதிரை) வீரர்களாய் ஆகியிருப் பார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22 அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பட்டுத் துணி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பெற்றது. மக்கள் அதன் அழகையும் மிருதுவையும் கண்டு வியந்து ஒருவரிடமிருந்து ஒருவர் வாங்கிப் பார்க்கலாயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களைப் பார்த்து) “இதைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சஅத் (பின் முஆத்) அவர்களுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிடச் சிறந்தவை” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்களிடமிருந்து ஷுஅபா (ரஹ்) மற்றும் இஸ்ராயீல் (ரஹ்) ஆகியோர் அறிவித்துள்ள ஹதீஸில் ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக’ என்பது இடம் பெறவில்லை.23 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் துணைவியார்) ‘ஹின்த் பின்த் உத்பா பின் ரபீஆ’ (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பூமியின் மேலுள்ள (அரபு) வீட்டார்களிலேயே உங்களுடைய வீட்டார் இழிவடைவதே (இதற்கு முன்பு) எனக்கு விருப்பமானதாய் இருந்தது. பிறகு எல்லா வீட்டார்களிலும் உங்களுடைய வீட்டார் கண்ணியமடைவதே இன்று எனக்கு விருப்பமானதாய் மாறிவிட்டது” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (உனது இந்த விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)” என்று கூறினார்கள். அவர் “அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் கருமியான மனிதராவார். அவருக்குரிய (செல்வத்)திலிருந்து (எங்கள் பிள்ளைகளுக்கு) நான் உணவளிப்பது என்மீது குற்றமாகுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “நியாயமான அளவிற்கு எடுத்தால் குற்றமாகாது” என்று பதிலளித்தார்கள்.24 ‘வீட்டார்கள்’ என்பதைக் குறிக்கப் பன்மையை (அக்பாஉ) பயன்படுத்தினார்களா? ஒருமையை (கிபாஉ) பயன்படுத்தினார்களா? என்பதில் அறிவிப்பாளர் யஹ்யா பின் புகைர் (ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது முதுகை யமன் நாட்டுத் தோல் கூடாரமொன்றில் சாய்த்தபடி இருந்தபோது தம் தோழர்களிடம், “சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்பமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். தோழர்கள், ‘ஆம்’ (விரும்புவோம்) என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “(இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக நீங்கள் இருப்பீர்கள் என்றே நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்கள்.25 அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருமனிதர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112ஆவது குர்ஆன்) அத்தியாயத்தைத் திரும்பத்திரும்ப ஓதிக்கொண்டிருப்பதை மற்றொரு மனிதர் செவியுற்றார். விடிந்ததும் அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத்திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போன்றிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு நிகரானதாகும்” என்று சொன்னார்கள்.26 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: (தொழுகையில்) ருகூவையும் (குனி தலையும்) சஜ்தாவையும் (சிரவணக்கத் தையும்) பரிபூரணமாகச் செய்யுங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் ருகூஉ செய்யும்போதும் சஜ்தா செய்யும்போதும் என் முதுகுக்குப் பின்னால் உங்களை நான் பார்க்கிறேன். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் தம் குழந்தைகளுடன் அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “என்னுயிர் எவன் கையிலுள் ளதோ அவன்மீது சத்தியமாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே என் பேரன்பிற்குரியவர்கள்” என்று மூன்று முறை கூறினார்கள்.27 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் தமது வாகனத்தில் பயணம் செய்தபடி தம்முடைய தந்தை பெயரால் சத்தியம் செய்துகொண்டிருந்தபோது அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றடைந்தார்கள். மேலும், “அறிந்துகொள்ளுங்கள்: உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான். (ஆகவே) சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களின் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்” என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும்போதும் சரி; பிறரது பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி; நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: (‘பிறரது பேச்சை எடுத்துரைத் தல்’ என்பதைக் குறிக்க மூலத்தில் இடம் பெற்றுள்ள ‘ஆஸிர்’ எனும் சொல்லின் இனத்திலுள்ளதும், 46:4ஆவது வசனத் தின் மூலத்தில் இடம்பெற்றுள்ளதுமான) ‘அஸாரதின் மின் இல்மின்’ எனும் சொற்றொடருக்கு ‘ஞானத்தை அறிவித்தல்’ என்பது பொருள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. வேறு இரு அறிவிப்புகளில், உமர் (ரலி) அவர்கள் (இவ்விதம்) சத்தியம் செய்வதை நபி (ஸல்) அவர்களே செவியுற்றார்கள் என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஸஹ்தம் பின் முளர்ரிப் அல்ஜர்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (குளாஆ குலத்தைச் சேர்ந்த) இந்த (எங்கள்) ஜர்ம் கோத்திரத்தாருக்கும் (யமன் நாட்டவர்களான) அஷ்அரீ குலத்தாருக்குமிடையே நட்புறவும் சகோதரத்துவமும் இருந்துவந்தது. (ஒரு முறை) நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அபூமூசா (ரலி) அவர்களுக்கு அருகில் உணவு வைக்கப்பட்டது. அதில் கோழி இறைச்சி இருந்தது. அபூமூசா (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் ‘பனூ தைம்’ குலத்தைச் சேர்ந்த சிவப்பான மனிதர் ஒருவர் இருந்தார். அவர் அடிமைகளில் ஒருவரைப் போன்று காணப்பட்டார். அபூமூசா (ரலி) அவர்கள் அந்த மனிதரையும் உணவு உண்ண அழைத்தார்கள். அதற்கு அந்த மனிதர், “இந்தக் கோழி (இனம், அசுத்தம்) ஒன்றைத் தின்பதை நான் கண்டேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே இதை இனிமேல் நான் உண்ணமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டேன்” என்று சொன்னார். (இதைக் கேட்ட) அபூமூசா (ரலி) அவர்கள், “எழுந்து (இங்கே) வாருங்கள்! இதைப் பற்றி உங்களுக்கு நான் (நபிகளாரின் சமூகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை) அறிவிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுக் கூறலானார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்துசெல்ல ஒட்டகங்கள் தரும்படி கேட்டுச் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (ஊர்தி) ஒட்டகங்கள் என்னிடம் இல்லை. எனவே, உங்களை நான் (ஒட்டகத்தில்) ஏற்றி அனுப்பமாட்டேன்” என்று கூறினார்கள். (ஆகவே நாங்கள் திரும்பிச் சென்றுவிட்டோம்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த (ஃகனீமத்) ஒட்டகங்கள் கொண்டுவரப்பட்டன. உடனே, “அஷ்அரீ குலத்தார் எங்கே?” என எங்களைக் குறித்து கேட்டுவிட்டு, எங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். நாங்கள் (அவர்களிடமிருந்து அதைப் பெற்றுக்கொண்டு) சென்றுகொண்டிருந்த போது (நாங்கள் எங்களுக்குள்) “நாம் என்ன காரியம் செய்துவிட்டோம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு (ஊர்தி) ஒட்டகங்கள் வழங்கப் போவதில்லையெனச் சத்தியம் செய்தார்கள்; அவர்களிடம் (அதற்கான) ஒட்டகங்களும் இருக்கவில்லை. பிறகு (என்ன நடந்ததோ!) நமக்கு ஒட்டகங்களை வழங்கினார்கள். (ஒருவேளை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சத்தியத்தை நாம் மறக்கும்படி செய்துவிட்டோமா! (அப்படிச் செய்தால்) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாம் ஒருபோதும் வெற்றியடையப் போவதில்லை” என்று பேசிக்கொண்டோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்றோம். அவர்களிடம், “நாங்கள் தங்களிடம் எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளையும்) ஏற்றிச்செல்ல ஒட்டகங்கள் கேட்டு (முதலில்) வந்தபோது எங்களுக்கு ஒட்டகங்கள் தரப்போவதில்லையெனத் தாங்கள் சத்தியம் செய்தீர்கள். தங்களிடம் எங்களை ஏற்றியனுப்ப(த் தேவையான) ஒட்டகங்களும் இருக்கவில்லை. (பிறகு எங்களுக்கு ஒட்டகங்கள் தரும்படி மறதியாகச் சொல்லிவிட்டீர்களோ?)” என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உங்களை ஏற்றிச்செல்ல ஒட்டகங்கள் வழங்கவில்லை. மாறாக, அல்லாஹ்தான் உங்களை ஏற்றிச்செல்ல ஒட்டகங்கள் வழங்கினான். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (பொதுவாக) நான் எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் சிறந்ததையே நான் செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரமும் செய்வேன்” என்று கூறினார்கள்.29 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சத்தியம் செய்யும்போது, (அறியாமைக் கால தெய்வச் சிலைகளான) ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக!’ என்று கூறிவிட்டாரோ அவர் (இந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், “வா சூதாடலாம்” என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.30 அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொன்மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்துகொண்டிருந்தார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கை பக்கமாக அமையும்படி வைத்துக்கொண்டார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்ற) மோதிரங்களைத் தயார் செய்த னர். பிறகு நபி (ஸல்) அவர்கள், சொற் பொழிவு மேடையில் (மிம்பரில்) அமர்ந்து அந்த மோதிரத்தைக் கழற்றிவிட்டு, “நான் இந்த மோதிரத்தை உள்ளங்கைப் பக்கமாக அதன் குமிழ் அமையும்படி அணிந்து கொண்டிருந்தேன்” என்று கூறி, அதை எறிந்துவிட்டார்கள். பிறகு, “அல்லாஹ்வின் மீதாணையாக! இதை ஒருபோதும் நான் அணியமாட்டேன்.” என்று கூறினார்கள். உடனே மக்களும் தங்களின் மோதிரங்களை(க் கழற்றி) எறிந்தனர்.32 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகின்றார். எதன்மூலம் ஒருவர் தம்மைத் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அதன்மூலம் அவர் நரக நெருப்பில் வேதûனை செய்யப்படுவார். ஓர் இறை நம்பிக்கையாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். எவர் ஓர் இறைநம்பிக்கையாளரை இறை மறுப்பாளர் (காஃபிர்) என்று அவதூறு சொல்கிறாரோ அதுவும் அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். இதை ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்களில் (தொழுநோயாளி, வழுக்கைத் தலையர், குருடர் ஆகிய) மூவரைச் சோதிக்க அல்லாஹ் நாடினான். ஆகவே, அவன் வானவர் ஒருவரை அனுப்பினான். அவர் (அம்மூவரில் ஒருவரான) தொழுநோயாளியிடம் வந்து, “பயணத்தில் என் வாழ்வா தாரம் அறுபட்டுவிட்டது (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது). இன்று எனக்கு உதவிக்கான வழிவகை அல்லாஹ்வையும் பிறகு உம்மையும் தவிர வேறெவருமில்லை” என்று கூறினார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, இந்த ஹதீஸை முழுமையாகக் கூறினார்கள்.37 அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: சத்தியம் செய்தவர் (அதை) நிறை வேற்ற உதவும்படி நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.39 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் புதல்வியார் ஒருவர் (ஸைனப் -ரலி) தம்முடைய மகன் (அல்லது மகள்) இறக்கும் தறுவாயில் இருப்பதாகவும், ஆகவே அங்கு வந்துசேர வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும், சஅத் பின் உபாதா (ரலி) அவர்களும், ‘என் தந்தை (ஸைத் பின் ஹாரிஸா-ரலி) அவர்களும்’ அல்லது ‘உபை பின் கஅப் (ரலி) அவர்களும்’ இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வியாருக்கு) முகமன் (சலாம்) கூறி அனுப்பியதோடு, “அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியவை. ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. ஆகவே, பொறுமையைக் கைகொண்டு நன்மையை எதிர்பார்ப்பீராக!” என்றும் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்களின் புதல்வியார் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (கண்டிப்பாகத் தம்மிடம் வரவேண்டுமென)க் கூறியனுப்பினார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம். (புதல்வியின் வீட்டுக்குள் நுழைந்த) நபியவர்கள் (அங்கு) அமர்ந்தார்கள். அப்போது அவர்களிடம் குழந்தை தரப்பட்டது. குழந்தையைத் தமது மடியில் படுக்கவைத்தார்கள். குழந்தை சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டிருந் தது. (இதைக் கண்ணுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. அப்போது சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்ன இது (அழுகிறீர்களே)?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “இது அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களின் உள்ளங்களில் அமைத்துள்ள இரக்க உணர்வாகும். நிச்சயமாக, அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்” என்று சொன்னார்கள்.40 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமுடைய மக்களில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்து போனால், (தந்தையான) அவரை நரகம் தீண்டாது; (‘உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது’ என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.41 அத்தியாயம் :
ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை பின்வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்க வாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள். (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின்மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் உண்டு கொழுத்தவர்கள்; இரக்கமற்றவர்கள்; கர்வம் கொண்டவர்கள் ஆவர்.42 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம், “மக்களில் சிறந்தவர் யார்?” என்று வினவப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “(மக்களில் சிறந்த வர்கள்,) என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும்.” என்று விடையளித்தார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் “சிறுவர்களான எங்களை எங்கள் சான்றோர்கள் (நபித்தோழர்கள்) ‘அஷ்ஹது பில்லாஹ்’ (அல்லாஹ்வின் பெயரால் நான் சாட்சியம் அளிக்கிறேன்) என்றோ ‘அல்லாஹ்வுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி’ என்றோ கூறுவதைத் தடுத்துவந்தார்கள்.44 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: (நரகவாசிகள் நரகத்தில் போடப்படு வார்கள். நரகம் வயிறு நிரம்பாத காரணத் தால்) “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்டுக்கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தமது பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது “போதும்! போதும்! உன் கண்ணியத்தின் மீதாணையாக!” என்று கூறும். நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.51 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர், நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், (அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மை யானவர்களென இறைவன் (தனது வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற நான் கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இந்தச் சம்பவத்தில் ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். அதில் (பின்வருமாறு உள்ளது): அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுந்து, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபைக்கு எதிராக உதவி கோரினார்கள். உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் நித்தியத்தின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றேதீருவோம்” என்று கூறினார்கள்.53 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக உங்களை அல்லாஹ் தண்டிக்கமாட்டான்” எனும் (2:225ஆவது) இறைவசனம் ‘லா வல்லாஹி’ (இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும், ‘பலா வல்லாஹி (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும் (பொருள் கருதாமல் பழக்கத்தின் காரணமாகச் சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுபவர் தொடர்பாக அருளப்பெற்றது.54 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாத வரை, அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாத வரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை;) மன்னித்து விடுகிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.56 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹிஜ்ஜா பத்தாம்) நாளில் (தமது ஒட்டகத்தின்மேல் இருந்தவாறு) உரை நிகழ்த்திக்கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி ஒருவர் எழுந்து, “நான் (ஹஜ்ஜில்) இன்னின்னதற்கு முன் இன்னின்னது (ஷைத்தானுக்குக் கல் எறிவதற்குமுன் பலியிடல், பலியிடலுக்குமுன் தலைமுடி களைதல்) என்று நினைத்துக்கொண்டிருந்தேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார். பிறகு மற்றொருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (முடி களைதல், பலியிடல், கல்லெறிதல் ஆகிய) இம்மூன்றையும் நான் இன்னின்னவாறு நினைத்துக்கொண்டிருந்தேன்” என்று சொன்னார். இவை அனைத்துக்குமே நபி (ஸல்) அவர்கள், “(அவ்வாறே) செய்யுங்கள். (முன்பின்னாகச் செய்வதில்) குற்றமில்லை” என்றே பதிலளித்தார்கள். அன்று கேட்கப்பட்ட (இத்தகைய) கேள்விகள் அனைத்துக்கும் “(அப்படியே) செய்யுங்கள்; (அப்படியே) செய்யுங்கள். (அதனால்) குற்றமில்லை” என்றே நபியவர்கள் விடையளித்தார்கள்.57 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (துல்ஹிஜ்ஜா பத்தாம் நாளில் மினாவில் இருந்தபோது) நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், “கல்லெறிவதற்கு முன்பே நான் (தவாஃபுஸ் ஸியாரா) சுற்றி வந்துவிட்டேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்றமில்லை” என்று சொன்னார்கள். மற்றொருவர், “பலியிடுவதற்கு முன்பே தலைமுடி களைந்துவிட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை” என்று சொன்னார்கள். இன்னொருவர், “கல்லெறிவதற்கு முன்பே பலியிட்டுவிட்டேன்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “குற்றமில்லை” என்று சொன்னார்கள்.58 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்து தொழுதுவிட்டு, பள்ளிவாசலின் ஒரு மூலையில் (அமர்ந்து) இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து முகமன் (சலாம்) சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “திரும்பச் சென்று தொழுவீராக! ஏனென்றால், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்று (முன்பு தொழுததைப் போன்றே) தொழுதுவிட்டு வந்து (நபிகளாருக்கு) சலாம் சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘வ அலைக்க’ (அவ்வாறே உம்மீதும் சாந்தி உண்டாகுக! எனப் பதில் சலாம் கூறிவிட்டு,) “திரும்பச் சென்று தொழுவீராக! நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். (இவ்வாறு மூன்று தடவை நடந்தது.) மூன்றாவது தடவையில் அந்த மனிதர், “அவ்வாறாயின் எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத்தாருங்கள்!” என்று கேட்டார். “நீர் தொழ நினைத்தால் (முதலில்) நிறைவாக அங்கத் தூய்மை (உளூ) செய்வீராக! பிறகு கிப்லா (இறையில்லம் கஅபாவின் திசையை) முன்னோக்கி (நின்று) ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறுவீராக! பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை ஓதுவீராக! பிறகு (குனிந்து) ‘ருகூஉ’ செய்வீராக! அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பின்னர் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி நேராக நிற்பீராக! பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்து, அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பிறகு தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்வீராக! பின்னர் (மீண்டும்) சிரவணக்கம் செய்து, அதில் (சற்று நேரம்) நிலைகொள்வீராக! பிறகு எழுந்து நேராக நிற்பீராக! இவ்வாறே உமது தொழுகை முழுவதிலும் செய்துவருவீராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.59 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் அப்பட்டமாகத் தோற்கடிக்கப்பட்டனர். அது அவர்களில் (வெளிப்படையாகவே) தெரிந்தது. அப்போது இப்லீஸ், “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கூச்சலிட்டான். உடனே முஸ்óம்களில் முன்அணியினர் (எதிரிகள் என் றெண்ணி), பின்அணியினரை நோக்கித் திரும்பிச் செல்ல, பின்அணியினருடன் (மோதலேற்பட்டுப்) போரிட்டுக்கொண்ட னர். அப்போது ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள், தம் தந்தை அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார். உடனே, “(அவர்) என் தந்தை! என் தந்தை!” என்று (சப்தமிட்டுக்) கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரை விட்டு) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், “(என் தந்தையைத் தவறுதலாகக் கொன்றுவிட்ட) உங்களை அல்லாஹ் மன்னிப்பானாக!” என்று சொன்னார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா (ரலி) அவர்கள் மன்னித்ததால் (அன்னாருடைய வாழ்க்கையில்) அவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது.60 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் மறதியாகச் சாப்பிட்டுவிட்டால், அவர் தமது நோன்பை நிறைவு செய்யட்டும்! ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணவும் பருகவும்வைத்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.61 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களுக்குத் தொழுவித் தார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது (அத்தஹிய்யாத்தில்) அமராமல் (மூன்றாவது ரக்அத்திற்காக மறதியாக) எழுந்து தொழுகையைத் தொடர்ந்தார்கள். தொழுகை முடியும் தறுவாயில் நபி (ஸல்) அவர்கள் ‘சலாம்’ கொடுப்பதை மக்கள் எதிர்ப்பார்த்திருந்தபோது (அமர்விலேயே) சலாம் கொடுப்பதற்கு முன்பாக தக்பீர் கூறி சஜ்தா செய்தார்கள். பிறகு (முதல் சஜ்தாவிóருந்து) தலையைத் தூக்கி மீண்டும் தக்பீர் கூறி (இரண்டாவது) சஜ்தா செய்து பின்னர் தலையை உயர்த்தி சலாம் கொடுத்தார்கள்.62 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு லுஹ்ர் தொழுகையை தொழுவித்தார்கள். அப்போது ‘(ஐந்து ரக்அத்களாக) அதிகமாக்கி’ அல்லது ‘(மூன்று ரக்அத்களாகக்) குறைத்துத்’ தொழுவித்தார்கள். -அறிவிப்பாளர்களில் ஒருவரான மன்சூர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த இடத்தில் சந்தேகத்துடன் அறிவித்தது இப்ராஹீம் (ரஹ்) அவர்களா? அல்லது அல்கமா (ரஹ்) அவர்களா என்று எனக்குத் தெரியாது- (தொழுகை முடிந்தபின்), “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை(யின் ரக்அத் எண்ணிக்கை) குறைந்துவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். மக்கள், “இப்படி இப்படி நீங்கள் தொழுவித்தீர்கள்” என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் சேர்ந்து இரண்டு சஜ்தா செய்தார்கள். பிறகு, “இந்த இரண்டு சஜ்தாக்கள், தமது தொழுகையில் அதிகப்படுத்திவிட்டோமா அல்லது குறைத்துவிட்டோமா என்று (உறுதியாகத்) தெரியாதவர் செய்ய வேண்டியவையாகும்; (முதலில்) யோசித்து முடிவு செய்ய வேண்டும். பிறகு எஞ்சியுள்ள (ரக்அத்)தை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்குப் பிறகு (மறதிக்காக) இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும்” என்று சொன்னார்கள்.63 அத்தியாயம் :
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நான் மறந்துபோனதற்காக என்னை தண்டிக்காதீர்கள். என் விஷயத்தில் நீங்கள் கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள்” என்று (களிரிடம் மூசா) கூறினார்” எனும் (18:73ஆவது) வசனத்(தின் விளக்கத்)தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முதல் முறையில் மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியால் ஆகும்” என்று சொன்னார்கள்.64 அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களிடம் விருந்தாளி ஒருவர் வந்திருந்தார். ஆகவே, நான் என் வீட்டாரிடம் (ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை முடித்துக்கொண்டு) நான் திரும்பி வருவதற்குள் விருந்தாளி சாப்பிடுவதற்காக (குர்பானி பிராணியை) அறுத்திடுமாறு கட்டளையிட்டேன். அதன்படி அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பாகவே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டார்கள். பிறகு இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மறுபடியும் (வேறொரு) குர்பானி பிராணியை அறுத்திடுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! ஒரு வயதுக்குட்பட்ட பால்குடி மறவாத பெட்டை வெள்ளாட்டுக் குட்டி என்னிடம் உள்ளது. அது இரு இறைச்சி ஆடுகளை விடச் சிறந்தது (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)” என்று கேட்டேன். (நபியவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள்.)65 அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்கள், ஆமிர் அஷ் ஷஅபீ (ரஹ்) அவர்களின் அறிவிப்பை இத்துடன் நிறுத்திவிட்டு, முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் (அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து) அறிவித்துள்ள இதே போன்ற ஹதீஸை அறிவித்தார்கள். பிறகு இத்துடன் நிறுத்திவிட்டு, “பராஉ (ரலி) அவர்கள் அல்லாத மற்றவர்களுக்கும் இச்சலுகை பொருந்துமா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிட மிருந்து இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஹஜ்ஜுப்) பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையில் கலந்துகொண்டேன். (தொழுகை முடிந்த) பிறகு அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில் “யார் தொழுகைக்குமுன் (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டாரோ அவர் அதற்கு மாற்றாக மற்றொன்றை (தொழுகைக்குப்பிறகு) அறுக்கட்டும். யார் அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ்வின் பெயர் கூறி (தொழுகைக்குப்பிறகு) அறுக்கட்டும்” என்று கூறினார்கள்.66 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவனுக்கு இணைகற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவது, கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியவை பெரும் பாவங்களாகும். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் (அஷ்அரீ குலத்துத்) தோழர்கள் எங்களை ஏற்றியனுப்ப ஊர்தி ஒட்டகம் கேட்கும்படி நபி (ஸல்) அவர்களிடம் என்னை அனுப்பிவைத்தனர். (நான் சென்று அவர்களிடம் ஒட்டகம் கேட்டேன்) அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை நான் எதன் மீதும் ஏற்றியனுப்ப இயலாது” என்று கூறினார்கள். அந்த நேரம் அவர்கள் கோபமாய் இருந்தார்கள். பிறகு நான் அவர்களிடம் சென்றபோது, நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சென்று, ‘அல்லாஹ்’ அல்லது ‘அல்லாஹ்வின் தூதர்’ உங்களை ஏற்றியனுப்ப வாகனம் வழங்குவார்கள் என்று சொல்லுங்கள் என்றார்கள்.71 அத்தியாயம் :
இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) ஆகியோர், நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என இறைவன் (தனது வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற நான் கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். (அதில் பின்வருமாறு உள்ளது:) அப்போது அல்லாஹ், “(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்” என்று தொடங்கும் (24:11-20) பத்து வசனங்களை அருளினான். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறியபின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிடமாட்டேன்” என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். -மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டுவந்தார்கள்- அப்போது அல்லாஹ், “உங்களில் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்” எனும் (24:22ஆவது) வசனத்தை அருளினான். அபூபக்ர் (ரலி) அவர்கள், “ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டுவந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்” என்றும் கூறினார்கள்.72 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஸஹ்தம் பின் முளர்ரிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் சென்றேன். அப்போது அவர்கள் (ஏதோ) கோபத்தில் இருந்தார்கள். அன்னாரிடம் நாங்கள் (எங்கள் பயணத்திற்குத் தேவையான) வாகனங்களைக் கோரினோம். அப்போது அவர்கள், எங்களுக்கு வாகனங்கள் தரமாட்டேன் என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள். பிறகு (எங்களுக்கு ஊர்தி ஒட்டகங் களைத் தந்துவிட்டு) “அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில், சிறந்ததையே நான் செய்வேன்; சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரமும் செய்வேன்” என்று சொன்னார்கள்.73 அத்தியாயம் :
முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரணவேளை நெருங்கியபோது அவரிடம் வந்து,” ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை (நீங்கள் சொல்லிவிட்டால் அதை) வைத்து (மறுமையில் நரகத்திலிருந்து விடுதலை கேட்டு) உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன்” என்று சொன்னார்கள்.77 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை ஆகும்; (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும்; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அவை:) சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி; சுப்ஹானல்லாஹில் அழீம். (பொருள்: அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கிறேன்; கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்.) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.78 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராக மரணிக்கிறாரோ அவர் நரகத்தில் நுழைவிக்கப்படுவார்” என்று சொன்னார்கள். நான் மற்றொரு வார்த்தையில், “யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதவராக மரணிக்கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுவார்” என்று சொன்னேன்.79 அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை (ஒரு மாத காலம்) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தார்கள். அவர்களின் காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள் மாடியறை ஒன்றில் இருபத்தொன்பது நாட்கள் தங்கியிருந்தார்கள். பின்னர் அவர்கள் இறங்கி வந்தபோது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மாத காலம் (தங்கள் துணைவியரை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தீர்களே? (ஆனால், இருபத்தொன்பதாம் நாளில் வந்துவிட்டீர்களே?)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கலாம்” என்று சொன்னார்கள்.81 அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர் அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் தமது திருமணத்திற்கு நபி (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அப்போது மணப்பெண்ணே (விருந்துக்கு வந்த) மக்களுக்குப் பணிவிடை செய்பவராக இருந்தார். மக்களே! மணப்பெண் நபி (ஸல்) அவர்களுக்கு என்ன புகட்டினார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் கல் (அல்லது மரப்) பாத்திரத்தில் நபி (ஸல்) அவர்களுக்காகப் பேரீச்சம்பழங்களை இரவிலேயே ஊறவைத்திருந்தார். காலையில் நபி அவர்களுக்கு அதை அவர் புகட்டினார்.83 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் சவ்தா (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களுக்குரிய ஆடு ஒன்று இறந்து விட்டது. அதன் தோலை நாங்கள் பதனிட்டோம். பிறகு அதில் நாங்கள் பழரசத்தை ஊற்றி வைத்துவந்தோம். இறுதியில் அது (இற்றுப்போன) துருத்தியாக மாறிவிட்டது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும்வரை அவர்களுடைய குடும்பத்தார் மூன்று நாட்கள் தொடர்ச்சியாகக் குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை. இதன் அறிவிப்பாளரான ஆபிஸ் பின் ரபீஆ (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், தாம் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இது குறித்துக் கேட்டபோது அவர்கள் இதைத் தெரிவித்ததாக இடம்பெற்றுள்ளது.85 அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தம் துணைவியார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குரலை பலவீன மானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கிருக்கும்) பசியைப் புரிந்து கொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “ஆம் (இருக்கிறது)” என்று கூறிவிட்டு, தீட்டப்படாத கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்தார்கள். பிறகு அவர்கள் தமது முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியில் அந்த ரொட்டியைச் சுருட்டி (என்னிடம் கொடுத்து) என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். நான் (அதையெடுத்துக்கொண்டு) சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அன்னாருடன் மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்குமுன் நின்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “ஆம்” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடனிருந்தவர்களிடம், “எழுந்திருங் கள்!” என்றார்கள். மக்கள் (எழுந்து) நடந்தார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் வந்து நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் வந்துகொண்டிருக்கும் விவரத்தைத் தெரிவித்தேன். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என் தாயாரிடம்) “உம்மு சுலைமே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்களும் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வேண்டிய உணவு நம்மிடம் இல்லையே!” என்று சொன்னார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்” என்று கூறினார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் தாமே நபி (ஸல்) அவர்களை முன்சென்று வரவேற்பதற்காக நடந்து சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் அபூதல்ஹா (ரலி) அவர்கள் இருக்க வீட்டுக்குள் நுழைந்தார்கள். பிறகு “உம்மு சுலைமே! உம்மிடம் இருப்பதைக் கொண்டுவா!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். உடனே உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதைத் துண்டு துண்டாகப் பிய்க்கும்படி) உத்தரவிட, அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. உம்மு சுலைம் (ரலி) அவர்கள், தம்மிடமிருந்த தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவன் நாடிய (பிஸ்மில்லாஹ் மற்றும் இதர பிரார்த்தனை வரிகள் சில)வற்றைச் சொன்னார்கள். பிறகு, “பத்துப் பேருக்கு (உள்ளேவர) அனுமதியளியுங்கள்” என்று (அபூதல்ஹா (ரலி) அவர்களிடம்) சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதியளித்தார்கள். பிறகு அவர்கள் வயிறு நிரம்பும்வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு “பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதி யளியுங்கள்!” என்று கூறினார்கள். அவ்வாறே அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறு நிரம்ப உண்டுவிட்டு வெளியேறினார்கள். பின்னர், இன்னும் பத்துப் பேருக்கு அனுமதியளியுங்கள் என்றார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்களும் அனுமதியளித்தார்கள். (இவ்வாறு வந்திருந்த) மக்கள் அனைவரும் வயிறு நிரம்பும்வரை உண்டார்கள். அப்படி உண்ட மக்கள் எழுபது அல்லது எண்பது பேர் ஆவர்.86 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செயல்கள் அனைத்தும் எண்ணத் தைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. எனவே, எவரது புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்திப்படுத்துவதை) நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும் அவ்வாறே) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும். எவரது ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகத்தான் இருக்கும். இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.88 அத்தியாயம் :
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தபூக் போருக்குச் செல்லாமல் பின் தங்கிவிட்ட மூவரான எங்களைக் குறித்து) அல்லாஹ் “போருக்குச் செல்லாமல் பின்தங்கிவிட்ட மூவர்” என்று தொடங்கும் (9:118ஆவது) வசனத்தை அருளினான். இந்த ஹதீஸின் இறுதியில் கஅப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் “(அல்லாஹ்வின் தூதரே!) எனது பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வமனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிட்டுக்கொள்வதற்காக) தர்மமாகத் தந்துவிடுகிறேன்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள் செல்வத்தில் ஒரு பகுதியை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது” என்று கூறினார்கள். இதை, கஅப் (ரலி) அவர்கள் (தமது இறுதிக் காலத்தில்) கண்பார்வை இழந்து விட்டபோது அன்னாரைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த அன்னாரின் புதல்வர் அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.90 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (நீண்ட நேரம்) தங்கியிருந்து அவர் வீட்டில் தேன் அருந்துவது வழக்கம். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள், நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் வீட்டிற்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் ‘தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா?’ என்று கூற வேண்டும் எனக் கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம். எங்கள் இருவரில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது வீட்டில்) தேன் அருந்தினேன். ஆனால், இனி ஒருபோதும் நான் இவ்வாறு செய்யமாட்டேன்” என்று கூறிவிட்டார்கள். அப்போது, “நபியே! அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ள ஒன்றை நீர் ஏன் விலக்கிக்கொள்கிறீர்?” என்று தொடங்கும் (66:1ஆவது) வசனம் அருளப்பெற்றது. (66:4ஆவது வசனத்தில்) “நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால்...” என்பது ஆயிஷா (ரலி) அவர்களையும் ஹஃப்ஸா (ரலி) அவர் களையும் குறிக்கிறது. (66:3ஆவது வசனத்தில்) “நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசிய மாகச் சொல்லியிருந்தார்” என்பது, “இல்லை; நான் தேன்தான் அருந்தினேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் குறிக்கிறது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹிஷாம் பின் யூசுஃப் (ரஹ்) அவர்களிட மிருந்து இப்ராஹீம் பின் மூசா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில், “நபி (ஸல்) அவர்கள், இனிமேல் நான் ஒரு போதும் இவ்வாறு செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டேன். இதை யாரிடமும் தெரிவித்துவிடாதே!” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.92 அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நேர்த்திக்கடன் செய்ய வேண்டா மென அவர்களுக்குத் தடை விதிக் கப்படவில்லையா? நபி (ஸல்) அவர்கள் “நேர்த்திக்கடன், (விதியில்) எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக்கொணரப்படுகிறது” என்று கூறினார்கள்.93 அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமெனத் தடை விதித் தார்கள். மேலும், “நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)” என்று சொன் னார்கள்.94 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நேர்த்திக்கடனானது, விதியில் எழுதப்படாத எந்தவொன்றையும் மனிதனிடம் கொண்டுவந்துவிடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே நேர்த்திக்கடன் அவனைக் கொண்டுசெல்கிறது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து இறைவன் (செல்வத்தை) வெளிக்கொணர்கிறான். இதற்குமுன் எந்தக் காரணத்திற்காக (ஏழைக்கு) அவன் வழங்காமல் இருந்தானோ அதே காரணத்திற்காக (இப்போது) வழங்கத் தொடங்கிவிடுகிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.95 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். -இதன் அறிவிப் பாளரான இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தலைமுறையினரைக் குறிப் பிட்ட பின்னர் இரண்டு தலைமுறையினரைக் கூறினார்களா? மூன்று தலைமுறை யினரைக் கூறினார்களா? என்பது எனக்குத் தெரியாது.- என்று கூறினார்கள். தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் நேர்ந்துகொள்வார்கள். ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள்; நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கப்படாது. அவர்கள் தாமாகவே சாட்சியமளிக்க முன்வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும். இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.96 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றும் முகமாக) அவனுக்கு அவர் கீழ்ப்படியட்டும்! அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறுசெய்திட வேண்டாம். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப்) பள்ளிவாசலில் ஓர் இரவு ‘இஃதிகாஃப்’ இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ந்துகொண்டேன். (இப்போது அதை நிறைவேற்ற வேண்டுமா?)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுங்கள்” என்று சொன்னார்கள்.97 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் உபாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள், நேர்ந்துகொண்டுவிட்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்ட தம் தாயின் நேர்த்திக்கடன் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர் தம் தாயாருக்காக நேர்த்திக்கடனை நிறைவேற்றிடுமாறு தீர்ப்பளித்தார்கள். அதுவே பின்னர் வழிமுறையாக ஆகிவிட்டது.98 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (உக்பா பின் ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்து கொண்டு (அதை நிறைவேற்றாமல்) இறந்துவிட்டார்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறை வேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்” என்றார்கள்.99 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றும் முகமாக) அவனுக்கு அவர் கீழ்ப்படியட்டும்! அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறுசெய்திட வேண்டாம். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.100 அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “இ(ந்த முதிய)வர் தம்மை (இவ்விதம்) வேதனை செய்துகொள்வது அல்லாஹ் வுக்குத் தேவையற்றது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அ(ந்த முதிய)வர் தம்முடைய இரு புதல்வர்களுக்கிடையே (தொங்கியவாறு கால்கள் பூமியில் இழுபட) நடந்துவந்ததை நபி (ஸல்) அவர்கள் பார்(த்துவிட்டு, விவரம் கேட்க, ‘நேர்த்திக்கடன்’ என்று மக்கள் கூறியபோதுதான் மேற்கண்டவாறு தெரி வி)த்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.101 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (ஒட்டகத்தின்) ‘மூக்கணாங் கயிறை’ அல்லது ‘வேறொரு பொருளைத்’ தமது கையில் கட்டிக்கொண்டு (புனித) கஅபாவைச் சுற்றிக்கொண்டிருந்ததை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அதைத் துண்டித்துவிட்டார்கள்.102 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (புனித) கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தபோது ஒரு மனிதரைக் கடந்துசென்றார்கள். அவர் இன்னொரு மனிதரை மூக்கணாங்கயிறிட்டு இழுத்துச் சென்றுகொண்டிருந்தார். உடனே தமது கரத்தால் அக்கயிற்றைத் துண்டித்துவிட்ட நபி (ஸல்) அவர்கள், “இவரைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்க” என உத்தரவிட்டார்கள்.103 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழ்த்திக்கொண்டிருந்தபோது ஒரு மனிதர் (வெயிலில்) நின்றுகொண்டி ருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், “(இவர் பெயர்) அபூஇஸ்ராயீல். இவர், நின்றுகொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் எனவும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிóல்தான் இருப்பேன்) எனவும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் எனவும் நேர்ந்துகொண்டுள்ளார்” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும். நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹகீம் பின் அபீஹுர்ரா அல் அஸ்லமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் “வருகின்ற எல்லா நாட்களி லும் நோன்பு நோற்பேன்” என நேர்ந் திருக்க, எதேச்சையாக அது ஹஜ்ஜுப் பெருநாளாகவோ அல்லது நோன்புப் பெருநாளாகவோ அமைந்துவிட்டால் (என்ன செய்வது?) என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி உள்ளது’ என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளன்றும் நோன்புப் பெருநாளன்றும் நோன்பு நோற்பவர்களாக இருக்கவு மில்லை; இரு பெருநாட்களில் நோன்பு நோற்பதை (அனுமதிக்கப்பட்டதாக) அவர்கள் கருதவுமில்லை” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களு டன் இருந்தேன். அப்போது அவர்களி டம் ஒருவர், “நான் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு ‘செவ்வாய்கிழமையும்’ அல்லது ‘புதன்கிழமையும்’ நோன்பு நோற்க நேர்ந்துகொண்டுள்ளேன். ஆனால், எதேச்சையாக இந்த நாள் ஹஜ்ஜுப் பெருநாளாக அமைந்துவிட்டது (நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வோ நேர்த்திக்கடனை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளான். (அதே நேரத்தில்) ஹஜ்ஜுப் பெருநாளன்று நோன்பு நோற்கக் கூடாதென (அல்லாஹ்வின் தூதர் மூலம்) நமக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர் திரும்பவும் (அதே கேள்வியைக்) கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் முன்புபோலவே பதிலளித்தார்கள்; கூடுதலாக எதுவும் கூறவில்லை.105 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘கைபர்’ தினத்தன்று (வெற்றி கண்டு) புறப்பட்டோம். நாங்கள் (அந்தப் போரில்) பொன்னையோ வெள்ளியையோ போர்ச்செல்வமாகப் பெறவில்லை. (அவையல்லா கால்நடைச்) செல்வங்கள், ஆடைகள், உபயோகப் பொருட்கள் ஆகியவற்றையே பெற்றோம். ‘பனுள்ளுபைப்’ எனும் குலத்தாரில் ரிஃபாஆ பின் ஸைத் என்ற ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ‘மித்அம்’ எனப்படும் ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘வாதில் குரா’ எனும் இடத்தை நோக்கிச் சென்று, அந்த இடத்திற்கு வந்துசேர்ந்த போது ‘மித்அம்’ என்ற அந்த அடிமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக் கிக்கொண்டிருந்தார். அப்போது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று மித்அமை(த் தாக்கி)க் கொன்றுவிட்டது. இதைக் கண்ட மக்கள் “அவருக்குச் சொர்க்கம் கிடைத்துவிட்டது; வாழ்த்துகள்” என்றனர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்படிச் சொல்லாதீர்கள். என்னுயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவற்றிலிருந்து கைபர் அன்று அவர் எடுத்துக்கொண்டுவிட்ட போர்வை அவர்மீது நரக நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது” என்று கூறினார்கள். இதை மக்கள் செவியுற்றபோது, ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ‘ஒரு செருப்பு வாரை’ அல்லது ‘இரு வார்களைக்’ கொண்டுவந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் “(இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இது சாதாரண செருப்புவாராக இருந்திராது. மாறாக,) ‘நெருப்புவாராக’ அல்லது ‘இரு நெருப்புவார்களாக’ மாறியிருக்கும்” என்று கூறினார்கள்.109 அத்தியாயம் :