அனைத்து இஸ்லாம் நூலகம்

79 - அனுமதி கேட்டல்

1

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை அவருக்கே உரிய (அழகிய) உருவத்தில் படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது, “நீங்கள் சென்று, அங்கு அமர்ந்துகொண்டிருக்கும் வானவர்களுக்கு முகமன் (சலாம்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அதுதான் உங்களது முகமனும் உங்கள் வழித்தோன்றல்களின் முகமனும் ஆகும்” என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), “அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்களுக்குச் சாந்தி நிலவட்டும்) என்று (முகமன்) சொன்னார்கள். “சாந்தியும் இறைவனின் கருணையும் (உங்கள்மீது நிலவட்டும்)” என்று வானவர்கள் பதில் கூறினார்கள். அவர்கள் (தங்கள் பதிலில்) ‘இறைவனின் கருணையும்’ (வ ரஹ்மத்துல்லாஹ்) என்பதைக் கூடுதலாகக் கூறினார்கள். ஆகவே, (மறுமை நாளில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர் களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும் அழகிலும்) குறைந்து கொண்டேவருகின்றன. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3 அத்தியாயம் :

2

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக்கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகானவராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். (அப்போது) ‘கஸ்அம்’ குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டு வந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவரைக் கவர்ந்தது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்தபோது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்லின் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்க விடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள். அப்போது அப்பெண், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார் கள்மீது விதித்துள்ள ஹஜ், என் தந்தை யின்மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்; வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. ஆகவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “ஆம் (நிறைவேறும்)” என்று பதிலளித்தார்கள்.5 அத்தியாயம் :

3

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக்கொள்கிறோம்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “சாலையின் உரிமை என்ன? அல்லாஹ்வின் தூதரே!” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், “(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்குப் பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.6 அத்தியாயம் :

4

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களைப் பின்பற்றித்) தொழும் போது ‘அஸ்ஸலாமு அலல்லாஹி கப்ல இபாதிஹி, அஸ்ஸலாமு அலா ஜிப்ரீல, அஸ்ஸலாமு அலா மீகாயீல, அஸ்ஸ லாமு அலா ஃபுலானின் வ ஃபுலானின்’ (அடியார்களுக்குமுன் அல்லாஹ்வுக்கு முகமன் உண்டாகட்டும். (வானவர்) ஜிப்ரீல்மீது சாந்தி உண்டாகட்டும். மீக்காயீல்மீது சாந்தி உண்டாகட்டும். இன்னார் இன்னார்மீது சாந்தி உண்டா கட்டும்) என்று கூறிவந்தோம். நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கித் திரும்பி, “நிச்சயமாக அல்லாஹ்வே ‘சலாம்’ (சாந்தியளிப்ப வன்) ஆக இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர் தொழுகையின் அமர்வில் இருக்கும் போது ‘அத்தஹிய்யாத்து லில்லாஹி, வஸ்ஸலவாத்து, வத்தய்யிபாத்து; அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன’ (சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் வளமும் ஏற்படட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர்மீதும் சாந்தி உண்டாகட்டும்) என்று கூறட்டும். இதை நீங்கள் கூறினாலே வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்து நல்லடியார்களுக்கும் சலாம் கூறியதாக அமையும். ‘அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிகூறுகிறேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிகூறுகிறேன்) என்றும் கூறட்டும். பிறகு, தாம் நாடிய பிரார்த்தனையை ஓதிக்கொள்ளலாம்” என்று சொன்னார்கள்.9 அத்தியாயம் :

5

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங்குழுவினருக்கும் (முதலில்) முகமன் (சலாம்) கூறட்டும்.10 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

6

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங்குழுவினருக்கும் (முதலில்) முகமன் (சலாம்) சொல்லட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

7

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங்குழுவினருக்கும் (முதலில்) முகமன் (சலாம்) சொல்லட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

8

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், சிறு குழுவினர் பெருங்குழுவினருக்கும் (முதலில்) முகமன் (சலாம்) சொல்லட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

9

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்குமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். (அவையாவன:) 1. நோயாளிகளை நலம் விசாரிப்பது. 2. ஜனாஸாக்களைப் பின்தொடர்ந்து செல்வது. 3. தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால் அவருக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று மறுமொழி கூறுவது. 4. நலிந்தவருக்கு உதவி செய்வது.5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு ஒத்தாசை செய்வது. 6. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது. 7. சத்தியம் செய்தவர் அதை நிறைவேற்ற உதவுவது. (பின்வருவனவற்றைச் செய்யக் கூடாதென) தடை செய்தார்கள்: 1. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது. 2. (ஆண்கள்) பொன்மோதிரம் அணிவது. 3. மென்பட்டுத் திண்டில் அமர்ந்து பயணிப்பது. 4. சாதாரணப் பட்டு அணிவது. 5. அலங்காரப் பட்டு அணிவது. 6. எதிப்தியப் பட்டு அணிவது. 7. தடித்த பட்டு அணிவது.11 அத்தியாயம் :

10

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “(பசித்தவருக்கு) உணவ ளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக் கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் முகமன் (சலாம்) சொல்வதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.12 அத்தியாயம் :

11

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட் களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து இவரைவிட்டு அவரும், அவரைவிட்டு இவரும் முகம் திருப்பிக் கொள்வர். (இவ்விதம் செய்யலாகாது.) இவர்கள் இருவரில் சலாமை முதலில் சொல்பவரே சிறந்தவர் ஆவார். இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.13 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதை நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து மூன்று முறை செவியுற்றுள்ளேன். அத்தியாயம் :

12

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தபோது எனக்குப் பத்து வயது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாழ்வி(ன் இறுதிப் பகுதியி)ல் பத்தாண்டு காலம் நான் அவர்களுக்குச் சேவகம் செய்தேன். பர்தா தொடர்பான வசனம் அருளப்பெற்றது குறித்து மக்களில் நானே மிகவும் அறிந்தவனாயிருந்தேன். அது குறித்து உபை பின் கஅப் (ரலி) அவர்கள் என்னிடம் கேட்டு(த் தெரிந்து) உள்ளார்கள். (அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மணந்து தாம்பத்திய உறவைத் தொடங்கிய சந்தர்ப்பத்தில் தான் (இந்த வசனம்) ஆரம்பமாக அருளப்பெற்றது. நபி (ஸல்) அவர்கள் ஸைனபின் மணாளராக இருந்தபோது (மணவிருந்துக்காக) மக்களை அழைத்தார் கள். மக்கள் வந்து உணவருந்திவிட்டு வெளியேறினர். அவர்களில் ஒரு குழுவினர் மட்டும் (எழுந்து செல்லாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகிலேயே நீண்ட நேரம் இருந்தனர். அவர்கள் வெளியேறட்டும் என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நானும் அவர்களுடன் வெளியேறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடக்க, நானும் அவர்களுடன் நடந்தேன். இறுதியில் ஆயிஷா (ரலி) அவர்களது அறையின் நிலைப்படிக்கு வந்தார்கள். பிறகு அக்குழுவினர் வெளியேறியிருப்பார்கள் என்று எண்ணியவாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸைனப் அவர்களின் இல்லத்திற்குத்) திரும்பினார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். ஸைனப் (ரலி) அவர்களிடம் வந்தபோது அந்தக் குழுவினர் கலைந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தார்கள். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்) திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். (இப்போதும்) ஆயிஷா (ரலி) அவர்களது அறையின் நிலைப் படிக்கு வந்தார்கள். அக்குழுவினர் வெளியேறியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் திரும்பினார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். அப்போது அந்தக் குழுவினர் வெளியேறிச் சென்றுவிட்டிருந்தனர். அப்போதுதான் பர்தா தொடர்பான (33:53ஆவது) இறைவசனம் அருளப் பெற்றது. உடனே எனக்கும் தமக்கு மிடையே நபி (ஸல்) அவர்கள் திரையிட்டார்கள்.14 அத்தியாயம் :

13

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டபோது மக்கள் வந்து (மணவிருந்து) உண்டுவிட்டு, பிறகு (எழுந்து செல்லாமல் அங்கேயே) அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்குத் தயாராவதைப் போன்று காட்டலானார்கள். ஆனால், மக்கள் எழுந்தபாடில்லை. இதைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்றபோது மக்களில் சிலரும் எழுந்து சென்றனர். மற்றவர்கள் அமர்ந்துகொண்டிருந்தார்கள். (வெளியில் சென்றுவிட்டு) நபி (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைய வந்தபோது அந்தச் சிலபேர் (அப்போதும்) அமர்ந்துகொண்டேயிருந்தார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவர்களும் எழுந்து நடந்தார்கள். (மீண்டும் வெளியில் சென்றிருந்த) நபி (ஸல்) அவர்களிடம் நான் (சென்று அந்தச் சிலர் எழுந்து சென்று விட்டதைத்) தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். (அவர்களுடன்) நானும் நுழையப் போனேன். அப்போதுதான் எனக்கும் தமக்குமிடையே நபி (ஸல்) அவர்கள் (ஹிஜாப்) திரையிட்டார்கள். மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை” எனும் (33:53ஆவது) வசனத்தை அருளினான். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: ‘விருந்தளிப்பவர் (அவையிலிருந்து) எழுவதற்கும் வெளியே செல்வதற்கும் விருந்தாளிகளிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை’ என்றும், ‘விருந்தாளிகள் எழுந்து செல்லட்டும் என்ற நோக்கில் தாம் எழுந்துபோகத் தயாராவதுபோல் காட்டலாம்’ என்றும் இந்த ஹதீஸிலிருந்து (நமக்கு) மார்க்கச் சட்டம் கிடைக்கிறது.15 அத்தியாயம் :

14

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “தங்கள் துணைவியரை பர்தா அணியச் சொல்லுங்கள். (அதுவே அவர்களுக்குப் பாதுகாப்பு)” என்று கூறுவார்கள். ஆனால், (அப்போது) நபி (ஸல்) அவர்கள் (ஒன்றும்) செய்யவில்லை. நபி (ஸல்) அவர்களின் துணைவியரான நாங்கள் ஒவ்வொரு நாள் இரவிலும் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக ஊருக்கு ஒதுக்குப் புறத்திலுள்ள திறந்த வெளியான) ‘மனாஸிஉ’ எனுமிடத்திற்குச் செல்வோம். (ஒருநாள் நபியவர்களின் துணைவி யார்) சவ்தா பின்த் ஸம்ஆ (ரலி) அவர்கள் (அங்கு செல்ல) வெளியேறினார்கள். அவர் உயரமான பெண்ணாயிருந்தார். அப்போது ஓர் அவையில் அமர்ந்திருந்த உமர் (ரலி) அவர்கள் அவரைப் பார்த்து, “சவ்தாவே! தங்களை நாம் அடையாளம் கண்டுகொண்டோம்” என்று பர்தா சட்டம் அருளப்பெற வேண்டுமென்ற பேரார்வத்தில் கூறினார்கள். பிறகு, அல்லாஹ் பர்தா தொடர்பான வசனத்தை அருளினான்.16 அத்தியாயம் :

15

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றினுள் ஒரு துவாரத்தின் வழியாக ஒருவர் எட்டிப் பார்த்தார். நபி (ஸல்) அவர்களுடன் ஈர்வலிச் சீப்பு ஒன்று இருந்தது. அதனால் தமது தலையை அவர்கள் கோதிக்கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்த்ததைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், “நீ (துவாரத்தின் வழியாகப்) பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணில் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது” என்று சொன்னார்கள்.17 அத்தியாயம் :

16

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் ‘கூர்முனை யுடன்’ அல்லது ‘கூர்முனைகளுடன்’ அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவருடைய கண்ணில்) குத்தப்போனதை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்று உள்ளது. அத்தியாயம் :

17

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (பாலுறுப்பின் விபசாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. பாலுறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸில் கூறப் பட்டுள்ளதைவிடச் சிறு பாவங்களுக்கு எடுத்துக்காட்டாக வேறெதையும் நான் காணவில்லை.18 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

18

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (சபையோருக்கு, அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக்கொள்வதற்காக) அதை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள்.20 அத்தியாயம் :

19

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அன்சாரிகளின் அவையொன் றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூசா (ரலி) அவர்கள் வந்து, “நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களுடைய வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பிவிட்டேன். பின்பு உமர் (ரலி) அவர்கள் (உங்களை நான் வரச்சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை” என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், “(தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பிவிடட்டும்’ என்று கூறியுள்ளார்கள்” என்றேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு நபியவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டுவர வேண்டும்’ என்று சொன்னார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?” என்று கேட்டார்கள். அதற்கு (அங்கிருந்த) உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்” என்று சொன்னார்கள். அங்கு நான்தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூமூசா (ரலி) அவர்களுடன் சென்று, “நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்” என்று உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

20

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அவர்களின் இல்லத்திற் குள்) நுழைந்தேன். அங்கு அவர்கள் ஒரு பாத்திரத்தில் பால் இருக்கக் கண் டார்கள். உடனே (என்னிடம்) “அபூஹிர்! திண்ணைவாசிகளிடம் சென்று, அவர் களை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றார்கள். ஆகவே, நான் அவர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின்) இல்லத்தினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அப்போது அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. பிறகு அவர்கள் நுழைந்தனர்.22 அத்தியாயம் :

21

ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் செய்துவந்தார்கள்” என்று கூறி னார்கள். அத்தியாயம் :

22

அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நாங்கள் வெள்ளிக்கிழமை அன்று (மிகவும்) மகிழ்ச்சியாக இருப்போம்” என்று சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான், “ஏன்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “எங்களுக்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவர் மதீனாவிலுள்ள ‘புளாஆ’ எனும் பேரீச்சந் தோட்டத்திற்கு ஆளனுப்பி, (அங்கு பயிராகும்) தண்டுக்கீரையின் தண்டு களைக் கொண்டுவரச் செய்து, அதை ஒரு பாத்திரத்தில் இடுவார். அத்துடன் சிறிது தொலி நீக்கப்படாத கோதுமையை அரைத்து அதில் இடுவார். நாங்கள் ஜுமுஆ தொழுதுவிட்டுத் திரும்பிவந்து அந்த மூதாட்டிக்கு சலாம் சொல்வோம். அப்போது அவர் அந்த உணவை எங்கள்முன் வைப்பார். அதன் காரணத்தால்தான் நாங்கள் (வெள்ளிக்கிழமை) மகிழ்ச்சியோடு இருப்போம். ஜுமுஆவிற்குப் பிறகுதான் நாங்கள் மதிய ஓய்வு எடுப்போம்; காலை உணவையும் உட்கொள்வோம்.23 அத்தியாயம் :

23

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்) “ஆயிஷா! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கின்றார்” என்று சொன்னார்கள். நான், “வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி” (அவர் மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும் பொழியட்டும்) என்று (பதில் சலாம்) சொல்லிவிட்டு, “நாங்கள் பார்க்காதவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னேன். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில அறிவிப்புகளில், ‘வ பரக்காத்துஹு’ (இறைவன் வழங்கும் வளங்களும்) என்று (கூடுதலாக) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் எனக் காணப்படுகிறது.24 அத்தியாயம் :

24

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், “யார் அது?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “நான்தான்” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நான் நான் என்றால்...?” என அதை விரும்பாத வர்களைப் போன்று கூறினார்கள். அத்தியாயம் :

25

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் நுழைந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருந் தார்கள். (பள்ளிவாசலுக்குள் நுழைந்த) அவர் தொழுதார். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து அவர்களுக்கு சலாம் சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “வ அலைக்கஸ் ஸலாம்; திரும்பச் சென்று தொழு! ஏனெனில், நீ (முறையாகத்) தொழவில்லை” என்றார்கள். ஆகவே, அவர் திரும்பிச் சென்று தொழுதார். பிறகு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்னார். அப்போதும் அவர்கள் “வ அலைக்கஸ் ஸலாம். திரும்பச் சென்று தொழு! ஏனெனில், நீ (முறையாகத்) தொழவில்லை” என்றார்கள். இரண்டாம் தடவையிலோ, அல்லது அதற்குப் பின்போ அவர் “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத்தாருங்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ தொழ நினைத்தால் (முதலில்) நிறைவாக அங்கத் தூய்மை (‘உளூ’) செய்! பிறகு கிப்லாவை முன்னோக்கி ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல். பிறகு குர்ஆனில் உனக்குத் தெரிந்ததை ஓதிக்கொள்! பிறகு (குனிந்து) ‘ருகூஉ’ செய்; அதில் (சற்று நேரம்) நிலைகொள். பின்னர் தலையை உயர்த்தி நேராக நில். பிறகு சிரவணக்கம் (சஜ்தா) செய்; அதில் (சற்று நேரம்) நிலை கொள். பின்னர் தலையை உயர்த்தி (சற்று நேரம்) நன்றாக அமர்ந்திரு. பிறகு (மீண்டும்) சிரவணக்கம் செய்; அதில் (சற்று நேரம்) நிலைகொள். பின்னர் எழுந்து நன்றாக அமர்ந்திரு. பிறகு இதே (நடை) முறையை உன் தொழுகை முழுவதிலும் கடைப்பிடி” என்று சொன்னார்கள்.28 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றின் இறுதியில் (‘எழுந்து நன்றாக அமர்ந்திரு’ என்பதற்குப் பதிலாக) அபூஉசாமா (ரஹ்) அவர்கள் ‘(அடுத்த ரக்அத்துக்காக) எழுந்து நேராக நில்’ என்று கூறினார்கள். அத்தியாயம் :

26

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “பிறகு நீ தலையை உயர்த்தி (சற்று நேரம்) நிலையாக அமர்ந்திரு” என்று சொன்னார்கள்.29 அத்தியாயம் :

27

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருநாள்) என்னிடம், “(இதோ வானவர்) ஜிப்ரீல் உனக்கு சலாம் உரைக்கின்றார்” என்று சொன்னார்கள். நான், “வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி” (அவர்மீதும் இறை சாந்தியும் அவனுடைய கருணையும் பொழியட்டும்) என்று (பதில் சலாம்) சொன்னேன்.31 அத்தியாயம் :

28

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கழுதையொன்றில் சேணம் விரித்து, அதில் ‘ஃபதக்’ நகர் முரட்டுத் துணி விரித்து, அதில் அமர்ந்தவாறு பயணமானார்கள். என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டார்கள். ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குலத்தாரிடையே (உடல் நலமில்லாமல்) இருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள். -இது பத்ர் போர் நிகழ்ச்சிக்கு முன்னால் நடந்தது.- அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓர் அவையைக் கடந்து சென்றார்கள். அந்த அவையில் முஸ்லிம்களும் சிலை வழிபாட்டாளர்களான இணைவைப்போரும் யூதர்களும் கலந்து இருந்தார்கள். அவர்களிடையே (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலும் இருந்தார். அதே அவையில் (கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களும் இருந்தார்கள். (எங்கள்) வாகனப் பிராணியின் (காலடிப்) புழுதி அந்த அவையைச் சூழ்ந்தபோது அப்துல்லாஹ் பின் உபை தமது மேல்துண்டால் தமது மூக்கைப் பொத்திக்கொண்டு, “எங்கள் மீது புழுதியைக் கிளப்பாதீர்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அந்த அவை யோருக்கு சலாம் சொன்னார்கள். பிறகு, தமது வாகனத்தை நிறுத்தி இறங்கி, அவர்களை அல்லாஹ்வின் (மார்க்கத்தின்)பால் அழைத்தார்கள். அவர்களுக்குக் குர்ஆன் (வசனங்களை) ஓதியும் காட்டினார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல், “மனிதரே! நீர் கூறுகின்ற விஷயம் உண்மையாயிருப்பின், அதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை. (ஆனாலும்,) அதை எங்களுடைய (இது போன்ற) அவைகளில் கூறி எங்களுக்குத் தொல்லை கொடுக்காதீர். உமது இருப்பிடத்திற்குச் செல்லும். எங்களில் யார் உம்மிடம் வருகிறார்களோ அவர்களுக்கு (இதை) எடுத்துச் சொல்லும்” என்றார். (இதைக் கேட்ட) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள், “(இல்லை! அல்லாஹ்வின் தூதரே! இதை) (இந்த) அவையிலேயே எங்களுக்கு எடுத்துரையுங்கள். ஏனெனில், நாங்கள் அதை விரும்புகின்றோம்” என்று சொன்னார்கள். இதையடுத்து முஸ்லிம்களும் இணைவைப்போரும் யூதர்களும் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டே ஒருவர்மீது ஒருவர் பாய்ந்து (தாக்கிக்)கொள்ள முனைந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்கள் அனைவரும் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக்கொண்டேயிருந்தார்கள். (அமைதி ஏற்பட்ட) பிறகு தமது வாகனத்தில் ஏறி (உடல் நலமில்லாமல் இருந்த) சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் சென்று, “சஅதே! அபூஹுபாப் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கூறி, “அப்துல்லாஹ் பின் உபை இப்படி இப்படிக் கூறினார்” என்று தெரிவித்தார்கள். அதற்கு சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அவரை மன்னித்து விட்டு விடுங்கள், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த (மதீனா) நகரவாசிகள் அவருக்குக் கிரீடம் அணிவித்து அவருக்கு முடிசூட்டிட முடிவு செய்திருந்த நிலையில்தான் அல்லாஹ் தங்களுக்கு இ(ந்த மார்க்கத்)தை வழங்கினான். அல்லாஹ் தங்களுக்கு வழங்கிய சத்தியத்தின் மூலம் அவர்களின் முடிவை அவன் நிராகரித்தபோது அதனால் அவர் பொருமினார். அதுதான் தாங்கள் பார்த்தபடி அவர் நடந்துகொண்டதற்குக் காரணம்” என்று கூறினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்வை மன்னித்துவிட்டார்கள்.32 அத்தியாயம் :

29

அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள், தாம் தபூக் போரில் கலந்துகொள்ளாமல் பின்வாங்கியது குறித்துக் கூறுகையில் (பின்வருமாறு) தெரிவித்தார்கள்: எங்களிடம் (யாரும்) பேசக் கூடா தென நபி (ஸல்) அவர்கள் (முஸ்லிம் களுக்குத்) தடை விதித்துவிட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வேன். அவர்களுக்கு சலாம் சொல்லிவிட்டு எனக்குப் பதில் சலாம் சொல்வதற்காக அவர்கள் தம் உதடுகளை அசைக்கிறார்களா, இல்லையா என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். இறுதியாக ஐம்பது நாட்கள் நிறைவடைந்தன. நபி (ஸல்) அவர்கள் (அன்றைய) ஃபஜ்ர் தொழுகையை முடித்தபோது எங்களது பாவமன்னிப்பு வேண்டுதலை அல்லாஹ் ஏற்றுக்கொண்டுவிட்டதாக அறிவித்தார்கள்.35 அத்தியாயம் :

30

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங் களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினர். அவர்கள் கூறுவதைப் புரிந்துகொண்ட நான், “வ அலைக்குமுஸ்ஸாமு வல்லஅனா” (அவ்வாறே உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! அனைத்துச் செயல்களிலும் நளினத்தைக் கையாள்வதையே அல்லாஹ் விரும்புகின்றான்” என்று சொன்னார்கள். உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதைத் தாங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் (‘அஸ்ஸாமு’ எனும் சொல்லைத் தவிர்த்து) ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) எனப் பதிலளித்துவிட்டேன்” என்று கூறினார்கள்.36 அத்தியாயம் :

31

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யூதர்கள் உங்களுக்கு சலாம் சொன் னால் அவர்களில் சிலர் ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் உண்டா கட்டும்) என்றே கூறுவர். ஆகவே, (அவர்களுக்குப் பதிலாக) ‘வ அலைக்க’ (அவ்வாறே உனக்கு உண்டாகட்டும்) என்று சொல். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

32

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வேதக்காரர்கள் உங்களுக்கு சலாம் சொன்னால் ‘வ அலைக்கும்’ (அவ்வாறே உங்களுக்கு நேரட்டும்) என்று (பதில்) கூறுங்கள். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

33

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரைவீரர்களான என்னையும் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களையும் அபூமர்ஸத் கன்னாஸ் பின் ஹுஸைன் அல்ஃகனவீ (ரலி) அவர்களையும், “நீங்கள் ‘ரவ்ளத்து காக்’ எனும் இடம்வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகப் பல்லக்கில்) இணைவைப்பாளர்களில் ஒருத்தி இருப்பாள். இணைவைப்பாளர்க(ளின் தலைவர்க)ளுக்கு ஹாத்திப் பின் அபீ பல்த்தஆ அனுப்பியுள்ள (நமது இரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். (அவளிடமிருந்து அக்கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)” என்று கூறி அனுப்பினார்கள். (நாங்கள் புறப்பட்டுச் சென்றோம்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தனது ஒட்டகத்தில் சென்றுகொண்டிருக்க அவளை நாங்கள் சென்றடைந்தோம். “உன்னிடம் உள்ள கடிதம் எங்கே? (அதை எடு)” என்று கேட்டோம். அவள், “என்னிடம் கடிதம் ஏதுமில்லை” என்று பதிலளித்தாள். அவளிருந்த ஒட்டகத்தை நாங்கள் படுக்கவைத்து அதன் பல்லக்கினுள் (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். (கடிதம்) ஏதும் கிடைக்கவில்லை. என் நண்பர்கள் இருவரும், “கடிதம் ஏதும் நமக்குக் கிடைக்கவில்லையே!” என்று சொன்னார்கள். நான் (அவளிடம்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்று நான் உறுதியாக அறிந்துள்ளேன். எவன்மீது சத்தியம் செய்யப்படுமோ அ(ந்த இறை)வன்மீதாணையாக! ஒன்று நீயாகக் கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை (சோதனையிடுவதற்காக உனது ஆடையை) நான் கழற்ற வேண்டியிருக்கும்” என்று சொன்னேன். நான் விடாப்பிடியாக இருப்பதைக் கண்ட அவள், (கூந்தல் நீண்டு தொங்கும்) தனது இடுப்புப் பகுதிக்குத் தனது கையைக் கொண்டுசென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அந்தக் கடிதத்தை வெளியே எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். (கடிதம் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்களை நோக்கி,) “ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். அவர், “அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விசுவாசமுள்ளவனாக நடந்துகொள்வதைத் தவிர வேறெதுவும் எனக்கு நோக்கமில்லை. நான் (எனது மார்க்கத்தை) மாற்றிக்கொள்ளவுமில்லை; வேறு மதத்தைத் தேடவுமில்லை. இணைவைப்பாளர்(களுக்கு நான் செய்யும் இந்த உதவியால் அவர்)களிடம் எனக்கு ஒரு செல்வாக்கு ஏற்பட்டு, அதன் மூலம் அல்லாஹ் (மக்காவிலிருக்கும்) என் மனைவி, மக்களையும் எனது செல்வத் தையும் பாதுகாக்க வேண்டும் என்றே நான் நினைத்தேன். தங்கள் (முஹாஜிர்) தோழர்கள் அனைவருக்குமே அவர் களுடைய மனைவி, மக்களையும் அவர் களது செல்வத்தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகைய உறவினர்கள் மக்காவில் உள்ளனர்” என்று கூறினார். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “இவர் உண்மை சொன்னார். இவரைப் பற்றி நல்லதையே கூறுங்கள்” என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், “இவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் இறைநம்பிக்கை யாளர்களுக்கும் துரோகமிழைத்துவிட்டார். என்னை விடுங்கள்; இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உமரே! உமக்கென்ன தெரியும்? பத்ர் போரில் கலந்துகொண்டவர்களிடம் அல்லாஹ், ‘நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்; உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது’ என்று கூறிவிட்டிருக்கலாம் அல்லவா?” என்று சொன்னார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்களுடைய கண்கள் கண்ணீர் உகுத்தன. மேலும், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினார்கள்.37 அத்தியாயம் :

34

அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டில் வியாபாரம் செய்வதற்காகச் சென்றிருந்த குறைஷியர் சிலருடன் இருந்தபோது (அந்நாட்டு மன்னர்) ஹிரக்ளீயஸ் என்னை அழைத்துவரும்படி ஆளனுப்பினார். ஆகவே, அவரிடம் நாங்கள் சென்றோம்... பிறகு, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டுவரச் சொன்னார். அப்போது அது வாசிக்கப்பட்டது. அதில் (பின்வரு மாறு) எழுதப்பட்டிருந்தது: பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமான முஹம்மத் (கிழக்கு) ரோமானிய மன்னர் ஹிரக்ளீயஸிற்கு எழுதிக்கொண்டது. அஸ்ஸலாமு அலா மனித் தபஅல் ஹுதா. (நல்வழியைப் பின்தொடர்ந்தோருக்குச் சாந்தி உண்டாகட்டும்). பின்னர்...38 அத்தியாயம் :

35

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) இஸ்ரவேலர்களிடையே வாழ்ந்த ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். “அவர் ஒரு மரக்கட்டையை எடுத்து அதைக் குடைந்து அதற்குள் ஆயிரம் பொற்காசுகளையும் (தமக்குக் கடன் கொடுத்த) தம் நண்பருக்கு ஒரு கடிதத்தையும் உள்ளே வைத்(துக் கடலில் அனுப்பிவைத்)தார்” என்று சொன்னார்கள். மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள், “(இஸ்ரவேலரான) அவர் ஒரு மரக்கட்டையைத் துளையிட்டு அதன் நடுவே அந்தப் பணத்தை வைத்தார். மேலும், தம் நண்பருக்கு ‘இன்னாரிடமிருந்து இன்னாருக்கு’ என ஒரு கடிதம் எழுதி (அதையும் உள்ளே வைத்துக் கடலில் அனுப்பி)னார்” என்று குறிப்பிட்டதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.39 அத்தியாயம் :

36

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக்கொண்டு (யூதர்களான) ‘பனூ குறைழா குலத்தார்’ (கைபர் கோட்டையிலிருந்து) இறங்கி வந்தனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் சஅத் பின் முஆத் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பிட சஅத் அவர்கள் (வாகனத் தில் அமர்ந்தபடி) வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ ‘உங்கள் தலைவரை’ அல்லது ‘உங்களில் சிறந்தவரை’ நோக்கி எழுந்திரு(த்து சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கிவிடு)ங்கள்” என்று (அன்சாரிகளை நோக்கிச்) சொன்னார்கள். சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் (வந்து) நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்தபோது, “(சஅதே!) இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பளிக்கப்போகிறீர்கள்?)” என்றார்கள். சஅத் (ரலி) அவர்கள், “இவர்களில் போரிடும் வலிமை கொண்டவர்கள் கொல்லப்பட வேண்டும்; இவர்களு டைய பெண்களும் குழந்தைகளும் கைது செய்யப்பட வேண்டும் என நான் தீர்ப்பளிக்கிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அரசன் எவ்வாறு தீர்ப்பளிப்பானோ அவ்வாறு நீங்கள் தீர்ப்பளித்துவிட்டீர்கள்” என்று சொன்னார்கள்.41 மற்றோர் அறிவிப்பில், “உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்துள்ளார்கள்” என்பதுவரை இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

37

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம் “முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) நபித்தோழர் களிடையே இருந்ததா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம் (இருந்தது)” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

38

அப்துல்லாஹ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் கரத்தைப் பற்றி இருந்தார்கள்.45 அத்தியாயம் :

39

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் இரு கைகளுக்கிடையே என் கை இருந்த நிலையில், குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத்தருவதைப் போன்று (தொழுகையின் அமர்வில் ஓதப்படும்) தஷஹ்ஹு(த் எனும் அத்த ஹிய்யாத்)தை எனக்கு அவர்கள் கற்றுத் தந்தார்கள். (அது பின்வருமாறு:) அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து, அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்; அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு. (அனைத்துக் காணிக்கைகளும் வணக்கங்களும் பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் வளங்களும் நிலவட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள்மீதும் சாந்தி நிலவட்டுமாக! அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிகூறுகின்றேன். மேலும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும் தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதிகூறுகின்றேன்). நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே (உயிரோடு) இருந்த வரை இவ்வாறு (‘அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு’ -நபியே உங்கள்மீது சாந்தி நிலவட்டும் என்று முன்னிலைப்படுத்தி) சொல்லிவந்தோம். அவர்கள் (உயிர்) கைப்பற்றப்பட்டபோது நாங்கள் ‘அஸ்ஸலாமு அலந் நபிய்யி’ (நபி (ஸல்) அவர்கள்மீது சாந்தி நிலவட்டும்) என்று (படர்க்கையாகக்) கூறலானோம்.47 அத்தியாயம் :

40

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிதயாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது (அவர்களை உடல்நலம் விசாரித்துவிட்டு) அவர்களிடமிருந்து அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் வெளியேறி வந்தார்கள். அப்போது மக்கள், “அபூஹசனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?” என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு “அவர்கள் அல்லாஹ்வின் மாட்சிமையால் நலமடைந்துவிட்டார்கள்” என்று அலீ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்ட அப்பாஸ் (ரலி) அவர்கள், “(மரணக்களையை) நபி (ஸல்) அவர்களிடம் நீர் காணவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு (பிறரது) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆகிவிடப்போகிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இந்த நோயின் காரணத்தால் விரைவில் இறந்துவிடப் போகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். அப்துல் முத்தலிபின் மக்களுடைய முகங்களில் மரணக்களை (இருந்தால்அ)தனை நான் அடையாளம் அறிந்துகொள்வேன். ஆகவே, எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். (அவர்கள் இறந்தபிறகு) இந்த ஆட்சி அதிகாரம் யாரிடமிருக்கும் என்று அவர்களிடம் கேட்டுக்கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால், அதை நாம் அறிந்துகொள்ளலாம். அது பிறரிடத்தில் இருக்கும் என்றால், அவர்களிடம் (அதைக் குறித்து) நாம் கோருவோம். அவர்கள் (தமக்குப்பின் பிரதிநிதி யார் என்பது பற்றி) இறுதியுபதேசம் செய்யலாம்” என்றார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அ(வர்களின் பிரதிநிதியாக ஆட்சி செய்யும் அதிகாரத்)தைக் கேட்டு, நபி (ஸல்) அவர்கள் நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால், (அவர்களுக்குப் பிறகு) மக்கள் ஒருபோதும் நமக்கு அதைத் தரமாட்டார்கள். உறுதியாக! நான் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருபோதும் கேட்கமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.49 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

41

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (ஒரு வாகனத்தில்) அமர்ந் திருந்தேன். அப்போது அவர்கள், “முஆதே!” என்று அழைத்தார்கள். நான், “இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)” என்று சொன்னேன். பிறகு இதைப் போன்றே மூன்றுமுறை அழைத்துவிட்டு, “மக்கள்மீது அல்லாஹ்வுக்கு உள்ள உரிமை என்ன என்று நீ அறிவாயா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை (எனக்குத் தெரியாது)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “மக்கள்மீது அல்லாஹ்வுக்கு உள்ள உரிமை என்னவென்றால், மக்கள் அவனையே வழிபட வேண்டும். அவனுக்கு எதையும் (எவரையும்) இணைகற்பிக்கக் கூடாது” என்றார்கள். பிறகு சிறிது தூரம் சென்றபின் ‘முஆதே!’ என்று அழைத்தார்கள். நான், “இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)” என்று சொன்னேன். “அவ்வாறு செயல்படும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன தெரியுமா? அவர்களை அவன் (மறுமையில்) வேதனை செய்யாமல் இருப்பதுதான்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.51 அத்தியாயம் :

42

ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் மீதாணையாக! (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ரபதா’ எனும் இடத்தில் அபூதர் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுடன் (பாறைகள் நிறைந்த) மதீனாவின் ‘ஹர்ரா’ பகுதியில் இஷா (இரவு) நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது உஹுத் மலை எங்களை எதிர்கொண்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அபூதர்ரே! (இந்த) உஹுத் மலை எனக்காகத் தங்கமாக மாறி, அதிலிருந்து ஒரேயொரு தீனார் (பொற்காசு) என்னிடம் இருந்தாலும் அதை, அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் ‘ஓர் இரவு’ அல்லது ‘மூன்று இரவுகள்’ கழிந்து செல்வதைக்கூட நான் விரும்ப மாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கின்ற தீனாரைத் தவிர” என்று சொன்னார்கள். -(இந்த இடத்தில் அபூதர்) தமது கையால் (வல, இட, முன் ஆகிய பக்கங்களில்) சைகை செய்து காட்டினார்கள்.- பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘அபூதர்ரே!’ என்று அழைத்தார்கள். நான், “இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “(இம்மையில் செல்வம்) அதிகமானவர்களே, (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள். இப்படி இப்படியெல்லாம் (தமது செல்வத்தை இறையடியார்களிடையே) செலவிட்டவர்களைத் தவிர!” என்று சொன்னார்கள். பிறகு என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “அபூதர்! நான் திரும்பி வரும்வரை இந்த இடத்திலேயே இருங்கள்” என்று கூறிவிட்டு நடந்து என்னைவிட்டு (சிறிது தூரம் சென்று) மறைந்துவிட்டார்கள். அப்போது ஒரு குரலைக் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதும் நேர்ந்துவிட்டதோ என்று நான் அஞ்சினேன். நான் (குரல் வந்த திசையை நோக்கிப்) போகலாம் என எண்ணினேன். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “இந்த இடத்திலேயே இருங்கள்” என்று சொன் னது நினைவுக்கு வரவே, அங்கேயே இருந்துவிட்டேன். (நபி (ஸல்) அவர்கள் திரும்பிவந்த தும்,) “அல்லாஹ்வின் தூதரே! ஏதோ குரலை நான் கேட்டேன். உங்களுக்கு ஏதும் நேர்ந்துவிட்டதோ என்று நான் அஞ்சினேன். (அங்கு வரலாம் என்று எண்ணினேன்.) பிறகு உங்களது சொல்லை நினைவுகூர்ந்தேன். ஆகவே, (இங்கேயே) இருந்துவிட்டேன்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது (வானவர்) ஜிப்ரீல் (அவர்களின் குரல்தான்). அவர் என்னிடம் வந்து ‘என் சமுதாயத்தாரில் யார் இறைவனுக்கு எதையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) மரணம் அடைந்துவிடுகின்றாரோ அவர் சொர்க்கம் புகுவார்’ என்று தெரிவித்தார்” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! அவர் விபசாரம் புரிந்தாலுமா? அவர் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “(ஆம்) விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் (சொர்க்கம் புகுவார்)” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூஷிஹாப் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், “மூன்று நாட்களுக்குமேல் அந்தப் பொற்காசு (என்னிடம்) தங்கியிருப்பதை நான் விரும்பமாட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.52 அத்தியாயம் :

43

நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: ஒரு மனிதர் இன்னொரு மனிதரை, அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு, பிறகு இவர் அந்த இடத்தில் அமர வேண்டாம். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.53 அத்தியாயம் :

44

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர், அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிடப்பட்டு, அந்த இடத்தில் மற்றொருவர் அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இதற்கு மாறாக, “நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள்” என்று கூறினார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறினார்:) ஒருவர் தமது இடத்திலிருந்து எழுந்துகொண்டு, அந்த இடத்தில் (மற்றவரை) உட்காரவைப்பதை இப்னு உமர் (ரலி) அவர்கள் வெறுத்தார்கள். அத்தியாயம் :

45

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணந்துகொண்டபோது மக்களை (மணவிருந்துக்காக) அழைத்தார்கள். மக்கள் (வந்து) உணவருந்தியபின் பேசிக்கொண்டு (அங்கேயே) அமர்ந்து விட்டனர். (அவர்கள் எழுந்து செல்லட்டும் என்ற எண்ணத்தில்) நபி (ஸல்) அவர்கள் தாம் எழுந்துபோகத் தயாராக இருப்பதைப் போன்று காட்டலானார்கள். ஆனால், மக்கள் எழவில்லை. இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் எழுந்து (சென்று)விட்டார்கள். அவர்கள் எழுந்தபோது மக்களில் சிலரும் அவர்களுடன் எழுந்து (சென்று)விட்டனர். ஆனால், மூன்று பேர் மட்டும் எழாமல் எஞ்சி இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைய வந்தபோது அந்த மூவரும் அமர்ந்துகொண்டேயிருந்தார்கள். (எனவே, நபி அவர்கள் தமது வீட்டுக்குள் நுழையவில்லை.) பிறகு, அந்த மூவரும் எழுந்து நடக்கலாயினர். உடனே நான் வந்து நபி (ஸல்) அவர்களிடம் அந்த மூவரும் சென்றுவிட்ட விவரத்தைத் தெரிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள். நானும் வீட்டுக்குள் நுழையப்போனபோது நபி (ஸல்) அவர்கள் எனக்கும் தமக்கும் இடையே திரையிட்டுவிட்டார்கள். மேலும், அல்லாஹ் (பர்தா தொடர்பான 33:53ஆவது) வசனத்தை அருளினான்.54 அத்தியாயம் :

46

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் முற்றத்தில் தமது கையை (முழங்காலில்) கட்டிக்கொண்டு குத்துக்காலிட்டு இவ்வாறு அமர்ந்திருந்ததைக் கண்டேன். அத்தியாயம் :

47

அபூபக்ரா நுஃபைஉ பின் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பெரும்பாவங்களி லேயே மிகப்பெரும் பாவங்களை உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “ஆம் (தெரிவியுங்கள்), அல்லாஹ்வின் தூதரே” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பதும் பெற்றோரைப் புண்படுத்துவதும் ஆகும்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

48

பின்னர் சாய்ந்துகொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, “அறிந்துகொள்ளுங்கள்: பொய் பேசுவதும் (மிகப்பெரும் பாவம்தான்)” என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நாங்கள் “அவர்கள் நிறுத்தமாட்டார்களா?” என்றோம்.56 அத்தியாயம் :

49

உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவித்துவிட்டு உடனே (வழக்கத்திற்கு மாறாக) விரைவாகச் சென்று வீட்டுக்குள் நுழைந்தார்கள்.57 அத்தியாயம் :

50

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிலுக்கு நடுவில் தொழுவார்கள். நான் அவர்களுக்கும் கிப்லாவிற்கும் இடையே படுத்துக்கொண்டிருப்பேன். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்படும். எழுந்து அவர்களுக்கு முன்னே செல்ல விரும்பாமல் மெல்லத் தவழ்ந்தபடி செல்வேன்.58 அத்தியாயம் :

51

அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபுல்மலீஹ் (ரஹ்) அவர்கள் (என்னிடம்), நான் உங்கள் தந்தை ஸைத் (ரஹ்) அவர்களுடன் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: நான் (அதிகமாக) நோன்பு நோற்பது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. ஆகவே, (ஒருநாள்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் (அவர்கள் சாய்ந்துகொள்வதற்காக) பேரீச்ச நாரால் நிரப்பப்பட்ட தலை யணையொன்றை வைத்தேன். ஆனால், அவர்கள் தரையின் மீதே அமர்ந்தார்கள். தலையணை எனக்கும் அவர்களுக்கும் இடையே இருந்தது. அப்போது அவர்கள் என்னிடம், “ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்றால்) உமக்குப் போதுமே” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (நான் அதைவிட அதிக நாட்கள் நோன்பு நோற்க சக்தி பெற்றுள்ளேன்)” என்றேன். அவர்கள், “ஐந்து நாட்கள் (நோற்றுக்கொள்க)” என்று சொன்னார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (அதைவிட அதிக நாள் நோன்பு நோற்க சக்தி பெற்றுள்ளேன்)” என்று சொன்னேன். அவர்கள், “(மாதம் ஒன்றுக்கு) ஒன்பது நாட்கள் (நோற்றுக்கொள்க)” என்றார்கள். நான் (மீண்டும்), “அல்லாஹ்வின் தூதரே! (இன்னும் அதிக நாள் நோற்க முடியும்)” என்று சொன்னேன். அவர்கள், “பதினோரு நாட்கள் (நோன்பு நோற்றுக்கொள்க)” என்றார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (அதைவிட அதிக நாள் நோன்பு நோற்கும் சக்தி பெற்றுள்ளேன்)” என்று சொன்னேன். அதற்கு அவர்கள் (இறைத்தூதர்) தாவூத் அவர்களின் நோன்பைவிட மேலான நோன்பில்லை. (அது) ஒருநாள் நோன்பு நோற்பது; ஒருநாள் நோன்பில்லாமல் இருப்பது எனச் சரிபாதிக் காலம் ஆகும் என்றார்கள்.59 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

52

அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஷாம் (சிரியா) நாட்டிற்குச் சென்றேன். அங்கு பள்ளிவாசலுக்குள் சென்று இரண்டு ரகஅத்கள் தொழுதுவிட்டு, “இறைவா! எனக்கு ஒரு (நல்ல) நண்பரைத் தந்தருள்வாயாக!” என்று பிரார்த்தித்தேன். பிறகு (நபித்தோழர்) அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்துகொண்டேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், “நீங்கள் எந்த ஊர்க்காரர்?” என்று கேட்டார்கள். நான், ‘கூஃபாவாசி’ என்று சொன்னேன். அபுத்தர்தா (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா?” என்று ஹுதைஃபா (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு கேட்டார்கள். (தொடர்ந்து) அவர்கள், “தன் தூதரின் நாவால் யாரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா?” என்று அம்மார் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு கேட்டார்கள். (நபி (ஸல்) அவர்களின் பல்துலக்கும்) மிஸ்வாக் குச்சியையும் தலையணையையும் சுமந்து சென்றவர் உங்களிடையே இல்லையா?” என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு கேட்டார்கள். (அவற்றுக்கெல்லாம் நான் ‘ஆம்’ எனப் பதிலளித்தேன். பிறகு,) அபுத்தர்தா (ரலி) அவர்கள், “அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்-ரலி) அவர்கள் “வல்லய்லீ இதா யஃக்ஷா” எனும் (அல்லைல் அத்தியாயத்தின்) வசனங்களை எப்படி ஓதிக்கொண்டிருந்தார்கள்?” என்று கேட்டார்கள். “வத்தகரி வல்உன்ஸா” என்று (‘வ மா கலக்க’ எனும் சொற்றொடர் இல்லாமல்தான் ஓதுவார்கள் என) நான் பதிலளித்தேன். அப்போது அபுத்தர்தா (ரலி) அவர்கள், “(ஷாம் நாட்டினரான) இவர்கள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட இந்த ஓதல்முறை விஷயத்தில் என்னைக் குழப்பப்பார்க்கிறார்கள்” என்று சென் னார்கள்.60 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

53

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (வெள்ளிக்கிழமை) ஜுமுஆ தொழுகைக்குப் பின்னால்தான் மதிய ஓய்வு எடுப்போம்; காலை உணவு உட்கொள்வோம்61 அத்தியாயம் :

54

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தம் பெயர்களில்) ‘அபூதுராப்’ (மண்ணின் தந்தை) எனும் பெயரைவிட வேறெந்தப் பெயரும் அலீ (ரலி) அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கவில்லை; அப்பெயர் கூறி அழைக்கப்படும்போது அவர்கள் (மிகவும்) மகிழ்வார்கள். (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது அலீ அவர்களை வீட்டில் காணவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் “உன் பெரிய தந்தையின் புதல்வர் (உன் கணவர்) எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “எனக்கும் அவருக்குமிடையே ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. ஆகவே, அவர் கோபித்துக்கொண்டு என்னிடம் மதிய ஓய்வெடுத்துக்கொள்ளாமல் வெளியே சென்றுவிட்டார்” என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், “அவர் எங்கே என்று பார்” என்று சொன்னார்கள். அவர் (சென்று தேடிவிட்டு) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அவர் பள்ளிவாசலில் உறங்கிக்கொண்டிருக்கிறார்” என்று சொன்னார். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்கு) வந்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் தமது மேனியிலிருந்து மேல்துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மண்ணை அவர்களின் உடலிலிருந்து துடைத்துக்கொண்டே, “அபூதுராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள். அபூதுராபே! எழுங்கள்” என்று (இரண்டு முறை) கூறினார்கள்.62 அத்தியாயம் :

55

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக (அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் பொருட்டு) தோல் விரிப்பு ஒன்றை விரிப்பார்கள். அந்த விரிப்பில் நபி (ஸல்) அவர்கள் மதிய ஓய்வெடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்களின் (உடலிலிருந்து வழிகின்ற) வியர்வைத் துளிகளையும் (ஏற்கெனவே தம்மிடமுள்ள) நபியவர்களின் தலை முடியையும் எடுத்து ஒரு கண்ணாடிக் குடுவையில் சேகரிப்பார்கள். பிறகு அதை வாசனைப் பொருளில் வைப்பார்கள். (இதையெல்லாம்) நபி (ஸல்) அவர்கள் உறங்கும்போதே (செய்து முடிப்பார்கள்). (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுமாமா பின் அப்தில்லாஹ் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (என் பாட்டனார்) அனஸ் (ரலி) அவர்களுக்கு மரண வேளை நெருங்கிய போது தமது கஃபன் (சவக்கோடி) துணியில் பூசப்படும் நறுமணத்தில் இந்த நறுமணத்தையும் சேர்த்துக்கொள்ளுமாறு என்னிடம் இறுதிவிருப்பம் தெரிவித்தார்கள். அவ்வாறே அவர்களின் கஃபனில் பூசப்பட்ட நறுமணத்துடன் இதுவும் சேர்க்கப்பட்டது. அத்தியாயம் :

56

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘குபா’ எனுமிடத்திற்குச் சென்றால் (தம் பால்குடி சிற்றன்னையான) உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களின் வீட்டுக்குச் செல்வது வழக்கம். (அவ்வாறு செல்லும் போது) உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளிப்பார்கள். -உம்மு ஹராம் (ரலி) அவர்கள் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் துணைவியாராவார்.- அவ்வாறே ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்களுக்கு உம்மு ஹராம் உணவளித்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) உறங்கினார்கள். பிறகு எழுந்து சிரித்தார்கள். உடனே உம்மு ஹராம் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இந்தக் கடல்மீது பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர். அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் ‘மன்னர்களாக’ அல்லது ‘மன்னர்களைப் போன்று’ இருந்தார்கள்” என்று கூறினார்கள். அப்போது, “என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு தமது தலையை வைத்து உறங்கினார்கள். பின்னர் விழித்துச் சிரித்தார்கள். அப்போதும் “அல்லாஹ்வின் தூதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?” என உம்மு ஹராம் கேட்க, முன்போலவே நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது, என்னையும் அவர்களில் ஒருவராக ஆக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுங்கள் என உம்மு ஹராம் கேட்டுக்கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (கடல் பயணம்செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக விளங்குவீர்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே உம்மு ஹராம் (ரலி) அவர்கள் முஆவியா (ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் (அறப்போருக்காக) கடல் பயணம் மேற்கொண்டார்கள். கடலிலிருந்து அவர்கள் புறப்பட்டபோது தமது ஊர்திப் பிராணியிலிருந்து விழுந்து இறந்துவிட்டார்கள்.63 அத்தியாயம் :

57

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும் வணிக முறைகள் இரண்டையும் தடை செய்தார்கள். (முறையே) அந்த நான்குமாவன: 1. இஷ்திமாலுஸ் ஸம்மாஉ. (ஒருவர் ஒரே துணியைத் தம் தோள்களில் ஒன்றில் போட்டுக்கொள்ள, அவருடைய உடலின் இரு பக்கங்களில் ஒன்று துணியின்றி வெளியே தெரிவது.) 2. இஹ்திபா. அதாவது ஒரே துணியால் (முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு பிறவி உறுப்பு வெளியே தெரிய அமர்வது. 3. முலாமசா. (அதாவது ஒரு துணியைத் தொட்டுவிட்டாலே அதை விலைக்கு வாங்கியே ஆகவேண்டும்.) 4. முனாபதா. (ஒருவர்மீது ஒருவர் துணியைத் தூக்கி எறிந்தாலே அதை விலைக்கு வாங்கியே ஆக வேண்டும்.)64 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

58

இறைநம்பிக்கையாளர் களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியர் களான எங்களில் ஒருவர்கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிக்கொண்டிருந்தபோது) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்துவந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி (ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே இருந்தது. ஃபாத்திமாவைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள், “என் மகளே! வருக!” என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரைத் தமது ‘வலப் பக்கத்தில்’ அல்லது ‘இடப் பக்கத்தில்’ அமர்த்திக்கொண்டு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார். அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்துகொண்டு ஃபாத்திமாவிடம், “எங்களை விட்டுவிட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே!” என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய அந்த இரகசியம் குறித்து ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன இரகசியத்தைப் பரப்ப நான் விரும்பவில்லை” என்று கூறிவிட்டார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா அவர்களிடம் நான், “உங்கள்மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த இரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்” என்றேன். ஃபாத்திமா, “சரி. இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார்: முதலாவது முறை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின்வருமாறு) சொன்னார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதை ஓதிக்காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கிவிட்டதாகவே நான் கருதுகிறேன். ஆகவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி (இவ்வுலகைவிட்டு) சென்றுவிடுவேன். ஆகவேதான், உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன். எனது பதற்றத்தைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, “ஃபாத்திமா! ‘இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கு’ அல்லது ‘இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு’ தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?” என்று இரகசியமாகக் கேட்டார்கள். (ஆகவே, நான் மகிழ்ந்து சிரித்தேன்.)66 அத்தியாயம் :

59

அப்துல்லாஹ் பின் ஸைத் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் கால்மீது கால் வைத்து மல்லாந்து படுத்திருக்கக் கண்டேன்.67 அத்தியாயம் :

60

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் மூவர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

61

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஓர் இரகசியம் சொன்னார்கள். அவர்களுடைய இறப்புக்குப் பிறகும்கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை. அத்தியாயம் :

62

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் மூன்றுபேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு இரண்டுபேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்; நீங்கள் மூவரும் மக்களுடன் கலக்கும்வரை! ஏனெனில், (அவ்வாறு மூன்றுபேர் இருக்கும்போது இருவர் மட்டும் பேசுவது) மூன்றாமவரை வருத்தமடையச் செய்யும்.68 இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

63

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங் களைப்) பங்கிட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன்) கூறினார். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் (இது குறித்துத் தெரிவிக்க) நிச்சயம் நான் செல்வேன்” என்று கூறிவிட்டு (அவ்வாறே) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் மக்கள் மன்றத்தில் இருந்தார்கள். அவர்களிடம் நான் (இது பற்றி) இரகசியமாகச் சொன்னேன். (அதைக் கேட்டபோது) தம்முடைய முகம் சிவக்கும் அளவுக்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, “(இறைத் தூதர்) மூசாவின் மீது அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும். இதைவிட அதிகமாக அவர் புண்படுத்தப்பட்டார். இருப்பினும், பொறுமை(யுடன் சகித்துக்)கொண்டார்” என்று சொன்னார்கள்.69 அத்தியாயம் :

64

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டுவிட்டது. அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏதோ தனியாக உரையாடிக் கொண்டிருந்தார். அவர் உரையாடிக் கொண்டிருந்ததில் நபித்தோழர்கள் உறங்கிவிட்டனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் (பேசி முடித்து) எழுந்து வந்து தொழுவித்தார்கள்.70 அத்தியாயம் :

65

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உறங்கச் செல்லும்போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடாதீர்கள். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

66

அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர். அவர்களின் நிலை குறித்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது “நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். ஆகவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்துவிடுங்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

67

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இரவில் உறங்கச் செல்லும்போது) பாத்திரங்களை மூடிவையுங்கள். கதவு களைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். விளக்கு களை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக்கூடிய (எலியான)து (விளக் கின்) திரியை (வாயால்) கவ்வி இழுத்துச் சென்று வீட்டிருப்பவர்களை எரித்து விடக்கூடும். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.71 அத்தியாயம் :

68

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவில் நீங்கள் தூங்கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். தண்ணீர்ப் பைகளை சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹம்மாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “குச்சியை (குறுக்காக) வைத்தேனும் உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) அவர்கள் சொன்னதாக நான் எண்ணுகிறேன்.72 அத்தியாயம் :

69

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்களின் வழிமுறையான) இயற்கை மரபுகள் ஐந்தாகும். 1. விருத்த சேதனம் செய்வது. 2. மர்ம உறுப்பின் முடிகளைக் களைய சவரக்கத்தியை உபயோகிப்பது. 3. அக்குள் முடிகளை அகற்றுவது. 4. மீசையைக் கத்தரிப்பது5. நகங்களை வெட்டுவது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.73 அத்தியாயம் :

70

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் எண்பது வயதிற்குப் பிறகு விருத்தசேதனம் செய்துகொண்டார்கள். அவர்கள் ‘கதூம்’ (எனும் வாய்ச்சியின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண் டார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் காணப்படுவதாவது: ‘கத்தூம்’ என்பது (சிரியாவிலுள்ள) ஓர் இடத்தின் பெயராகும் என (அறிவிப்பாளர்) அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (இதன்படி ‘கத்தூம்’ எனுமிடத்தில் விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்) எனப் பொருள் வரும்.)74 அத்தியாயம் :

71

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (உயிர்) கைப்பற்றப் பட்டபோது தாங்கள் எவ்வாறிருந்தீர்கள்?” என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “நான் அப்போது விருத்த சேதனம் செய்தவனாயிருந்தேன்” என்று பதிலளித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: பருவ வயதை நெருங்கிய பிறகே (அன்றைய) மக்கள் விருத்தசேதனம் செய்வது வழக்கம். அத்தியாயம் :

72

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் விருத்தசேதனம் செய்தவனாக இருந்தபோது நபி (ஸல்) அவர்களின் உயிர் கைப்பற்றப்பட்டது. அத்தியாயம் :

73

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக்கால தெய்வச் சிலைகளான) ‘லாத்’தின் மீதும் ‘உஸ்ஸா’ வின் மீதும் சத்தியமாக என்று கூறிவிட் டாரோ அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லட்டும். யார் தம் நண்பரிடம், “வா சூதாடுவோம்” என்று கூறுகிறாரோ அவர் (அதற்குப் பரிகாரமாக எதையேனும்) தர்மம் செய்யட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.75 அத்தியாயம் :

74

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மழையிலிருந்து என்னைக் காக்கின்ற, வெயிலிருந்து எனக்கு நிழல் தருகின்ற ஒரு வீட்டை நானே என் கரத்தால் கட்டியதை (இப்போதும்) நினைத்துப்பார்க்கிறேன். அந்த வீட்டைக் கட்ட அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் எனக்கு உதவவில்லை.77 அத்தியாயம் :

75

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் (உயிர்) கைப்பற்றப்பட் டது முதல் ஒரு செங்கல்லின் மீது இன்னொரு செங்கல்லை நான் வைத்தது மில்லை; எந்த பேரீச்சமரத்தையும் நான் நட்டதுமில்லை. (இதன் அறிவிப்பாளர்களில் ஒரு வரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இது குறித்து இப்னு உமர் (ரலி) அவர்களுடைய குடும்பத்தார் சிலரிடம் கூறினேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் வீடு கட்டினார்” என்று கூறினார்கள். நான், “தாம் வீடு கட்டுவதற்கு முன்னர் இவ்வாறு அவர்கள் சொல்óயிருக்கக் கூடும்” என்றேன். அத்தியாயம் :